பள்ளி மைதானத்தில்
ஏதாவது ஒரு மரத்தில்
காம்பஸ் கீறலில்
இதயமாகி இருக்கிறார்கள்
யாரோ இருவர்...

ஏதாவது ஒரு பெஞ்சில்
அழிக்கமுடியா மையில்
பெயர்களாகி இருக்கிறார்கள்
யாரோ இருவர்...

பள்ளி வளாகத்தில்
வெட்டாமல் தவறவிட்ட
கள்ளிச்செடிகளில்
வடிந்து உறைந்து போயிருக்கிறார்கள்
யாரோ இருவர்...

விளையாட்டு பொருள்கள்
அறையில் ஒரு கால்பந்திலோ
கைப்பந்திலோ வெறும்
இனிசியலாகி யாருமறியாவண்ணம்
இணைந்திருக்கிறார்கள்
யாரோ இருவர்...

பள்ளி கடந்து, கல்லூரி கடந்து,
காலம் கடந்து சிலர்
மனங்களில் மட்டும் தொடர்
ஞாபகங்களால் சேர்ந்திருக்கிறார்கள்
யாரோ இருவர்...

எல்லா பள்ளிகளிலும், எல்லா கல்லூரிகளிலும்
எல்லா காலங்களிலும்
இப்படி வாழ்ந்து கொண்டே
இருக்கும் அந்த யாரோ இருவரில்
ஒருவராக
நீங்களும் இருக்கலாம்....!

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.