manatstreetஎனது தெருவிலேயே
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது முகவரியை...

எப்படித் தொலைத்திருப்பேன்?
தூக்கத்தில்..
தனிமையில்..
காதலில்..
நினைவில் இல்லை

யாரேனும் களவாடியிருக்கவும் கூடும்

போகப்போக புரிந்து கொண்டேன்
முகவரியை மட்டுமல்ல
முகத்தைக்கூட நான் தொலைத்திருக்கிறேன்.

எல்லோரிடமும் விசாரித்துப் பார்க்க
எத்தனித்தபோது அதிர்ந்து போனேன்..

என்போலவே எல்லோரும்
அவரவர் தெருக்களில்
அவரவர் முகவரியையும் முகத்தையும்
தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்..

இப்போது புரிகிறது
மனிதநேயத்தின் முகவரியை மனிதன்
சுட்டெரித்த தினத்தன்றுதான்
காணாமல் போயிருக்கும்
மனிதம் என்னும் முகவரி...

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It