நேற்றுப் பார்த்தது போல் இருக்கிறது அந்தக் குருதி கொப்பளிக்கும் காட்சிகளை!

இன்றும் ஓயவில்லை அந்த மரண ஓலமும் அழுகையும்!

eelam 549இன்னும் காயவில்லை ஒன்றரை லட்சம் பேரைப் பறிகொடுத்த உள்ளக் காயம்!

ஆனால் அதற்குள், இதோ, தமிழினம் அழிக்கப்பட்டு முழுதாக ஆறு ஆண்டுகள் முடியப் போகின்றன!

கடந்த (ஐந்தாமாண்டு) நினைவஞ்சலி நாளில் தமிழினப் படுகொலையைப் பின்னின்று நடத்திய காங்கிரசை வீழ்த்திய ஆறுதலுடன் நாம் மெழுகுத்திரி ஏற்றினோம். இந்த ஆண்டோ அதை முன்னின்று நிகழ்த்திய இராசபக்சவையே வீழ்த்திவிட்டு அதைக் கடைப்பிடிக்கிறோம்.

ஆக, ஈழப் பிரச்சினையில் ஒவ்வோர் ஆண்டும் ஓரளவாவது முன்னேற்றம் காண்கிறோம் என்பது ஆறுதலானது. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்த நம் நிலைப்பாடுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் நாம் இன்னும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பதே உண்மை!

முதலில், இப்பேர்ப்பட்ட பேரழிப்புக்குப் பின் நாம் அடைந்திருக்க வேண்டிய முதன்மையான முன்னேற்றம் ஒற்றுமை!

ஒன்றில்லை, இரண்டில்லை பத்து நாடுகள் சேர்ந்து நம் இனத்தை அழித்திருக்கின்றன. பதினைந்து நாடுகள் அதற்கு ஆதரவாக நின்றிருக்கின்றன. அதாவது, நாம் வாழும் உலகின் ஒரு கணிசமான பகுதியே நம் அழிவை விரும்புகிறது! இப்பேர்ப்பட்ட நிலைமையில் நாம் எந்த அளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்க வேண்டும்? எவ்வளவு உறுதியாக ஒருங்கிணைந்து, கைகோத்து நிற்க வேண்டும்? ஆனால், இப்பொழுது வரை, இந்த இனப்படுகொலை நினைவு நாளைக் கடைப்பிடிப்பதில் கூட நம்மிடையே ஒற்றுமை இல்லை! சிலர் மே 17, சிலர் மே 18, சிலர் மே 19 என ஆளுக்கொரு நாளில் அஞ்சலி செலுத்துகிறோம். கண்ணெதிரே இனத்தையே பலி கொடுத்த பின்னும் தமிழர் நம் ஒற்றுமை இவ்வளவுதான்!

முன்பை விட இப்பொழுதுதான் இன்னும் சாதியப் பிரிவினைகள் வலுப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கூடக் கையில் அவரவர் சாதிக் கட்சியை நினைவூட்டும் நிறத்திலான கயிறுகளை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் எனத் தெரிய வரும்பொழுது நெஞ்சம் விட்டுப் போகிறது. (நன்றி: ஆனந்த விகடன் இதழ் 26.03.2015).

மக்கள்தான் இப்படி என்றால், இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தலைவர்களோ இதற்கும் ஒரு படி மேலே போய் திராவிடமா, தமிழ் தேசியமா எனக் கருத்தியல் அடிப்படையில் தங்களுக்குள்ளேயே பிரிந்து நிற்கிறார்கள்.

உலகமே தங்களுக்கு எதிராக நிற்கும் நிலையிலும் அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை பற்றித் துளியும் கவலையில்லாமல் நாம் இன்னும் நமக்குள்ளேயே இப்படி இடையறாமல் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நம்மை விட அடிமுட்டாள்கள் உலகில் வேறு யாராவது இருப்பார்களா?

