உண்மையில் இந்தக் கேள்விதான் இன்று இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கு பெரும் தொல்லை தருவதாக உள்ளது. மக்களால் வெறுக்கப்பட்ட, மதவெறி பிடித்த, கார்ப்ரேட் அடிவருடிக் கும்பலான பிஜேபியால் எப்படி பல மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற முடிந்தது என்பது பலருக்கும் வியப்பாக உள்ளது. குறிப்பாக அதற்கு அடித்தளமே இல்லாத மாநிலங்களில் கூட, எப்படி அதனால் தன்னுடைய ஆட்சியை விரிவுபடுத்த முடிந்தது என்பது பலருக்கும் குழப்பமான ஒன்றாகவே இருக்கின்றது. ஆனால் 'பாஜக எப்படி வெல்கிறது?' என்ற இந்தப் புத்தகம் அதற்கான விடையை மிகத் தெளிவாக ஆய்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. இந்த நூலை எழுதிய பிரசாந்த் ஜா, தன்னுடைய நேரடியான கள ஆய்வின் மூலம் நம்மை பிஜேபியின் தேர்தல் உத்திகளை அறிய வைக்கின்றார். நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு எதிர்த் திசையில் அவர்கள் தேர்தல் உத்திகளை அமைக்கின்றார்கள். நவீன தொழில்நுட்பத்தை இடதுசாரிகள் பயன்படுத்துவதைவிட மிக லாவகமாக நேர்த்தியாக வலதுசாரிகள் பயன்படுத்துகின்றார்கள். மக்களின் கருத்துக்களை திசைமாற்ற பிற்போக்குவாதிகள் மிக முற்போக்கான உத்திகளை எல்லாம் எப்படி கையாள்கின்றார்கள் என்பதை இந்நூல் பதிவு செய்துள்ளது.

bjp eppadi velgirathuஇந்தப் புத்தகத்தின் அரசியல் நிகழ்வுகள் எல்லாம் முக்கியமாக உபி, பீகார், அரியானா, மணிப்பூர் போன்றவற்றை சுற்றியே எழுதப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உபியைச் சுற்றியே பெரும்பாலும் உள்ளது. காரணம் உபி, பிஜேபிக்கு முக்கியமான சோதனைக் களமாக பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஒரு தேசியக் கட்சியாக பாஜக உருவாவதற்கான மையப் பகுதியாகவும் இம்மாநிலம் இருந்துள்ளது. உபியில் எப்பொழுதெல்லாம் பாஜக வெற்றியடைந்ததோ, அப்பொழுதெல்லாம் தேசிய ரீதியாகவும் அது வளர்ச்சி அடைந்தது. அதே நேரம் இம்மாநிலத்தில் கட்சி சரிவைக் கண்ட போதெல்லாம், மத்தியிலும் சரிவைக் கண்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி இருவருமே இந்த மாநிலத்தில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1930 ஆம் ஆண்டு தொடங்கி தனக்குத் தேவையான பெருந்திரளான உறுப்பினர்களையும் உபியின் அலகாபாத் பலகலைக்கழகத்திலிருந்தும் , பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்துமே தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் பிஜேபி தன்னுடைய அரசியலுக்காக பயன்படுத்தும் மூன்று கோயில்களான அயோத்தி, காசி மற்றும் மதுரா போன்றவையும் இந்த மாநிலத்தில்தான் உள்ளது.

நாம் பெரும்பாலும் பிஜேபி தேர்தலில் வெற்றி பெற மதவாதத்தையும், சாதியவாதத்தையும் மட்டுமே நம்பி இருப்பதாக நினைக்கின்றோம். ஆனால் அனைத்து சாதி மக்களையும், மத மக்களையும் கொண்ட நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தியை அவர்கள் கையாள்வதில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய அடிப்படையான ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் கூட பல முறை சமரசம் செய்து கொண்டிருக்கின்றார்கள். உபியில் இந்து - முஸ்லிம் என்னும் இரு மதங்களுக்கு இடையிலான பிரச்சினையைத் திட்டமிட்டே உருவாக்கி, அவர்கள் ஓட்டுகளை அறுவடை செய்தார்கள். அதற்காக ஜாட் சாதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் தங்களுடைய தங்கையை இசுலாமிய ஆணிடமிருந்து காப்பதற்காகப் போராடிய போது, அவர்களை இஸ்லாமியர்கள் கொடூரமாக அடித்துக் கொன்றது போல போலியான காணொளிக் காட்சிகளை உருவாக்கி வெளியிட்டார்கள். இதனால் மிகப் பெரிய கலவரம் திட்டமிட்டு முசாபர் நகரில் உருவாக்கப்பட்டது. 50 பேர் பலியானர்கள், 40000 பேர் ஊரைவிட்டு வெளியேறினார்கள். இந்தக் கலவரத்தில் கிடைத்த ஆதாயத்தால் 2017 உபி தேர்தலில் பிஜேபியால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது உள்பட பல்வேறு தகவல்களை இந்நூல் நமக்குத் தருகின்றது.

