தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு நடத்துகிறது. பல்லாயிரம் பேர் திரண்டிருந்த அந்த கலாச்சாரத் திருவிழாக் கூட்டத்தில் அப்போதைய பொதுச் செயலாளர் அருணன் ஒரு சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி வெளியிடுகிறார். அப்போது துணைப் பொதுச் செயலாளரான நான் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினேன்.

அந்த நூல் எது தெரியுமா? திசைகளின் நடுவே.

அந்த நூலாசிரியரும் மேடையில் உட்கார்ந்திருந்தார். யார் தெரியுமா? ஜெயமோகன்.

நானும் சரி, த.மு.எ.ச.வும் சரி.... தாராளமயச் சிந்தனை படைத்தவர்கள். நம்மவர்கள் என்று எல்லோரையும் சட்டென நம்பி விடுவோம். தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம். அதுதான் த.மு.எ.ச.வின் பண்பு. அன்பு அசலானது. காரியார்த்தமில்லாத நிஜமான அன்பு.

அந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்து விட்டு, ஜெயமோகனை பாராட்டி நான் நீள் கடிதம் எழுதினேன். அவர் நன்றி சொல்லி எனக்கு ஏழு பக்கக் கடிதம் எழுதினார். அந்தத் தொகுப்பில்தான் பல்லக்கு என்ற சிறுகதையும் இருந்தது. அதை எழுத்தாளர் சுஜாதாவும், அசோகமித்திரனும் பாராட்டியிருந்தனர். அந்தச் சிறுகதையின் கட்டமைப்பு நேர்த்தியைத்தான் அவர்கள் பாராட்டுவதாக நாங்கள் நினைத்தோம். அதே தொகுப்பில் மடாதிபதிகளின் கயமை பற்றி அம்பலப்படுத்திப் பேசுகிற இரு கதைகளும் இருந்தன. அதையெல்லாம் முற்போக்கு என்று நிஜமாகவே நம்பினேன். பாராட்டினேன்.

ஜெயமோகனின் ரப்பர் குறுநாவல் வந்த போது, பணக்காரர்கள் சுயநலத்துடன் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிற அக்கிரமத்துக்கு எதிரான படைப்பு என்று நிஜமாகவே நம்பினேன். பாராட்டி எழுதினேன். பதிலுக்கு அவர் பல பக்கக் கடிதம் எழுதினார். அதற்கும் அப்புறம் அவருக்கு சில நெருக்கடிகள் வந்தபோது, எழுத்தாளர் சு.சமுத்திரத்துக்கும் எனக்கும் ஆதரவு கோருகிற கடிதங்கள் எழுதினார். நானும் பரிவுடன் ஆதரவு தெரிவித்து எழுதினேன்.

அப்போது எனக்கு இந்துத்துவா என்றால் என்ன என்பது தெரியாது. அப்போது அது ஒரு பிரச்சனையாகவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சமஸ்தானத்தின் ஆட்சிக்குள் நாடார்கள் தலித்துகளை விடவும் கூடுதலாக ஒடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டார்கள் என்ற வரலாறு எனக்கு அறிமுகமாகவில்லை. ஜெயமோகனுக்குள் இந்துத்துவா உயர்சாதி மனோபாவம் இயங்குகிறது என்ற சூட்சுமத்தை தொட்டுணரத்தக்க விழிப்புணர்வும் இல்லாமலிருந்தேன். இதை ஒப்புக் கொள்வதில் வெட்கமுமில்லை.

வித்தியாசமான எழுத்துக்காரர் என்று ஜெயமோகனை மதிப்பிட்டு, சிநேகமாக தழுவி அரவணைத்து, மேடைகளில் அவருக்கு வெளிச்சம் தந்தோம். பின் தான் தமிழ்நாட்டின் அரசியலில் இந்தத்துவா ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. பி.ஜே.பி.யின் ரதயாத்திரை எனும் ரத்தயாத்திரை நடந்தது. முஸ்லீம்களை இந்தியச் சகோதரர் என்ற நினைக்கிற தோழமையில் வெறுப்பு விரிசலை விதைத்தது, பி.ஜே.பி. தமிழ்நாட்டின் விவாதப் பொருளாக இந்துத்துவா முன்வந்த காலத்தில்தான், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் வெளிவருகிறது.

