மருத்துவமனைக்குள் நுழையும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு குறிப்பிட்ட வாசலை அணுகும்போது குரல் தாழ்த்திக் கொள்கிறது. “லேபர் வார்டு” என்ற பலகை அந்த வாசலில் தொங்குகிறது. உள்ளே ஒரு பெண் வலியில் துடிக்கிறாள். வெளியே நின்றிருப்பவர்கள் அந்த வலியைப் புரிந்து கொள்ள ஒரு எளிய உவமையைப் பயன்படுத்துகிறார்கள். அவள் ஒரு தொழிலாளியைப் போல உழைக்கிறாள், அதனால்தான் அதை “லேபர்” என்கிறார்கள் என்று. வலியின் அளவை உழைப்பின் கடுமையோடு ஒப்பிடும் இந்த விளக்கம் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வருகிறது. இது ஒரு உடல்சார் உண்மையைச் சொல்வதாகத் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு பெரிய அரசியல் பொருளாதார உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.

labour wardஅந்த அறைக்குள் நடப்பது வலி மட்டுமல்ல. அங்கு நடப்பது உற்பத்தி. துல்லியமாகச் சொன்னால், அது மூலதனத்திற்குத் தேவையான ஒரே ஒரு சரக்கின் உற்பத்தி - ஒரு தொழிலாளர். கார்ல் மார்க்ஸ் தமது மூலதனம் நூலின் முதல் தொகுதியில் இதைத் தெளிவாக விளக்குகிறார். மூலதனம் என்பது இயந்திரங்களோ, ஆலைகளோ, பணமோ மட்டுமல்ல; அது ஒரு உறவு. அந்த உறவு இயங்குவதற்கு ஒரு தனிச் சரக்கு தேவைப்படுகிறது. அவை உழைக்கும் திறன், அதாவது தொழிலாளர் சக்தி. இந்தச் சரக்கு மற்ற எல்லாச் சரக்குகளையும் போலவே சந்தையில் வாங்கப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஒரு தனித்துவம் உண்டு; இதன் உற்பத்தி தொழிற்சாலைக்குள் நடக்காது. இது வீட்டுக்குள், படுக்கையறையில், சமையலறையில், இறுதியாக மருத்துவமனையின் பிரசவ அறையில் நடைபெறுகிறது.

தொழிலாளர் சக்தியின் நாள்தோறும் மறுஉற்பத்தி (daily reproduction) என்பது ஒரு தொழிலாளி இரவு உணவு உண்டு, தூங்கி, மறுநாள் மீண்டும் வேலைக்குச் செல்லும் ஆற்றலைப் பெறுவதைக் குறிக்கிறது. ஆனால் இது மட்டும் போதாது. மூலதனத்திற்கு எப்போதும் புதிய தொழிலாளர்கள் தேவை. எனவே வயதானவர்கள் ஓய்வு பெறும்போது, விபத்தில் ஒருவர் இறக்கும்போது, தொழிற்சாலைகள் விரிவடையும்போது அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்குப் புதிய தொழிலாளர்கள் தேவை. இதைத்தான் தலைமுறை மறுஉற்பத்தி (generational reproduction) என்கிறோம். இந்த இரண்டாவது வகை மறுஉற்பத்திதான் லேபர் வார்டுக்குள் நிகழ்கிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது, அது வெறும் ஒரு உயிர் அல்ல; அது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சாலைக் கதவை அணுகக்கூடிய ஒரு எதிர்கால தொழிலாளர் சக்தியின் விதை. மூலதனத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தால், அந்த அறை உண்மையிலேயே ஒரு உற்பத்தி இடம்தான். ஆனால் அதன் தயாரிப்புப் பொருள் இயந்திர பாகங்கள் அல்ல, மனிதத் தொழிலாளர்கள்.

இந்த உண்மையை மார்க்ஸ் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், அவரது கோட்பாட்டு அமைப்பிலிருந்து இதை இழுத்தெடுப்பது கடினமல்ல. அவர் தொழிலாளர் சக்தியின் மறுஉற்பத்திச் செலவை (reproduction cost of labour power) கூலியின் அடிப்படையாகக் கணக்கிடுகிறார் - உணவு, உடை, குடியிருப்பு, மற்றும் “குடும்பத்தை நிலைநிறுத்துவதற்குத்” தேவையான செலவு. இந்த “குடும்பத்தை நிலைநிறுத்துதல்” என்பதற்குள்தான் பிரசவமும், குழந்தை வளர்ப்பும், பெண்களின் வீட்டு உழைப்பும் அடங்கியிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில்வியா ஃபெடெரிசி போன்ற பெண்ணியப் பொருளியலாளர்கள் இந்தப் பகுதியை விரிவாக்கினர். “சமூக மறுஉற்பத்திக் கோட்பாடு” (Social Reproduction Theory) என்ற பெயரில் அவர்கள் வாதிட்டது இதுதான்: மூலதனம் தொழிற்சாலைக்குள் நடக்கும் உற்பத்தியை மட்டுமே கூலி கொடுத்துப் பார்க்கிறது; ஆனால் அந்த உற்பத்தி சாத்தியமாக வேண்டுமானால் அதற்கு முன் நடக்க வேண்டிய ஒரு பெரிய, ஊதியமில்லாத உழைப்பு தேவை - பிரசவம், பாலூட்டுதல், வளர்ப்பு, பராமரிப்பு. இந்த ஊதியமில்லா உழைப்பைப் பெரும்பாலும் பெண்கள்தான் செய்கிறார்கள். லேபர் வார்டு என்பது இந்த ஊதியமில்லா உழைப்பின் தொடக்கப் புள்ளி.

