டெல்லி பாலியல் வன்முறைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு நாம் எதிர்பார்த்தது தான். தேர்தல் நேரமில்லையா? இது நாடு முழுக்க ஏன் உலகம் முழுக்க ஊடகங்களால் கொண்டு செல்லப்பட்ட பிரச்சினை என்பதால், தங்கள் நீதி பரிபாலனம் செவ்வனே நடக்கிறது என்பதையும், நாங்கள் பெண்களுக்கு பிரச்சினை என்றால் எவ்வளவு கடுமையாக துரிதமாக நீதி வழங்குகிறோம் என்பதையும் வெளி உலகுக்கு காட்ட வேண்டாமா?

அதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு கண்துடைப்பு நீதி வழங்கியது போலவும் இருக்கும். இதன் சூட்சுமம் தெரியாத அப்பாவி பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் ஓட்டையும் தக்க வைத்துக் கொள்வதாகவும் இருக்கும்.

அதுவும் போக அப்சல் குருவைப் போலவோ, அஜ்மல் கசாபைப் போலவோ நாளைக்கே இவர்களை, சொல்லாமல் கொள்ளாமல் தூக்கில் போடப்போவதில்லை இந்த அரசு. மேல்முறையீடு அது இது என்று இழுத்துக் கொண்டுதான் போகப் போகிறது. அது வரைக்கும் வச்சு சோறு போடப் போகிறார்கள்,

இந்த தீர்ப்பு வந்த பிறகு மரண தண்டனைக்கு எதிரான குரலை மீண்டும் எழுப்புகிறார்கள்.. சிலர் வழக்கம் போல, “இந்த குற்றத்திற்கு அந்த நால்வர் மட்டும்தான் பொறுப்பா? இந்த சமூகம் சினிமா, ஆபாசம் குடும்பவளர்ப்பு இத்யாதி தான் காரணம்” என்று சமூக விஞ்ஞானப் பாடம் எடுக்கிறார்கள். எல்லாம் நியாயம்தான்.

ஆனால், இவர்கள் சாதாரணமாக மற்ற காலங்களில் ஆண்களைப் பாலியல் வன்முறை செய்ய தூண்டிய இந்தக் காரணங்களைப் பற்றி கவலை கொண்டார்களா?. போர்னா கிராபி, ஆபாசப் படம் குழந்தைகள் போர்னோகிராபி போன்றவை தடைசெய்யப் பட வேண்டும் என்றும்.. ஆபாசப் போஸ்டர்கள், பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் போன்றவற்றிற்கு எதிராகவும் போராடினார்களா??

அப்பொழுதெல்லாம் “இந்த பெண்விடுதலை பேசும் பெண்களெல்லாம் இதை எதிர்த்துப் போராடக் கூடாதா ”என்று கேள்வி கேட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள். அப்பொழுது அது பெண்கள் பிரச்சினை,, இவர்களுக்கு சம்மந்தமில்லாதது. ஆனால் அதன் விளைவாய் ஒரு ஆணுக்கு தண்டனை அளிக்கப் படும் போது அது சமூகப் பிரச்சினை…. ஏனெனில் இவர்களுக்கெல்லாம் சமூகம் என்றாலே ஆண்களுக்கானதுதானே??? நன்றாகத்தான் இருக்கிறது இவர்களது நேர்மையான “சமூக விஞ்ஞானப்” பார்வை…..

பெண்களை மனிதர்களாகப் பாவித்து நடத்த வேண்டும் என்று கற்றுக் கொடுக்க, அதை சமூகத்தில் நடைமுறைப்படுத்த என்ன செய்தார்கள்? அதை எங்கிருந்து தொடங்குவது என்ற நடைமுறைத் திட்டமாவது இருக்கிறதா? அதை செயல் படுத்தினார்களா? ஒன்றும் கிடையாது.

இந்த அரசும், சமூகமும், கலாச்சாரமும் குடிகுடியை கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே சாராய வியாபாரம் செய்து, ஆபாசச் சீரழிவுக் கலாச்சாரத்தை ஒரு புறம் வளர்த்து அதன் படி சிந்திக்கவும், நடந்து கொள்ளவும், கற்றுக் கொடுத்து விடும். அதன் பிறகு... அதன் காரணமாக நிகழும் சமூக வன்முறைகளுக்கு சட்டப்படி கடுந்தண்டனை அளிக்கும்.

