tasmac 636

சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய வரலாற்றை படித்தவர்களுக்கு பசுமைப் புரட்சி பற்றி தெரிந்திருக்க வாய்ப்புண்டு. உணவு உற்பத்தியைப் பெருக்கிட, பட்டினியைப் போக்கிட எடுக்கப்பட்ட அந்த முயற்சியை இன்றளவும் நமது மாணவர்கள் படித்துக்கொண்டு இருக்கின்றனர்.  அதன் பிறகு வேறு எந்த புரட்சியும் அந்தளவிற்கு பெரிய வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் 2004 க்கு பிறகு ஏற்பட்டுள்ள ஒரு பெரும்புரட்சி பலரின் கண்களுக்கு புலப்படாமல் போனதுதான் துரதிஷ்டம். ஆம், சமூகத்தின் எல்லா படிநிலைகளை ஆழமாக ஊடுருவிச் சென்றிருக்கிற ஒரு புரட்சி! மூலை முடுக்குகள் எல்லாம் தனது அடையாளங்களை விசிறியெறிந்திருக்கிற ஒரு புரட்சி! ஒரு மாநிலத்தின் வரி வருவாயில் ஏறக்குறைய பாதியை அள்ளித்தருகிற புரட்சி! ஆண்டிற்கு 20 விழுக்காட்டிற்கு கீழ் குறைந்திடாத வளர்ச்சியை வழங்குகிற புரட்சி! ஆம் அது மஞ்சள் புரட்சி!  2013 இல் மத்திய அரசு அறிவித்த உங்கள் பணம் உங்கள் கையில் என்கிற திட்டத்திற்கு இப்புரட்சிதான் அடிப்படை. அந்த திட்டத்தில் கூட மக்கள் பணம், பணம் என்ற வடிவில் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் இந்த புரட்சிகரமான திட்டத்தில் மக்கள் பணம் அவர்களது கைகளில் அவர்கள் அடைய விரும்பிய பொருளாக-ஒரு பாட்டில் வடிவில்- கைகளில் தவழும். அது சூரிய ஒளி பட்டு தகதகவென்று பொன்னைப் போன்று மின்னும்: மஞ்சள் புரட்சி!

ஒரு தேசம்/மாநிலம் வளர்ச்சி பெற வளர்ச்சித் திட்டங்கள் தேவை. அதற்கு முன்னோடியாக இலக்கு திட்டங்களை ஒரு அரசு அறிவிக்கும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் தொலைநோக்குத் திட்டம் 2023. அத்திட்ட செயலாக்கத்திற்கு நமக்கு தேவைப்படுகிற நிதி 15 லட்சம் கோடி. இந்த தொகை அன்னிய முதலீடு, வங்கி நிதியுதவி மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் போன்ற இன்னபிற வழிகள் மூலம்  திரட்டப்பட உள்ளது. மேலும் இந்த திட்டம் பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்படவும் உள்ளது. அந்த தொலைநோக்குத் திட்டத்திற்கு அன்னிய மூலதனம் போன்றவை தவிர்த்து உள்நாட்டிலேயே சுயசார்பான முறையில் நிதிமூலதனத்தை உற்பத்தி செய்யும் ஒரு சீரிய முயற்சியாக இந்த மஞ்சள் புரட்சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மஞ்சள் புரட்சி செயலாக்கப்படும் விதம் உண்மையிலேயே பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது; பல நாடுகள் பின்பற்றத்தக்க முன்மாதிரி செயலாக்கமாகவும் இருக்கிறது. எந்த ஒரு வளர்ச்சி திட்டத்திற்கும் தேவையான நிதியாதாரத்தை திரட்டுவதற்கு இந்த மாதிரியான திட்டச்செயலாக்க முறை ஒன்றே போதும். இதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட ஐந்து மண்டலங்களாக தமிழ்நாடு பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மண்டலங்களுக்கும் ஐந்து மண்டல மேலாளர்கள் இருப்பர். இவர்கள் இந்த மண்டலங்களில்  மஞ்சள் பான விற்பனையை கண்காணிப்பார்கள். மேலும் மாவட்டத்திற்கு ஒரு  மாவட்ட மேலாளர் இருப்பார். இவர்களின் பணி மாவட்ட அளவில் இந்த பானத்தின் விற்பனையை கண்காணிப்பது.

