தமிழ்நாட்டில் நீண்ட காலம் உயிருடன் இருந்து தமது வாழ்நாளின் இறுதி வரை அரசியல் வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் மிக வேகமாக செயல்பட்ட தலைவர் தந்தை பெரியார் ஆகும். 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஈரோடு நகரில் தோன்றிய இவர் 1973 டிசம்பர் 24 அன்று மறையும் வரை (95 ஆண்டுகள்) தமிழ் நாடு முழுவதும் ஒரு பேருந்து மூலமாக பயனம் செய்து தம்முடைய கொள்கைகளை பரப்பிய ஒரு உயரிய தலைவர் தமிழ் நாட்டில் அவர் செல்லாத ஊர்களே இல்லை என்ற அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாக தமது பிரச்சார வண்டியிலேயே பயணம் செய்து தம்முடைய வாழ்நாளைக் கழித்தவர். அவர் தமிழர் சமுதாயத்திற்கு செய்த தொண்டுகளைப் பற்றி நாம் குறிப்பிடபட வேண்டிய தேவையில்லை. யுனெஸ்கோ என்ற பன்னாட்டு அமைப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு (27-6-1970) விருது வழங்கிச் சிறப்பித்தது. விருதுப் பட்டயத்தில் தீட்டப்பட்ட புகழ் மாலைகள் வருமாறு:
"பெரியார் - புது உலகின் தொலை நோக்காளர். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ். சமுக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி."
இத்தகைய குண நலன்கள் படைத்த பெரியார் அவர்களின் அடிப்படையான இயல்பு என்பது பழமையை முற்றிலுமாக வெறுத்ததும் புதுமையயை ஒரு சிறுகுழந்தையின் உற்சாகத்துடன் வரவேற்றதும் ஆகும். சமூக வாழ்க்கையிலும் அறிவியல் தொடர்பான செய்திகளிலும் புதிய கருத்துகள் எங்கெல்லாம் தோன்றினவோ அவற்றை மிகவும் உற்சாகத்துடன் வரவேற்று சிறப்பு செய்தவர் பெரியார் ஆவார். இதை அவர் தமது இளமைகாலத்தில் மட்டுமின்றி இறுதிக்காலம் வரை அதே உற்சாகத்துடன், வேகத்துடன் செய்து வந்தார் என்பதே அவருடைய சிறப்பு ஆகும். இன்றைக்குள்ள பல தலைவர்களும் சங்ககாலம், பழமையான தமிழர் நாகரிகம், தொன்மையான தமிழர்களின் சிறப்பு என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கையில் "பழமையில் என்ன இருக்கிறது? எதிலும் புதிது என்பதுதானே சிறப்பு" என்று தன்னந்தனியாக நின்று வாதிட்ட தலைவர். இதற்காக தமிழ் மொழியின் எதிரி என்றெல்லாம் அவர் கருதப்பட்டார். அவருடைய வாழ்க்கையில் அவர் நோய்வாய்ப்பட்ட தருணங்களில் எவ்விதம் நடந்துக் கொண்டார் என்பது நாம் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
அவருக்கு எல்லாச் செய்திகள் குறித்தும் ஒரு தீர்மானமான முடிவு உண்டு. அதை அவர் அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார். ஆயினும் மருத்துவம் என்று வந்தபொழுது மருத்துவர்களின் சொல்படியே தம்முடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதற்கு மிகவும் முயற்சி செய்தார். மருத்துவத்தை குறிப்பாக ஆங்கில வழி மருத்துவத்தை மிகவும் வரவேற்று உயர்த்திப் பேசிய தலைவர் அவரே. இதற்கு ஒரே காரணம் அது (ஆங்கில வழி மருத்துவம் ) அறிவியல் வழி அமைந்தது என்பதே ஆகும்.
இத்தகைய அறிவியல் நோக்கு அவருக்கு இளமைத்தொட்டே இருந்து வந்திருக்கிறது. 1938 ம் ஆண்டு’ இனிவரும் உலகம்’ என்னும் தலைப்பில் பெரியார் நூல் எழுதி வெளியிட்டார் அதில் இன்று கண்கூடான நடைமுறை உண்மை ஆகிவிட்ட ' சோதனைக் குழாய் குழந்தை ' உள்ளிட்ட எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்டாகும் என்னும் தமது தொலைநோக்குச் சிந்தனைகளை வெளியிட்டார்.
அதுபோன்றே முதன் முதலாக குடும்பக் கட்டுப்பாடு பற்றியும் அதன் தேவைப் பற்றியும் எழுதிய தலைவர் பெரியார் அவர்களே ஆகும்.
பெரியார் மற்றும் இவர் குழுவினர் மலேயா நாட்டிலிருந்து கப்பலில் 1930 - சனவரி 16 தமிழ் நாடு திரும்பினர். சில மாதங்களில், 'குடும்பக் கட்டுப்பாடு' பற்றிப் பெரியார் நூல் வெளியிட்டார். குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முறைக்குக் கருத்துப் பரப்பல் செய்தார். அந்நாளில் இந்திய அரசு குழந்தைக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு முன்பே, அதன் கட்டாயத் தேவையை இந்தியாவிலேயே முதன் முதல் வலியுறுத்திய பகுத்தறிவுச் சிற்பியும் நூல் எழுதிய ஆசிரியரும் பெரியார் ஒருவர் மட்டுமே!
