பேரன்புமிக்க தாய்மார்களே! தோழர்களே! டாக்டர் நாயுடு அவர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். இன்று புத்தரின் 2500ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் கடைசி நாள். இதைப் பொதுக் கூட்டமாக வைத்து இதில் அநேக தோழர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமானவர்கள் எல்லாம் பேச இருக்கிறார்கள். ஆகவே நான் கடைசியில் பேசுவதாகவே இருக்கிறேன். இங்கு பலதரப்பட்டவர்கள், பல கருத்துடைய தோழர்கள் பேசுவார்கள். எந்தக் கருத்துக்களைப் பேசினாலும் நீங்கள் அமைதியாக இருந்து பொறுமை, அன்பு இவைகளைக் கடைப்பிடித்து, இங்கு விளையாட்டு எதுவும் விளையாடாமல், கைத்தட்டுதலைக் குறைத்துக்கொண்டு கடைசி வரை அமைதியாய் இருக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

புத்தரைப்பற்றிப் பேசுகிறவர்கள் எல்லாம் புத்தரின் சரித்திரம் சரிவரச் சொல்லவில்லை. என்னமோ திண்ணை வேதாந்தம் பேசுகிற மாதிரிப் பேசுகிறார்கள். யாரும் சொல்லாததை புத்தர் ஒருவர்தான் சொன்னார்.

அவருடைய கொள்கைகளைக் கட்டாயம் நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டும். புத்தரைப்பற்றி பலர் பலவிதமாகச் சொன்னார்கள். புத்தர் ஒருவர் தான், தான் (புத்தர்) சொன் னதைச்கூட தட்டிக்கேட்க உரிமை கொடுத்தவர். நான் சொன்னதை நம்பாமற் போனால் நாசமாகத்தான் போவாய் என்பதைத்தான் வேதம் சொல்லுகிறது. நாரதர், தேவர், உப நிஷத்து முதலிய எல்லாமுமே அதுதான் சொல்லுகின்றன. இவைகள் எல்லாம் சொந்த அறிவைத் துணையாகக் கொண்டு நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனவேதான் தீண்டப்படாதவரை வண்டியில் கொண்டு வந்து நடுப்பந்தியில் உட்கார வைத்தால் எப்படியோ அதுபோல இதுவரை தீண்டப்படாதவனாகவும், அயோக்கியன், நாத்திகள் என்று கூறப்பட்டு வந்த புத்தரை இன்று நாடெங்கும் போற்றி விழா கொண் டாடுகிறார்கள்.

2000 வருடங்களாக தீண்டப்படாதவன், தாழ்த்தப்பட்டவன், தேவடி யாள் மகன், சூத்திரன் என்று ஒதுக்கி வைத்துக் கொண்டேபோனால், எத்தனை நாளுக்குத் தான் பொறுத்துக் கொண்டு வருவான். கோடி கடவுள், ஆயிரம் மகான்கள் இவர்களுக் கெல்லாம் கோயில்கள் கட்டி, அவை களுக்கு வேளா வேளைக்குச் சோறு போட்டு, கல்யாணம் பண்ணி ஒரு வருடம் கல்யாணம் செய்தால் போதாது என்று வருடா வருடம் செய்து, கருமாதி செய்தும் பார்த் தாயிற்று. இவ்வளவும் செய்த நாம் சூத்திரன்தான் என்றால் என்ன அர்த்தம்? இதை யார் மறுக்க முடியும், பார்ப்பனர்களைத் தவிர? இதுதான் கடவுள் விசுவாசமா? இப் படியே எத்தனை நாளைக்கு இருப்பது? 1953ஆம் வருடத்திலும் இப்படியே சொல் லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

இந்த புத்தர் விழா பெரும்பாலான ஊர்களில், நாடுகளில் 60 கோடி மக்களுக்குக் குறையாமல் கொண்டாடு கிறார்கள். நாம் தனியாகக் கொண் டாடிய அன்று ஒரு சிலர் ஆத்திரம் அடைந்தார்கள். இப்பொழுது சைனா, ஜப்பான், பர்மா, இலங்கை முதலிய இடங்களில் கொண்டாடுகிறார்கள்.

