சேலம் சிறைத் தியாகிகளின் 67 வது நினைவு நாள்!

1947 ஆக.15-ல் சுதந்திரம். வெள்ளையர் வெளியேறி காங்கிரஸ் தலைமையில் பழுப்பு நிற எஜமானர்கள்/இந்திய முதலாளிகளின் ஆட்சி வந்தது. மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை.

communist flagவிவசாயிகளின் நிலத்திற்கான போராட்டம் & கிளர்ச்சிகள், தொழிலாளர்களின் கூலி உயர்வு & சங்க உரிமை, பண்ணை அடிமைகளாய் வாழ்ந்த தலித்துகளின் விடுதலை, மொழி & மாநில உரிமைகள், சனநாயகத்திற்கான இயக்கம், போராட்டங்கள் என நாடு முழுவதுமாக கம்யூனிஸ்டுகள் தலைமையில் எண்ணற்ற போராட்டங்கள் வெடித்தன. தெலுங்கானா முதல் தஞ்சை வரை விவசாயிகளின் வீரஞ்செறிந்த புரட்சிகரமான போராட்டங்கள், சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை எனத் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சிகரமான போராட்டங்கள் ......

காங்கிரஸ் ஆட்சி, நேரு அரசாங்கம்- முதலாளிகள் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து பயந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கால அடக்குமுறை தொடர்ந்தது .

கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை, சதி வழக்குகள், தலைமறைவு, சங்க அலுவலகங்கள் & சிவப்பு சட்டை போட்டவர்கள் மீதான காவல்துறை தாக்குதல்கள், கைது, சிறைவாசம் என வரலாறு விரிந்து செல்கிறது.

சில ஆண்டுகளிலேயே...

1982 துப்பாக்கி சூடுகள், 3784 பேர் கொல்லப்பட்டனர், 10,000 மேற்பட்டோர் ஊனம், கொடுஞ்சிறைக்குள் 50,000ற்கும் மேற்பட்டோர், சிறைக்குள் கொல்லப்பட்டோர் 82 பேர் (சேலம் சிறையில் 22 பேர் உட்பட) என கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறு நீண்ட நெடியது.

சேலம் சிறையின் நிலைமை

காங்கிரஸ் அரசாங்கம் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை வேலூர், கடலூர் சிறையிலும், ஊழியர்களை சேலம், திருச்சி, மதுரை சிறையிலும் பிரித்து அடைத்தது.

கேரளா -மலபார் விவசாயிகள் போராட்டத்தில் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்கள், விவசாயிகள், பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர, தமிழக கம்யூனிஸ்ட்கள் என 350 பேரை சேலம் கிளைச் சிறையில் (அனெக்ஸ்/Annex என அழைக்கப்பட்ட சிறை, தற்போது பெண்கள் சிறையாக செயல்படும் பகுதி) 3 கொட்டடிகளில் அடைத்தது. 20 வயது முதல் 60 வயது வரை, படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை, 6 மாதம் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றவர்கள் கலந்து இருந்தனர்.

சேலம் சிறைக்கு "கறுப்பு குல்லா ஜெயில் " என்ற அவப்பெயர் இருந்தது. கிரிமினல் வரலாறு மிக்க கொலை, கொள்ளைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். எனவே, சிறைக் காவலர்களின் கொடுமையும், அடக்குமுறையும் கூடுதலாக இருந்தது.

கம்யூனிஸ்ட் சிறைவாசிகளுக்கு C வகுப்பு தான் வழங்கப்பட்டது.

உணவு :-

காலையில் புளித்த கஞ்சி, நண்பகலில் சோளக்களியும் கீரைக் குழம்பும், மாலையில் அச்சடித்த சோறும், அரை ஆழாக்கு நீர் மோறும் & பத்து நிலக்கடலையும்

உடை :-

அரைக்கை சட்டை, அரைக்கால் டிரவுசர், மொட்டைத் தலைக்கு குல்லாய் (குரங்கு)தொப்பி

உறங்க:-

கிழிந்த கோணிப்பாய், பேன் பிடித்த பழைய கம்பளி

குளிக்க :-

நாலு குவளை தண்ணீர்

கேவலமான நோய் பரப்பும் கழிப்பறைகள், அறைகள்...