செய்ய வேண்டியது என்ன? கடமை – ௧ (1)

நாம் வாழ்வது தகவல் தொழில்நுட்பக் காலம். உலகின் எந்த மூலையிலிருந்தும் மறுமூலையிலுள்ள மனிதனை நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய, தொலைத்தொடர்பு வசதியின் உச்சக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நினைத்தால் உலகத் தமிழர்கள் அனைவரையும் இணையத்தின் மூலம் ஒரே குழுவாகத் திரட்டி, நமது அறப் போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் எல்லா நாடுகளிலும் ஒரே நாளில் நடத்திப் பன்னாட்டுச் சமூகத்துக்கு நம் கோரிக்கையில் நமக்குள்ள அசைக்க முடியாத உறுதியை உணர்த்தலாம். ஆனால் ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை, இந்த அருமையான தொழில்நுட்ப வசதியை நாம் கீச்சகத்தில் (twitter) சண்டை போடுவதற்கும், முகநூலில் நிலைத்தகவல் இடுவதற்கும் தவிர, வேறு எதற்கும் உருப்படியாகப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

எனவே, உடனடித் தேவை ஒற்றுமை! உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அத்தனை பேரையும் ‘ஈழம்’ எனும் ஒற்றைச் சொல்லின் கீழ் திரட்ட வேண்டும். அப்படித் திரட்ட வேண்டுமானால், முதலில் ஈழ ஆதரவு அமைப்புகள் ஒருங்கிணைந்தாக வேண்டும்! தமிழ்நாடு, அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் உள்ள ஈழ ஆதரவு அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் ஒரு கூட்டு அமைப்பாகக் கைகோத்து இனப்படுகொலை நினைவேந்தல், மாவீரர் நாள் போன்றவற்றை உலகம் முழுதும் ஒரே நாளில் கடைப்பிடிக்க வேண்டும். பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு என எதுவாக இருந்தாலும் உலகம் முழுக்க ஒரே நாளில் நடத்த வேண்டும்! அப்பொழுதுதான் உலகில் எத்தனை கோடித் தமிழர்கள் இருக்கிறோம், எத்தனை கோடி பேர் இந்தத் தனித் தமிழீழ நாடு எனும் கோரிக்கையை வலியுறுத்துகிறோம் என்பதைப் பன்னாட்டுச் சமூகத்துக்கு உணர்த்த முடியும். இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில்நுட்ப வசதிக்கு இது மிகவும் எளிமையானதே.

இதை நான் கடந்த ஆண்டு நினைவஞ்சலிப் பதிவிலேயே வலியுறுத்தி இருந்தேன். (பார்க்க: நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும்) ஆனால், இன்று வரை அதற்காக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படாத வேதனையுடன் மீண்டும் அதே கோரிக்கையை இங்கு முன்வைக்கிறேன்.

அடுத்தது, அரசியல் தெளிவு!

செய்ய வேண்டியது என்ன? கடமை – ௨ (2)

“ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் அதிகாரம் அவர்கள் கைக்கு வர வேண்டும்” என்பதுதான் பிரெஞ்சுப் புரட்சிக் காலம் தொட்டு வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

ஆக, தமிழீழம் கிடைக்க வேண்டுமானால் தமிழர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும்.

அதற்காக நாம் உடனே இந்தியப் பிரதமராகவோ, அமெரிக்க அதிபராகவோ, ஐ.நா தலைவராகவோ ஆகிவிட முடியாது. ஆனால், குறைந்தது, தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்பாவது உண்மையான தமிழர்கள் கைக்கு வந்தாக வேண்டும்!

தி.மு.க கசந்தால் அ.தி.மு.க; அது கசந்தால் மறுபடியும் தி.மு.க என இந்த இரண்டு கட்சிகளுக்கே மீண்டும் மீண்டும் மாறி மாறி வாக்களித்துக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களை இந்த நச்சுச் சுழலிலிருந்து மீட்டு இந்த இரு கட்சிகளும் அல்லாத, உண்மையான தமிழ்த் தலைவர் ஒருவரை ஆட்சியில் அமர்த்தினால்தான் தமிழர்கள் அதிகாரத்துக்கு வந்ததாகப் பொருளாகும். அதற்கு ஓர் அரிய வாய்ப்பாகத் தென்படுகிறது நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தல்!

தமிழர்களுக்காகவே உயிர் வாழ்வதாய்க் காலமெல்லாம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் தமிழ் இனத்துக்கே கருணாநிதி மூட்டிய துரோகத் தீ ஈழத்திலாகட்டும், தமிழ் மக்கள் மனத்திலாகட்டும் இன்னும் அணையவில்லை. அதற்குள், இதே நேரம், அ.தி.மு.க-வும் அழிக்க முடியாத ஊழல் கறையால் தலைகுனிந்து நிற்கிறது. போதாததற்கு, உண்மை முதல்வர் - மக்களின் முதல்வர் என்றெல்லாம் இவர்கள் விளையாடும் அரசியல் மேலாண்மைக் குளறுபடி ஆட்டங்கள் மொத்தத் தமிழ்நாட்டையும் தேக்கமுறச் செய்து மக்களிடம் பெருத்த வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.

