சுஜாதா இறந்துவிட்டார். எனக்கு அதில் ஒரு வருத்தமுண்டு. இன்னும் ஷங்கர் உயிரோடிருக்கிறார். பூங்காக்களில் படுத்துறங்குபவர்கள், ரயிலில் சரக்கடிப்பவர்கள் இன்னும் அச்சப்படுவதற்கான நியாயங்கள் உள்ளன. இன்னமும் தெருவோரங்களில் ஒண்ணுக்கு போகிறவர்களைக் கொலை செய்வதற்கான கதைகள் உருவாகவே செய்யும்.

சுந்தர ராமசாமி இறந்தபோது என்னென்ன விபரீதங்கள் நிகழ்ந்தனவோ அத்தனையும் சுஜாதா விவகாரத்திலும் நடக்கின்றன. கடந்துபோன புத்தகக் கண்காட்சிக்கு நானும் நண்பர் ஜ்யோராம்சுந்தரும் போயிருந்தோம். காலச்சுவடு ஸ்டாலில் அறியப்படாத சு.ராவின் புத்தகங்களைக் கண்டேன். ஒருவேளை இறந்த பிறகும் சு.ரா எழுதுகிறாரா என்று ஆச்சரியமாகவும் பயமாகவுமிருந்தது.

பிறகுதான் தெரிந்தது. அவரின் சிறுகதைத் தொகுப்பில் 30 கதைகளிருக்கின்றன என்றால் மாற்றி மாற்றி அந்த சிறுகதைகளின் தலைப்பை வைத்து புத்தகங்கள். பிரசாதமா, அது ஒரு புத்தகம், பிள்ளைகெடுத்தாள்விளையா அது ஒரு புத்தகம். இப்படியாக சுராவின் பிணத்தை விற்றுக் காசு பார்த்தது காலச்சுவடு.

ஆனால் சுரா விசயத்தில் கா.சு மட்டும் திதி, கருமாதி எல்லாம் தொடர்ந்து நடத்துகிறது. மற்ற பத்திரிகைகள் இழவுக் கட்டுரைகளை வெளியிட்டதோடு சரி. ஆனால் சுஜாதா விசயத்திலோ அந்த கிருமி வெகுஜனப் பத்திரிகைகளையும் விடவில்லை.

ஏற்கனவே அச்சான உயிர்மை இதழின் அட்டையின் மீது சுஜாதா புகைப்படத்தோடு கூடிய அட்டையைப் போட்டு தன் விசுவாசத்தை நிரூபித்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன். குங்குமத்திலோ பாதிக்குமேல் சுஜாதா, விகடனிலும் சுஜாதாபுராணம். குமுதத்திலோ கொடுமை உச்சகட்டம்.

அய்.ரா.சுந்தரேசன் எழுதிய அஞ்சலிக்கட்டுரையில் சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலுக்கு நாடார்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து எழுதும் பகுதியில் 'அதுகள், இதுகள்' என்றே எழுதியிருக்கிறான். ஒரு பார்ப்பார நாய் செத்ததிற்காக இன்னொரு பார்ப்பன நாய் போட்ட அஞ்சலிக் குரைச்சலில் நாடார்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சமத்துவமக்கள் நாயகன்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஜெயமோகன் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சன் டி.வியில் இழவுச்செய்தி வாசிப்பதற்கென்றே மாலன் என்னும் ஒரு நபர் இருந்ததைப் போல 'எமக்குத் தொழில் இழவுக்கட்டுரைகள் எழுதுவது' என்று குறிக்கோளாயிருக்கிறார் ஜெமோ. யாராவது ஒரு எழுத்தாளர் கொஞ்சம் சீரியசென்று மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு ஜெமோவிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். 32 பக்க அஞ்சலிக்கட்டுரை உத்திரவாதம். ஆனால் அது ஒருபகுதி மட்டும்தான். எழுத்தாளர் இறந்து 16ம் நாள் கருமாதி நடத்துவதற்குள் அவரைப் பற்றிய புத்தகம் உயிர்மையின் சார்பாக வெளியிடப்பட்டுவிடும்.

அப்படியென்ன சுஜாதா சாதித்தார்? நிச்சயம் இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளை அவர் தந்ததில்லை. வெகுஜன எழுத்தாளர் என்ற வரிசையிலும் அவரை வைத்துவிட முடியாது. ஏனெனில் ராஜேஷ்குமாரையும் சுஜாதாவையும் ஒரே தட்டில் நிறுத்திவிடமுடியாது. நான் 'தரம்' என்னும் அளவில் பேசவில்லை.

