கீழத் தெரு
நாச்சி முத்துக் கவுண்டரின்
இரண்டாம் நம்பர் வீட்டில்
தூக்கு மாட்டிச் செத்த
இளவயது பொன்னாத்தா
நடுச் சாமங்களில் பேயாய்த் திரிவதாய்
ஆளுக்கொரு கதையை
அண்டை வீட்டுக்காரர்கள்
அவிழ்த்துக் கொண்டிருக்க
அரை வாடகைக்கும் கூட
ஆள் வராமல்
தவித்துப் போனார்
நாச்சி முத்துக் கவுண்டர்
எங்கேயோ எப்படியோ பேசி
குடியமர்த்தி விட்டிருந்த
பானிப் பூரி விற்கும்
நான்கு வட நாட்டவரிடம்
அப்பேய் பற்றி
மக்கள் கேட்டு வைக்க
ராத்திரி நேரங்களில்
வீட்டு முச்சந்தியில் ஒரு பெண்
இந்தியில் உளறிக் கொண்டிருப்பதாக
அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்
கால் காசு வாடகைக்காக.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
RSS feed for comments to this post