தமிழர்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர். என்னைப் பொருத்தவரையில் தமிழர்கள் இந்த நிலையில் இருப்பதற்கு மூல காரணம், நாம் அரசியலில் ஈடுபடாததுதான். ஏன் அநாதை என்று சொல்கிறேன்? அநாதை என்றால் அப்பா அம்மா இல்லாமல் இருப்பதில்லை, அரசியலில் அனாதையாக இருக்கிறோம். காரணம் நாம் சரிவர அரசியலில் ஈடுபடாதுதான். பெரும்பாலும் மக்களிடம் அரசியல் பற்றிக் கேட்டீர்கள் என்றால் ஒரு வெறுப்பு, அய்யோ அரசியலா அரசியல்வாதியா என்று ஒதுங்குவார்கள். அரசியல்வாதி என்றால் கரை வேட்டி கட்டி, புனை பெயர் வைத்து இந்த மாதிரி இருப்பதுதான் அரசியல். சில அலுவலங்களில் கூட, ஐயோ இங்கு ஒரே அரசியல் என்பார்கள். இப்படி அரசியல் என்றாலே ஒரு கெட்டதாகவும் அவப் பெயரும்தான் இருக்கிறது.

படித்தவர்கள் அரசியலில் ஈடுபடாததற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் ‘அரசியல்ஒரு சாக்கடைப்பா அதில் இறங்க எங்களுக்கு விருப்பமில்லை.’ என்பார்கள். ஏன் இப்படி? தமிழர்கள் போராடத் தயங்கியவர்களே கிடையாது. போராட்டத்தில் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள். தலித் மக்கள் உரிமைப் போராட்டத்தில் இப்போது தீவிரமாக இருக்கிறார்கள். தலித்தின் முன்னோடிப் போராளியாக இருந்தவர் ஒரு தமிழர் - அயோத்தி தாசர். அவரின் எழுத்துக்களை எண்ணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை அம்பேத்கர் படித்தார். அதனால் மிகவும் மனமாற்றம் அடைந்து புத்த மதத்தைத் தழுவினார்.

போராட்டங்களில் எப்போதுமே தமிழர்கள் ஈடுபட்டு உள்ளார்கள். இருந்தாலும் இன்று நாம் அரசியல் அனாதைகளாக நிற்கிறோம். ஏன்? அரசியலோடு நம் அணுகுமுறை சரியில்லை, அரசியல் என்றால் என்ன என்ற நமது கருத்துக் கணிப்பு சரியில்லை. Politics என்ற வார்த்தை கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது. Polis என்றால் நகரம். அந்தக் காலத்தில் நகரங்களில் இருந்து உருவாக்கப்பட்ட- பகுதிகள் நாடாக மாறின, பிறகு நேஷனலிசம் வந்தது. ஆனால் polis இதிலிருந்து வந்ததுதான் Politics. பொலிசில் இருந்து வளர்ந்ததுதான் Policy.

அரசியலின் முழுமையான நோக்கம், ஒரு நாட்டை உருவாக்குவது எப்படி? அதைப் பாதுகாப்பது எப்படி? இதுதான் உண்மையான அரசியல். இந்த அரசியல் தமிழகத்தில் கிடையாது, இந்திய அளவிலும் கிடையாது. தமிழகத்தில் இப்போது சாதி அரசியல், மத அரசியல், குடும்ப அரசியல் இதுதான் இருக்கிறது. திடீரென்று மொழியைப் பற்றிப் பேசுவார்கள், ஆனால் அதன் உள்பக்கம் பார்த்தால் சாதி அரசியல்தான் இருக்கும். இதை மாற்றவேண்டும் என்றால் நீங்கள் அரசியலின் மூலத்திற்குப் போக வேண்டும்.

