நான் தனிமை

rain
இங்கு எவருமில்லை
என் யவ்வனத்தின் புனைவுகளைப் பேச
புரளிப் பாடித் திரிய
உறவுகளனைத்தையும் மறந்துவிட்டு
இருக்கின்றேன் இந்த பச்சைக் காட்டுக்குள்
அமைதியாய் ஆரவாரமற்று
மிக இயல்பாய்
இன்று நான்
தனித்தப் பறவை
கடைசி இலையும் உதிர்ந்துவிட்ட மரம்
எஞ்சிய மழைத்துளி
வறண்ட ஏரியின் உடைந்தப் பிளவு
மெளனத்தின் பிரதிபலிப்பு
கொஞ்சம் இயற்கை
ஓர் புதிய வண்ணம்
ஓர் அசையும் உயிரினம்
எப்போதும் கேட்டிராத இசை
எரியும் ஒற்றைச் சூரியன்
நான் தனிமை

நிதர்சனங்கள்

ஒரு நீண்ட துக்க இரவிற்குப் பிறகு
சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்த விழைகின்றது
சாம்பல் நிற முகில்கள் போர்த்தியவாறு
உறங்கும் குழந்தையை போல
அமைதியான அழகான
இம்மழைக்காலைப் பொழுது

தூரலாய் விழுந்து ஓடையாய் வளைந்து
அருவியாய் வீழ்ந்து நதியாய் நகர்ந்து
கடலெனத் திரள முயலும் மழைத்துளிகள் சில
என் முன் உடைந்துத் தெறிக்கின்றன

கொஞ்சம் தயக்கத்தோடு
கண்ணாடியில் பார்க்கின்றேன்
நேற்றையப் புலம்பல்கள் அனைத்தும் மறைந்திருந்தும்
அறையெங்கும் சிதறிக்கிடக்கின்றது என் காதல்
எழுதி அனுப்பாத மடல் குவியலாய்

கையசைவுகளுடன் மென்மையாய் கதைக் கூறும்
என் மகளிடம் போலிப் புன்னகைகளை
பகிர்ந்துகொள்கின்றேன்

சுழன்றுகொண்டேயிருக்கும் மின்விசிறிக்கு
ஓய்வளித்து என் இறுக்கங்களைத்
தளர்த்திக் கொள்கின்றேன்

இக்காலங்களில்
பிழைகளையும் ரசிக்க கற்றுக்கொண்டதாய்
என்னையே சமாளித்தாலும்

பத்து கேட்டு
ஒன்றும் கிடைக்கவில்லை எனும்போது
ஏமாற்றமில்லையென
சொல்வதற்கில்லை

நீல நிலவு நீல ஒளியுடன்

மழை நின்ற இம்மாலைக் காலங்களில்
என்னைவிட உயரம் வளர்ந்திருக்கும்
கோரைப் புற்கள் காற்றில் சல சலக்கின்றன

மழை நீரில் கரைந்த சம்பங்கி மலர்களின் வாசம்
அறையில் நுழைந்து பரவ
வண்ணங்கள் இறைந்து கிடக்கும்
நவீன ஓவியங்களை நோட்டமிடுகின்றேன்
உனக்கு புரியாத என் உணர்வுகளை ஒத்தவை

நேற்று இருந்ததை போலவே இன்றும்
சலனமற்று நீள்கின்றன இப்பொழுதுகள்

கித்தாரை மெல்ல எடுத்து
அதன் நீண்ட கம்பிகளை மீட்டுகின்றேன்
உயிர் நாளங்களில் நழுவி வழியும் இசை
வாஞ்சையுடன் அழைக்கின்றது என் இரவை

சுடர்விட்டு ஒளிரும்
அகல்விளக்குகளின் வெளிச்சத்தை அணைக்க
தேங்கிய உன் பிரியங்கள் மட்டும்
போதுமானதாக இல்லை எனக்கு

முற்றத்து வாசலில் தனியே நிற்கின்றேன் நான்
வரக்கூடும் நீல நிலவு நீல ஒளியுடன்

மழையின் பாடல்

மழைச் சாலைகளில் ஒழுங்கின்றி கலைந்து ஒதுங்கும்
பல வண்ணங்கள் தோய்த்த மனிதர்களை
அமைதிடன் நோக்குகின்றேன்
தேனீர் கோப்பையுடன்

நினைக்கும்போதெல்லாம் வருவதில்லை
இந்த மழையின் பாடல்
சில நேரங்களில் கேட்க விருப்பமில்லையெனினும்
செவிகளில் விழுந்துகொண்டுதானிருக்கின்றது
குளிர்ந்தக் குரலுடன்
என் வெளிகளில் பரவுமதை
காற்று நுரைகுமிழியாய் ஊதி உடைக்கின்றேன்
தெறித்துச் சிதறி மறைகின்றன அதன் மெல்லிய வரிகள்
பின் இரத்தம் படிந்த வார்த்தைகளைத் திரட்டி
மீண்டும் பெருகுகின்றது எதிரே கடலை போல
மந்திரமாய் கைகளில் அள்ளி எடுத்து
தெளித்து உலர்த்துகின்றேன்
வராண்டாவில் அமர்ந்தவாறு