இப்படி இரண்டு கட்சிகளும் இதுவரை காணாத அளவுக்கு மிகுந்த வலுவிழப்பை அடைந்துள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல், இந்த நேரம் பார்த்து ‘திராவிடம் - தமிழ் தேசியம்’ என இருவேறு கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழ ஆதரவுத் தலைவர்கள் பிரிந்து நிற்பது மிக மிக மோசமான வரலாற்றுப் பிழை!

தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என திராவிடக் குடும்பத்தின் மற்ற இனத்தினர் யாரும் திராவிடக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத நிலையில் தமிழர்கள் மட்டும் அதை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஏன் தமிழரல்லாத, பிற திராவிட இனங்களில் பிறந்தவர்களை இங்கு ஆள விட வேண்டும் என்கிற தமிழ்தேசியவியலாளர்களின் கேள்விகள் நியாயமானவையே! இதனால், அனைவருக்கும் பொதுவான திராவிடக் கோட்பாட்டைக் கைகழுவி விட்டு இனி தமிழர்கள் தங்களுக்கு மட்டுமே உரித்தான தனி அரசியல் கோட்பாடாகிய ‘தமிழ்தேசிய’க் கோட்பாட்டுக்கு மாற வேண்டும் என்பதும் சரியானதே! ஆனால், அதற்காக இந்த மிக முக்கியமான அரசியல் காலக்கட்டத்தில் வரும் இந்தத் தேர்தலில் தமிழர் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு ஒப்புக் கொள்ள முடியாது!

பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஈழ ஆதரவுக் கட்சிகள் தொடர்ந்து பா.ஜ.க-வுடன் கூட்டணியில் நீடித்தோ அல்லது நடைபெறவிருக்கும் அரசியல் கள மாற்றங்களுக்கேற்பத் தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுடன் புதிதாகக் கூட்டணி அமைத்தோதான் தேர்தலை எதிர்கொள்ளும். எனவே, அவர்களுக்கான வாக்குகளை ஈழ ஆதரவு வாக்குகளாக யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மிச்சமிருக்கும் ஈழ ஆதரவுக் கட்சிகளான ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வாக்குகள்தான் ஈழ ஆதரவாளர்களின் உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியும்.

ஆனால், இந்த நேரம் பார்த்து, தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் அண்ணன் சீமான் அவர்கள். எனவே, ம.தி.மு.க-வும் இதே முடிவைத்தான் எடுத்தாக வேண்டும்; வேறு வழியில்லை. ஆக, கட்சி - சாதி - சமய - திரைக்கவர்ச்சி வாக்குகள் அனைத்தும் போக மிச்சமிருக்கும் கொஞ்ச ஈழ ஆதரவு வாக்குகளும் இந்தத் தேர்தலில் ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சி என இருவேறு கூறுகளாகச் சிதறடிக்கப்படப் போவதுதான் மிச்சம். இது திரும்பவும் தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வரத்தான் வழி வகுக்கும்.

அதற்கு இடமளிக்காமல், இந்த இருவருமல்லாத புதிய ஆட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கோடிக்கணக்கான தமிழ் மக்களை மகிழ்விக்கும் வகையில் ம.தி.மு.க - நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகளும் ஒரே அணியாக இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்! ஈழ ஆதரவாளர்களின், இளைய தலைமுறையினரின் வாக்குகள் ஓரணியில் திரள வகை செய்ய வேண்டும்!

செய்ய வேண்டியது யார்?

இந்தக் காலத்தில் கடமைகளை நினைவூட்டுவது மட்டும் போதவில்லை; அதைச் சிரமேற்கொண்டு செய்ய வேண்டியது யார் என்பதையும் இனங்காட்ட வேண்டி இருக்கிறது. அவ்வகையில், மேற்கண்ட இரண்டு கடமைகளையும் நிறைவேற்றும் வல்லமை கொண்டவர்களாகத் தென்படுபவர்கள் தேர்தல் அரசியலைச் சாராத ஈழ ஆதரவு அமைப்பினர்தான்.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு என்பது ஓர் எல்லை வரைக்கும்தான். ஆனால், மக்கள் இயக்கங்களின் செல்வாக்கு அப்படியில்லை; அஃது எல்லை கடந்தது!