,,,,அந்த அரசுக்கும் “இந்த நால்வர் மட்டுமா குற்றவாளிகள்? இந்த சமூக அமைப்பே காரணம்” என்று வாதிட மட்டும் செய்பவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாய் தெரியவில்லை.

ஒருத்தர் அசரம் சாமியாருக்கு இது போன்ற தண்டனை அளிப்பார்களா என்று கேட்கிறார். பணம் படைத்த வர்க்கத்திற்கு சாதகமாக சட்டம், சமூகம் இருக்கிறது என்ற வர்க்கப் பார்வையின் அடிப்படையில் கேட்கிறார்களாம். ஏழைக்கு நீதி கிடைக்காது என்பது எல்லாரும் அறிந்ததுதான். இங்கு ஒடுக்கப்பட்ட ஏழை என்பது பாலின அடிப்படையில் பெண்ணாக இருக்கிறாள். இது கூட தெரிய மாட்டேனென்கிறதா இந்த வர்க்கப் பார்வையாளர்களுக்கு?

பாலியல் பலாத்காரம் செய்தவனைத் திருமணம் செய்து வைத்த, அல்லது வைப்பாட்டியாக இருக்க வைத்த, அல்லது பாதிக்கப் பட்ட பெண்ணை விபச்சாரியாக்கிய சமூகம்தான் இது. கேள்வி கேட்க ஆளில்லாத பெண்ணை வன்புணர்வு செய்து கொன்று தூக்கி போட்டுவிட்டு, போய்க்கொண்டே ,,,, இருக்கும் சமூகம்தான் இது.

இப்பொழுதுதான் பாலியல் வன்முறை என்பது சமூக அநீதி, அதுவும் எதிர்த்து போராட வேண்டிய சமூக அநீதி என்கிற அற உணர்வே இந்த சமூகத்திற்கு வந்துள்ளது.

அதுவும் டெல்லியில்தான்… தமிழகத்தில் இல்லை.

இந்த மாற்றத்தைகூட பொறுக்காமல் இதில் தங்கள் வர்க்கப் பார்வையை, சாதிப் பார்வையை, இனப் பற்றைத் திணிக்க வருகிறார்கள்.

எனில் ஒடுக்கப்பட்ட இனம், சாதி, வர்க்கத்தைச் சார்ந்தவன் பாலியல் வன்முறை செய்தால் பாவம் என்று விட்டு விட வேண்டும்… உளவியல் ஆலோசனை கொடுத்து அனுப்பி விட வேண்டும்,,, பணக்கார வர்க்கம் செய்தால் மட்டும் தண்டனை கொடுக்க வேண்டும். அப்படித்தானே?

பணம் படைத்தவன், பணமற்ற பரதேசி பிச்சைக்கார நாயி என்று எவரால் பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாலும் அது வன்முறையில்தான் அடங்கும், அது இந்த “சமூக விஞ்ஞானி“ களுக்குத் தெரியாது பாவம்.!!!

ஆளும் வர்க்கமும் இவ்வளவு நாளும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறது.. தன் வர்க்கத்தினரை பாதுகாத்து பஞ்சை பராரிகளுக்கு சட்ட படி தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது. உழைக்கும் பாட்டாளி வர்க்க, ஒடுக்கப்பட்ட இன, ஒடுக்கப் பட்ட சாதி ஆணைப் பாதுகாக்க இவர்கள் இருக்கிறார்கள்.

பாலியல் வன்முறை என்ற இந்தப் புள்ளியில் வர்க்கம், சாதி, இனம், மொழி எல்லாவற்றிற்கும் அப்பால் பெண் என்பவள் பெண்ணாக மட்டும் பார்க்கப் படுகிறாள். ஆண் என்பவன் வர்க்கம், சாதி, இன, மொழி என்கிற தகுதிகளுக்கு அப்பால் ஒரு ஆணாக மட்டும் இருக்கிறான்..

ஒண்ணுமே இல்லாத கீழ்நிலை ஆண்கூடத் தன் அதிகாரத்தை, வன்முறையை பெண்ணிடம் காட்டும் ஒரு யதார்த்தம் இருப்பதை ஏன் காண மறுக்கிறார்கள் இவர்கள்?