உபியில் வெல்ல முடிந்த பிஜேபியால் பீகாரில் வெல்ல முடியாமல் போனதற்கான காரணமாக மோகன் பகவத்தின் பேச்சை குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். ஆர்கனைசர் இதழில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மோகன் பகவத் கொடுத்த பேட்டியை நிதிஷும், லாலுவும் தங்களுடைய தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்; உயர் சாதியினருக்கும் பிற பிற்படுத்தப்பட்டோருக்குமான தேர்தலாக அதை அவர்கள் மாற்றினார்கள். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவார்கள் என்ற வலுவான பிரச்சாரம் பீகார் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமில்லாமல் லாலு எப்பொழுதும் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பவராகவே இருந்தார். ஆனால் அமித்ஷா பீகாரில் உபியில் செய்தது போலவே இந்து முஸ்லிம் பிரிவினையை உண்டாக்கி தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தார். “தேர்தலில் பாஜக தோல்வியுற்றால் , தீபாவளிப் பண்டிகை பாகிஸ்தானில் கொண்டாடப்படும்” என்றார். மேலும் யாதவர்கள் அதிகம் வாழும் பீகாரில் மாட்டிறைச்சி விவகாரத்தையும் அமித்ஷா எழுப்பினார். ஆனால் பிஜேபியின் அனைத்து சதி திட்டங்களும் பீகார் மக்களிடம் எடுபடாமல் போனது. இதனால் பீகாரில் பிஜேபி தோல்வியைத் தழுவியது. உபியைப் போல பிற்பட்ட சமூகத்தின் ஓட்டுக்களை பீகாரில் வென்றெடுக்க முடியாமல் போனது. இதைப் பற்றி இந்நூல் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளது.

பிஜேபிக்கு இப்போது உள்ள மிகப்பெரிய பிரச்சினையே, பார்ப்பனர்களின் நலன்களுக்காக மட்டுமே கட்சி இயங்கக் கூடியது என்ற தோற்றத்தை உடைப்பதுதான். அதற்காக அது மிகக் கவனமாக கட்சியில் பார்ப்பனியத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்ட பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரத்தைக் பிரித்துக் கொடுப்பதை செய்கின்றது. இந்தப் பின்னணியில் இருந்துதான் தாக்கூரான ராஜ்நாத் சிங் மற்றும் யோகி ஆதித்யநாத் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. மேலும் கட்சியிலும் பல மட்டங்களில் புதிய பதவிகளை உருவாக்கி, பிற்பட்ட சாதியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதைப் பற்றியெல்லாம் மிக விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொகுதிகளைப் பெற பிரிவினைவாதத் தலைவராகிய சஜ்ஜாத் லோனை கட்சிக்குள் இழுத்தது பிஜேபி. இதற்காக மோடி-லோன் சந்திப்புக்கள் நடந்தன. இன்று காஷ்மீரின் பிரச்சினையில் பிரிவினைவாதிகளின் மீது குற்றம் சாட்டும் தேசபக்த யோக்கியர்களுக்கு இது தெரியுமா எனத் தெரியவில்லை. அதே போல அசாமில் குடியேறும் வங்கதேச முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட பிஜேபி, அசாமில் மக்கள் செல்வாக்கோடு இருந்த சர்மாவை தன்பக்கம் இழுத்தது எப்படி என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. மணிப்பூரில் இந்த தேசபக்தர்கள் நாகா மொழி பேசுவோரை தனியாகப் பிரித்து நாகாலாந்து என்னும் தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனப் போராடிய பிரிவினைவாதிகளுடனும் கூட்டு வைத்து தேர்தலைச் சந்தித்தனர். அவர்களின் இலக்கு எப்போதுமே வெற்றியை நோக்கியே இருந்தது. அதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமரசங்களையும் அவர்கள் செய்து கொண்டார்கள். குறிப்பாக பிஜேபியைச் சேர்ந்தவர்கள் மணிப்பூரின் மலைவாழ் மக்களிடம் ஓட்டு கேட்டு சென்றபோது, கிறித்துவ பழங்குடியின வேட்பாளர்கள் அங்கிருந்த மக்களிடம் 'பாஜக என்றால் பாரதீய ஜீஸஸ் பார்ட்டி' என்று சொல்லி நம்ப வைத்து ஓட்டு கேட்டார்கள். அதை எல்லாம் இந்நூல் பதிவு செய்துள்ளது.

மேலும் மக்களை ஏமாற்ற மோடி மற்றும் அமித்ஷா பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசிய தந்திரம் மிக்க பேச்சுக்கள், எப்படி எதிர்க்கட்சிகளின் தவறுகளை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொள்கின்றது, வெற்றி வாய்ப்பு இல்லாத இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ள தலைவர்களை ஆசைகாட்டி கட்சிக்குள் இழுத்தது, பிஜேபிக்கு பெருமளவு நிதி உதவி அளிக்கும் பணக்கார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அமித்ஷா என்ற தனிமனிதர் கட்சியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் என பறந்து விரிந்த தளத்தில் இந்நூல் பயணப்படுகின்றது. தேர்தல் அரசியலையும் அதன் நயவஞ்சகப் போக்கையும் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு கையேடாக இருக்கும். இந்நூலை எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளது. இந்நூலை சசிகலா பாபு என்பவர் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்து இருக்கின்றார்.

கிடைக்குமிடம்:

எதிர்வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002.
தொலை பேசி:04259-226012,9942511302
https://www.commonfolks.in
விலை ரூ.250

- செ.கார்கி

Pin It