சாதியைத் தூக்கி
காதலைத் துரத்தும்
வேட்டைநாய் நீங்கள்தான்
அருவருப்பான அம்மணம்
தெரியுமாடா?
நள்ளிரவில் நடுக்காட்டிலும்
பயமறியா ரகசிய மென்னுணர்வு
ஊரறிய உங்கள் பற்களால்
பட்டப்பகலில் கிழிகிறதே
நியாயமாடா?
சின்னச் சினுங்கல்களும்
செல்லக் கோபங்களுமாய்
கொண்டாடும் வசந்தத்தில்
குத்தீட்டியை சொருகுவது
பெருமையாடா?
உங்கள் சீண்டலில்
மருளும் இம்மான்களின்
மனவலியும் வேதனையும்
புரியுமாடா?
முகர்ந்து அறியவும்
பாய்ந்து குதறவும்
உங்களைப் பயிற்றுவிக்கும்
வர்ணக் கயிறெது அறிவாயாடா?
இரையினைத் தேடும்
மிருகங்களின் நேர்மை
இறையினை போதிக்கும்
மிருகங்களிடம் இருக்குதாடா?
யோகி , சாது என்றால்
யோக்கியன் என்று
உன் மூட மூளையில் ஆணி அடித்த
கயவன் யாரடா?
ச்சீச்சீ
சாதியைப் புணர்ந்து
சாதியைச் சிந்தி
சாதியைப் பிரசவித்த
சாதிய வெளியில்...
சாதியை மென்று
சாதியைத் தின்று
சாதியைச் செரித்த
என் மகளின் அம்மணம்கூட
கம்பீரம் போடா!
- வெண்புறா சரவணன்
RSS feed for comments to this post