periyar 28இராமாயணம் என்னும், ஒரு பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான புராணத்தை பார்ப்பனர்கள் சர்வ வல்லமையுள்ள “கடவுளாகிய” மகாவிஷ்ணு என்பவரின் அவதாரமாகிய ராமன் என்னும் ஒரு கடவுளின் சரித்திரமென்றும், அதில் கண்ட விஷயங்கள் எல்லாம் அப்படியே நிகழ்ந்தது என்றும், அந்த ராமன் நடந்து கொண்டதாக அப்புராணத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் கடவுளால் உலக நன்மையின் பொருட்டு துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனத்திற்காக நடத்தப்பட்ட உண்மையான நடவடிக்கைகள் என்றும், இந்திய மக்களுக்குப் பார்ப்பனர்களால் போதிக்கப்பட்டு பழைய காலத்தில், ஒரு பார்ப்பனரல்லாத வித்துவானைக் கொண்டு அந்த புராணத்தை அதுபோலவே, அதாவது ராமன் கடவுள் அவதாரம் என்ற கொள்கைப் படியே, ஒரு காவியம் பாடச்செய்து, அதை வழக்கத்திலும், நித்திய வாழ்க்கையிலும் இராமாயணம் படிப்பதும் கேட்பதும் “புண்ணியம்” என்றும், “மோட்சம்” தரத்தக்கதென்றும் சொல்லி ஏமாற்றி, இந்திய மக்களைத் திண்ணைகள்தோறும் இராமாயண காலட்சேபமும், சீதா கல்யாண உற்சவமும், பட்டாபிஷேக உற்சவமும் செய்யச் செய்து, அதனால் ஏற்படும் வருமானம் எல்லாம் பார்ப்பனக் குதிருக்கே போய்ச் சேரும் படியும் செய்துக்கொண்டு வந்திருப்பதுடன், அந்த இராமாயணக் கதையில் சொல்லியுள்ளபடியே இராமாயணத்தில் வரும் ராமனுக்கு ஒரு ஆயிரம் கோயில்களும், சீதைக்கு ஒரு ஆயிரம் கோயில்களும், லட்சுமணன், பரதன், சத்துருக்கன் ஆகியவர்களுக்கு ஆளுக்கொரு ஆயிரமாயிரம் கோயில்களும், அனுமாராகிய ‘குரங்குக்கு’ ஒரு பதினாயிரம் கோயில்களும், மற்றும் இவைகளுக்கு நகை என்றும், வாகனம் என்றும், மண்டபம், சப்பரம், தேர் என்றும், மேளம், தாளம், தாசி, பூசை உற்சவம் என்றும், மற்றும் இவை போன்ற வைகளுக்கு என்றும் முதலாகியவைகளுக்கு வருஷம் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்வதும் இவற்றில் பெரும்பகுதி பார்ப்பனத் தொந்தியில் விழும்படியாகவும் செய்து, மற்றும் வீடுகள் தோறும் ராமன் படமும், சீதை படமும், அனுமான் படமும், சுவர்களில் தொங்கவிட்டு, அதற்கு புஷ்பம், கர்ப்பூரம், தேங்காய், பழம் பூசையும் நடந்து வரும் படியாகவும் செய்யப்பட்டு இன்றைய தினமும் வழக்கத்தில் நடந்தும் வருவதை எவரும் மறுக்க முடியாது.

இது மாத்திரமல்லாமல் ராமன் பிறந்த ஊர் என்றும், அவன் ஆண்ட ஆட்சிகள், தர்மம் என்றும், அவன் கட்டின பாலமென்றும், அவன் கும்பிட்ட சாமி என்றும், பல இடங்களையும் கற்பனை செய்து, அவற்றிற்கும் மகத்துவம் கொடுத்து மக்கள் அணுகிச் செல்வதும், அவைகளைப் பார்ப்பதும் புண்ணியம் என்றும் மோட்சம் என்றும் இஷ்ட சித்தியாகும் என்றும் சொல்லி நம்பச் செய்து, அதன் மூலமாகவும், மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயும் செலவு உண்டாக்கப்பட்டு வருகின்றதையும் யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

