Dogதெரு நாய்கள் குறித்து
ஏராளமான கேள்விகள்
இருக்கின்றன

இரவில் மட்டுமேன்
அதிகமாய்
குரைக்கின்றன?

அருகே வந்து
முகர்ந்து பார்த்து
என்ன நினைத்து
சமாதானமடைகின்றன?

வண்டியோட்டிகளை
மட்டுமேன்
குறிவைத்துத்
துரத்துகின்றன?

பேயும் பிசாசும்
அவற்றின் கண்களுக்குத்
தெரிவது உண்மையா?

..விடையின்றி தொடரும்
சிந்தனை கத்தரித்து
குரைக்கும் என் வீட்டு நாய்
எதை முடித்து வைக்க
நினைக்கிறது

எனது கேள்விகளையா?
இந்தக் கவிதையையா?


மாறன் ('இரண்டாவது சந்திப்பு' தொகுப்பிலிருந்து) 
Pin It