இப்பொழுதும்
என் பெயரை
‘மாரன்’ என்றுதான்
எழுதியிருக்கிறாய்

உனது கடிதங்களில்
காணப்படுவது போலவே
ஒற்றெழுத்துக்களின்றி
விகாரமாகத் தென்படுகிறது
வீட்டு விலாசமும்

எப்போதுமென் கேலிக்காளாகி
ஒருக்களித்த கதவென
சாய்ந்து கையெழுத்து
இன்னும் நிமிரவில்லை

லேசாக அழிய முற்பட்டிருக்கும்
எழுத்துக்கள் சுமந்திருப்பது
உனது கண்ணீராக
இருக்கக் கூடாதாவென
ஆவலுறுகிறேன்

உறை மீதான முகவரியை
படித்துவிடும் மனதிற்கு
உள்ளிருக்கும்
உன் அழைப்பிதழ் வாசிக்க
தெம்பையும்
சேர்த்தனுப்பியருக்கலாம் நீ.


மாறன்
Pin It