கடைசி இரு துளிகளில்
உன் இயலாமையை வரைய முயன்றது
உனக்கு ஆச்சரியமளித்திருக்கலாம்

மழை நின்ற ஒரு பிந்தய கணத்தில்
வீதியில் தேங்கிய மீத வரிகளை மிதித்தும்
யாரிடமோ கூவிக்கொண்டும் ஓடுகின்றாய்
பாடல் என்னுடையதென

சமாதானங்கள்

உன் முகத்தை புன்னகையைப் பார்த்து
வெகுநாட்களாகியிற்று

தினங்கள் எப்போதும்போலவே இருக்கின்றன
நேரம் கரைத்து பொழுதுகளை மாற்றி
பசலை நிறம் பூசி
சமயங்களில் மகிழ்ச்சியாக சலிப்பாக அல்லது விகாரமாக

விரைவில் முடிந்துவிடுமென யூகித்து பின்
அருகே நெருங்க நெருங்க இன்னும்
நீண்டவாறே விரியும் சாலைகளில் அலைந்து
தளும்பி திரும்பும் என் ஸ்பரிசங்களை
முழுவதும் திறக்கவில்லை

கன்னத்தை தரையில் அழுத்தி படுத்தவாறு
எரியும் மெழுகுவர்த்தி சுடரை விரலால் புரட்டி
நிசப்தத்தை அறையில் நிறைக்கின்றேன்

ஒரு சிறு பாதிப்புமில்லாமல்
புகைவண்டியாய் அருகே கடந்து
வேகமாய் மறைந்து தொலைந்தே போகின்றாய் நீ

கவலைகளில்லை விலகிச் செல்
உன் பழைய சில புன்னகைகள் போதும்
என் வெற்றிடத்தில் ஏதேனும் எழுதுவதற்கு

சுயம்பு

முற்றிலும் இருள் கரைத்துவிட்ட
இரவொன்றை சிறு வெளிச்சம்கொண்டு
கலைக்க முயலும் ஒற்றை மின்மினிப்பூச்சியை
கையில் பிடிக்க
ஒளிருகின்றது என் உள்ளங்கை

சகிக்கவில்லையெனினும்
இன்றும் தொடர்கின்றது நிழல்

மூங்கிலாய் வளைந்து கொடுக்கவோ
உன் பயன்பாடுகளில் ஒத்துழைக்கவோ
எனக்கென ஒரு வரையறையை கட்டமைத்து
அதன் உட்புகுத்தவோ முயலும் உனை
ஒருபோதும் எதிர்ப்பதில்லை நான்

கூடல் காலங்களில்
ஒவ்வொன்றாய் பார்த்து பின்னிய
என் நம்பிக்கையின் நூலிழைகள் அறுந்துவிழும்
உறக்கமற்ற ஒரு பின்னிசிப் பொழுதுகளில்
முகமூடியை கழற்றிவிடுகின்றன
என் சுயங்களின் யானை முகங்கள்

உன் குரல்வளையை இரு கையால் நெரித்தவாறு

பூக்களின் சிறுமி

இப்போது எங்கு எப்படி இருக்கிறாளென்று
தெரியவில்லை

நன்கு உறங்கியவாறு
விழித்திருக்கும் ஒரு காலையில்
மெதுவாக முகிலை விலக்குவாள்
தனியே ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கையில்
துணை வந்து வண்ணங்களை தெரிவு செய்வாள்
எப்போதும் சிரித்தவாறு
வாய் ஓயாமல் பேசிகொண்டிருப்பாள்
என்னை நிறைய பிடிக்குமென
இரு கை விரித்துக் கூறுவாள்
நான் சோகமாய் கிடக்கும் தருணங்களில்
அருகே இரு பூக்களை விட்டுச் செல்வாள்
அயராமல் அங்காடிக்கு
என் விரல் பிடித்து நடக்கையில்
அருந்தியத் தேனீரில் சர்க்கரை குறைவென்பாள்
சமயங்களில் வெளிபடும் அவளின்
தெத்துப்பல் புன்னகை அலாதியானது
கண்சிமிட்டும் நேரத்தில்
மின்னலைத் தோற்கடித்துவிடும் அவளை
யாருக்குதான் பிடிக்காது

வார்த்தைகளற்று நிறையும் நீயற்ற இக்காலங்களில்
பிரியாமல் பூனைக்குட்டியாய் என் கால் சுற்றியவளை
எனக்கும் பிடிக்கும் தான்

தெரியவில்லை
இப்போது எங்கே எப்படி இருக்கிறாளென்று

நானும் மழையும்

இந்த மழைக் காலங்களில்
தூரத்தில் தெரிகின்றது மழை

அருகில் வரலாம்
காற்றைப் பரப்பி காய்ந்தத் துணிகளை
பறக்கவிட்டு தயார்படுத்தலாம்
மண் வாசனையை அறைக்குள் நுழைக்கலாம்
கூரைகளிலிருந்து நிலத்தில் கொட்டலாம்
இலைகளில் வழிந்து சிதறலாம்
எல்லா திசைகளிலும் வீதியை நிரப்பலாம்
ஒரு குடைக்குள் அடையும்
இரு நண்பர்களின் தருணத்தை இனிதாக்கலாம்
காகித கப்பலுடன் காத்திருக்கும்
என் மகளின் கனவுகளை மகிழ்விக்கலாம்
எனை சிறிது நனைத்து
ஆறுதலளிக்கலாம்