இத்தகைய அதிகாரிகளின் கண்காணிப்புகளுக்கு மத்தியில் மஞ்சள் பான உற்பத்தி மற்றும் விற்பனையில் எந்த வித முறைகேடுகளும் நடக்க வாய்ப்பில்லை. அவ்வாறு நடந்தால் தவறிழைப்போர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். லட்சக்கணக்கான போட்டியாளர்களுக்கு மத்தியில்  வெற்றிபெற்று இந்திய ஆட்சிப் பணியில் வந்தமரும் ஒரு மாவட்ட ஆட்சியரின் முக்கியமான பணிகளில் ஒன்று இந்த பானத்தின் விற்பனையை அதிகரிப்பதுதான். மேற்கூறப்பட்ட மண்டல மற்றும் மாவட்ட அதிகாரிகள் எந்த அளவிற்கு தங்களது பணியை செவ்வனே செய்தார்கள் என்பதை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது அறையில் தனது தலைக்கு மேல் தொங்கும் காந்தி மற்றும் திருவள்ளுவர் படத்தின் கீழ் அமர்ந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் சீராய்வு செய்ய வேண்டும். எளிய மொழியில் சொன்னால் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி "சரக்கு விற்க வேண்டும்".

பெரும்பான்மை மக்கள் குடிக்கும் இந்த திரவத்தை நான் ஆல்கஹால் என்றோ அல்லது சாராயம் என்றோ அல்லது சரக்கு என்றோ மரியாதைக் குறைவாக கூறுவதை ஏற்கமாட்டேன். இதனை நாம் மஞ்சள் பானம் என்றுதான் அழைக்கவேண்டும். ஏனென்றால் தண்ணீர் மற்றும் தேனீருக்கு  அடுத்து அதிகமாக நுகரப்படும் பானம் இதுதான். ஒரு அரசு தனது மக்களுக்கு இந்த பானத்தை வழங்குவது சரியா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது; அதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. குற்றங்கள் அதிகரிக்கின்றன. இது சமூக சீரழிவிற்கு இட்டுச் செல்லாதா? இந்த மஞ்சள் புரட்சி மூலம் திரட்டப்படும் நிதியாதாரத்தை கொண்டு இலவசங்கள் அறிவிக்கப்படுவது எந்தளவிற்கு நியாயத்தன்மை வாய்ந்தது? போன்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னால் இத்தகைய கேள்விகளை எழுப்புபவர்கள் யார் என்பதை தோலுரித்துக் காட்ட விரும்புகிறேன். இவர்களில் பலர் பசுமைப் புரட்சியை எதிர்த்தவர்கள்; பசுமைப் புரட்சியில் மேற்கத்திய தொழில்நுட்பத்தை புகுத்துகிறார்கள், அது நமது மண்ணுக்கும் சூழலுக்கும் ஒத்துவராத ஒன்று என்று கூவியவர்கள். அவர்கள்தான் இப்பொழுதும் இந்த மஞ்சள் புரட்சியை எதிர்க்கிறார்கள். இதற்காக இவர்கள் சமூக சேவகர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் என்கிற முகமூடியை அணிந்துகொள்கிறார்கள்.

முதலில் அளவிற்கு அதிகமாக இந்த பானத்தை நுகர்வதால்  சாலை விபத்தில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது நிறுவப்பட்டு வருகிற நவீன சாலைகளில் நேரும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்குற்றச்சாட்டிற்கு பினவருமாறு பதிலளிக்க விரும்புகிறேன்:

90 விழுக்காடு சாலை விபத்துக்கள் இந்த பானத்தை குடிப்பதால்தான் நேர்வதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. 40 விழுக்காடு சாலை விபத்துக்கள் இந்த பானத்தின் தாக்கத்தால் ஏற்படுவதாக Alcohol and Drug Information Centre அறிக்கை கூறுகிறது. இந்த பானத்தால் இறப்பவர்களில் 53 விழுக்காட்டினர் ஒரு சமூகத்திற்கு செல்வத்தை உருவாக்கி கொடுக்கிற 20-55 வயது குழாமிற்கு சொந்தமானவர்கள் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.  72 விழுக்காடு விபத்துகள் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பதாக இன்னொரு புள்ளி விபரம் கூறுகிறது. அதே போன்று 2010 இல் சாலை விபத்தில் 134000 பேர் கொல்லப்பட்டதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது -அதாவது ஒரு நாளைக்கு 367 பேர்.