இங்கு இருக்கிற மாதிரி, பார்ப்பான், சூத்திரன், பறையன் அங்கு இல்லை. இராமன், கிருஷ்ணன், பிள்ளையார் போன்ற ஆயிரக்கணக்கான கடவுள்கள் இல்லை. மூத்திரத்தைக் கரைத்துக் குடிக்கும் மூட வழக்கம் அங்கு இல்லை. எனவே அங்கு புத்தநெறிக்கு ஆதரவு வளர்கிறது. புத்தர் கொள்கைகள் வாழ, புத்தர் சங்கம் வாழ, அன்பு, அஹிம்சை வேண்டுமென்கிறார், புத்தர்.

அன்பு, அஹிம்சையெல்லாம் சூழ் நிலைக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும். இந்த வார்த்தைகளையெல்லாம் அநேக வருடங்கள் சென்ற பிறகு சொல்ல வேண்டும். புலி அருகில் சென்று அஹிம்சை, அஹிம்சையென்று சொன்னால் என்ன நடக்குமோ அதே போன்றதுதான், நாம் பார்ப்பனரிடம் போய் ஜாதி பேதம் நமக்குள் வேண்டாம் என்று கூறிக் கொண்டுவருவதும். அவன் சூத்திரன் என்று சொன்னால், நாம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் என்றால் நமக்குப் புத்தியில்லை, மானமில்லை என்றுதானே அர்த்தம்?

நமக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை, இழிவுகளை மாற்றிக் கொண்ட பிறகுதான் பிறருக்கு நாம் அன்புகாட்ட முடியும். ஒரு மனிதனை 2000 வருடங்களாக கீழ்ஜாதி, வைப்பாட்டி மகன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? மடத்தனமாய், அறிவில்லாதவனாய், ரோஷமில்லாதவனாய் இருந்தால் இந்த நாடு எப்படி முன்னேறும்? கவர்னர் முதல் மந்திரிவரை பைத்தியக் காரத் தனமாய்க் கூறிக் கொண்டு வரு கிறார்கள்.

அய்க்கோர்ட் ஜட்ஜுகள், கடவுள் பக்தியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆயிரக்கணக்கான வழக்கில் அவர்கள் தீர்ப்புக் கூறியிருப்பார்கள் பலரகக் குற்றவாளிகளைக் கண்டு இருப் பார்கள். மக்களிடம் நாணயம், ஒழுங்கு இல்லையென்று, அவர்களுக்குத் தெரியாதா? இப்படி இருந்தும் கடவுள் பக்தி வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? எத்தனை அயோக்கியத் தனம் செய்தாலும் ஒருவனுக்குக் கடவுள் பக்தி இருந்தால் போதும் என்று தானே பொருள்?

யாருக்கு இல்லை பக்தி? இந்த சென்னை மாகாணத்தில் இருக்கும் எல்லா சென்டிரல் ஜெயில்களிலும் சுமார் பத்தாயிரம் கைதிகள் இருப் பார்கள். அவர்களில் என்போல் பத்து பேர் இருக்கலாம், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். மற்றவர்கள் எல்லோ ரும் காலையில் எழுந்த உடனே திரு நீற்றுப் பட்டையை நெற்றியில் தடவிக்கொண்டு, பகவானே, விடுதலை சீக்கிரம் செய் என்றுதானே வேண்டுகிறார்கள் கடவுளை? ரிமாண் டில் இருப்பவன் தண்டனை கொஞ்ச மாக இருக்க வேண்டுமென்றும், கடவுளே என் மேல் கேசே போடக் கூடாதென்றும் தானே ஒவ்வொருவனும் வேண்டிக் கொள்கிறான்? இதெல்லாம் பக்தி இல்லாமலா நடக்கிறது?

புத்தர் எவ்விடத்திலும் கடவுளைத் தாக்கிப் பேசவில்லை என்று கூறுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம். இப்படிப் பேசுகிறவர்களுக்கு இந்து மதம் என்றால் என்ன என்பதே தெரியாது. வேதத்தை ஏற்று நடந்துவருவதுதான் இந்து மதம். உபநிஷத்துக்கள், மந்திர சாஸ்திரங்கள்படி நாம் நடப்ப தனால் தான் இங்கு பார்ப்பான் - பறையனும், மேல்சாதி - கீழ்சாதியும், எண்ணற்ற கடவுள்களும் இலட்சக்கணக்கான கோவில்களும், குப்பைகூளங்களும் இருக்கின்றன.

