என் மௌனம் உனக்குப் புரியும்
உன் மௌனம் எனக்குப் புரியும்
நம்மில் யார் சொல்வது
நம் காதலை?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உனக்குச் சொந்தமான
என் இதயத்தைப்
பிய்த்து விளையாடும் குழந்தை நீ
கேட்கவேண்டியவனே ரசித்து கவிதை எழுதுகையில்
வேறு எவன் கேட்பது இங்கு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தெய்வம் நின்று கொல்லும்
தேவதைகள்
புன்னகைத்து கொல்கின்றன
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பேருந்து நிலையப் பெஞ்சுகளில்
சாய்ந்தபடி
என் காதலைக் தெரிந்துகொண்ட நாளின்
பார்வைக்குள் ஓடிய
குறும்புக் காதலை
ரயில் நிலையத்தில் மறுதலித்துக் கையசைக்கையில்
தொலைத்திருந்தாய்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குடும்பத்தில் வழக்கமில்லாத பெயரை
தன் மகனுக்கு வைக்கச் சொல்லி
அடம்பிடித்த அக்காவின் காரணத்தை
என் மகளுக்கு
உன் பெயரை வைக்க
அடம்பிடிக்கையில் புரிந்துகொண்டேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- லதாமகன்
RSS feed for comments to this post