சாதாரண மனித வாழ்க்கையில் பல்வேறு வகையான அனுபவங்களையும், அவை சார்ந்த உடல் இயக்கங்களையும் நேரடியாக கண்ட நாம், ஒரு வித்தியாசமான உடல் மற்றும் செயல் இயக்கங்களை பொதுவாக ஹிஸ்டீரியா நோயாளிகளிடம் காண முடியும். அறிவியல் ஆய்வுகளின்படி பாலுணர்வில் ஏற்படும் சிக்கல்களும் அவை சார்ந்த அச்சங்கள், ஏமாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலோர் வெளி வாழ்க்கையில் அதிக திறமைசாலிகளாக தங்களை காட்டிக் கொள்வர். ஆனால், நிஜவாழ்க்கையில் கோழைகளாகவோ அல்லது அச்சம் நிறைந்தவர்களாகவோ காணப்படுவர்.

இளம் வயது போதனைகளும் அதற்குள் ஊறிப்போன எண்ணங்களும் இடைவிடாமல் தனக்குள் மையங்கொண்டு விடுவதால், தான் செய்வதெல்லாம் ஏதோ தவறானது என்றோ அல்லது தன்னால் முடியாது என்றோ ஓர் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

சிறுவயதிலிருந்தே அளவிற்கதிகமான கண்டிப்பும் - கண்காணிப்பும் இவர்களின் ஆழ்மனதை பாதித்து விடுவதும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சுயகவுரவம் மிக்கவர்களாகவும், தங்களை பிறரை விட உயர்ந்தவர்களாகவும், காட்டிகொள்ள எண்ணுவதால் அதில் ஏற்படும் குழப்பங்களும், தோல்விகளும் இயலாமையும் இத்தகைய நோய்க்கு காரணமாக அமைந்து விடுகிறது.

சிறுவயதில் தன் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வீடு களில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தார் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் ஆழ் மனதை பாதித்துவிடுவதும் இந்நோய்க்கான காரணமாகும்.

கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நோயாளிகள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமையாத பட்சத்தில் சிறு பிள்ளைத்தனமாக தாழ்ச்சியடைந்து விடுவதாலும், தன்னையுமறியாமல் குழப்பமடைவதாலும் பல்வேறு பரபரப்புகளும் - படபடப்பும் ஏற்பட்டு சதா அச்சத்துடனும் - அசதியுடனும் காணப்படுவர், சிலருக்கு மயக்கமும் தோன்றிவிடும்.

பள்ளியறை அச்சங்களும் பல்வேறு தோல்விகளும் மனதில் ஒருவித சலனத்தை ஏற்படுத்துவதாலும், பிறரை விட தன்னை மிக உயர்ந்தவராக எண்ணும்போது அது நடைபெறுவதற்கு சாதகமான சூழ்நிலை அடையாத போதும், பால் உணர்வும், கற்பனைகளும் மனதை ஆட்டிப் படைக்கும் போதும், பயஉணர்வு மிஞ்சி ஆழ்மனதை பாதித்துவிடுவதும் இத்தகைய நோய்கள் தோன்றுவதற்கு ஒரு காரணமாகும்.

திருமணமான புதுப்பெண்கள் பலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். பல்வேறு கற்பனைகளில் ஆழ்மனதை நிறைத்து அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்ணின் அடிமனதில் அதற்கு எதிரான அச்சங்களும் கற்பனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் இத்தகைய நோய்கள் தோன்றுகின்றன.

மேலும் அறிந்த அல்லது கேள்விப்பட்ட பல்வேறு கதாப்பாத்திரங்கள் ஆழ்மனதை ஆக்கிரமித்து விடுவதும் அதே போல் வாழவேண்டும் என எண்ணி மறந்துபோன ஆழ்மன பாதிப்புகளும் திடீரென தலை தூக்குவதும் அதற்கான சூழ்நிலையை தேடுவதும் இந் நோய்க்கான ஒரு காரணமாகும்.