விஷ்ணு ஒன்றே கடவுள். அவர் புரள புரள யுகப் புரள்வும் நடக்கிறது. கரிய நாயாக மரணம் அலைய.... விஷ்ணு புரள்கிறார். பாலை மணல் காட்டில் சோனாநதி பிறக்கிறது. விஷ்ணு புரள்கிறார். அதே சோனா நதியின் வெள்ளப்பெருக்கில் பூமியே மணல் காடாகி.... மரணத்தில் குறியீடான கரிய நாய் அலைகிறது.

இந்த நாவல் கட்டமைத்த கருத்தியல் ஆபத்தானதாக இருந்தது. ஒற்றைக் கடவுளை முன்வைத்தது. பெருங்கடவுளை மட்டும் முன்னிறுத்துகிறது.

இந்த மண்ணின் மனிதர்களின் குல தெய்வங்கள், மண்ணின் மைந்தர்கள் வணங்கிய சிறு தெய்வங்கள், பெண் தெய்வங்கள், சிவபெருமான், தமிழ் முருகன் போன்ற சைவத் தெய்வங்கள், ஐம்பெரும் காப்பியங்களை தமிழுக்கு வாங்கிய சமண, பௌத்த மதங்கள் சகலத்தையும் பொய்யென ஸ்தாபித்து, விஷ்ணு ஒன்றே யுகக்கடவுள் என்று முன்வைத்த அந்த நாவல், இந்துத்துவா என்ற ராட்சஸனின் இலக்கியமுகமாக இருந்தது.

1985க்குப் பிறகு இந்தியாவில் - குறிப்பாக - தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் மதவெறிப் பிரச்சாரம் - ராமர் என்ற இதிகாச நாயகனை சரித்திர நாயகனாக புரட்டு செய்து, பாபர் மசூதி இடிப்புக்காக இஸ்லாமீய வெறுப்பு விஷத்தை உக்கிரமாக பரப்பப்பட்டது. இந்துத்துவாவின் அரசியல் பிரவேசம், தமிழக முற்போக்காளர்களிடம் முக முக்கியமான உள்மாற்றங்களைச் செய்தது. உலகப் பிரச்சனைக்குக் காரணம், வர்க்கமுரண்தான். வர்க்கமுரணை ஒழிப்பதற்கு வர்க்கப் புரட்சியும், வர்க்கங்களின் திரட்சியுமே தேவை என்று பயணப்பட்டுக் கொண்டிருந்த முற்போக்காளர்களிடம், இந்துத்துவா பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, இந்தியத் திருநாட்டின் தனித்துவ நோயான சாதீயத்தை எதிர்த்த துணைப் பயணமும் தேவை என்ற வெளிச்சம் வந்தது.

சாதீயத்துக்கெதிரான தீண்டாமை எதிர்ப்பு இயக்கங்களை நடத்திய முற்போக்காளர்கள், சமூகநீதி குறித்த யாத்திரைகளை நடத்தினர். மொழிக்கான போராட்டம், சாதீய ஒழிப்புக்கான போராட்டம், பெண்ணுரிமைக்கான போராட்டம் எல்லாமே இந்துத்துவாவை எதிர்த்த பயணம் என்ற விழிப்புணர்வு வந்திருந்தது.

1950, 60களில் தஞ்சை நாகை மாவட்டங்களில் பி. சீனிவாசராவின் செங்கொடி இயக்கம், குமரி மாவட்டத்துச் சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் மணி அவர்களின் செங்கொடி இயக்கம் கூலி உயர்வுப் போராட்டத்தையும், சாதீய ஆதிக்கத்துக்கெதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்திய பாரம்பரியம். திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தலித் மக்களுக்காக தோழர் ஏ.பால சுப்பிரமணியம், என் வரதராஜன் போன்றோர் கூலி உயர்வுப் போராட்டத்தையும், சாதீய ஆதிக்க ஒருங்கிணைந்த இயக்கம் நடத்திய முன்னனுபவம்.

மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகும் தகுதி செருப்பு தைக்கும் தலித்துக்கும் உண்டு என்று நீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெற்ற தோழர். பி. ராமமூர்த்தி போன்ற செங்கொடித் தோழர்களின் சமூகநீதி இயக்கம். சட்டமன்றத்தில் தமிழுக்காக குரல் கொடுத்த ஜீவா, சங்கரய்யா போன்ற செங்கொடித் தலைவர்களின் வரலாற்று ரீதியான மரபுகள்.

