என் மௌனம் உனக்குப் புரியும்

உன் மௌனம் எனக்குப் புரியும்

நம்மில் யார் சொல்வது

நம் காதலை?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உனக்குச் சொந்தமான

என் இதயத்தைப்

பிய்த்து விளையாடும் குழந்தை நீ

கேட்கவேண்டியவனே ரசித்து கவிதை எழுதுகையில்

வேறு எவன் கேட்பது இங்கு?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தெய்வம் நின்று கொல்லும்

தேவதைகள்

புன்னகைத்து கொல்கின்றன

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பேருந்து நிலையப் பெஞ்சுகளில்

சாய்ந்தபடி

என் காதலைக் தெரிந்துகொண்ட நாளின்

பார்வைக்குள் ஓடிய

குறும்புக் காதலை

ரயில் நிலையத்தில் மறுதலித்துக் கையசைக்கையில்

தொலைத்திருந்தாய்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குடும்பத்தில் வழக்கமில்லாத பெயரை

தன் மகனுக்கு வைக்கச் சொல்லி

அடம்பிடித்த அக்காவின் காரணத்தை

என் மகளுக்கு

உன் பெயரை வைக்க

அடம்பிடிக்கையில் புரிந்துகொண்டேன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- லதாமகன்

Pin It