நோயின் அறிகுறிகள்

1. உடலியக்க மாற்றங்கள் (Conversion Hysteria)
2. வலிப்புகள் (Convulsion)
3. நினைவு மாற்றங்கள் (Dissociative changes)
4. இரட்டை வாழ்க்கை (Dual personality)
5. பன்முக வாழ்க்கை (Multiple personality)

உடலியக்க மாற்றங்கள்:

இந்நிலையில் சிலர் உடல் நோயாளிகள் போலவும், மன நோயாளிகள் போலவும் காணப்படுவர். ஆனால் உடலின் சில பாகங்கள் மரத்துப் போவதும், செயலிழந்து போவதும் இதன் உடலியக்க மாற்றங்களாக பரிணமிக்கும். இதேபோல் ஒரு சிலருக்கு கை கால் அல்லது உடல் முழுவதும் நடுக்கமும், தசையிறுக்கம் போன்ற நிலையும் ஏற்படலாம்.

திடீரென நீட்டி, மடக்க முடியாவண்ணம் ஆகி விடுவதும், தொடர்ந்து அசதி போல் கீழே விழுந்து மயங்கி விடுவதும் இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.

கீழே விழுந்து மயக்க நிலையில் இருப்பவர் அரைகுறை மயக்கமடைவதும், தானாக தன் தேவைக்கேற்ப நீட்டி மடக்க முடியாத பாகங்களை நீட்டி மடக்குவதையும் காணமுடியும். இவையனைத்தும் ஆழ்மனதின் பிரதிபலிப்பேயாகும். ஒரு சிலருக்கு இத்தகைய மயக்கத்தோடு வலிப்பு நோய் ஏற்படுவதும் உண்டு.

இத்தகைய நோயாளிகளில் ஒரு சிலருக்கு பார்வை இழப்பு ஏற்படும். காது மந்தம் அல்லது காதுகேட்காமல் போய்விடும். சிலருக்கு ஒருகை, ஒருகால் செயலிழந்து பக்கவாதம் போல் ஆகிவிடும், திடீரென சிலருக்கு இரண்டு கால்கள் மட்டும் செயலிழந்துவிடும். சிலரின் உடல் முழுவதும் துடித்துக்கொண்டே இருக்கும். இவையனைத்தும் ஆழ்மன பிரதிபலிப்பே ஆகும். ஆழ்மனதிற்கு ஒவ்வாத வீட்டு சூழ்நிலை, அலுவலக சூழ்நிலைகள், பள்ளிக்கூட சூழ்நிலைகளிலிருந்து தற்காலிகமான மனம் தனக்கேற்ற ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக தோன்றும் ஓர் மன உடல் இயக்க மாற்றமே இத்தகைய அறிகுறிகளே தவிர நடிப்போ நாடகமோ இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து, ஹிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளியை காண்போம். பெயர். லெக்ஷ்மி. வயது 26 எளிமையான தோற்றமும், சுமாரான உடல்வாகும் கொண்டவர். திருமணம் ஆகும் முன் வீட்டில் இளைய பிள்ளையாக வளர்ந்தவள். மற்ற உடன் பிறந்தார்களின் பாதுகாப்பில் கண்டிப்பாகவும், செல்லமாகவும் வளர்ந்தவர்.

தனது 23-அம் வயதில் திருமணமாகி கணவன் வீடு வந்த அவரின் மனதில் ஏதோ இனம்புரியாத கலக்கமும் பயமும் தொற்றிக்கொண்டதால், முதலிரவு அன்றே மயக்கமடைந்து விடுகிறார். கணவன் வீட்டார்களும் அவருக்கு ஏதோ பேய் பிசாசு பிடித்துவிட்டதாக மந்திர தந்திரங்கள் செய்து தாயத்துக் கட்டினார். சில நாட்கள் நல்ல நிலையில் இருந்த லெக்ஷ்மி மீண்டும் மயக்கநிலை அடைந்துவிடுகிறாள். அச்சமடைந்த கணவன் வீட்டாரும் மனைவியின் வீட்டாரும் இணைந்து குறி சொல்லும் சாமியார் ஒருவரைத்தேடி செல்கின்றனர்.