இவையெல்லாம் வரலாற்றுரமாக இருந்ததால்.... இந்துத்துவாவுக்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தையும், ஞானத்தையும் முற்போக்காளர்கள் முழுமையாக - சட்டென - சுவீகரித்து அந்தப் பாதையில் பயணத்தை தொடங்கியிருந்தனர்.

இதே வேளையில் வந்தது, ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல். ஒற்றைக் கடவுள், ஒற்றை மதம், ஒற்றை (சமஸ்கிருத) மொழி என்ற பாசிசச் சிந்தனையுடன் வந்த இந்துத்துவாவுக்குரிய இலக்கிய முகமாக ஒற்றைக் கடவுளை முன்வைத்த விஷ்ணுபுரம் நாவல். வித்தியாசமான படைப்பாளி என்று தோற்றம் காட்டி எங்கள் தோழமையை பெற்று வந்து ஜெயமோகன், இந்த நாவலின் மூலமாக முழுமையாக அம்பலமாகிப் போய் விட்டார். விஷமத் தனமான படைப்பாளி என்ற அவரது சுயரூபம் அம்மணமாயிற்று. விஜயபாரதம் போன்ற மதச் சிந்தனைமிக்க இதழ்கள் விஷ்ணுபுரம் நாவல் விற்பனையில் அர்த்தப்பூர்வமாக முனைப்பு காட்டியது.

முகத்திரைகள் கிழிந்து, மழையில் நனைந்த சாயம் பூசிய நரியைப் போல வெளிச்சத்துக்கு வந்துவிட்ட ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு அதிர்ந்துபோனேன்.

அடடே.... இவரின் மாய்மாலத்தில் ஏமாந்துவிட்டோமே.... இவரது மாரீசமான் மின்னலில் மயங்கிவிட்டோமே என்று திகைத்தேன். எங்கள் அண்ணன் நாகர்கோயிலில் சி.ஐ.டி.யு என்ற செங்கொடித் தொழிற்சங்க ஊழியர் என்றும், நான் சி.பி.எம். முக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்றும், நான் தொலைபேசித் துறையில் இடதுசாரித் தொழிற் சங்கத்தில்தான் உறுப்பினர் என்றும் அவர் சொல்லிவந்த பசப்பு வார்த்தைகளில், வசீகரப்பட்டு மினுக்குகளில் ஒரு மோசக்காரரின் சாகசம் ஒளிந்திருப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டதை உணர்ந்தேன்.

விஷ்ணுபுரம் நாவலின் குரூரத்தை தரிசித்த பின்பு ஏற்பட்ட விழிப்புணர்வோடு..... திசைகளின் நடுவே என்ற அவரது சிறுகதைத் தொகுப்பையும், ரப்பர் எனும் குறுநாவலையும் மறுவாசிப்புக்கும் மறுயோசிப்புக்கும் உட்படுத்தினேன்.

ரப்பர் குறுநாவலில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கெதிரான உயர்சாதியினரின் ஓலமும் குமைச்சலும் ஒலிப்பதை இப்போது உணரமுடிந்தது. ரப்பர் என்ற குறுநாவல், அவரது முந்தைய சிறுகதையின் விரிவாக்கம் தான். அந்தச் சிறுகதைதான், பல்லக்கு எழுத்தாளர் சுஜாதாவின் மிகப்பெரிய பாராட்டு பெற்ற சிறுகதை. அதுவும் தாழ்ந்த சாதியினரின் வஞ்சகத்தை உயர்சாதியினர் கோணத்திலிருந்து குமைச்சலும் வேதனையுமாக கோடிட்டுக் காட்டிய சிறுகதை.

