ஒரு மனிதனின் வாழ்க்கை பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட பயணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சில மனிதர்களுக்கு, அந்தப் பயணம் இறப்போடு கூட முடிவடைவதில்லை. பிறப்பில் திணிக்கப்பட்ட சாதி அடையாளம், வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல; அவர்களின் இறுதி பயணத்தையும் பின்தொடர்கிறது. வாழ்ந்த காலத்தில் சந்தித்த அடையாளப் பாகுபாடுகள், அவமானங்கள், பிரிவுகள் இறந்த பிறகும் ஒரு மனிதனின் உடலைத் தொடர்ந்து செல்கின்றன என்றால், அது வெறும் சமூகப் பிரச்சனை அல்ல; மனித நாகரிகத்தின் மீதே எழும் கேள்வியாகும். பிறப்பு மனிதர்களுக்கு பல்வேறு அடையாளங்களை கொடுத்தாலும், மரணம் அனைவரையும் ஒரே நிலைக்கு கொண்டு வருகிறது என்று நாம் நம்புகிறோம். ஆனால் சாதி ஆழமாக வேரூன்றிய சமூகங்களில், சில மனிதர்களுக்கு அந்த சமத்துவம் மரணத்திற்குப் பிறகும் முழுமையாக கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத சமூக உண்மை.
சுடுகாடு என்பது வெறும் இறந்த உடலை எரிக்கும் அல்லது அடக்கம் செய்யும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தின் சமத்துவ உணர்வை அளக்கும் இடம். உயிரோடு இருக்கும்போது ஒருவருக்கு வீடு, தெரு, குடிநீர், வழிபாட்டு இடம் போன்றவை அடிப்படை உரிமைகளாக இருப்பதைப் போலவே, இறந்த பிறகும் மரியாதையான இறுதி நிகழ்வு அவருக்குரிய அடிப்படை உரிமையாகும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் காலம் காலமாக தனித்தனி சுடுகாடுகள், சுடுகாட்டிற்கு செல்ல தனித்தனி பாதைகள் போன்ற நடைமுறைகள் இருந்து வந்துள்ளன. சமூக மாற்றங்களும் சட்ட முன்னேற்றங்களும் ஏற்பட்ட பிறகும், சில இடங்களில் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை, பொதுச் சுடுகாட்டு பயன்பாடு போன்ற விஷயங்களில் சாதி அடிப்படையிலான முரண்பாடுகள் எழுவது சமூகத்தின் ஆழத்தில் இன்னும் வாழும் பாகுபாட்டு மனநிலையை வெளிப்படுத்துகிறது.
ஒரு மனிதன் உயிரோடு நடந்து சென்ற பாதையில், இறந்த பிறகு அவன் உடலை எடுத்துச் செல்ல முடியாது என்று கூறும் நிலை ஏற்பட்டால், அது பாதை பிரச்சனை அல்ல; மனித மரியாதையின் பிரச்சனை. ஒரு குடும்பம் தங்கள் உறவினரின் இறுதி சடங்குகளை செய்ய வேண்டிய துயரமான நேரத்திலும், தங்கள் உரிமைக்காக அதிகாரிகளிடம் நிற்க வேண்டிய நிலை உருவாகிறது என்றால், அந்த வேதனை அந்த குடும்பத்தின் தனிப்பட்ட துயரம் மட்டும் அல்ல; சமூகத்தின் கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் நிகழ்வு.

