குத்தவைக்கப்பட்டு

கால் கட்டப்பட்ட

கனவான் ஒருவன்

இன்னும் தேடிக் கொண்டிருக்கக் கூடும்

அத்தனை பெரிய கூட்டத்தில்

மனிதனை

o

சந்தனக் காப்புகளாலும்

தங்கக் கவசங்களாலும்

மறைக்கப் பட்டுள்ளது

கால் நீட்டிப் படுத்திருக்கும்

சுகவாசியின் கண்கள்

மனிதர்களின் பாவங்களிலிருந்தும்

பாவப்பட்ட மனிதர்களிடமிருந்தும்

o

கொல்லும் நோயொன்றுக்கு

குழலூதும் இசை ஞானியின்

அவதாரப் பெயர் வைத்தவன்

ஞானியாய் இருக்கவேண்டும்

அல்லது

நாத்திகனாய் இருக்க வேண்டும்

இருந்தாலும்

இரண்டும் ஒன்றுதான்.

o

முற்றும் துறந்து நின்றான்

ஆண்டியொருவ‌ன்

முழுதும் ம‌றைத்துவைத்தான்

ம‌னித‌ன் ஒருவ‌ன்.

எங்கும் நிறையும்

இவ‌ர்க‌ளிட‌ம் த‌ப்பி

ஏறி நிற்க‌ ம‌லை இல்லாம‌ல்

அங்கேயே நிற்கிறான்

முழுதும் சுர‌ண்ட‌ப்ப‌ட்டு.

o

எழுதுவதற்கு ஏதுமின்றி

தந்தம் ஒடித்து காவியம் எழுதிய

கரி கவி

கூகுள் இண்டிக் திறந்து

அமர்ந்திருக்கிறான்

காவியம்தான் இல்லை.

- லதாமகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It