திசைகளின் நடுவே தொகுப்பில் இரு மடாதிபதிகளுக்கு எதிரான சிறுகதைகள் இருந்தன. அவை கூட பார்ப்பனரல்லாத மடாதிபதிகளைப் பற்றித்தான் என்று இப்போது உணர முடிகிறது. உதாரணமாக, பார்ப்பனர் ஆதிக்கமில்லாத இந்துமடாதிபதி குன்றக்குடி ஆதினம். மண்டைக்காட்டில் மதக் கலவரம் நடந்து உயிர்ப்பலிகள் ஆகிக் கொண்டிருந்த தருணத்திலேயே நேரில் சென்று, களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்ட இரு மதத்து மக்களையும் சந்தித்து, சமாதானத்தையும், அமைதியையும் நிலை நாட்டியவர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

மதமாற்றச் தடைச்சட்டத்துக்கெதிரான காஞ்சிபுரத்தில் த.மு.எ.ச. மிகப்பெரிய பேரணியையும், மாநாட்டையும் நடத்துகிற அதே நாளில் திருச்சியில் விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், தினமலர் ஆசிரியர், காஞ்சி மடத்து ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் ஆகியோர் விழா நடத்தி பக்தகோடிகளுக்கு சூலாயுதம் வழங்கினர். சூலாயுதத்தின் மூன்று முனைகளுக்கும் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஒரு கூர்முனை இஸலாமியரை கொல்ல, மற்றோர் கூர்முனை கிறிஸ்துவரைக் கொல்ல, பிறிதோர் கூர்முனை கம்யூனிஸ்ட்களைக் கொல்ல என்று ஏற்கனவே விளகக்மாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. மதக்கலவரத்தை உருவாக்குகிற முனைப்பில் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.

இவரும் இந்துமத மடாதிபதிதான். ஆனால், பார்ப்பனர், பார்ப்பனீய ஆதிக்கத்திலுள்ள காஞ்சி மடாதிபதி ஆக.... பார்ப்பனீய ஆதிக்கத்துக்கும் ஆளுமைக்கும் உட்படாத இந்துமத மடாலயங்கள் தமிழகத்தில் உண்டு. அவை தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன. மத நல்லிணக்கத்துக்குப் பாடுபடுகின்றன. பார்ப்பனீய ஆளுமையிலுள்ள காஞ்சி மடாலயம், சூலாயுதத்தையும், மதவிரோதத்தையும் விநியோகிக்கிறது.

ஜெயமோகனின் சிறுகதைகள், பார்ப்பனீய ஆளுமையிலுள்ள மடாலயங்களையோ - மடாலயத் தலைவர்களையோ - மடாதிபதிகளையோ திரும்பிக் கூட பார்க்கவில்லை. விமர்சிக்கவில்லை. மாறாக-

பார்ப்பனீய ஆளுமைக்குட்படாத இந்து மடாதிபதிகளை மட்டுமே அவரது சிறுகதைகள் விமர்சித்திருந்தன. சூலாயுதமும், மதவிரோதமும் விநியோகிக்காத மடாதிபதிகளை மட்டுமே குறை கூறுகிறார், ஜெயமோகன் தம் சிறுகதைகளில்.

அப்படியெனில், ஜெயமோகனும் சூலாயுதம் வழங்குகிற குரூப்பைச் சேர்ந்தவராகிறார். சூலாயுதம் விநியோகிக்கிற மடாதிபதிகள் மனநிலையிலிருந்து, பார்ப்பனீயமல்லாத இந்து மடாதிபதிகளை குறை சொல்கின்றன ஜெயமோகனின் சிறுகதைகள்.

அப்படியெனில் - ஜெயமோகன் துல்லியமான இந்தத்துவா. தெட்டத் தெளிவான ஆர்.எஸ்.எஸ். இந்துராஷ்ட்ரீய சுயம் சேவக்கின் பிரச்சாரப் பீரங்கியாகவே இவரது சிறுகதை இலக்கிய யாத்திரை. இதிலொன்றும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், ஜெயமோகன், ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாநில அலுவலகத்தில் அலுவலகச் செயலாளராக பணியாற்றிய முழுநேர ஊழியராக இருந்தவர்தாம் என்ற ரகசியமெல்லாம் பின்னாளில் தாம் அறிய முடிகிறது.

பல்லக்கு சிறுகதையில் ஜெயமோகனின் விஷமத்தனம் எது?

ஏகப்பட்ட நிலபுலன்களும், அரண்மனை மாதிரியான மிகப்பெரிய நாலுகட்டு வீடும் கொண்ட நாயர் குடும்பம். ஏகப்பட்ட குடும்ப உறுப்பினர்கள். உழைப்பில்லாத ஆடம்பரத் திளைப்பு, படாடோப வாழ்க்கை. ஒரு நிலப்பிரபுத்துவ உயர்சாதிக் குடும்பத்தின் காமக் கொண்டாட்டங்கள். களியாட்டங்கள். ராஜபோக ஆடம்பரப் படாடோபம்.