(image courtesy: The News Minute)
தமிழகத்தில் இத்தகைய பிரச்சனைகள் கடந்த கால நிகழ்வுகள் மட்டுமல்ல என்பதை பல சம்பவங்கள் நினைவூட்டுகின்றன. வேலூர் மாவட்டம் நாராயணபுரம் பகுதியில் 2019 ஆம் ஆண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை வழக்கமான பாதையில் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால், பாலத்தின் மீது இருந்து உடலை இறக்கி கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கவனத்தை பெற்றது. இறந்தவரின் இறுதி பயணத்திலும் சமூக தடைகள் தொடர்கின்றன என்ற விவாதத்தை இந்த நிகழ்வு மீண்டும் எழுப்பியது. ஒரு குடும்பத்தின் துயரமான நேரத்தில் கூட அவர்கள் தங்கள் உரிமையை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாவது, சட்ட வளர்ச்சிக்கும் சமூக மனநிலைக்கும் இடையே இருக்கும் இடைவெளியை வெளிப்படுத்துகிறது. ஒரு உடலை பாலத்திலிருந்து இறக்க வேண்டிய நிலை என்பது ஒரு குடும்பத்தின் அவமானம் அல்ல; சமத்துவத்தை உயர்த்திப் பேசும் சமூகத்தின் தோல்வி.
இதற்கு எதிராக சிலர், "இது பல தலைமுறைகளாக இருக்கும் வழக்கம்", "ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனி மரபுகள் இருக்கின்றன", "இது பாகுபாடு அல்ல, பழைய நடைமுறை" என்று வாதிடுகிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. ஒரு மரபு அனைவருக்கும் சமமான மரியாதையை அளித்தால் அது பண்பாடு. ஆனால் ஒரு மரபு சிலரை உயர்ந்தவர்களாகவும், சிலரை தாழ்ந்தவர்களாகவும் நடத்தினால் அது மாற்றப்பட வேண்டிய சமூக அநீதி.
மரபுகள் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டவை. மனிதர்கள் மரபுகளுக்காக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல.
"கோவிலிலும் இடமில்லை; சுடுகாட்டிலும் இடமில்லை" என்ற வேதனை வெறும் அரசியல் வார்த்தை அல்ல. அது பல தலைமுறைகளின் சமூக அனுபவத்தின் வெளிப்பாடு. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்று சொல்லப்படும் இடத்திலும் ஒருகாலத்தில் நுழைவு மறுக்கப்பட்டது. மரணம் அனைவரையும் சமமாக்கும் என்ற நிலையிலும், இறுதி மரியாதையில் கூட சாதி தடையாக இருப்பது மனித சமூகத்தின் மிகப்பெரிய முரண்பாடாக உள்ளது.
இந்திய அரசியலமைப்பு இந்த பிரச்சனைகளை வெறும் சமூக பழக்கமாக பார்க்கவில்லை. அரசியலமைப்பின் பிரிவு 14 அனைவருக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்கிறது. பிரிவு 15 சாதி, மதம், இனம், பிறப்பு போன்ற அடையாளங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. பிரிவு 17 தீண்டாமையை ஒழிக்கிறது. பிரிவு 21 மனிதனின் வாழ்வுரிமையை கண்ணியத்துடன் இணைத்து பார்க்கிறது.
மனித கண்ணியம் என்பது உயிருடன் இருக்கும் காலத்திற்கு மட்டும் உரியது அல்ல. இறந்த பிறகும் ஒரு மனித உடலை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற கருத்தை இந்திய நீதித்துறை பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. எனவே இறுதி ஊர்வலத்தை தடுப்பது, சுடுகாட்டு உரிமையை மறுப்பது போன்றவை வெறும் ஊர் சச்சரவுகள் அல்ல; அடிப்படை மனித உரிமைகளுடன் தொடர்புடையவை.
மேலும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை தடுக்க உருவாக்கப்பட்ட SC/ST (Prevention of Atrocities) Act, 1989, சாதி அடிப்படையில் ஏற்படும் உரிமை மறுப்புகளை கடுமையாக அணுகுகிறது. குறிப்பாக பொதுப் பாதைகள், நீர்நிலைகள் மற்றும் பொதுச் சொத்துகளை பயன்படுத்துவதில் சாதி அடிப்படையில் தடைகள் ஏற்படுத்துவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய செயலாக பார்க்கப்படுகிறது.