இவை மாத்திரமல்லாமல், ராமன், லட்சுமணன், சீதை முதலியவர்களுக்கு பார்ப்பன அடையாளமும், மற்ற, அதாவது இராவணன், கும்பகர்ணன், தாடகை, சூர்ப்பனகை முதலியவர்களுக்கு பார்ப்பனரல்லாதார் அடையாளமும் பெயர்களும், அதுபோலவே, அருவருக்கத்தக்கதாவும் கெட்ட கருத்துக்கள் கொண்டதாகவும் கற்பித்து அவற்றை “தேவர்” “அசுரர்” என்பது போலவும், “பிராமணர்” “சூத்திரர்” என்பது போலவும் கருத்துக்களையும் ஏற்றி, அதாவது இப்போது பார்ப்பனர்கள் என்பவர்கள் எல்லாம் தேவர்களாகக் கருதும் படியும், இப்போது அவரொழிந்தவர்கள் அசுரர்களாகக் கருதும்படியும் சூழ்ச்சி செய்து, அதையும் மக்கள் மனத்திற்கு புகுத்திவிட்டார்கள், எனவே இப்பேர்ப்பட்ட புரட்டுகளையும் அயோக்கியத் தனங்களையும் பெரும்பான்மையான நம்மக்களுக்கு ஏற்பட்ட இழிவையும் ஒழிக்கக் கருதி, மேற்கண்ட மாதிரியான மூடநம்பிக்கையிலும், பாமரத் தன்மையிலும் ஈடுபட்டு நஷ்டமடைந்து மானமற்று மிருகங்களிலும் கேவலமாய் பிழைக்கும் மக்களின் மடமையை நீக்க வேண்டுமென்பதாய் இராமாயண ஆராய்ச்சி என்றும், இராமாயணப்புரட்டு என்றும், இராமாயண ஆபாசமென்றும், இராமாயண இரகசியமென்றும் மற்றும் பலவிதத் தலைப்புகளின் கீழ் அப்புரட்டுகளை சுயமரியாதை உணர்ச்சியுள்ள பல பெரியோர்களும் அறிஞர்களும் கொஞ்சகாலமாய் வெளிப்படுத்தி வரும் விஷயங்கள் யாவரும் அறிந்ததாகும்.

இவ்வித வெளியீடுகளுக்கு நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகளும், தடைகளும் கொஞ்சமல்லவென்பதும் பொதுமக்கள் உணர்ந்ததேயாகும்.

அவர்கள் இதுவரை இராமாயணத்தினால் ஆதிக்கம் பெற்று வயிறு வளர்த்து வரும் பார்ப்பனர்களும் அவர்களது புல்லுருவிகளும் கூலிகளும் செய்து வந்த எதிர்ப்புகள் என்ன என்றால், “இராமாயணத்தைக் குற்றம் சொல்லுவது மகாபாதகம்” என்றும், அது “கடவுள் நிந்தனை” என்றும் மதத் துரோகம் என்றும், இராமனை கடவுளாக வணங்கும் இந்துக்கள் மனம் புண்படுகின்றது என்றும், மற்றும் பலவிதமான தந்திர வார்த்தைகளையும், மருட்டு வார்த்தைகளையும் சொல்லி பாமர மக்களை ஏமாற்றி வந்தார்கள்.

இந்நிலையில் அவைகளுக்கு சமாதானம் சொல்ல வேண்டுமென்று கருதியே இராமாயணம் நடந்த கதை என்று நம்புபவர்களுக்கு அப்படி நடந்திருக்க முடியாது என்பதற்குள்ள பல காரணங்களையும், இராமன் கடவுள் என்று நம்புபவர்களுக்கு, அவன் கடவுளாயிருக்க முடியாது என்பதற்கு பல காரணங்களையும், இராமாயணம், தேவர்கள், அசுரர்கள் சண்டை என்று நம்பு கின்றவர்களுக்கு அது தேவர்கள் அசுரர்கள் கதை அல்லவென்பதற்கு பல காரணங்களையும், சொல்லி வருவதோடு, எதற்கும் அசையாமல், குரங்குப் பிடியாய் இராமன் கடவுள், இராவணன் அசுரன் என்றும், மற்றும் அதில் கூட ராமன் வடதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், இராவணன் தென் தேசத்துக்காரன் என்றும், வடக்கே இருந்து தெற்கே வந்து சண்டை போட்டான் என்றும், மற்றும் இதிலிருந்து வடதேசத்து ஆரியர்கள் தேவர்களாயிருக்கக்கூடும் என்றும், தென்தேசத்துத் திராவிடர்கள் அசுரர்களாயிருக்கக்கூடும் என்றும், நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தி, அவர்களது மடமையைப் போக்க வேண்டி அதற்குத் தகுந்தபடி பல காரணங்களையும் காட்டிப் பேசியும் எழுதியும் வரப்படுகின்றது.

