என்னை முந்தி ஓடுபவர்களே!
ஓடுங்கள் ஓடுங்கள் !
நானும் ஓடிக்கொண்டு
இருக்கின்றேன்
உங்களைப்போல் வேகமாக
ஓடியவன்தான்
ஒருநாள் இருநாள் அல்ல
வாழ்நாள் முழுதும் !
இருப்பினும் இன்றைக்கு
இயலும் வேகத்தில்
உயிரோட்டம் உள்ளமட்டும்
வெற்றியை நோக்கி ஓடுகிறேன்.

என் மக்களே!
வேகமாக ஓடுங்கள்.
நீங்கள் ஓடுவது
சரியான இலக்கை நோக்கித்தானா ?
சிந்தித்துச் சரிபார்த்து
உறுதி செய்துகொண்டு ஓடுங்கள்.
பலவழிகள் கண்முன் நீளும்
பொய்வழிகள் தோன்றும்;
புதைகுழியில் சேர்க்கும்
எச்சரிக்கை !
நெடுவழியு மிருக்கும்
குறுக்கு வழியும் இருக்கும்.
செக்கு மாடாய்ச் சுற்ற வைத்திடும்
சுற்றுவழியும் இருக்கும்
எச்சரிக்கை !
கல்லும் முள்ளும் நிறைந்திருக்கும்
வெப்ப நாக்கு மெய்யைத் தீய்க்கும்
வேட்கை ஆற்ற நிழலோ நீரோ
வழியில் காணாது

அஞ்சச் செய்யும் வழியை மறைக்கும்
ஆங்காங்கே
ஆசைகாட்டி ஆர்வத்தை அழிக்கும்
நச்சுக் கனிகள்
வண்ணத்தால் ஈர்க்கும்
எச்சரிக்கை
உனக்குமுன் ஓடிக் களைத்து
ஓய்ந்திருப்போர் இருப்பர்.
அவர்களைக் கேட்பீர்.
அறிந்ததைச் சொல்வர்.

சற்றே ஓடி ஒதுங்கியவர்கள்
கடை வைத்து வணிகம் செய்து
களித்திருப்போர் மிகுதி!
கண்டறிவது சிக்கல்தான்
தடமாற்றிக் காட்டிடுவார்
காலிடறச் செய்திடுவார்.
எச்சரிக்கை !
உங்களுடன் ஓடிவருபவர்
ஓய்ந்து போகலாம்
அவருக்காக நீங்கள்
உங்கள் ஓட்டத்தை நிறுத்தாதீர்கள்
இன்னும் வேகமாக ஓடுங்கள்.
நம் தலைவன் சொன்ன திசையில்
நம் விடுதலை என்னும் இலக்கை
அடைந்தே யாக வேண்டும்
அடிமை எனும் விலங்கை
உடைத்தே யாக வேண்டும்.
அதுதான் தமிழரின் வெற்றி!
எனவே
ஓடுங்கள் விரைவாக ஓடுங்கள்.
அறிவாயுதம் ஏந்தி
அனைவரும் ஒன்றாய்.

- குயில்தாசன்

Pin It