வரவு குறைய, செலவுகள் உயர.... வழக்குகளும், கோர்ட் செலவுகளுமான கௌரவப் போராட்டுங்கள்.

குடும்பம் நொடிக்கிறது. ஒவ்வொன்றாக விற்றுத் தின்கிற ஆடம்பரம். நிலபுலன் முழுவதும் விற்பனையாகி விட்டன. வீட்டிலள்ள பொருட்கள், விலை உயர்ந்த ஆடம்பர உபகரண்ங்கள், கலைவேலைப்பாடுள்ள கட்டில்கள் போன்றவைகளை விற்றுத் தின்கிற குடும்பம்.

எல்லா வேலைக்காரர்களும் வற்றிய குளத்துக் கொக்குகளாக சிறகடித்துவிட்டனர். ஒரு நாடான் மட்டும் போக மறுத்து அடம் பண்ணுகிறான். உங்க உப்பை தின்னு வளர்ந்த கட்டை, உங்ககிட்டேயே ஒழைச்சுச் செத்தாத்தான் நிம்மதி என்று தீரா விசுவாசத்தை காட்டி, காலைப் பிடித்து, தண்ணீர் விட்டு, சம்பளமில்லாத வேலைக்காரனாக அந்தக் கிழட்டுநாடான். (குமரி மாவட்டத்தில் புலையர்கள், ஈழவர்கள், தலித் மக்களின் கடையோரை விடவும் தாழ்ந்த நிலையில் நாடார்கள் இருந்த காலம், அது)

அந்த நாடான்தான், இந்த அரண்மனையின் உயர்ரகப் பொருட்களையெல்லாம் ரகசியமாக விற்று விற்று, பணம் வாங்கித் தருகிறான். குடும்பத்தின் பரம்பரைக் கௌரவச் சொத்தாக பல்லக்கு ஒன்று இருக்கிறது. அதையும் விற்க வேண்டிய நிலைமை. நொடித்துவிட்ட உயர்சாதி நாயர் குடும்பத்தின் கௌரவத்தை, அந்த நாடானின் ரகசிய விற்பனைதான் காப்பாற்றுகிறது. அதே ரகசிய முறையில் பல்லக்கும் விற்கப்படுகிறது.

நாயர் வீட்டின் காரணவர் (தலைவர்) தெருவில் வருகிறார். அவரது குடும்பப் பல்லக்கில் எவனோ ஒருவன் ஏறிச் செல்கிறான். இவருக்குள் வேதனையும், அவமானமுமாக இருக்கிறது. பல்லக்கில் போறது எவன் என்ற யாரிடமோ விசாரிக்கிறார். உங்க வீட்லே வேலை பாக்குற நாடானின் மகன் தான் வேதக்காரச் சாமியார் தயவுலே படித்து, வாத்தியார் உத்யோகம் பார்குறான். இப்ப ரொம்ப வசதி. தாழ்ந்த சாதிப்பயலெல்லாம் பல்லக்கில் போறான்.

உடைந்து போகிறார் காரணவர் விசுவாசத்துக்காக பசியோடு வேலை பார்ப்பதாக காலைப் படித்துக் கெஞ்சிய நாடான், விசுவாசக் காரணல்ல. வஞ்சகன். எஜமானர் வீட்டுப் பொருட்களையெல்லாம் கள்ள விலைக்கு தமது மகனுக்கே கடத்திய கள்ளன் என்பதை உணர்ந்ததால் வந்த மனஉடைவு. இதுதான் பல்லக்கின் சிறுகதை. இதைத்தான் எழுத்தாளர் சுஜாதா ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தார்.

கிறிஸ்துவ சாமியார் கருணையால் கல்வி கற்று, ஆசிரியராகி, ஓர் அந்தஸ்துக்கு ஒரு தாழ்ந்தசாதியான் உயர்ந்ததை சகித்துக் கொள்ளாமல் குமுறிக்குமைகிற உயர்சாதியினரின் ஆதிக்கக் குரலாகவே சிறுகதையின் குரல் படைப்பாளியின் குரலும் இது தான். அது மட்டுமல்ல.... அந்தத் தாழ்ந்த சாதியான், பண்பிலும், குணத்திலும் தாழ்ந்தவன் தான், ஈனத்தனமான கள்ளன்தான் என்ற சித்தரிப்பும் கதையின் இணைக்குரல்.

