kunderipallam_dam_640

குண்டேரிப்​பள்ளம் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை தமிழகத்தின் பசுமை நுரையீரல் எனலாம். ஓங்கு தாங்காய் ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு நடுவே சுழித்துக்கொண்டு ஓடும் நதிகளும் காட்டாறுகளும்தான் இந்த வனத்தை வளம் கொழிக்கச் செய்கின்றன. காணும் திசையெங்கும் பச்சைப் போர்வை போர்த்தி நிற்பது போலத் தோன்றும் இந்தக் கானகம் ஒரு கனவுலகம். இந்த எழில்மிகு பகுதிகளின் சுற்றுலாக் குறிப்புகள் இதோ....

சத்தியமங்கலம் வனப்பகுதி காட்டு யானைகளின் புகழிடமாய் இருக்கிறது. முதுமலை, பந்திப்பூர் சரணாலயங்களில் கிடைக்காத அரிய தாவர வகைகள் கூட இங்கு கிடைக்கின்றனவாம். அது மட்டுமா எந்நேரமும் சளைக்காமல் ஓடும் பவானியாறும், மோயாறும் வன விலங்குகளின் தாகத்தைப் போக்கி தண்ணீர்த் தாயாக விளங்குகிறது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு நிகரான கிளைமேட் வேண்டுமா? அப்படியென்றால் இங்குள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருக்கும் கெத்தேசாலுக்குத்தான் வர வேண்டும். சத்தியமங்கலத்திலிருந்து சரியாக 54 கி.மீ தொலைவில் இருக்கிறது கெத்தேசால். ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாத அழகிய மலைகிராமமான இந்த கெத்தேசாலின் கிளைமேட்டுக்கு மசியாதவர்களே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஊர் மட்டுமல்ல இந்த ஊர் மக்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ஊராளி இனப் பழங்குடி மக்கள் வாழும் இந்த கெத்தேசாலுக்கு ஒரு முறை வந்து பாருங்கள் இந்த மக்களின் வாழ்க்கை முறையினையும் கற்றுக் கொள்வீர்கள்.

டணாய்க்கன் கோட்டை

டணாய்க்கன் கோட்டை

சத்தியமங்கலம் என்றாலே பண்ணாரி மாரியம்மன் கோவில்தான் நினைவுக்கு வரும். சத்தியமங்கலத்திலிருந்து சரியாக 12 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பண்ணாரி அம்மன் கோவில் தமிழக அளவில் பிரசித்தி, அதுவும் ஆண்டுதோறும் நடைக்கும் குண்டம் திருவிழா என்றால் சொல்லவே தேவையில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகா மாநிலத்திலிருந்தும் கூட லட்சக்கணக்கான பக்தர்கள் பண்ணாரியை வழிபட்டு குண்டம் இறங்குவர். இந்தக் கோவிலிலிருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கிறது காட்டு பண்ணாரி அம்மன் கோவில். இங்குதான் பண்ணாரி தோன்றியிருக்கிறது. இந்தக் கோவிலுக்குப் போக பஸ் வசதி ஏதும் இல்லையெனினும் தீவிர பக்தர்கள் நடந்தே செல்கிறார்கள்.

கொடிவேரி

கொடிவேரி

சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது பவானிசாகர் அணைக்கட்டு. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை, ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை என்று பல சிறப்புக்கள் இருந்தாலும் இங்குள்ள பூங்கா சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்கு. அது மட்டுமல்ல இந்தப் பூங்கா, காதல் ஜோடிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது. இங்கு வாய்க்கு ருசியாய் பொரித்து எடுக்கப்பட்ட அணை மீன்கள் கிடைக்கின்றன. அணையின் மேல்பகுதிக்குப் போக பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆண்டுக்கு காணும் பொங்கல் மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய இரு நாட்களுக்கு மட்டும்தான் அனுமதி. ஒரு சுவாரஸ்யத் தகவல் என்னவென்றால் இந்த அணைக்குள் டணாய்க்கன் கோட்டை எனும் ஒரு கோட்டை மூழ்கிக் கிடக்கிறது. அணையின் நீர்மட்டம் 25 அடியாகக் குறையும் போது இந்த கோட்டை நம் கண்களுக்குத் தெரியும். குடும்பத்தோடு குதூகளிக்க ஒரு நல்ல இட‌ம் பவானிசாகர் அணைக்கட்டு.

சத்தியமங்கலத்திலிருந்து 14 கிமீ தூரத்தில் கண்ணைக் கவரும் கொடிவேரி அருவி இருக்கிறது. இந்தக் கொடிவேரியை மினி குற்றாலம் எனலாம். கரைபுரண்டு வரும் பவானியாற்று நீர் அருவியாகக் கொட்டுவது அழகோ அழகு. அருவியில் குளிக்க விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

maththalakombu_640

மத்தாளக்கொ​ம்பு

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது குண்டேரிப்பள்ளம். குன்றி மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடியும் இடம்தான் இந்த குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு. மூன்று பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்து நிற்க நடுவே இந்த அணைக்கட்டு இயற்கை அழகினை வாரி இறைக்கிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்களின் சுவையே தனி அது மட்டுமில்லாமல் மீன்களின் விலையோ மிகவும் குறைவு. இந்த அணை அழகுற காட்சியளித்து கண்களுக்கு விருந்தளிப்பது மட்டுமில்லாமல் மீன் விருந்தும் அளிக்கிறது.

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் தூக்கநாயக்கன்பாளையம் எனும் விவசாய கிராமம் இருக்கிறது. இங்கு 500 ஆண்டுகளாக வற்றாத நீரூற்று ஒன்றுள்ளது. பார்ப்பதற்கு நீச்சல் குளம் போலக் காட்சி தரும் இந்த நீரூற்றின் பெயர் மத்தாளக்கொம்பு. இப்பகுதியில் இருக்கும் பள்ளி மாணவர்கள் விடுமுறைக்காலத்தை இங்குதான் கழிக்கின்றனர். இந்த நீரூற்றோ படிகத்தைப் போலத் தூய்மையானது என்பதால் இங்கு குளிப்பதற்காகவே கூட்டம் அலைமோதும். இப்படியாக சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் கண்டுகளிக்க இன்னும் பல இடங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

- கி.ச.திலீபன்

Pin It