திரவ வடிவமெடுத்து
தளும்பிக் கொண்டிருக்கும்
தனிமையின் மீது
அசைவற்று மிதந்து கொண்டிருக்கிறது
கைவிடப்பட்ட
விட்டில் பூச்சி
பொழுதின் குருதியில்
ஊறித்திளைக்கும் அதற்குள்
சர்வ சுதந்திரமாகப் பாய்கின்றன
துளிகளின் மூலக்கூறுகள்
எறும்புகள் கவ்விச்
சென்றிருந்தால் கூட
சற்று ஆறுதலாக இருந்திருக்கும்
ஆனால் இந்த
நிராதரவின் கனம் தான்
உயிரைக் கல்லாக்கி
ஆழ்ந்து ஆழ்ந்து
மிக ஆழத்தில்
அமிழ்த்திக் கொண்டிருக்கிறது அதை
- தங்கேஸ்