“இப்படியெல்லாம் செய்வதால் அவர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. இதை வைத்து அவர்கள் ஒன்றும் தேர்தலில் நிற்கப் போவதில்லை. ஆட்சியைப் பிடிக்கவோ, அதிகாரத்தைக் கைப்பற்றவோ அவர்கள் இதைச் செய்யவில்லை. ஆகையால், அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்” எனப் பொதுமக்கள் கூறுவது தேர்தல் அரசியலைச் சாராத அமைப்புகளைப் பார்த்து மட்டும்தான்.

அண்மைக்காலமாக, மே 17, இளந்தமிழகம் (சேவ் தமிழ்சு), தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இத்தகைய ஒரு நம்பிக்கையைப் பொதுமக்களிடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் நினைத்தால் இவை முடியும்.

ஆகவே, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் உயர்திரு. திருமுருகன் காந்தி அவர்களே, இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் அவர்களே, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோ.திவ்யா அவர்களே - சீ.தினேஷ் அவர்களே நீங்கள்தான் இதற்கான முயற்சியில் இறங்க வேண்டுமென உங்கள் அனைவரிடமும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

காரணம், அரசியல் கட்சித் தலைவர்களோ, அவர்கள் நண்பர்களோ உலகிலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க முற்பட்டால் குறிப்பிட்ட அந்தக் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்காக அப்படிச் செய்வதாகத்தான் எல்லோரும் கருதுவார்கள். யாரும் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஆனால், எந்தக் கட்சிச் சார்பும் இல்லாத, தேர்தல் அரசியலிலும் ஈடுபடாத, பொதுமக்களிடமிருந்து வந்திருக்கிறவர்களான நீங்கள் செய்தால் யாரும் அப்படித் தவறாக நினைக்க மாட்டார்கள். எனவே, உலகத் தமிழர்கள் அனைவரையும், உலகிலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, பன்னாட்டுச் சமூகத்துக்கு நம் கோரிக்கையின் உறுதியைப் புலப்படுத்த முன்வாருங்கள்!

இரண்டு திராவிடக் கட்சிகளின் கைகளிலும் சிக்கிச் சீரழியும் தமிழினம் அதிலிருந்து தப்பக் கிடைத்திருக்கும் இந்த அரிய தேர்தலில் உண்மையான தமிழர் ஆட்சி மலர உதவுங்கள்! கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விட மக்கள் நலனே முதன்மையானது என்பதைக் குறிப்பிட்ட தலைவர்கள் இருவருக்கும் புரிய வையுங்கள்! எல்லாக் கட்சிகளும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என ஏதேனும் ஒரு கூட்டணியிலிருந்தபடியே போட்டியிடும் நிலையில் இந்த இரண்டு கட்சிகள் மட்டும் இணைந்து ஒரு தனிக் கூட்டணியை அமைத்தால் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத புதிய ஆட்சியை விரும்பும் எத்தனை கோடி மக்களின் வாக்குகள் இவர்களுக்குக் கிடைக்கும் என்பதை மக்கள் தரப்பிலிருந்து நீங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்! அப்படி, ஈழ ஆதரவுக் கூட்டணி ஒன்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தால் பன்னாட்டளவில் அஃது ஈழப் பிரச்சினையில் எப்பேர்ப்பட்ட திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கச் சொல்லுங்கள்! இதைச் செய்யத் தவறினால் அதனால் ஈழ ஆதரவாளர் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு மீண்டும் தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆட்சி ஏற்படுவது அவர்களுக்கு ஒப்புதல்தானா எனக் கேளுங்கள்!

நீங்கள் நினைத்தால் இது முடியும்!

நீங்கள் நினைத்தால்தான் இது முடியும்!

நினைப்பீர்களா?

தமிழ்நாட்டு மக்களின் பல காலக் கனவு நிறைவேற உதவுவீர்களா?

துள்ளத் துடிக்கக் கொன்றொழிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் இறுதி விருப்பம் நிறைவேறுவதற்கான இந்தச் சிறு முயற்சியைக் கையிலெடுக்க முன்வருவீர்களா?

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It