அவருடைய இத்தகைய அறிவியல் நோக்கும் உற்சாகமும், புதுமையை வரவேற்கும் மனப் பாங்கும் வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து இருந்து வந்தது என்பதே இங்கு கவனிக்க தக்க செய்தியாகும். பல பெரிய தலைவர்களும் தமது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் பழமை வாதம் பிற்போக்குத்தனம், கடவுள் நம்பிக்கை என்று வழுக்கி விழுந்துவிடுவதை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம். பெரியாரின் சீடராக ஆரம்பித்த முன்னால் அமைச்சர் க. இராசாராம் தமது முதிர்ந்த வயதில் தினமும் இரண்டு மணி நேரம் பூ¬ஐ செய்து பிரசாதத்தை பசு மாட்டிற்கு ஊட்டிய பின்னர்தான் தம்முடைய காலை உணவையே உண்பாராம்.
ஆனால் பெரியார் தம்முடைய இறுதி நாள் வரை புதுமைக்கான உற்சாகத்தை கைவிடவில்லை. 19.12.1973ம் ஆண்டு சென்னை தியாகராயர் நகரில் நடத்திய இறுதிப் பேருரையில் நாம் இதனைக் காணலாம்.
"ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 வருடம் இருக்கலாம். இப்போது சராசரி 52 வயதுதான். வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். அவன் வருவதற்கு முன்பு இங்கு சராசரி வயது 10 கூட இல்லை; 7 வயதுதான். அவன் வந்த பிறகுதான் வைத்தியம், சுகாதாரம் எல்லாம்.
எல்லாம் நமக்கு அவன் ஏற்றிய பிறகுதானே இவ்வளவு உயர்ந்தது. ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயது சராசரியாக வாழுகிறான். நாமும் இன்னும் 10 வருஷத்தில் 75 வயதுவரை வாழ்வோம். இப்படி நாளாக, நாளாக 500 வயதுவரை வாழ வேண்டி வரும்! இருப்பது கஷ்டமல்ல; சாவதுதான் கஷ்டம்!
'தோழர்களே 1952 ல் நமது சராசரி வயது 25. இன்று சராசரி வயது 52, இடையிலே 20 வருடத்தில் 30 வருடத்தில் 30 வருடம் நமது ஆயுள் உயர்ந்துவிட்டது. இன்னும் 2000 வருடம் வரும்போது நாம் 75 வருடம் இருப்போம்,
வெள்ளைக்காரன் நூறு வருடத்திற்கு மேல் இருப்பான். சாகமாட்டான் சாவதற்கு அவசியம் இல்லை. அந்த அளவு மருந்தும் வந்துவிட்டது. ஏதோ ஒன்று இரண்டுக்கு இல்லை; அதுவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். எனவே, நல்ல வளர்ச்சியான காலத்திலே இருக்கிறோம். நான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு சொன்னேன். பாருங்கள், நேற்று வந்த பத்திரிகைகளிலே விந்துகளைப் பேங்க்கில் சேர்த்து வைத்து, பத்து ஆண்டுகளுக்குப்பிறகு குழந்தைகளை உண்டாக்கலாம் என்று வந்திருக்கிறது.
கோழிக்குஞ்சைப் பொறிக்க வைப்பதுபோல் பொறிக்க வைத்துவிடலாம். பெண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே ஆண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே- பேங்கு என்று அதற்குப் பெயர். அதிலே சேர்த்து வைத்துக்கொள்ளலாம். என்றைக்கு குழந்தை வேண்டுமோ, அன்றைக்கு குழந்தையை உண்டாக்கிக் கொள்ளலாம். ' பியா பியா' என்று கத்திக் கொண்டு குழந்தை வரும். இதையெல்லாம் பொய் என்று சொல்லமுடியாது."