எல்லாவற்றையும் கற்று, எது உண்மை? எது பொய்? என்று யார் தெரிந்து வைத்திருக்கிறானோ அவன் தான் புத்தன் திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாத்திகனுக் கும் வித்தியாசமில்லை. ஆகையால் அவனை நாட்டில் விட்டு வைக்காதே என்று இராமன் பரதனுக்குச் சொல்லி யிருக்கிறான். மற்றொரு இடத்தில் பரதா, பவுத்தர்கள் எல்லாம் நாத்தி கர்கள்; அவர்களோடு பழகாமலிருக் கிறாயா? தங்களுடைய சாமர்த்தியத் தால் வேத, புராணங்களையும் சாஸ் திரங்களையும் பெரியோர் ஏற்படுத்தி வைத்த மத சம்பிரதாயங்களையும் அர்த்தம் செய்ய மாட்டார்கள். கேள்வி ஞானங்கொண்டு தங்கள் கருத்துக் களைச் சொல்லி மக்களை மாற்றி விடுவார்கள். அவர்களை நாட்டை விட்டுத் துரத்தி விட்டாயா? என்று இராமன் கூறுகிறான். கேவலம் தன் சொந்தப் புத்தியைக் கொண்டு, அறிவு என்னும் ஆயுதத்தைக் கொண்டு வேதங்களை, புராணங்களை, ரிஷிகள் எனப்படுபவர்களை ஆராய்ச்சி செய் கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நாஸ்திகன் என்று சொல்கிறார்கள்.

இந்து மதப்படி, மனுதர்ம சாஸ்திரப் படி நாம் எல்லாம் சூத்திரன்; அவன் பார்ப்பனன். அவன் உடம்பு மட்டும் அப்படி என்ன மணக்கிறது? நம் உடம்பில் மட்டும் நாற்றம் வீசுகிறதா? அவர்கள் சிறுநீர் பன்னீர் வாசனையும், நம் சிறுநீர் துர்நாற்றமும் வீசுகிறதா? இதைக் கேட்டால் நான் முகத்தில் பிறந்தேன்; நீங்கள் காலில் பிறந் தீர்கள்; என்று சொல்லுகிறார்கள்! புராணங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் புண்ணியம் என்றும், மறுத்தால் பாபம் என்றும் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் முதலியவைகளில் எழுதப்பட்டு இருக் கின்றன. உதாரணமாகப் பெரிய புராணத்தில் ஒரு பக்தன் தான் மோட்சம் செல்வதற்கு தன்னுடைய மனைவியை ஒரு பார்ப்பானுக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறான். இப்பொழுது இது மாதிரி யார் செய்வார்கள்? இம்மாதிரி எழுதிவைத் திருக்கிறாயே என்று கேட்டால் நாத்திகனா?

நேற்று எந்தப்பத்திரிகை என் பேச்சை வெளியிட்டது? பார்ப்பனர் களின் பத்திரிகைகள் தங்களுக்குள் கட்டுப்பாடு செய்து கொண்டன. என் பேச்சைப் போட்டால் தன் தலை மேலேயே கொள்ளியை எடுத்து வைத்துக்கொண்ட மாதிரி ஆகி விடாதா? கவர்னர் பேச முடியாமல் போய் விட்டதைப் பெரிதாக்கிப் போட்டிருக்கிறார்கள். புத்தர் விழாவுக்கு இழுக்கு கற்பிப்பதில் அவ்வளவு அக்கறை. கூட்டம் மறுநாள் நன்கு நடந் ததே அதைப்பற்றி ஏன் போடவில்லை? இராமசாமி வேண்டாதவன். அதனால் போடவில்லை.

சுமார் 500, 1000 வருடங்களுக்கு முன் மேல்நாடுகளில் யாராவது மதத் திற்கு விரோதமாகப் பிரச்சாரம் செய் தால் கொன்று போட்டுவிடுவார்கள். இங்கு அரசாங்கமும், பார்ப்பனரும் உள்ள ஆதரவும் போதாமல் திண் ணைக்குத் திண்ணை இராமாயண காலட்சேபம் செய்கிறார்கள். இவை களுக்கெல்லாம் அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. நாம் ஆதாரத்துடன் எடுத்துச் சொல்ல முன் வந்தால் தடையுத்தரவு போடுகிறார்கள். குப்பை கூளத்திற்கெல்லாம் 3, 4 தடவை ஆதரித்துப் பொம்மை போட்டு ஆதரவு கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள்.

