ஆமை, பறவை, பாலூட்டிகள் மற்றும் மனிதர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை தூக்கம். ஏன் உயிரினங்கள் தூங்க வேண்டும்? இதற்கு பல காரணங்கள் தரப்படுகின்றன. தூக்கத்தின்போது நினைவுகள் வகைப்படுத்தப்பட்டு நிரந்தரப்படுத்தப்படுகின்றன, மூளைக்கு ஓய்வு கிடைக்கிறது, உடலில் தேங்கும் விஷப் பொருள்கள் நீங்குகிறது என்றெல்லாம் பல விளக்கங்கள் உள்ளன.

சில விலங்குகள் குளிர் காலங்களில் நீண்ட காலம் தூங்கிக் கழிக்கின்றன. மனிதர்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூங்கிக் கழிக்கிறார்கள். எதற்காக இதெல்லாம்? பரிணாம நடத்தையியல் அறிஞர்கள் சொல்லுகிறார்கள், கவலையை மறக்கவும் தொல்லைகளைத் தவிர்க்கவும் தூக்கம் உதவுகிறது. வாழ்நாளில் பகுதி நேரம் தூங்கிவிடுவது ஒரு வகையில் பாதுகாப்பானதாக இருக்கிறதாம். விபத்து, நோய், பட்டினி, கொலை போன்ற அபாயமான நிகழ்ச்சிகளை உயிரினங்கள் ஓரளவுக்குத் தவிர்த்துக் கொள்ள தூக்கம் இன்றியமையததாக இருக்கிறதாம்.

நினைத்துப் பாருங்கள் மனிதர்கள் 24 மணிநேரமும் முழித்துக்கொண்டு இருந்தால் இந்த உலகம் தாங்குமா? 12 மணி நேரம் அவன் செய்யும் காரியங்களையே பொருத்துக் கொள்ள முடியவில்லை. தூங்கித் தொலைப்பதே நல்லது போலிருக்கிறது.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

 

Pin It