anna 450தமிழர் தமிழ்நாடு, தமிழ்நாடு தமிழருக்கே என்று நாம் கூறிவந்தபோது தமிழர் என்றால், தனி இனம், ஆரியத்தின் கலப்புக்கு முன்பு உயர்ந்த பண்புகளுடன் வாழ்ந்த இனம், என்பதை வலியுறுத்தி வந்தோம். வெறும் மொழி மட்டுமல்ல. தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள், என்பதை விளக்கி வந்தோம். “தமிழ்நாடு தமிழருக்கே” என்றபோது, தமிழ்நாடு இன்று மதம், அரசியல், பொருளாதாரம் எனும் துறைகளிலே முறையே, ஆரியர், வெள்ளையர், வட நாட்டார், என்பவைகளால் பாழாக்கப் படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி இந்தநிலை மாறினால் மட்டுமே தமிழ்நாடு வளமாக வாழ முடியும், இதற்குத் தமிழ்நாடு தனி அரசுரிமை பெறவேண்டும் என்பதை விளக்கினோம்.

தமிழர் தனி இனம், தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள் என்பதை மேலும் ஆராயும் போது, ஆந்திரரும் கேரளரும் இது போன்ற நிலை கொண்டவர்களே. இவர்களும், தமிழரைப் போலவே, ஆரியத்துக்குப் பலியானவர்கள், வடநாட்டுப் பொருளாதாரத்துக்கு இரையாகிறர்கள் என்பதையும் எடுத்துக்காட்டி - அவர்களும் தங்கள் நாட்டை, பார்ப்பன - பனியாப் பிடிப்பிலிருந்து விடுபடவேண்டும் என்று கூறினதோடு, கூட்டு முயற்சி செய்யவேண்டும் என்றோம். கூட்டு ஆட்சி நடத்தலாம் என்றோம். இவ்வளவுக்கும் ஆதாரமாக, இன்று தமிழர், தெலுங்கர், கேரளர், என்று மொழிவழி வேறு வேறாகக் காணப்படும் மூவரும், திராவிடர் என்ற மூல இனத்தவர் என்பதை விளக்கியதோடு, மொழியும்கூடத் தமிழிலிருந்தே மற்றவை என்பதையும் கூறினோம்.

கூறினோமென்றால், வெட்டிப் பேச்சாக அல்ல. நிலநூல், மொழிநூல் மனப்பண்பு நூல், வரலாறு ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டு கூறினோம். “திராவிடநாடு, திராவிடருக்கே” என்ற கூறலானோம். தமிழருக்கு, எவ்விதமான புதுவாழ்வு தேவை என்ற விரும்பினோமோ, அதே விதமான புதுவாழ்வு ஆந்திரருக்கும், கேரளருக்கும் வேண்டும் என்று கூறினோம் என்று பொருள்.

மூவரும், இன்றுள்ளதுபோல மதத்திலே ஆரியருக்கும், அரசியல் பொருள் இயலிலே டில்லிக்கும் அடிமைப்பட்டிருப்பது ஒழிக்கப்பட்டு, தமிழகமும், ஆந்திரர் ஆந்திர நாடும், கேரளர் கேரளமும் அமைத்துக்கொண்டு, தத்தமது எல்லையில் தத்தமது விருப்பப்படி வாழ்ந்துகொண்டு வருவதுடன், மூவரும் கூட்டாக நின்று, பொதுவான காரியங்களையும் மூன்று இடங்களின் முன்னேற்றத்துக்கான காரியத்தையும் கவனிக்கவேண்டுமென்றும் கூறினோம்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமை முழுக்கத்தை அன்பழைப்பாக்கியபோது, அது திராவிடநாடு என்று வளர்ந்தது. இங்குக் கவனிக்கவேண்டியது மூலநோக்கத்தை. அந்த மூலநோக்கம், ஆரீய ஆங்கிலேய வடநாட்டுப் பிணைப்பிலிருந்து விடுபடவேண்டும் என்பது.

இந்த மூல நோக்கத்தை ஏற்றுக்கொள்ள ஆந்திரமும் கேரளமும் இசைந்தால், திராவிடநாடு எனும் அளவுக்குத் தரணி விரிந்திருக்கும். அவர்கள் இசையாவிட்டால், தமிழகம் என்ற அளவோடு இருக்கும். ஆனால், அதுதான் முக்கியம் - அளவு குறைந்து இருப்பினும் மூலநோக்கம் முறியாது - தனி அரசுரிமை இருக்கும். இந்த விளக்கத்தைக் கவனியாததாலேயே பலரிடையே குழப்பம் உண்டாகிறது.

இந்த மூல நோக்கத்தை, ஆந்திரமும் கேரளமும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம் - ஏற்றுக்கொள்வதிலே அந்த இரு மக்களுக்கும் நலன் இருக்கிறது என்ற நம்புகிறோம், அவர்கள், டில்லியுடன் இணைந்து இருப்பதைவிட, கூட்டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். இதை எடுத்துக் கூறும் அளவுக்கும், நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை, உறவு, ஒரே இனம் என்ற உரிமை இருக்கிற காரணத்தால்.

அவர்கள் அடியோடு இந்த அன்பழைப்பை ஏற்க மறுத்தால் என்ன ஆகும்? நமது மூலநோக்கம் கைவிடப்பட மாட்டாது தமிழகம் வரையிலேனும், நாம் இன்பத் திராவிடம் - (புது முறையான சமுதாய பொருளாதார, மத ஆட்சி முறை) இருக்கும். திராவிடம் என்பது நிலப்பரப்பை மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டும் சொல். ஆரியம்! என்ன பொருள்? ஒரு இடமா? இல்லை! ஒருவகை வாழ்க்கை முறை. திராவிடம்? வாழ்க்கை முறை. அத்துடன், வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு பூபாகம் - தரணி.

இந்த வாழ்க்கை முறை, பண்பாடு, ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளிலும் இருக்கவேண்டும் என்பது நமது ஆசை அது ஈடேறாவிட்டால் வாழ்க்கை முறையையே விட்டு விடுவோம் என்றல்ல அர்த்தம் - ஏற்றுக் கொள்ள இயும் இடம் வரையில் அமைப்போம் என்று பொருள்.

அறிஞர் அண்ணா உரைகள்

Pin It