புத்தன், வள்ளுவன், என்னைத் தவிர வேறு யார் சொல்லியிருக் கிறார்கள் ஜாதி ஒழிய வேண்டு மென்று? நேற்று இருந்தாரே ரமண ரிஷி, ஒரு வார்த்தை ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்லி இருப்பாரா? நாயன்மார், ஆழ்வார்கள் சொல்லியிருப்பார்களா? மகாத்மாதான் சொன் னாரா? 1956ஆம் வருடம் வரை எங்களைத் தவிர வேறு யாராவது சொன்னார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா?

சில பார்ப்பனர்கள் புத்தர் கடவுளைத் திட்டிப் பேசவில்லை என்று பேசுகிறார்கள். இம்மாதிரியாக சிலர் பெரிய விஷயங்களில் தலை கொடுத்து விடு கிறார்கள். புத்தர், உன் புத்தியைக் கொண்டாடு; ஆராய்ச்சி செய். மூடக்கொள்கை களை, மூடத்தன பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்காதே என்று கூறி யிருக்கிறார். அப்படி ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஒரு கடவுள் மிஞ்சுமோ? இராமன், கிருஷ்ணன் எல்லோரும் பறந்து விடமாட்டார்களா? புத்தர் கூறிய ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு கடவுளைக் கண்டுபிடியுங்களேன், பார்ப்போம்!

புத்தர் சிலையின் முகத்தைப் பாருங்கள், அன்பு, அமைதி, சாந்தம் இருக்கிறது. கிருஸ்துவின் முகத்தைப் பாருங்கள், பார்த்தவுடன் நமக்கே ஒரு சக்தி ஏற்படுகிறது. இங்கு இருக்கிற கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்கள். 5,6 முகங்கள்! 10, 20 கைகள்! கண்கள் வெளியே வந்து விடுகிற மாதிரி இருக்கும் கோரமான முகம்! கையில் அரிவாள் கத்தி, பெரியவயிறு இவைகள்தானே நம் கடவுள்கள்?

21 லட்ச வருடங்களுக்கு முன் திரோதாயுகத்தில் இராமாயணம் நடந்தென்று எழுதப்பட்டிருக்கிறது. 2000 - 3000 ஆண்டுகட்கு முன் இருந்த தமிழன் கதையே நமக்கு அகப்படவில்லை. இராமாயணம் மாத்திரம் அப்படியேயிருக்குமா? 21 லட்ச வருடங்களுக்கு முன் டார்வின் ஆராய்ச்சிப்படி மனிதன் குரங்காகத் தானே இருந்திருப்பான். 5000, 6000 வருடங்களுக்கு முன்பே நான்கைந்து தடவைகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொ ல்லியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் மதுரை, சேர, சோழ பாண்டியர் முதலிய அரசர்கள் இருந்திருப்பார்களா? இவை களை நாம் எப்படி ஒப்புக் கொள்வது? சில வருடங்களுக்குமுன் தேவடியாள் பட்டம் பொட்டுக்கட்டி கோவிலில் விடுதல் போன்ற பழக்க வழக்கங்கள் இருந்தன. நாம் தானே அவர்கள் ஒரு வகுப்பாக மாறிவிடக் கூடாது என்றும் சமுதாயத்தில் ஒருவராக ஆகி சம மதிப்புப் பெற வேண்டும் என்றும் கருதி ஒழிக்கப் பாடுபட்டோம்.

கக்கூஸ், எடுத்தலும் பியூன் வேலை பார்ப்பதும் நம்மவர்களுக்கே; அதற் கெல்லாம் மேல் ஜாதியார் வர மாட் டார்கள். கீழ்த்தரமான வேலைகளை நமக்குக் கொடுத்து விட்டு, பெரிய உத் யோகங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு விகிதாச்சாரப்படி என்று கூறிவிடுவார்கள்.