(இன்றுள்ள சிறை வசதிகள், உரிமைகள் அன்று இல்லை)

சிறை விதிக்கு உட்பட்ட உணவு, உடை கூட வழங்காமல் ஊழல் செய்தனர், சிறை அதிகாரிகள், இரக்கமற்ற அரக்கர்களாகவும் இருந்தனர். அதிகார வெறி பிடித்த கிருஷ்ணன் நாயர் சிறையதிகாரி-ஜெயிலர், தாமோதரன் என்ற அரக்கன் தலைமை வார்டன். கம்யூனிஸ்ட்டுகளை படுபாதக கிரிமினல்கள் போல் கையாண்டனர். பகல் முழுவதும் வேலை, தோட்ட வேலைகளில் மாடுகளுக்குப் பதிலாக, தண்ணீர் இறைக்க ரோடு ரோலர் இழுக்கத் தோழர்களைப் பயன்படுத்தினர். "நாயிண்ட மகனே" துவங்கி எண்ணற்ற இழிசொற்கள், வசைகள், அடிகள், தண்டனைகள்...

மற்ற கிரிமினல் கைதிகள் போல நெம்பர் கட்டை, குல்லாய் அணிய வற்புறுத்தி வந்தனர். தோழர்கள் மறுத்ததால், கேரளா, ஆந்திராவிலிருந்து 500 கி.மீ தொலைவில் இருந்து வந்த உறவினர்கள் பார்க்க அனுமதி மறுத்தனர்.

சேலம் சிறையில் துப்பாக்கி சூடு

" குல்லாய், நெம்பர் கட்டை அணியமாட்டோம்! "

" மாடு போல வேலைகளைச் செய்ய மாட்டோம்! "

- என்ற உரிமைக் குரல், போராட்டக் குரல் எழுந்தது.

பிப்ரவரி 7 ந் தேதியன்று, உள்ளிருப்புப் போராட்டம் துவங்கியது. வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் துவங்கியது.மிரட்டிப் பார்த்தனர்.

1950 பிப்.1, காலை 8 மணி. சிறைக் காவலர்கள் குல்லாய் வைக்க வற்புறுத்தினர். தோழர்கள் மறுத்தனர். விசில்கள் ஊத, அபாயச் சங்கு ஒலிக்க,ஜெயிலர் கிருஷ்ணன் நாயர் தலைமையில் 250 காவலர்களின் குண்டாந்தடிகள் 350 கம்யூனிஸ்டுகளையும் தாக்கின.

துப்பாக்கியால் சுட்டனர். இரத்தம் ஆறாக ஓடியது. சடலங்கள் மிதந்தன.

"இன்குலாப் ஜிந்தாபாத் "

"விப்ளவம் ஜெயிக்கட்டே"

"புரட்சி ஓங்குக! "

"கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத் "

முழக்கங்கள் ஒலித்தன.

22 பேர் கொல்லப்பட்டார்கள். 19 பேர் கேரளத் தோழர்கள். மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். (திருச்செங்கோடு நெசவாளர் காவேரி முதலியார், சேலம் ஜவஹர் மில் தொழிலாளர் ஆறுமுகம், கடலூர் கட்சி ஊழியர் சேக் தாவூது ).200க்கும் மேற்பட்டோர் குண்டு காயமுற்றனர். சேலம் சிறை பிணக்காடானது.

மத்தியில், மாநிலத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தான் ஆட்சி செய்தது. PS குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதல்வராக இருந்தார். மந்திரி மாதவ மேனன் சேலம் சிறைக்கும், மருத்துவமனைக்கும் வருகை புரிந்தார். "திரும்பிப் போ! " முழக்கங்கள் எதிரொலித்தது.

இந்தியப் புரட்சிக்கான கம்யூனிஸ்ட் தியாகிகள் வரிசையில், சேலம் சிறைத் தியாகிகளும் இடம் பெற்றனர்.

சேலம் சிறைத் தியாகிகளே!

உங்களை ஒருநாளும் மறவோம்!

நீங்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது!

இறக்கும்போது நீங்கள் எழுப்பிய முழக்கங்கள்

"புரட்சி ஓங்குக! "

"விப்ளவம் ஜெயிக்கட்டே! "

"இன்குலாப் ஜிந்தாபாத் !"

என்றும் உயர்த்திப் பிடிப்போம்!

சேலம் சிறைத் தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

- அ.சந்திரமோகன்

Pin It