இங்குதான் ஒரு கசப்பான முரண் வெளிப்படுகிறது. பிரசவ வலியை உழைப்போடு ஒப்பிடும் பொதுவெளி விளக்கம், அந்த ஒப்பீட்டையே ஒரு கவித்துவமான, உடல்சார்ந்த அனுபவமாக மட்டும் சுருக்கிவிடுகிறது. அது கேட்காத கேள்வி ஒன்று இருக்கிறது: இந்த “உழைப்புக்கு” கூலி யார் கொடுக்கிறார்கள்? பதில் “யாரும் இல்லை”. ஒரு தொழிற்சாலைத் தொழிலாளி தன் உழைப்பிற்கு கூலி பெறுகிறான். ஆனால் லேபர் வார்டில் உழைக்கும் பெண் எந்தக் கூலியும் பெறுவதில்லை. மாறாக, அவளே மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது. தான் உற்பத்தி செய்யும் தொழிலாளர் சக்திக்காக அவளே பணம் கொடுக்கும் நிலைமையைத்தான் இன்றைய நவீன மருத்துவ முறை உருவாக்கி வைத்துள்ளது. இது மூலதனத்தின் மிகச் சிக்கனமான தந்திரம் - உற்பத்தியின் மிக முக்கியமான கட்டத்தை முழுவதுமாகத் தனிநபர் குடும்பத்தின் மேல், குறிப்பாகப் பெண்களின் உடலின் மேல் சுமத்தி, அதற்கான செலவை “இயற்கையானது”, “தாய்மையின் கடமை” என்று சித்தரித்து மறைத்து விடுவது.

இருபதாம் நூற்றாண்டில் பிரசவம் படிப்படியாக மருத்துவமயமாக்கப்பட்ட (medicalised) விதத்தையும், ஒரு தொழிற்சாலை உற்பத்தியை நேரக் கட்டங்களாகப் பிரித்து, மேற்பார்வையாளர்களை நியமித்து, “efficiency” என்ற பெயரில் கட்டுப்படுத்துவது போலவே, பிரசவமும் நிலைகளாகப் பிரிக்கப்பட்டு, மருத்துவர் என்ற மேற்பார்வையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டது. “Labour” என்ற ஆங்கிலச் சொல்லே இதை வெளிப்படுத்துகிறது. ஒரு உடல்நிலையை உழைப்பாகச் சொல்லும் மொழி, அதை அறியாமலேயே அதன் அரசியல் பொருளாதார அடித்தளத்தை வெளிக்காட்டி விடுகிறது. “Delivery” என்ற சொல்லும் அப்படித்தான்—ஒரு தயாரிப்புப் பொருள் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் அதே சொல், குழந்தை பிறப்பையும் குறிக்கிறது.

இந்தக் கட்டுரையை ஒரு மிகைப்படுத்தலாக நினைப்பவர்கள் இருக்கலாம். ஆனால் மூலதனத்தின் வரலாற்றைப் பார்த்தால், அது எப்போதுமே மனித உடலை ஒரு வளமாகவே (resource) நடத்தி வந்திருக்கிறது. அடிமை வர்த்தகத்தில் உடல்களைச் சரக்காக்கியது முதல், தொழிற்சாலைக் காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை உற்பத்திக் கருவியாகப் பயன்படுத்தியது வரை. லேபர் வார்டு அதன் தொடர்ச்சிதான்; ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படுவது இறுதிப் பொருள் அல்ல, அடுத்த தலைமுறையின் உற்பத்திக் கருவி. இந்த அறையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு புதிய வாழ்க்கை மட்டுமல்ல; அது ஒரு பங்குச் சந்தைப் பட்டியலில் இல்லாத, ஆனால் உலகின் மிகப்பெரிய பொருளாதார அமைப்பிற்கு அத்தியாவசியமான ஒரு புதிய “பொருள்” - எதிர்கால உழைக்கும் கை.

லேபர் வார்டு என்ற பெயர் ஒரு தற்செயலான மொழிநடையாக இருக்கலாம். ஆனால் மொழி பெரும்பாலும் அறியாமலேயே அமைப்புகளின் ஆழ்ந்த தர்க்கத்தை வெளிப்படுத்திவிடும். வலியை உழைப்போடு ஒப்பிடும் பொதுவெளி விளக்கத்தை மறுத்துவிடாமல், அதற்கு அப்பால் ஒரு அடி எடுத்து வைத்துப் பார்க்கும்போது, அந்த ஒப்பீடு உண்மையிலேயே சரியானது என்று தெரியவருகிறது—ஆனால் அது சொல்லாத, சொல்ல மறுக்கும் ஒரு உண்மையோடு. அந்த அறையில் நடப்பது வலியின் அனுபவம் மட்டுமல்ல; அது மூலதனத்திற்கான தொழிலாளர் சக்தியின் மறுஉற்பத்தி. அந்த உற்பத்திக்கு எந்தக் கூலியும் இல்லை, எந்த அங்கீகாரமும் இல்லை, எந்த வேலைநிறுத்த உரிமையும் இல்லை. இருப்பது ஒரு பெயர் மட்டுமே—லேபர் வார்டு; அதுவும் வலியின் அளவைச் சுட்டிக்காட்டும் ஒரு பேச்சுவழக்காக மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது.

- மு.தனஞ்செழியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.