எனக்கு ராமராஜனின் படங்கள் பிடிக்கும். ஆபத்தில்லாத கிராமப்படங்கள். அவற்றில் பெரியளவிற்கு நிலப்பிரபுத்துவக்கூறுகள் இருக்காது. ஆனால் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமாரின் படங்களிலோ நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மதிப்பீடுகளே நிறைந்திருக்கும். ராமராஜனை விட ரவிக்குமார் ஆபத்தானவர். சுஜாதா இரண்டாம் வகை.

அவர் அறிவியல் விசயங்கள் குறித்து வெகுமக்களிடம் சேர்த்தார் எனலாம். ஆனால் பாலியல் என்பதும் அறிவியல்தானே, ஆனால் மாத்ருபூதம் இறந்ததற்கு யாரும் இவ்வளவு வருத்தப்பட்டதில்லை. சுஜாதா அறிவியல் என்ற பெயரில் ரிலேட்டிவிட்டி தியரியில் நாரதபுராணத்தை நுழைத்து பார்ப்பனியத்தை திணித்தார்.

அவர் 'பூக்குட்டி' போன்ற குழந்தைக்கதைகள் எழுதியதற்காக அவரைப் பிடிக்கும் என்றார் ஒரு நண்பர். நான் படித்ததில்லை. ஆனால் சுஜாதா போன்றவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் எழுதியது குறித்து நாம் தீவிர மறுவாசிப்பு செய்யத்தானாக வேண்டும். அது பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் முயற்சியாகவும் இருக்கலாம்.

என்னளவில் அறிவியல் புனைகதை எழுத்தாளர் என்ற முறையில் அவர்மீது மரியாதை உண்டு. அவருக்கு முன்னும் பின்னும் இன்னும் கூட அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் தமிழில் இல்லை. ஆனால் அவர் சிறுகதை, நாவல், சினிமா, அறிவியல் என அனைத்திலும் பார்ப்பனீய ஆணாதிக்க மதிப்பீடுகளைத் திணித்த ஒரு ஆபத்தான வலதுசாரி எழுத்தாளர்.

ஆனாலும் அவரை இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய அவசியமென்ன இருக்கிறது, அதுவும் புதுமைப்பித்தனை 'தூ, அவன் கதையைச் செருப்பாலடிக்க வேண்டும்' என்று எழுதியவர்கள் கூட. எல்லாவற்றிற்கும் காரணம் அறமும் அரசியல் நேர்மையுமற்ற அற்பவுணர்வு, பிழைப்புவாதம் என்பதெல்லாமல் வேறென்ன சொல்வது?

இந்த தந்திரம் மனுஷ்யபுத்திரனிடமிருந்து முந்தாநாள் சிறுபத்திரிகையில் ஒரே ஒரு கவிதை எழுதியவர் வரை யாரையும் கைவிடவில்லை.

ஞாநியின் திமுக எதிர்ப்புக் கருத்திற்காக அவரின் பார்ப்பனீயம் குறித்து விமர்சித்தவர்கள், சுஜாதாவிற்கு மட்டும் புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.

என்னளவில் சுஜாதாவையும் ஞாநியையும் ஒப்பிட முடியாது. ஞாநி மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் சுஜாதா அளவிற்கான ஒரு அடிப்படைவாதப் பார்ப்பனர் கிடையாது. ஆணிய மதிப்பீடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வருபவர். ஆனால் சுஜாதா ஒரு கடைந்தெடுத்த ஆணாதிக்க பார்ப்பன வைதீகர்.

குறிப்பு :சுஜாதாவின் ஆபத்தான முகங்கள் குறித்து விரிவாக அறிய விரும்புவோர் அ.மார்க்ஸ் எழுதிய 'சோவுக்கு மீசை முளைத்தால் சுஜாதா' கட்டுரை, ரவிக்குமார் நிறப்பிரிகையில் இந்தியாடுடே இதழில் வெளிவந்த சிறுகதையொன்றை கட்டுடைத்து எழுதிய கட்டுரை (சிறுகதை மற்றும் கட்டுரை தலைப்பு இரண்டுமே ஞாபகமில்லை), வெற்றியழகனின் 'சுஜாதாவின் கோணல் பார்வைகள்' என்னும் சிறுநூல் ஆகியவற்றைப் படிக்கலாம். 

- சுகுணா திவாகர்

Pin It