உன் புதிய செய்தியை சுமந்தவாறும்
வண்ணங்கள் தெளித்தவாறும்
வாசல் வரும் வண்ணத்துப்பூச்சியுடன் சேர்ந்து
என் மனமுடைக்கலாம்

ம்ம்... காத்திருக்கின்றேன்
மழைக்கும்
உன் மனமுடைக்கும் செய்திக்கும்

நீயும் அகல மஞ்சள் நிற மலர்களும்

பெரிய வட்டக் குவளை நிறைய நீரில்
மிதந்து கொண்டிருந்தன
அகல மஞ்சள் நிற மலர்கள்

தேவைகளேதுமின்றி
விரலால் நீரை அலம்பிக்கொண்டிருக்கையில்
தள்ளும் விசையின் திசையிலேயே
நகர்ந்தன கேள்விகள் ஏதும் கேட்காமலே

எழும் சலசலப்புகள்
அறையின் அமைதியை உடைக்க
பின்னும் தொடரவில்லை என் செயலை.

உன் சிறு புன்னகைக்காய் காத்திருக்கும்
என் குவிந்தப் பிரியங்களை
நீட்டும் ஒரு சாயங்கால வேளையில்
அலட்சியமாய் தட்டி விடுகின்றாய்
வெற்று காரணங்களுடன்

உன் அரவணைப்புகள்
போதுமானதாகயில்லாதப்
பின்னும் தொடர்கின்றேன் என் மீத பொழுதுகளை

நீ நானாகும் பின்னிரவு நேரங்களில்
நான் அகல மஞ்சள் நிற மலர்களாகி
மிதக்கின்றேன் அதே குவளையில்.

பிரிக்கமுடியாதவை

முல்லை மலரென திடீரென
உன் கரிசனம் தளிர்த்து
நலம் வினவியபோது
சிறிது யோசனைக்குப் பின்
பதிலளிக்க விரும்பவில்லை

வெளியேற்றியும் போகாத ஒன்று
அறையில் அடைபட்டிருக்க
கத்தி கிழித்துப் பாயும் குருதியில்
வழியும் சில மெளனங்களை
வெறித்து நின்றேன்

உன் செயல்கள் கொஞ்சமும்
பிடிக்கவில்லையென
உதறி தள்ளி போய்விடவோ
முகத்தில் அறைந்தால் போல் பேசிடவோ
சற்றும் மனமில்லை

எனை போலவே
சன்னல்வழி தெரியும் வெளிச்சங்களில்
உருமாறிக்கொண்டேதானிருக்கின்றது காலம்

ஆயிரம் முரண்களிருந்தும்
வயிற்றில் குழந்தையை அமர்த்தி
நீ கொஞ்சி விளையாடும் இத்தருணம்
அழகாய்தானிருக்கின்றது.

ஆறுதல்

மீறி வழிந்த ஒரு சொட்டு
கண்ணீரைத் துடைத்து பின்
சிதறி வெளிறிக் கிடந்த என் நெஞ்சை
சேர்த்து ஒட்டிக் கொண்டேன்.

பல மைல் தாண்டி வரும்
அழைபேசி மழலையின்
குறும் பேச்சிலும்

பெயர்தெரியாத சிறுமி
என் விரல் பிடித்து நடக்கையிலும்

மறந்து கிடப்பேன் உன் முத்தங்களை.


கவிதை துளிகள்


சமாதானமில்லாமல்
பசித்துக் கொண்டிருக்கின்றது வயிறு
எங்கோ நிறமில்லாக் காட்டுக்குள்
மரமொன்று உதிர்த்திருக்கக்கூடும்
பழுத்தக் கனியொன்றை.

#

ஆட்சேபனைகள் இல்லாத ஒருநாளில்
சூரியனை கைநீட்டிப் பரித்து
விழுங்கிவிடப் போகின்றேன்
இனி நீங்கள் பொழுதுகளைப் பிரித்து
காலம் நகர்த்துவது கடினமே.

#

காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதரிச் செல்ல மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன்.

#

மென்மையாய் தடவி ரசிப்பதற்கும்
வன்மையாய் பற்றிப் பறிப்பதற்கும்
எவருமில்லையெனினும்
பூத்து உதிரத்தான் செய்கின்றன
காட்டுப் பூக்கள்.

#

நீ இப்படி இருக்கலாமென நானும்
நான் இப்படி இருக்கவேண்டாமென நீயும்
நினைப்பதில் தவறொன்றுமில்லை
எதிர்பார்ப்பதுதான்
மனித இயல்பு என்றானப்பின்


நன்றிகள்
அன்புடன்
குட்டி செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It