மீண்டும் பொதி சுமக்கும்
நாட்கள் வந்துவிட்டன
பெரிய நகரத்தினை
சூழ்கிற படைகள்
Tamil
பிணங்களோடு வருகின்றன
எனது
பழைய சைக்களில்
எந்தப் பொதியை
ஏற்றிச் செல்கிறாய்
படையெடுக்கும் இரவில்
நான்
உன்னை கைவிட்டு வந்தேன்
எனது பொதிகளையும்
நீ சுமந்து செல்லுகிறாய்.

முதுகில் வழிகிறது உனது சுமை.

வேப்பமரங்களை
பாம்புகள் சூழ்ந்த நாளில்
மாமரத்திலிருந்து
தோட்டாக்கள் உதிர்ந்த நாளில்
முற்றங்களில் குழிகள் விழுந்தன.

கொய்யாமரத்தின் கீழிருக்கும்
கிடங்கில்
பதுங்கியிருக்கிறது
ஷெல்லில் தாயை இழந்த
ஆட்டுக்குட்டி.

நீ மண் சுமந்த நகரத்தை
நேற்று முதல் நாளிலிருந்து
படைகள் கடிக்கத் தொடங்கி விட்டன.

அந்தச் சைக்கிளில்
நான் திரிந்த நகரம்
எல்லோருடைய கால்களையும்
இழந்து விடுகிறது
அலைவதற்கு இடங்கள் இல்லாத பொழுது
வழிகள்
முற்றுகையிடப்பட்டபொழுது
காடுகளில் மிதக்கின்றன
பொதிகள்
இணைக்கப்பட்ட தலைகள்.

நமது வீட்டிற்குச் செல்லும்
ஒழுங்கையில்
மாடுகள் செத்துக்கிடக்கின்றன.
கிணறுகள் மூடுண்டு கிடக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு
கட்டி முடித்த நகரத்தின்
கடைத் தெருக்களையும்
தண்ணீர்க் குழாய்களையும்
மின்சாரக் கம்பிகளையும்
அறுத்துக்கொண்டு வருகிறது ட்ராங்கி.

சூரியனுக்குப் பதிலாக டெலிகப்டர் தெரிகிற
குண்டுகளின் புகையில்
விடிகிற காலையில்
குடிப்பதற்கு தண்ணீருக்கும்
அதை நிரப்ப
ஒரு கோப்பைக்கும்
நீ அலைவதைக்கூட
நான் அறியமுடியாதிருக்கிறது.

தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It