NCRB (National Crime Records Bureau) புள்ளிவிபரப்படி 2012 இல் இந்தியாவில் 139091 பேர் சாலை விபத்துகளினால் இறந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டில் 16175 பேர் இறந்துள்ளனர். 2011 இல் தமிழ்நாட்டில் வாகன விபத்துக்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15422. 2011 ஐ விட விபத்து இறப்பு 4 விழுக்காடு அதிகரித்துள்ளது. விபத்து இறப்பு வருடா வருடம் 4 விழுக்காடு அதிகரித்தால் 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தோராயமாக 25000 ஆக இருக்கும். 23.2 விழுக்காடு விபத்துக்களுக்கு இருசக்கர வாகனங்கள் காரணமாகவும், 19.2 விழுக்காடு விபத்துக்களுக்கு லாரிகள் காரணமாகவும் இருந்திருக்கின்றன.

மேற்கூறப்பட்ட புள்ளி விபரங்கள் அனைத்தையும் ஒத்துக்கொள்கிறேன். இங்கு ஒரு விஷயம் அவதானிக்கப்பட வேண்டும். 2023 இலக்கு திட்டத்திற்கு இந்த மஞ்சள் புரட்சியின் மூலம் ஏற்படுகிற வாகன விபத்து மற்றும் மரணம் என்பது முக்கியமானது மற்றும் அவசியமானதும் கூட. எனவே வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அதே வேளை விபத்து மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.  நவீன சாலைகள், வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் விபத்து மரணம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கும் ஒரு மாநிலத்தின் தலாவருமான அதிகரிப்பிற்கும் ஒரு தொடர்பிருப்பதை  பலர் காண மறுக்கிறார்கள். இது சிலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். தமிழ்நாட்டின் தலாவருமானம் ரூ.72993; அதாவது மக்கள்தொகை ஏறக்குறைய 7 கோடியாக இருக்கும்போது  தலாவருமானம் ரூ.72993/-. தலாவருமானம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருமானத்தை ஆறு மடங்காக அதிகரிப்பதுதான் தொலைநோக்குத் திட்டம் 2023 இன் இலக்கு. அடுத்த பத்தாண்டில் ஏற்படும் சராசரி மக்கள் தொகை அதிகரிப்பு 15 விழுக்காடு எனில் 2023 இன் மக்கள் தொகை தோராயமாக 30 கோடி. தலா  வருமானம் ஆறு மடங்காக இருக்க வேண்டுமெனில் தற்போதைய தலாவருமானமான ரூ.72999 ஐ 6 ஆல் பெருக்க தோராயமாக 438000 கிடைக்கிறது. எனவே 2023 இல் தலாவருமானம் ரூ.438000/-ஆக இருக்க வேண்டும்.

30 கோடியால் இந்த தலாவருமானத்தை பெருக்கினால்  கிடைப்பது ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி(GSDP). இந்த ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தலாவருமானத்தை அதிகரிக்க முடியும் அல்லது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்காமலேயே மக்கள் தொகையை குறைப்பதன் மூலமும் தலாவருமானத்தை அதிகரிக்க முடியும்! ஆம் ஒரு மாநிலத்தின் வருமானம் ரூ.100 என்றால், அம்மாநிலத்தின் மக்கள் தொகை 10 பேர் என்றால் தலாவருமானம் ரூ.10. ஒரு வேளை தலாவருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அதாவது 100 லிருந்து 150 அல்லது 200. அதனை மக்கள் தொகையால் வகுத்தால் தலாவருமானம் ரூ.15 அல்லது ரூ.20 என்ற நிலைக்கு அதிகரிக்கும். இல்லையென்றால் மொத்த மக்கள் தொகையான 10 பேரில் நான்கு பேரை கொன்றுவிட்டால் மாநிலத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டியதில்லை. மக்கள் தொகையை ஒட்டுமொத்த வருமானத்தால் வகுத்தால் அது தலாவருமானம் தானாகவே அதிகரித்து விடும். அதாவது வருமானம் 100 ஐ மக்கள் தொகையான 4 ஆல் வகுத்தால் தலா வருமானம் ரூ.25 என்ற புள்ளியில் வந்து நிற்கும். இது சாதாரண கணிதம்.  அதைத்தான் மஞ்சள் புரட்சி செய்கிறது.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதான். ஆண்டுக்கு 20 விழுக்காடு விற்பனை அதிகரிப்பின் மூலம் இலக்கு திட்டத்திற்கு நிதி சேர்த்துக் கொடுக்கிற இந்த மஞ்சள் புரட்சி எண்ணற்ற உயிர்களை மரணிக்கச் செய்வதன் மூலம் தலாவருமானத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2012-13 இல் இந்த பானம் விற்பனையான தொகை 25000 கோடி. ஒரு வருடத்திற்கு 20 விழுக்காடு விற்பனை அதிகரிப்பு என்றால் இன்றிலிருந்து பத்தாவது வருடம் இந்த பான விற்பனை நமக்கு அள்ளிக்கொடுக்கப் போகிற தொகை 150000 கோடி. அதாவது இலக்கு திட்டத்திற்கு தேவைப்படுகிற 15 இலட்சம் கோடியில் 10 விழுக்காடு. இந்த மஞ்சள் பானம் மக்களை கொல்கிறது என்று சொல்லமாட்டேன். ஒரு அரசின் நீண்டகால இலக்கு திட்டத்திற்காக மக்கள் உயிர் பயன்படுத்தப்படுகிறது என்றே சொல்வேன்.