ஆனால் சட்டம் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது. சட்டம் கதவை திறக்கும்; அந்த கதவின் வழியாக சமத்துவ உணர்வு நடக்க வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் சாதியை வெறும் தொழில் பிரிவாக பார்க்கவில்லை; மனிதர்களை பிரிக்கும் சமூக அமைப்பாக பார்த்தார். "சமூக ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது" என்பதே அவரது அடிப்படை சிந்தனையாக இருந்தது. வாக்களிக்கும் உரிமை பெற்ற ஒரு மனிதனுக்கு, அவனது இறுதி பயணத்தின் பாதை மறுக்கப்படுவது அந்த முரண்பாட்டின் மிகக் கடுமையான வெளிப்பாடு.
பெரியார் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்கு உயர்வு, தாழ்வு கற்பிக்கும் சிந்தனையையே எதிர்த்தார். மனிதனை விட சாதி பெரியதாக மாறும் சமூக அமைப்புகளை கேள்வி கேட்க வேண்டும் என்பதே அவரது பகுத்தறிவு பார்வையாக இருந்தது. சட்டம் மனிதனுக்கு உரிமையை வழங்க முடியும்; ஆனால் அந்த உரிமையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குவது சமூகத்தின் பொறுப்பு.
உலக சமூகங்களை பார்க்கும்போது, பல நாடுகளில் மதம், கலாச்சாரம், இன அடையாளங்களின் அடிப்படையில் வெவ்வேறு இறுதி சடங்கு முறைகள் இருக்கின்றன. ஆனால் நவீன ஜனநாயக சமூகங்களில் அரசு நிர்வகிக்கும் பொதுச் சேவைகள் சம உரிமை அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றன. அமெரிக்காவில் வரலாற்றில் இனப் பாகுபாடு காரணமாக கல்லறைகளிலும் பிரிவினைகள் இருந்தன. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி காலத்தில் இருந்த பிரிவினைகளும் பின்னர் சமத்துவ சட்டங்களால் மாற்றப்பட்டன. இதனால் புரிந்து கொள்ள வேண்டியது, பிரச்சனை தனித்தனி கலாச்சார நடைமுறைகளில் இல்லை; அந்த வேறுபாடுகள் ஒரு தரப்பின் அதிகாரமாகவும் மற்றொரு தரப்பின் அவமானமாகவும் மாறும்போதுதான் அது அநீதியாகிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கு சட்ட நடவடிக்கை மட்டும் போதாது. ஒவ்வொரு கிராமத்திலும் பொதுச் சுடுகாட்டு உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். சுடுகாட்டிற்கு செல்லும் பாதைகள் அரசு பதிவுகளில் தெளிவாக பாதுகாக்கப்பட வேண்டும். சாதி அடிப்படையில் தடைகள் ஏற்படுத்துபவர்களுக்கு விரைவான சட்ட நடவடிக்கை இருக்க வேண்டும். அதே நேரத்தில் பள்ளிகளில் இருந்தே சமத்துவம் மற்றும் மனித உரிமை பற்றிய சமூக கல்வி வலுப்படுத்தப்பட வேண்டும்.
சுடுகாட்டு உரிமைக்கான போராட்டம் என்பது ஒரு நிலத்துண்டுக்கான போராட்டம் அல்ல. அது "நானும் மனிதன், எனக்கும் மரியாதை உண்டு" என்று சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் குரல்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி அதன் சாலைகள், கட்டிடங்கள், பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் இல்லை. அந்த சமூகத்தில் பலவீனமான நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு அது அளிக்கும் மரியாதையில்தான் இருக்கிறது. மரணம் சாதியை கேட்பதில்லை. மண்ணில் கலக்கும் உடலுக்கும், நெருப்பில் எரியும் உடலுக்கும் வேறுபாடு இல்லை. அந்த உண்மையை உயிரோடு இருக்கும் மனிதர்கள் உணரும் நாளில்தான் உண்மையான சமூக நீதி உருவாகும்.
சுடுகாட்டின் வாசலிலும் சமத்துவத்தை தேடும் நிலை தொடரும் வரை, சமூக நீதியின் பயணம் நிறைவடையாது. மனிதனின் கடைசி பயணத்திலாவது சாதியின் எல்லைகள் மறைந்து, மனிதம் வெல்ல வேண்டும்.
- கோபி சேகுவேரா