பய உணர்வு தோன்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. பயம் என்பது ஆழ்மனதில் பதிந்த நிரந்தர பயமாகவும், அவவ்ப்போது ஏற்படும் தற்காலிக பயமாகவும் இருக்கலாம். நம் மூளையிலுள்ள இருபக்க டெம்பொரல் லோபின் உட்புறம் உள்ள 'அமிக்டலா' என்னும் திசுக் கூட்டம்தான் பயம் ஏற்படுவதற்கான அடிப்படை மூளை அமைப்பாகும். எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இது முக்கியமாகச் செயல்படுகிறது. தன்னம்பிக்கையின்மையும், மனத் தடுமாற்றமுமே பயத்தின் முதல் அறிகுறி.

பயம் என்பது பொதுவாக சிறுவயதிலேயே குழந்தைகளிடம் ஏற்பட்டுவிடுகிறது. பாதுகாப்பு இல்லாமைதான் ஒருவர் மனதில் பய உணர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். ஒருவர்க்கு பயம் ஏற்படும்போது கண்களை அகல விரிப்பது, கண் இமைகளை சுருக்குவது, வாய் மற்றும் உதடுகளை சுழிப்ப்து ஆகிய மாறுபட்ட முக பாவனைகள் உண்டாகின்றன. பயத்தில் கண்களையும் இறுக்கமாக மூடிக் கொள்கின்றனர். உடல் தசைகள் விறைப்பாகி வேர்க்கிறது. உடல் நடுக்கமும், படபடப்பும் ஏற்பட்டு மயங்கி நினைவிழக்கின்றனர். இதயத் துடிப்பும் அதிகமாகிறது.

2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 13 - 15 வயதுள்ள இளம் வயதினரிடம் கணக்கெடுத்ததில் அவர்கள் எதன் மீது, எத்தகைய பயம் கொள்கிறார்கள் என்று ஆராயப்பட்டது. அதில் முக்கியமாக கருதப்பட்ட சிறந்த 10 வகையான பயங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.

1. தீவிரவாதத் தாக்குதல்கள், 2.சிலந்திகள், 3. இறப்பு, 4. முயற்சியில் தோல்வி, 5. போர், 6. உயரங்கள், 7. குற்றவாளி/குழு வன்முறை, 8. தனிமை, 9. வருங்காலம் பற்றிய கவலை, 10. அணு ஆயுதப் போர் ஆகியவைகளாகும்.  

அளவற்ற பயங்கள் இருந்தபோதிலும், சிலருக்கு கேள்விப்படாத சில பயங்களும் ஏற்படுவதுண்டு.

அந்த அபூர்வமான 10 வகையான பயங்கள்.

1. புல்லாங்குழலைப் பார்க்க, இசையைக் கேட்க பயம் - ஆலொ ஃபோபியா

2. சாக்லெட் போன்ற பொருட்கள் வாயின் உட்புறம் மேலன்னத்தில் ஒட்டிக் கொள்வதால் பயம் - அரக்கி புடிரோ ஃபோபியா
3.முழங்கால்களைப் பார்க்க, நினைக்க பயம் - ஜெனு ஃபோபியா
4. நீளமான சொற்களுக்கு பயம் - (Hippo) கிப்போ பொடோ மான்ச்ட் ரஸ் ஸ்ஃயுப்ட் அலிஓ ஃபோபியா
5. நூல் மற்றும் நூல்கண்டைப் பார்த்து பயம் - லினனோ ஃபோபியா
6. பாடல்களைப் பார்க்க, படிக்க பயம் - மெட் ரோ ஃபோபியா
7. ஷெல் மீன் களைப் கண்டால் பயம் - ஆஸ்ட் ரா கோனோ ஃபோபியா
8. மஞ்சள் நிறத்தைக் காண பயம் - ஃசாந்தோ ஃபோபியா
9. சிரிக்க பயம் - ஜீலியோ ஃபோபியா
10. பயம் என்று நினைத்தால் பயம் - ப்போபோ ஃபோபியா

(பிப்ரவரி, 16, 2011 தேதி, ரீடர்ஸ் டைஜஸ்ட் ஈ-மெயில் செய்திக் கடிதத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)

பயத்தை போக்குவது எப்படி?

முன்பு புரட்சி நடிகர் M.G.R நடித்த 'கலங்கரை விளக்கம்' என்ற சினிமாவில் கதாநாயகி சரோஜாதேவியைப் பார்த்து சொல்வார். பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாக தட்டினால் பட்டென்று விழுந்துவிடும் என்பார். அது போல துணிச்சலுடன் எதிர் கொண்டால் பயத்தையும் வெல்லலாம். மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது நிச்சயம்.

தனிமையைத் தவிர்த்து, உற்ற துணையுடம் இருக்க வேண்டும். பெரும்பாலும் இருட்டில் செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் தனிமையில் இருக்க நேரும்பொழுது, நல்ல புத்தகங்களைப் படிக்கலாம், ரேடியோ அல்லது சி.டி பிளேயரில் நல்ல இசையை சப்தமாகக் கேட்டு ரசிக்கலாம். தொலைக் காட்சியில் நல்ல மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.  

பய உணர்வு ஏற்படும் நேரங்களில், பயம் நீங்கி தைரியம் பெறும் வகையில் மனத்தில் ஓடும் எண்ணத்தையும், சுற்றுப் புற சூழ்நிலைகளையும் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளவேண்டும். ஆன்மீகத்தில் நம்பிக்கையுடன், தெய்வ நம்பிக்கை மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு கொண்டும் பயத்திலிருந்து விடுதலை பெறலாம். தேவைப்பட்டால் தகுந்த மன நல மருத்துவரிடமும் ஆலோசனை பெறலாம்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It