நிலப்பிரபுத்துவ உயர்சாதிக் குடும்பத்தின் சிதைவுக்காக வாசகனை கலங்கடிக்கிறார், ஜெயமோகன். கல்வி கற்று, ஆசிரியராகி ஓர் உயர்நிலைக்கு வந்து விட்ட தாழ்ந்த சாதியாரின் வஞ்சகக் குணத்திற்காக வாசகரை வெறுக்கச் செய்கிறார். இதுதான் இந்துத்துவாவின் கொள்கை. மனுதர்மம், சூத்திரச் சாதிக்கும் சண்டாளச் சாதிகளுக்கும் கல்வி மறுத்தது. பார்ப்பனீயம் அந்த வேதச் சட்டத்தை இம்மிபிசகாமல் கடைபிடித்து வந்தது. சண்டாளச் சாதிக்கும் சூத்திரர்களுக்கும் கல்வி எக்காலத்திலும் வழங்கப்பட்டதில்லை. கிறிஸ்துவம் இந்திய மண்ணுக்குள் நுழைந்த பிறகு தன், இழிசனராக கருதப்பட்ட சண்டாளச் சாதியினருக்கு கல்வி வாசனை எட்டிப் பார்த்தது. கிறிஸ்துவத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கப்பட்டதை வேத வைதீக இந்துமதம் பொறுத்துக் கொள்ளவில்லை. அவதூறுகளும், வசைகளுமாக துற்றியது. அதே வேலையைத்தான், ஜெயமோகன் சிறுகதையும் செய்கிறது.

ரப்பர் குறுநாவலும் இதே கதையின் கருத்தியல்தான். குமரி மாவட்டத்து உயர்சாதியினரான நாயர்கள் கையில் நஞ்சை நிலங்கள் யாவும் இருக்கின்றன. நெற்பயிலும், வாழை மரங்களுமாக அந்த நிலம், மாவட்டத்துக்கு உணவும், மகுடமும் தருகிறது. வாழை, காற்றை சுத்தமாக்குகிறது.

எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வருகிற கூட்டு வண்டியில் பொன்னுமணி என்ற நாடான் சிறுவன் வருகிறான்.

இடுப்புக்கு மேல் சட்டையணியக் கூட உரிமையில்லாதவர்கள் சாணார் சாதிப் பெண்கள். திறந்த மார்புகளோடு தான் திரிய வேண்டும். நாயர் எதிரில் வருகிறார் என்றால், தமது வியர்வை வாசம் அவர் நாசியை தீண்டாத தூரத்துக்கு தாமே ஒதுங்கி நின்று வழிவிட வேண்டும், சாணார் சாதி ஆண்கள். தீண்டாமையிலும் கொடியது வாசத் தீண்டாமை. அதிலும் சாணார் சாதிப் பெண்கள் என்றால், திறந்த நிலை மார்புகளோடு முன் பக்கமாக குனிந்து வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டும். இப்படியான சாதீய மேலாதிக்கத்தில் நாயர்களும், சாதீய அடுக்கு நிலையில் சாணார்களும் இருந்த காலத்தில் பொன்னுமணி வருகிறான்.

அவன் வியாபாரத்தில் ஈடுபடுகிறான். கூழைக்கும் பிடுகளும், காலைப் பிடித்து நக்குதலுமாக அவன் மிகுமரியாதை காட்டுகிறான். உயர்சாதியினரின் சாதி வளமுறை அறிந்தவன் என்ற நற்பெயரை பெறுகிறான். பண உதவிகளும் பெறுகிறான். அவனது வம்சமும், வணிகமும் பெருக.... பெருக.... மிகப் பெரிய செல்வந்தர்களாக நாடார்கள். ஆடம்பரக் கேளிக்கையான வாழ்க்கை முறையாலும், சோம்பேறித்தனத்தினாலும் நிலங்களை விற்கிற நிலைக்குத் தாழ்கிற நாயர்கள். வாழை மரங்களான நாயர்களின் நிலங்களை விலைக்கு வாங்குகிற நாடார்கள், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதற்காக.... காற்றை இதப்படுத்திய வாழைகளை வெட்டித் தள்ளிவிட்டு, காற்றை நச்சுப்படுத்துகிற ரப்பர் மரங்களை நடுகின்றனர். ரப்பர் வர்த்தகத்தில் அந்நிய முதலாளிகளுக்கே சோரம் போகின்றனர், நாடார்கள். இதுதான் ரப்பர் நாவல்.