அவர், பிள்ளைக்கு பயப்படும் படி ஒன்றும் இல்லை. ஒரு பயப்பாடு மனதில் ஏற்பட்டுள்ளது அதற்கு ஒரு பூசாரியை வைத்து பார்த்து விட்டால் சரியாகிவிடும் என்று கூறி அனுப்பிவிட்டார். ஓரளவு திருப்தியடைந்த அவர்கள் அவர் சொன்னது போல் ஒரு பூசாரியை தேடி சென்று அவரிடம் நடந்ததைக் கூறினர். பூசாரியோ பிள்ளைக்கு அறுகொலை ஒன்றின் தொந்தரவு இருக்கிறது அதனால் நல்லமுறையில் செய்தால் தான் சரியாகும் எனக்கூறி ஒரு காகிதத்தில் பூசைக்கு வேண்டியவைகளை குறித்து கொடுத்து, வாங்கச் சொல்லி ஒரு நாள் அதற்கான பூசைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது லெக்ஷ்மி பேய்பிடித்தவள் போல் வந்து ஆடத் தொடங்குகிறாள்.

தன் ஆழ்மனதின் அச்சங்களும் அதில் குடிகொண்ட ஆளுமைகளும் பிரதிபலிப்பது தான் இந்த நோய் என்பதை சாதாரண மக்களால் உணரமுடியவில்லை. அதனால் லெக்ஷ்மியின் வாயிலிருந்து அவளைப் பற்றியே அதாவது அவளைத் தொடர்ந்துள்ள பிசாசு பற்றிய விவரங்களை பூசாரி கேட்க... அவளும் என் பெயர் லீலா, நான் இவளோடு தான் இருக்கிறேன். இவள் எனக்கு வேண்டும். இவளை நான் கொண்டு போய்விடுவேன் என்றெல்லாம் ஆடிப்பொடித்து விடுகிறாள்.

அவள் லீலா என்று சொன்னதும் லெக்ஷ்மி வீட்டார் புரிந்துகொண்டனர். அவர்கள் தூரத்து சொந்தக்கார பெண்தான் லீலா. அவள் வாழ்வில் விரக்தி அடைந்து விசம் குடித்து செத்தவள் என்று பூசாரியிடம் கூறி உண்மை தான் என உறுதிப்படுத்திவிட்டனர். லெக்ஷ்மியின் மேல் உள்ள பேய் ஆடியதும், பூசாரி பிரம்படி கொடுத்து அச்சுறுத்தி முடியறுத்து அதை பிடித்து குடத்தில் அடைத்ததும் நான் போகிறேன்.... என்னை விட்டு விடு என லீலா அழுது கதறுவதுமாக பூசை நிறைவேறுகிறது. உடனே லெக்ஷ்மி மயங்கி விழ, பூசாரி அவள் முகத்தில் நீர்தெளித்து மயக்கத்திலிருந்து எழுப்பிவிட, சிரித்த முகத்துடன் லெக்ஷ்மி பழைய நிலைக்கு திரும்பி விடுகிறாள்.

சுமார் ஆறு மாதங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் லெக்ஷ்மி சந்தோசமாக இருக்கிறேன். ஒரு நாள் கணவர் வீட்டில் மாமனாருக்கும் - கணவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு, வீட்டை விட்டு தனியேப் போகுமாறு மாமனார் கூற அது லெக்ஷ்மியின் மனதைப் பாதித்துவிட மீண்டும் மயக்கமடைந்து விடுகிறாள்.

... தொடரும்.

(நன்றி : புதிய தென்றல் அக்டோபர் 2007)

Pin It