அடுத்ததாக இந்த மஞ்சள் புரட்சி சமூக ஒழுங்கை குலைப்பதாகவும், நமது பண்பாட்டு வாழ்வை சீரழிப்பதாகவும் குறை கூறுகிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு பத்துவயது சிறுமி ஐந்து நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் இந்த மஞ்சள் பானத்தைத்தான் அருந்தியிருந்தனர் என்று கூறுகின்றனர். நான் இதை ஒத்துக்கொள்கிறேன். அதே போன்று தனது மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை இந்த மஞ்சள் பானத்தை அருந்தியிருந்தார் என்பதையும் தனது பச்சைக் கைக்குழந்தையை சுவற்றில் வீசி அடித்து கொலை செய்த தந்தையும் இதே உற்சாக பானத்தை அருந்தியிருந்தார் என்பதையும் தனது நண்பனின் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி வேகமாக ஓட்டி சாகசம் செய்து காட்ட முயன்று அடிபட்டு இறந்த ஒரு பள்ளி மாணவனும் இதே பானத்தைதான் அருந்தியிருந்தார் என்பதையும் பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இவைகள் எல்லாம் எந்த விதத்தில் நமது பண்பாட்டை கேலிக்கூத்தாக்குகின்றன என்று தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மரணம் என்பது உகந்தது என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனவே குற்றமிழைத்தவர் யார், அவர் யாருக்கு குற்றமிழைத்தார் என்பது தேவையில்லை; அவர் அவ்வாறு செய்ததன் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார். இந்த அரசின் தொ(கொ)லை நோக்கு திட்டத்திற்கு பங்காற்றியிருக்கிறார்கள் என்று கூறுகிறேன்.

அடுத்து இங்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் இணைகின்ற புள்ளி அவர்கள் மஞ்சள் பானம் அருந்தியிருந்தார்கள் என்பதுதான். இந்த பானம்தான் அவர்களைப் போன்றவர்களை இணைக்கும் தேசிய பானம். சாதி, மதம், இனம், மொழி என பிரிந்திருக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஒரே பானம். விமானத்தில் நின்றுகொண்டு சோலோவாக(Solo) "எது இருந்தால் போதும், மது இருந்தால் போதும்" என்று பாடும் வசந்த மாளிகை ஒற்றை சிவாஜியைப் போலல்லாமல்  "மது இருந்தால் போதும்" என்று கோரஸாக பாடுகிற பல நூறு சிவாஜிகளை உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறது இந்த பானம். இப்படி அனைவரையும் ஒன்றிணைக்கிற இந்த தேசிய பானம் நமது பண்பாட்டை சீரழிக்காமல் காக்கிறது என்றே சொல்வேன்.

அடுத்ததாக இந்த மஞ்சள் புரட்சியின் மூலம் திரட்டப்படும் நிதியாதாரத்தைக் கொண்டு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதன் தார்மீகத்தன்மை பற்றிய கேள்விக்கு நான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். முதலில் இந்த புரட்சியின் மூலம் திரட்டப்படும் தொகை யார் யாருக்கு போய் சேர்கிறது என்று பார்ப்போம். இந்த மஞ்சள் பானத்தை அருந்திவிட்டு வாகன விபத்தில் இறந்து போனவரின் பெற்றோருக்கோ அல்லது மனைவிக்கோ இந்த தொகை போய்ச் சேர்கிறது; சாலை விபத்தில் கணவனை இழந்த விதவைகளுக்கு விதவை உதவித் தொகை என்கிற வடிவில் போய்ச் சேர்கிறது. வாகன விபத்துக்களில் முடமாகிப் போனவர்களுக்கு ஊனமுற்றோர் உதவித் தொகை என்கிற வடிவில் போய்ச் சேர்கிறது.