நேசமணி, தோழர்மணி போன்ற நாடார்கள் காங்கிரஸ் தேசீயப் பேரியக்கத்திலும், கம்யூனிஸ்ட் பேரியக்கத்திலும் தேசபக்தியுடன் - தியாக சிந்தையுடன் சுதந்திரப் போர் நடததியிருக்கிற குமரி மண்ணில் நாடார்கள் தேசத்துரோகிகள் என்று நாவல் எழுதுவதற்கு சுரணையற்று பொய் சொல்லுகிற வெட்கமற்ற ஈனம் வேண்டும். அதில் ஜெயமோகன், ஜெயமோகனேதான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். வாசத்தீண்டாமையும், தோள்ச்சீலை போட உரிமை இல்லாத அவலமும் உள்ள குமரி மாவட்டத்து சாணர்கள், உருண்டு புரண்டு, போராடி, கல்வியிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டு, மல்லுக்கட்டி, கட்டிப் புரண்டு மெல்ல மெல்ல மேல் நிலைக்கு வந்தார்கள் என்பது வரலாறு.

இது வாழ்த்தப்பட வேண்டிய வரலாறுதானே! அரிவாள் கம்பு எடுக்காமல் - ரத்தக் களறி செய்யாமல் – வன்முறைப் பிரயோகமில்லாமல் - கல்வியினாலும் வணிகத்தினாலும் ஒரு சாதி, மேல்நிலைக்கு உயர்ந்து வருவதை எந்த ஒரு மனிதநேயவாதியும் வரவேற்பான். வாழ்த்துவான். வர்ணாசிரமத்தை பாதுகாக்கிற மனுதர்மவாதிதான், சண்டாளச்சாதி முன்னேறுவதை சகித்துக் கொள்ளமாட்டான். பொருமிக் குமைவான். அந்த முன்னேற்றத்தை கயமை, ஈனம், ஏமாற்று, வஞ்சகம் என்று வசைபாடி அவதூறு செய்து காறித்துப்புவான். அதே பணியைத்தான் செய்கிறது. ஜெயமோகனின் ரப்பர் குறுநாவல்.

இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான - உயர்சாதி வெறி கொண்ட - மானுட வெறுப்பு கொண்ட - ஒருவர், எப்படி ஒரு கலைஞனாக முடியும்? கலைமனம் என்பது மெல்லியபூவின் வாசத்தைப் போல நுண்மையானது; மென்மையானது. ஒரு கலைஞனுக்காக எந்தப் பண்பும் ஜெயமோகனின் எழுத்தில் காணமுடியாது. மனசின் அடிமடியை பிசைய வைக்கிற - கண்கலங்க வைக்கிற எந்த ஒரு கலைப்படைப்பையும் இவர் தந்ததேயில்லை. இதயமில்லாத அறிவாளி, அவர்.

ஒரு பாசிச அறிவு ஜீவிதான், இவர். உலர்ந்த அறிவு ஜாஸ்தி. முசோலினியைப் போல - ஹிட்லரைப் போல - கொலம்பஸைப் போல இதயமில்லாத உயர் அறிவு ஜீவி. இதயமில்லாத அறிவாளிகள் இலக்கியத்துக்குள் நுழைந்தால், இந்துத்துவா பாசிசத்தைத்தான் நிறைவேற்றுவார்கள். அதைத்தான் ஜெயமோகன் செய்து கொண்டிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர் உயர்நிலைக்கு வருவதை - பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை சகித்துக் கொள்ளாத ஜெயமோகன்; பார்ப்பனீய ஆளுமைக்குட்படாத மடாதிபதிகளை மட்டும் குறை சொல்கிற ஜெயமோகன்; ஒற்றைக் கடவுளை மட்டும், ஒற்றை மதத்தை மட்டும் நிலைநாட்டுகிற ஜெயமோகன். அடுத்து என்ன செய்வார்?

இவ்வளவு தூரம் அம்பலத்துக்கு வந்துவிட்ட பிறகு, ஆயுதம் ஏந்தத்தானே செய்வார்?