ஒடுக்கப்பட்ட வர்க்கம், ஒடுக்கப் பட்ட சாதி, ஒடுக்கப் பட்ட இனம், ஒடுக்கப் பட்ட மொழி இவற்றை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் ஒடுக்கப்பட்ட பாலினத்தின் முக்கியமான இந்தப் பிரச்சினைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இதை எவ்வாறு அணுக வேண்டும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறார்களா?

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை ஆண், இளைஞன், சிறுவன் யாராவது தங்களை பாலியல் வன்முறை செய்ய வந்தால் முதலில் கையைப் பிடித்து, அமர வைத்து ஆறுதலாய் நாலு வார்த்தை பேசி, பிறகு “இதெல்லாம் தப்புப்பா, இதற்கெல்லாம் நீ காரணமில்ல…. இந்தச் சமூகந்தான், என்று அறிவுரை கூறினால் நல்லது” என்று சொல்வார்கள் போலிருக்கிறதே? இல்லாவிட்டால் அவர்களது தேவையை நிறைவேற்றி விட்டு பிறகு, அந்த குற்றவாளிகள் மனந்திருந்தி வெட்கி தலைகுனியும் படி, இனிமேல் அவர்கள் அந்த தவறை செய்யாத அளவுக்கு அறிவுரை கூறுங்கள் என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது.

நிர்பயா தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்தவர்களிடம் அண்ணா என்று காலில் விழுந்திருக்க வேண்டும்,, எதிர்த்து சண்டையிட்டிருக்கக் கூடாது என்று சொன்ன சாமியாருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?.

அடுத்து, இது எங்கும் நடக்காததா? தினமும் நடந்து கொண்டிருக்கிறது.... என்ற அரிய கண்டுபிடிப்பை வேறு கூறுகிறார்கள்....தினம் நடந்தால் அதை அநீதி என்று புரிந்து, ஒரு கட்டத்தில் எதிர்த்துப் போராடக் கூடாது.... நிறுத்தக் கூடாது என்று எந்த மடையர்கள் சொன்னார்கள்??

சாதியும், சாதிய ஒடுக்குமுறையும் கூடத்தான் நம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் குடிக்கு பழமையான ஒன்று!! அதைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு கொண்டாட வேண்டியதுதானே.. சிலர் இதற்கும், இல்லை சாதியை கண்டுபிடித்து எங்கள் தலையில் கட்டிவிட்டுப்போனது ஆரியர்கள் என்பார்கள்....இருக்கட்டும்! .ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழகிப் போனது தானே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே??? அதேபோல் சமூகந் தோன்றியதிலிருந்து ஏழை, பணக்காரன் என்கிற வர்க்க ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டுதானே இருக்கிறது என்றும் சொல்வார்கள்...ஒடுக்கப் பட்டவர்க்கத்திற்காக பாடுபடுபவர்கள் இது சமூக அமைப்பின் இயல்பு என்று விட்டு விட்டு போய் பொழப்புத் தலப்பை பார்க்க வேண்டியதுதானே----

இதுபோன்ற அநீதி எல்லாம் சமூகத்தில் இயல்பு, சகஜம் என்று சொல்கிறவர்கள் ஒன்று அரசியல் ஞான சூன்யங்களாக இருப்பார்கள் அல்லது ஆதிக்க வர்க்க, சாதி, இன த்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள்..

இங்கு பெண் மீதான பாலியல் வல்லுறவுக்கெதிரான போராட்டம், அதற்கான தண்டனை என்று வரும்போது மட்டும், இந்த பாலியல் வல்லுறவு என்பது தொன்று தொட்டு நீண்ட காலமாகவே இருப்பது தான் என்று சம்மந்தா சம்மந்தமின்றி, சமூக அக்கறையாளர்களும், சமூக மாற்றச் சிந்தனையாளர்களும் கூறுகிறார்களென்றால், இவர்களின் குரல் ஆதிக்கத்தின் குரல் தான். ஆண், பெண் சமத்துவத்திற்கான குரலே அல்ல...

