roseஎன் பிம்பம்
என்றுமில்லாத அளவில்
அதிக புன்னகையேந்தியிருக்கிறது

கண்ணாடிக் குடுவையினின்று
எட்டிப்பார்க்கும் ஊதாநிறப் பூக்கள்
கடைசியிதழ் வரையிலும்
மலர்ந்திருக்கின்றன

சுவரில் படர்ந்த அழகுக் கொடியில்
தலையாட்டிக்கொண்டிருக்கிறது
கிளையொன்றின் பிரியம்

அலமாரியின் புல்லாங்குழலின்
வழிந்தபடியிருக்கிறது நேசப் பாடலொன்று

திரைச்சீலையின் மெல்லிய அசைவுகளோடு
நீயும் நிலவும் உட்பிரவேசிக்கும் இப்பொழுதில்
உனையெழுதிய காகிதங்களின் படபடப்பில்
உயிர் பெறுகிறதென் காலம்!

கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It