பெரும்பாலும் கரையான்கள்
புத்தகங்களைத்
தலைகீழாய் வாசிக்கப் பிரியப்படுகின்றன.
மேலிருந்து கீழாகவும்.
அச்சிடப்பட்ட பகுதிகளை விட
வெண்மைப்புறங்கள் சுவையானவை
சேகரம் செய்த பத்திரிக்கைகளைக் காட்டிலும்
பைண்டிங் புத்தகங்கள் சுவை மட்டு.
உச்சபட்ச இன்பமென்னவோ
அச்சுப்புத்தகங்கள் தான்.
உள்ளடக்கங்களின் மீது
பாரபட்சமின்றி நடுநிலை அணுகலைத்
தன் குஞ்சுகளுக்குக் கற்பித்துவிட்டே
காலமாகின்றன கரையான்கள்.
நாவலின் சுவாரசியங்களைத் தின்றுவிட்டுத்
தொகுப்புக்கள் மீது
தன் ஊர்தலை இடம்பெயர்த்துக்கொள்கின்றன.

கொழுத்த பின் கரையான்களின்
கலாச்சார நடனம் தொடங்குகிறது.
முன் காலத்தில் பூசப்பட்ட சயனைடுக் கிறக்கத்தில்
கரையான்கள் ஆடுகின்றன.
என்றபோதும்
பஞ்சகாலந்தவிர வேறெப்போழ்தும்
கவிதைகளின் மீது
தலைவைத்தும் படுப்பதில்லை
என்றவொரு குறிப்பும் கவனிக்கத்தகுந்தது.

சொல்வதற்கெனக் கரையான்களின்
கடைசிச்செய்தி ஒன்று உண்டு.
கோடி வார்த்தைகளால்
கட்டப்படும்
கரையான்புற்றுக்கள்
ஒரு மழைக்குத் தாங்குவதில்லை

Pin It