  இந்த உற்சாக பானத்திற்கு தங்களது மகன்கள் மற்றும்  கணவன்மார்களைப் பறிகொடுத்த பெண்களை நான் அபாக்கியவதிகள் என்று சொல்ல மாட்டேன். சங்க இலக்கியத்தில் மன்னருக்காக போர் புரிய போர்க்களத்திற்கு மகனை அனுப்பி வைத்த வீர மங்கைகளைப் போல் இவர்கள் இந்த மஞ்சள் புரட்சிக்காக தங்களது மகன்கள் அல்லது கணவன்மார்களை போ(பீ)ர்க்களத்திற்கு அனுப்பிவைத்தவர்கள்.  எந்த புரட்சிக்காக இந்த மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்களோ அந்த புரட்சியின் மூலம் திரட்டப்பட்ட தொகை அவர்களுக்கே போய்ச் சேர்கிறது என்பதுதான் உண்மை. அதாவது உங்கள் ப(பி)ணம் உங்கள் கைகளில். அந்தளவிற்கு தாயுள்ளம் கொண்டதாகத்தான்  அரசாங்கத்தைப் பார்க்கிறேன்.

அடுத்து இந்த புரட்சியின் மூலம் திரட்டப்படும் தொகை இலவசங்கள் வழங்க பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது. அதை நான் மறுக்கிறேன். அந்த இலவசங்கள் நிச்சயம் மக்களுக்கு பயன்படுகின்றன. தனது கணவன் அல்லது மகன் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதில் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் மயக்கப்பட்டு விழும் பெற்றோர்கள் அல்லது மனைவிமார்களை ஆசுவாசப்படுத்த மின்விசிறி தேவைப்படாதா? இந்தியாவில் ஒரு நாளைக்கு சாலை விபத்தில் 367 பேர் இறக்கிறார்கள் என்று ஏற்கனவே ஒரு புள்ளி விபரம் கூறியிருக்கிறது. அந்த எண்ணிக்கை விரைவில் மாநிலத்திலும் உருவாகும். இறந்து போனவர்களின் எட்டாம் நாள், 15 ஆம் நாள் மற்றும் வருடப் படையல்களுக்கு உணவுப்பதார்த்தங்கள் செய்ய கிரைண்டர், மிக்சி தேவைப்படாதா? இலவசங்களைக் கொடுத்து மக்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பது புரியாதவர்களின் பிதற்றல். எதிர்காலத்திற்கு தேவையானப் பொருள்களை இன்றே கணித்து வழங்குவதுதான் அரசு. தனது தொழிலாளர்களுக்கு இலாபத்தொகையை(Dividend) பங்கிட்டு கொடுக்கும் ஒரு கார்ப்பரேசன் நிறுவனத்தின் குணாம்சத்தை அரசு பிரதிபலிக்கிறது என்பதை இங்கு பெருமையோடு நினைவுபடுத்திப் பார்க்கவேண்டும்.

"காக்க வல்லது அரசு" என்பது பழைய விஷயம். "(கொ)அழிக்க வல்லது அரசு" என்பதுதான் புதியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மரணம் தவிர்க்கவியலாத ஒன்று என்கிற மால்தூசிய கோட்பாட்டு சாராம்சத்தின் சாட்சியமாய் உலகமே பார்த்து வியக்கிற ஒன்றாக இருப்பதுதான் இந்த மஞ்சள் புரட்சி. அந்த மஞ்சள் புரட்சி குறித்து நமது அடுத்த தலைமுறை நிச்சயம் படிக்கும், பாராட்டும் மற்றும் விதந்தோதும். அப்பொழுது தண்ணீர், தேனீருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த பானம் முதலிடத்தைப் பிடிக்கும். "நீரின்றி அமையாது உலகு" என்பதற்கான உண்மையான அர்த்தம் அப்பொழுது புரிபட ஆரம்பிக்கும். பசுமைப் புரட்சியின் தந்தை நார்மன் பார்லவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரைப் போன்று மஞ்சள் புரட்சியின் முன்னோடி என்று வரலாறு போற்றப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

   - சுனந்தா   

(இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் யாவும் உண்மை)

Pin It