பின் தொடரும் நிழலின் குரல் என்ற தலையணை பருமனில் ஒரு நாவல். முழுக்க கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாவல். வெளிப்படையான மூர்க்கமான தாக்குதல். கூச்சநாச்சமற்ற வெட்கமற்ற முரட்டுத் தாக்குதல்.

இத்தனை கொடூரமான முறையில் - குரூரமான விதத்தில் - கம்யூனிஸ்ட் எதிர்ப்பை கக்குகிற இவர்தான்,

எங்க அண்ணன் சி.ஐ.டி.யு. நான் சி.பி.எம். கட்சிக்கு ஓட்டு போட்டேன். தொலைபேசித் துறையில் இடதுசாரிச் சங்க உறுப்பினர் என்றெல்லாம் பேசிப் பேசிப் பசப்பினார்கள் என்றால்.... இவர் எத்தனை பெரிய மோசடிக்காரர்! எத்தனை மோசமான பொய்யர்!

காலம் காலமாக வைதீக இந்து மதம் விஷ்ணுவை மட்டும் ஒற்றைக் கடவுளாக முன் வைத்தது. சிறுதெய்வங்கள், கிராமப்புறத்து குலதெய்வங்கள், காட்டுப் பகுதிகளிலிருக்கிற காவல் தெய்வங்கள், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்குகிற ஏகப்பட்ட பெண் தெய்வங்கள் யாவற்றையும் கொலையுண்டு, ஆவிகளாக அலைகிற பேய்கள் என்றுதான் வைதீக இந்து மதம் சொல்லும். சமஸ்கிருதத்தை முறையாக கற்று, வைராக்யமாக ஆசார தர்மத்தை கடைபிடிக்கிற பார்ப்பன அர்ச்சகர்கள் யாரும் இந்த மாதிரிப்பட்ட தெய்வங்களுக்கும் - ஆலயங்களுக்கும் - அர்ச்சனை செய்ய வரவேமாட்டார்கள். வருகிற பார்ப்பன அர்ச்சகர்கள், பிழைப்பு நியாயத்துக்காக வருகிறவர்கள்தாம். எப்படியும் வயிற்றுப்பாடு கழியணுமே என்று வருகிறவர்கள்தாம்.

வைதீக இந்துமதம் பேய்களென அசூயையாக பார்க்கிற இந்த சிறு தெய்வங்கள், கிராமத்துக் குலதெய்வங்கள், காட்டுக்காவல் தெய்வங்கள், ஆயிரத்தெட்டு வகையான அம்மன் தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்கள் யாவற்றையும் ஆகம விதிகளுக்கு உட்படுததி, தமது ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டுமென ஆர்.எஸ்.எஸ். என்ற காவிக் கூட்டம் விரும்புகிறது.

காவியின் மதவெறி அரசியலுக்கு இந்த எளிய மக்களின் பண்பாட்டு வழிபாட்டுத்தளங்களை காவு வாங்க விரும்புகிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் வேட்கையின் இலக்கிய வெளிப்பாடுதான், ஜெயமோகனின் சமீபத்திய காவியம் கொற்றவை.

பிற்போக்கான இந்துத்துவவாதியான ஜெயமோகனை நவீன எழுத்தாளர் இந்தியத் தத்துவப் பெருமிதத்தை முன் வைக்கிற நவீனத்துவ சிந்தனையாளர் என்றெல்லாம் புகழ்கிறவர்கள் இப்போதும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

இந்த மாரீசமானை நிஜமான் என்று நான் நம்பவில்லையா ஒரு காலத்தில்? அப்புறம், விழிக்கவில்லையா?

அப்படித்தான் - இப்போது புகழ்கிறவர்களும் நாளை விழிப்பார்கள். நிச்சயமாக வரலாறு விழிக்க வைக்கும்.

ஹிட்லர் போன்றோரை மெச்சுவோரும் ராணுவ ஆட்சிதான் நாட்டுக்குத் தேவை என்ற கொக்கரித்தவர்களும் பாகிஸ்தான் ஆட்சியைப் பார்த்து விழித்துக் கொள்வதைப் போல........ ஜெயமோகனின் படைப்புகளை பார்த்தே அவரிடமிருந்து விழித்துக் கொள்வார்கள்.

- மேலாண்மை. பொன்னுச்சாமி
மேலாண்மறைநாடு - 626127
இராஜபாளையம் - வழி
விருதுநகர் மாவட்டம்
04562 / 271233

Pin It