பள்ளி மைதானத்தில்
ஏதாவது ஒரு மரத்தில்
காம்பஸ் கீறலில்
இதயமாகி இருக்கிறார்கள்
யாரோ இருவர்...

ஏதாவது ஒரு பெஞ்சில்
அழிக்கமுடியா மையில்
பெயர்களாகி இருக்கிறார்கள்
யாரோ இருவர்...

பள்ளி வளாகத்தில்
வெட்டாமல் தவறவிட்ட
கள்ளிச்செடிகளில்
வடிந்து உறைந்து போயிருக்கிறார்கள்
யாரோ இருவர்...

விளையாட்டு பொருள்கள்
அறையில் ஒரு கால்பந்திலோ
கைப்பந்திலோ வெறும்
இனிசியலாகி யாருமறியாவண்ணம்
இணைந்திருக்கிறார்கள்
யாரோ இருவர்...

பள்ளி கடந்து, கல்லூரி கடந்து,
காலம் கடந்து சிலர்
மனங்களில் மட்டும் தொடர்
ஞாபகங்களால் சேர்ந்திருக்கிறார்கள்
யாரோ இருவர்...

எல்லா பள்ளிகளிலும், எல்லா கல்லூரிகளிலும்
எல்லா காலங்களிலும்
இப்படி வாழ்ந்து கொண்டே
இருக்கும் அந்த யாரோ இருவரில்
ஒருவராக
நீங்களும் இருக்கலாம்....!

- கவிஜி

Pin It