அன்றியும், ராமனையும் அவனைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களையும் வட தேசத்தியராகவும், ஆரியராகவும் கடவுள்களின் தனித்தனி அவதாரங்களாகவும், அவர்கள் எல்லாம் தர்மத்தைக் காட்டவந்த தர்ம தேவதைகளாகவும் போற்றப்பட வேண்டியவர்களாக கற்பித்து, இராவணனையும் அவனது கோஷ்டியாரையும் ராட்சதர்களாகவும், தென் தேசத்தியர்களாகவும், திராவிடர்களாகவும், அதர்மம், கொடுமையுமே உருவாய் வந்தவர்களாகவும் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களாகவும், இழித்தும், பழிக்கப்பட வேண்டியவர்களாகவும் கற்பித்து, உலகில் உள்ள நன்மைகள் உயர் குணங்கள் ஆகியவை எல்லாம் ராமனுடைய தாகவும் அவனது கோஷ்டியாருடையதாகவும், அவற்றிற்கு எல்லாம் அவர் களே உருவமென்றும், தீமைகளும், தீக்குணங்களும், ராவணனுடையதும் அவனது கோஷ்டியாருடையதும் என்றும், தீமைக்கும், தீக்குணத்திற்கும் இவர்களே உருவமென்றும் கற்பித்து இருக்கின்றதை அடியோடு ஒழிப்பதற்கு, அதற்குத் தகுந்த பல காரணங்கள் காட்டியும் எழுதியும் பேசியும் வரப் படுகின்றது.

சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பனர்கள் இராமாயணத்தை மக்களுக்கு எந்த விதத்திலாவது புகுத்தி அதன் பயனாய் தங்கள் ஆதிக்கத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆதரவு தேடிக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றி இழிவுபடுத்தி வருகின்றார்கள் என்று கருதி அதை எந்த விதத்திலும் மக்கள் மதிக்காமல் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடனேயே இராமாயணம் இப்போது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது என்பதேயாகும்.

ஆகவே, இது சம்பந்தமான எல்லாவித எதிர்ப்புகளுக்கும் அநேகமாக சமாதானம் சொல்லி, பார்ப்பனர்களின் வாய்க்கும் புராணீகர்கள் வாய்க்கும் ஒருவாறு ஆப்புக்கடாவின பிறகு இப்போது சில பார்ப்பனர்கள் தோன்றி வேறு விதமான தந்திரத்துடன் இராமாயணத்தை நிலைக்கவைக்க வெளிப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது “இராமாயணம் என்பது அடியோடு பொய்க் கதையாயிற்றே. அதை ஏன் கிளறிக் கொண்டிருக்கிறீர்கள்? அதில் உள்ள பாத்திர அழகு, வர்ணனை அழகு, கவி அழகு ஆகியவைகளுக்கு மாத்திரம் மதிப்புக் கொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், மற்றபடி அதை கவனிக்காதீர்கள்; அப்படி மீறி கவனிப்பது மடமை மூடநம்பிக்கை என்றும், சுயமரியாதை அற்ற தன்மைகள் என்றும் சொல்லி நம்மை வேறு வழியில் ஏய்க்க வந்திருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தார்களை நாம் ராமனையும் இராமாயணத்தையும் கடவுள் என்றும் கடவுள் நடவடிக்கை என்றும் சொல்லுகின்றவர்களை விட மூடர்கள் என்றும், பித்தலாட்டக்காரர்கள் என்றுமே தான் சொல்லுகிறோம்.

ஏனென்றால், ராமனை கடவுள் என்று சொல்லுகின்றவர்கள் எல்லாம் ராமனை பூஜித்துக் கொண்டு நம்மைக் குற்றம் சொல்லுகின்றார்கள். இப்படிப்பட்டவர்களில் சிலராவது உண்மையில் மூடநம்பிக்கையில் ஈடுபட்ட யோக்கியர்களாக இருந்தாலும் இருக்கலாம்.

ஆனால், ராமன் கடவுள் அல்ல; இராமாயணம் நடந்ததல்ல; என்று சொல்லிக் கொண்டு நம்மைக் குற்றம் சொல்லுகின்றவர்களில் ஒருவராவது யோக்கியர்களாக இருக்க முடியாது என்றே சொல்லுவோம். இதற்கு என்ன காரணம் என்றால், இவர்கள் உண்மையிலேயே இராமாயணம் நடந்த கதை அல்ல என்று மற்ற மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதை மெய்ப்பிக்கின்ற வர்களாயிருந்தால் இவர்களுக்கு இப்போது நம்மிடத்தில் சிறிதும் வேலை இல்லை.