என்ன உற்சாகமான உரை பாருங்கள்! கேட்பவர் உள்ளத்திலும் நம்பிக்கையை விதைக்கின்ற பேச்சு ஆகும். அவர் இந்த உரையினை தமது சாவின் விளிம்பில் நின்று கொண்டு பேசினார் என்பதை நினைக்கும் பொழுது அதனுடைய வீச்சு நமக்கு எளிதில் புரியும். இந்த உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே அவருக்கு குடல் இரக்க நோய் அதிக வலியை உண்டாக்கியது, பேச்சின் நடுவிலே வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலி தாங்காமல் அம்மா அம்மா என்று அலறுகிறார். கூட்டம் முடிந்தவுடன் அவர் நேராக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கிருந்து அவருடைய விருப்பப்படி வேலுர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது. சிகிச்சை பயன் இன்றி டிசம்பர் 24 ம் தேதி அவர் இறந்து போகிறார். தாம் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு வரை மிகவும் உற்சாகமும் புதுமையில் நம்பிக்கையுடனும் அறிவியலில் ஆழ்ந்த பற்றுடனும் அவர் பேசியது வியப்பளிக்கக் கூடியதாகும். இன்றைக்கு சிறு நோயினால் துன்பப்படுகின்றவர்கள் கூட தமக்கு நோய் என்று வந்தவுடன் தம்முடைய அறிவியல் கொள்கைகளை கைவிட்டு கடவுளைத் தேட ஆரம்பித்துவிடுகிற காலத்தில் பெரியார் தம்முடைய இறுதி வரை அறிவியல் மீது கொண்டிருந்த நம்பிக்கையை கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு முன்னரே பெரியார் அவர்களுக்கு பல முறை பலவித நோய்கள் ஏற்பட்டன, ஒவ்வொரு முறையும் அவர் தம்முடைய மன வலிமையினாலும் அறிவியல் சார்ந்த ஆங்கில மருத்துவ முறையினாலும் சந்தித்து வெற்றிக் கொண்டு இருக்கிறார்.
ஒரு சமயம் அவருக்கு நாவில் தீராதப் புண் உண்டாயிற்று, அது புற்று நோயாக இருக்கக்கூடுமோ என்ற ஐயம் ஏற்பட்டது. நாக்காயிற்றே அறுவை சிகிச்சை செய்தால் பேசும் திறன் எவ்வாற பாதிக்கப்படுமோ என்று மற்றவர்களெல்லாம் அஞ்சிக் கொண்டருந்தப் போது பெரியார் அவர்கள் தம்முடைய மருத்துவரை நோக்கி கூறிய செய்தி என்ன தெரியுமா ?
ஐயா, என்னுடைய நாவில் உள்ள புண்ணை எப்படியாவது ஆற்றிவிடுங்கள். புற்று நோய் என்று நீங்கள் கருதினால் அறுவைசிகிச்சை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள். பேச்சு சிறிது பாதித்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் உயிருடன் இருப்பது அவசியமாகும்.. இதை நான் எனக்காக மட்டும் சொல்லவில்லை. பேசும் திறன் முற்றிலும் போய்விட்டாலோ, அல்லது நோய் பரவி நான் இறந்துவிட்டாலோ, மற்றவர்கள் இராமசாமி நாயக்கர் தன்னுடைய வாழ்நாள் எல்லாம் கடவுளை திட்டிக் கொண்டே இருந்தார் அதனால் தான் அவருக்கு அவருடைய நாக்கில் புற்று நோய் ஏற்பட்டது. திட்டிய நாக்கினை கடவுள் தண்டித்து விட்டார் என்று கூறுவார்கள். அவ்வாறு நடந்துவிட்டால் அதற்குப் பிறகு இந்த நாட்டில் கடவுளை திட்டவோ அல்லது பகுத்தறிவு பிரச்சாரம் செய்வதற்கு ஒரு பயலும் முன் வரமாட்டான். எனவே இந்த சமயத்தில் மருத்துவ முறையின் மூலமாக நான் உடல் நலம் அடைவது மிகவும் முக்கியமாகும்.
நெகிழவைக்கும் இந்த வேண்டுகோளைக் கேட்ட மருத்துவரும் துணிவுடன் அறுவைசிகிச்சை செய்ய பெரியாரும் தன்னுடைய நாக்குடன் உயிர் பிழைத்தார். அதற்குப் பிறகு நெடுங்காலம் வாழ்ந்து வந்து பகுத்தறிவினைப் பரப்பும் பணியினை தொடர்ந்து செய்து வந்தார்.
பின்பு ஒரு சமயம் அவருடைய சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்ட போது அதை சரி செய்ய வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வயிற்றில் ஒரு சிறு துளையிட்டு அதன் மூலம் ஒரு இரப்பர் குழாய் சொருகப்பட்டு அதன் மூலமாகவே சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறிக் கொண்டிருக்கும். எனவே பெரியார் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவர் முன்னால் ஒரு தோழர் ஒரு வாளியினை தூக்கிக் கொண்டு செல்வார். பெரியார் மேடையில் அமர்ந்தவுடன் அந்த வாளி அவருக்கு முன்பு வைக்கப்படும். அந்த வாளியின் உள்ளே இந்த இரப்பர் குழாய் விடப்படும் அவர் மேடையில் இருக்கும் பொழுதே, பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சிறுநீர் வாளியில் இறங்கிக் கொண்டிருக்கும்.
இவ்வாறாக தமது வாழ்நாளில் பல கொடிய நோய்களை சந்தித்த பெரியார் அவர்கள் அதற்காக முடங்கிப் போய்விடவில்லை. அறிவியல் மூலமாக அதற்கு தக்க தீர்வினைக் கண்டு தம்முடைய சமுதாயப் பணியை தொடர்ந்து செய்து வந்தார். இது அவருடைய மன உறுதியையும் அவருக்கு மருத்துவத்தின் பால் இருந்த நம்பிக்கையும் காட்டுவதாகும்.