உன் தலையில் இருந்த கிரீடம்
மண்டை ஓடாய்
உடைந்து சிதறி விட்டதை
இன்னுமா நீ உணரவில்லை
உன் காலடிகள்
காற்றில் கரைந்து கொண்டிருப்பதை
நின்று போன உன் பயணங்கள்
நினைவூட்டவில்லையா
மிகத் தாமதமாக வரும்
ரயில் ஒன்றையும்
தவற விட்ட உன்னிடம்
என்ன சொல்ல
சொன்னால் தான் உன்
காதில் தொங்கும் உலக உருண்டை
ஏற்குமா
உனக்குத் தெரியுமா
நீ பிரிந்த நாளை
மிகக் கவனமாக
நினைவில் வைத்திருக்கிறேன்
அது நான் மீண்டும் பிறந்த நாள்
மறதி உன் இயல்பு
அறிவேன்
இருந்தும் சொல்ல நினைப்பது
ஓங்கி அழும் நாளொன்றில்
வேடிக்கை பார்த்து வெந்து தணி
நீ சபித்த பின்னும்
பிழைத்துக் கொண்ட சிறுநதி
மலையிலிருந்து குதித்து
அருவி ஆகி விட்டது

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.