மரணதண்டனையும், கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற தண்டனைகளும் கூட தொன்று தொட்டு வரலாற்றில் இருந்தது என்பதை இவர்களைப் போனறவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

சிலர், மரண தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளில், குற்றங்கள் கூடிக் கொண்டுதான் இருக்கிறது குறையவில்லை என்கிறார்கள்.. இவர்கள் குற்றத்திற்கு தண்டனை கிடைக்கும் என்கிற மனிதர்களின் அச்ச உணர்வை குறைத்து மதிப்பிடுகிறார்கள். பல மனிதர்கள் தண்டனைக்கு பயந்து கட்டுப்படத்தான் செய்கிறார்கள் என்பதை வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கிறார்கள். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் சரியானது. ஆனால் அதற்காக தப்பும் தவறுமாக உளறக் கூடாது.

இன்றைய சூழலில் திருடினால், கொலைசெய்தால் கைது, அடி, உதை, சிறை தண்டனை கிடையாது.,. அறிவுரை மட்டும் கூறி, விட்டுவிடுவார்கள் என்ற ஒரு நிலை இருக்கட்டும். எல்லாரும் என்ன செய்வோம்???

தண்டனை அதிகமானால் குற்றங்களும் அதிகமாகும் என்பது போல் சொல்கிறார்களே? அரசுக்கு எதிராக செய்யும் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையானவை... அதன் விளைவாய் அரசுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டா இருக்கிறது.? அப்படிப் பார்த்தால், அரசாங்கத்திற்கெதிராய் இந்நேரம் புரட்சியே வெடித்திருக்குமே?

குற்றத்தைக் குறைக்க தண்டனை அளிக்கப்படுவதும் ஒரு வழிமுறைதான். ஆனால், அது மரண தண்டனையாக இருக்க வேண்டாம்... மரண தண்டனையை மறுப்பவர்கள், பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்கு உயர்ந்த பட்சத் தண்டனையாக என்ன அளிக்கலாம் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை மரணதண்டனை எந்தக் குற்றத்திற்கும் தீர்வாகாது, அது மனிதாபிமானமற்ற செயல்…அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மரண தண்டனையைப் போலவே, பாலியல் வல்லுறவும் மனிதாபிமானமற்ற செயல்தான்….. அதை நாகரீக சமூகம், மனிதாபிமானமுள்ள சமூகம் எவ்வாறு சரிசெய்யப் போகிறது? வெறுமே இந்த சமூக அமைப்பு, கலாச்சாரம்,,, அது இது என்ற நான்கைந்து சொற்களைக் காரணமாகச் சொல்லித் தப்பித்துக் கொள்வது தீர்வாகாது.

மாற்றத்திற்கு வழி சொல்லாமல், சமூக மாற்றத்திற்காக ஒரு துரும்பையும் தூக்கிப் போடாமல், பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் போதும், தண்டனைகள் வலுவாக்கப் படும் போதும் மட்டும் சமூகந்தான் காரணம், சமூகம் மாறணும், சமூகம் மாறணும் என்று, கூப்பாடு போடுகிறவர்கள் நம் சந்தேகத்திற்குரியவர்கள். இவர்கள் பாலியல் வல்லுறவை ஒரு குற்றமாகக் கருதுகிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.

பாலியல் வல்லுறவு குற்றம் செய்தவனாவது அறிவின்றி மிருகமாக இருக்கிறான் என்று புரிந்து கொள்ளலாம். அதை எதிர்த்துப் போராடும் போதும், தண்டனை அறிவிக்கப் படும் போதும், அந்த குற்றத்தின், கொடூரத்தை, அநீதியை மறைக்கும், குறைக்கும் வகையில், தங்கள் அறிவால், சப்பைக் கட்டு கட்டுகிற இவர்கள் பாலியல் வல்லுறவு குற்றம் செய்தவர்களுக்கு சற்றும் குறைவானவர்கள் அல்ல. அவர்களை விட ஒரு படி மேலே என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்தப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு என்று பார்த்தால், சந்தேகமேயின்றி தண்டனைகள் கடுமையானதாக மாற்றப் பட வேண்டும். நீண்ட காலத் தீர்வு என்ற அடிப்படையில் பள்ளி, கல்லூரி, பொது நிறுவனங்கள், குடும்பம் போன்றவை ஆணை சிங்கம், புலி என்றில்லாமல் மனிதப் பிறவியாக வளர்க்க வேண்டும். இலக்கியம், சினிமா போன்றவற்றில் காண்பிக்கப்படும் பெண் சித்திரங்கள் மாற்றப்பட வேண்டும்.

முதலில் காமம் என்பது அன்பின் பாற்பட்டது என்று சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.

Pin It