மற்று யாரிடத்தில் என்றால், ராமனைக் கடவுளாக வைத்து கும்பிடுகின்றவர்களிடத்திலும், பூசை உற்சவத்திற்கு கோடிக்கணக்கான பொருள்களை பாழாக்குபவர்களிடத்திலும், கோடிக்கணக்கான பொருள்களைப் பாழாக்கி கோயில்களை கட்டுபவர்களிடத்திலும், முதலில் போய் இவர்களது புத்திசாலித் தனத்தையும் ஆராய்ச்சித் திறத்தையும் மூடநம்பிக்கையை ஒழிக்கும் தன்மையையும், மடமையை நீக்கும் தன்மையையும் சுயமரியாதை உணர்ச் சியை ஊட்டும் வேகத்தையும், காட்டியிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் இராமாயணப் புரட்டை வெளியாக்குபவரிடத்தில் வந்து முட்டிக் கொள்பவரிடத்தில் கடுகளவாவது உண்மையோ, யோக்கியமோ இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.

உதாரணமாக நாட்டுக் கோட்டை செட்டி நாட்டில் உள்ள ஒரு புராணப் பிரசார பத்திரிகையில் காரைக்குடி விநாயகர் மண்டபத்தின் ஹிந்துமத அபிமான சங்க சார்பாய் திரு.பி. ஆச்சாரியார் என்கின்ற ஒரு பார்ப்பனர் “இராமாயணத்தின் இரகசியம்” என்று ஒரு பிரசங்கம் செய்ததாக காணப்படுகின்றது.

அதில் உள்ள விஷயங்கள் இந்துமத அபிமானத்தின் மீது செய்யப்பட்ட பிரசங்கமாகவே வைத்துக் கொள்ளப்பட்டாலும், இராமாயணத்தைக் காப்பாற்றுவதற்கு திருட்டுத்தனமான முறையில் தந்திரம் புரிகின்றார் என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது.

இப்படி செய்வது பார்ப்பனர்களுக்கு குல தர்மம் என்று ஒருபுறம் சொல்லக் கூடுமானாலும் நாம் அதை அந்தப்படியே குலதர்மம் என்று விட்டுவிட முடியாததற்கு வருந்துகின்றோம்.

ஏனெனில், அது பாமர மக்களை ஏய்க்கவே நமது முயற்சிகளுக்கு இடையூறாக செய்யப்படும் சூழ்ச்சி என்று நாம் கருதுவதால் அதன் புரட்டை வெளியாக்க வேண்டியது நமது கடமையாகின்றது.

அதாவது, திரு.ஆச்சாரியார் அதில் இராமாயணம் ஆரியர் திராவிடர் என்கின்ற பாகுபாட்டிற்கு உடையதல்ல என்கின்றார். ஆனால், கம்பர் ராமனை ஆரியன் என்றும் இராவணனை தென்னாட்டவன் என்றும் பல இடத்தில் சொல்லி இருக்கிறார் என்பதற்கும், வால்மீகியும் வடக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் தேவர்கள் என்றும் தென் பாகத்தில் உள்ளவர்களை அரக்கர்கள் என்றும் சொல்லி இருப்பதாக மொழி பெயர்ப்புக்களில் இருக்கின்றது என்பதற்கும், இவர் என்ன பதில் சொல்லுகின்றார் என்று கேட்கின்றோம்.

அதுமாத்திரமல்லாமல் இராமன் பார்ப்பனர்களின் காலில் விழுந்து கும்பிட்டதாகவும், அவர்களுக்கு பொருள்கள் தானங்கள் செய்ததாகவும், பார்ப்பனருக்கு திதி கொடுத்து தனது தந்தையை மோட்சத்திற்கு அனுப்பிய தாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.

அது மாத்திரமல்லாமல், ‘சூத்திரன்’ தவம் செய்ததற்காக (கடவுளை வணங்கியதற்காக) அவன் ராமனால் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.

அது மாத்திரமல்லாமல், மாமிசம் சாப்பிடுபவனும் குடிகாரர்களுடைய நேசம் கொண்டவனுமான ராமன் செய்த கெட்ட காரியங்களையெல்லாம் கூட நல்ல காரியங்களாகவும் வேதம் படித்து கோடிக்கணக்கான வருஷம் தவம் செய்து, கடவுள் அருள் பெற்றவனை எது செய்தாலும் கெட்டவனாகவே பாவிக்கப்பட்டிருக்கின்றது.

இவைகளில் எதற்கு திரு.ஆச்சாரியார் சமாதானம் சொல்லுகின்றார் என்று கேட்கின்றோம். ( தொடரும் )

(தொடர்ச்சி 24.11.1929 குடி அரசு )

(குடி அரசு - கட்டுரை - 17.11.1929)

Pin It