கிருஷ்ணன் பல்லாயிரக்கணக்கான கோபிகா ஸ்திரிகளுடன் விளையாடி னான். அதைக்கண்ட நாரதருக்கும் பெண்ணாசை பிடித்துக்கொண்டது. அதற்குக் கிருஷ்ணன், நான் இல்லாத வீட்டில் நீ போய் இரு என்று சொன் னான். நாரதர் எங்குபோய்ப் பார்த்தாலும் கிருஷ்ணன் இருந்தானாம். இதுதான் கடவுள்களின் லட்சணம் போலும்?

இன்று நாம் எல்லோரும் இவ் விழாவைக் கொண்டாடியதனால் ஒரு படிப்பினையை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். குறைந்த அளவு இங்கு வந் திருக்கும் தாய்மார்கள் வாசற்படியில் குங்குமம் தடவுவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு ஏன் போகவேண்டும். அக்காலத்தில் சுங்கம் வரி போட்டிருந்தான். இக்காலத்தில் கோயிலில் பணம் பிடுங்குகிறான். அம் மாதிரி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து அதன்படி நடந்தால் 25 வருடத்திற்குள்ளாக பார்ப்பான்-பறையன் பூண்டே இருக்காது.

எனக்கு என்ன வேறு வேலை இல்லையா? நான் அவர்கள் சொல்லு கிறபடியே தலையாட்டி விட்டால், பார்த்தீர்களோ! கடவுள், நாயக்கருக்கு கட்டாயம் நல்ல அறிவு கொடுப்பார் என்று அப்பொழுதே சொன்னேனே என்று சொல்லிக்கொண்டே என் காலில் விழுவானே! திடீர் என்று நான் சாமியாராகிவிட்டால் எல்லோருடைய வீட்டிலும் என் படம் தொங்குமே!

எனக்கு வயது 77 முடிந்து 78 பூர்த்தி யாகப் போகிறது. இப்பொழுது தலை நடுக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டதென்று சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். சாகும் வரை இப்படியே இருப்பதாக உத்தேசம். அடிமையாக விலைக்கு வாங்கப்பட்ட நீக்ரோக்கள் இப்பொழுது 100க்கு 80 பேர் படித்துப்பட்டம் பெற்று இருக்கின்றார்கள். இப்பொழுது அவர் களும் வெள்ளையர்களுடன் சம உரிமை யுடன் வாழ்கிறார்கள்.

நாம் நன்றாக வாழ்ந்தபொழுது வெள்ளையருக்கு வேட்டிக் கட்டக்கூடத் தெரியாது. பச்சை மாமிசத்தை அப்படியே தின்று கொண்டிருந்தார்கள்! இப்பொழுது ஆகாயத்தில் ஏரோப் ளேனில் பறக்கிறான்! நாம் கட்டைத் தேரில் கடவுளை வைத்து ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்துக் கொண்டேயிருக் கிறோம். முஸ்லிம்கள்கூட 1000 வருடங்களுக்கு முன் காட்டுமிராண்டித் தனமாக மூடத்தனமான பழக்க வழக் கங்களைக் கையாண்டு வந்தனர். நபி தோன்றினார். சீர்திருத்தம் செய்தார். அதேபோல் கிருஸ்தவர்களுள் இயேசு வந்தார். உருவத்தைக் கும்பிடுபவர்கள் சண்டாளர்கள் என்று சொல்லிவிட்டார்.

இவைகளைப் பார்த்தாவது நமக்கு இனிமேல் புத்திவர வேண்டாமா? சொந்தப் புத்திதான் இல்லையென்றால் புத்தர் சொன்னபிறகாவது வரவேண் டாமா? அப்படியும் வரவில்லையானால் 10 - 15 ஆண்டுகளுக்குப்பின் பார்ப் பனர் ஆட்சி ஏற்பட்டு நம்மையெல்லாம் நெற்றியில் சூத்திரன் என்று பச்சை குத்திக் கொள்ளச் செய்வார்கள். நமக்கு எவ்வித உத்தியோகமும் இல்லையென்று சொல்லிவிடுவார்கள். ஆகவே நீங்கள் எல்லோரும் பகுத்தறிவு வழி, புத்தர் சொன்ன வழிகளைப் பின்பற்றினால் உங்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்குப் பெருத்த நிதி சேர்த்து வைத்தவராவீர்கள்.

-----------------------

27.5.1956 சென்னை கடற்கரையில் நடைபெற்ற புத்தர் விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (விடுதலை 2.6.1956)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It