Root of politics is policy. Policy formation தான் அரசியல். அதுதான் உண்மையான அரசியல். மேலைநாடுகளில் அரசியல்வாதியாக ஒருவர் வருகிறார் என்றால், அவர் முதலில் முன்வைப்பது Policy. அமெரிக்காவில் மக்கள் என்ன கேட்கிறார்கள், உங்கள் கொள்கை என்ன? உங்களின் பொருளாதார, மக்களாட்சி கொள்கை என்ன என்றுதான் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியிடமாவது கேட்டிருக்கிறார்களா? தேர்தல் அறிக்கை போடுவார்கள், திட்டங்கள் போடுவார்கள் அது வேறு. Policy என்பது வேறு. இதைத் தெரிந்துகொண்டாலே அரசியலில் நாம் முன்னேறலாம்.

போர் இயலின் வல்லுநர், போர் என்றால் என்ன என்ற புத்தகத்தை எழுதியவர், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்த Vom Kriege… “On war” என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் முதல்வாக்கியமே ‘போர் என்பது அரசியலின் தொடர்ச்சி’ என்றுதான் இருக்கிறது. நீங்கள் போரில் வெல்ல வேண்டும் என்றால் அரசியலைக் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியலில் நீங்கள் வென்றால்தான் போரில் வெல்லமுடியும். Tactical, Operational, Strategic, Policy இந்த நான்கு வகைகளை வகுத்தது அவர்தான். அவர் வகுத்ததைத் தான் மேலை நாடுகளில் இன்றளவும் பின்பற்றுகிறார்கள்.

ஒரு போரில் நேரிடையாக போராடுபவன் Tactical அளவில் போராடுகிறான். அவனுக்கு ஆதரவு தந்து பண பலம், ஆயுத பலம் கொடுப்பவன் Operational .அளவில் இருக்கிறான். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து தொடர்பை ஏற்படுத்துபவன் Strategic அளவில் இருக்கிறான். Policy யார் செய்கிறார்கள்? போராடுபவன் பாலிசியை செய்வதில்லை. மேலை நாடுகளில் பாலிசி செய்வது அரசியல்வாதிகள்தான். Diplomats, Politicians அவர்கள் தான் கொள்கைகளை வரையறுக்கிறார்கள்.

அமெரிக்கா எப்படி பனிப்போரில் வென்றது? Policy of containment என்ற கொள்கையை உருவாக்கியது ஒரு மேதை. அதை வைத்துதான் போர் நடத்தினார்கள். சோவியத் யூனியனோடு நேரடியாக போரில் ஈடுபடக்கூடாது, நிழற்போர் செய்யவேண்டும். நேரடியாக போரிட்டால் அமெரிக்காவிற்கு நிறைய இழப்பு ஏற்படும், ஆகையால் நிழற்போர் செய்து அவர்களை முடக்குவோம். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து, பலவீனப்படுத்தி –ஒரு மலைப்பாம்பு இரையை கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி அதன் பிறகு கொல்லும். இப்படித்தான் அமெரிக்கா சோவியத் யூனியனை வென்றது. இதை தான் Policy of Containment என்பார்கள். இந்த பாலிசிதான் அரசியல்.

போராடுவது அவசியம். சிலபேர் போராடுவது தேவையில்லை என்றார்கள். அந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். போராட்டம் அவசியம். போராட்டம் வெறும் tacticalதான். போராட்டத்துக்கு மேலே Operational நிலைக்கு வரவேண்டும். அதற்கு மேல் Strategic வரவேண்டும். அதற்கும் மேலே Policy நிலை. அந்த பாலிசியை யார் செய்வது? நாம்தான் செய்ய வேண்டும். படித்தவர்கள் ஒருங்கிணைந்து நமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். அதை ஒன்றாக சேர்த்து ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும்.

அமெரிக்காவில் கொள்கையை உருவாக்குவது அரசாங்கம் கிடையாது. அதிபர் ஒபாமா நல்வாழ்வு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். அதை ஒபாமா உருவாக்கவில்லை, இவரின் சனநாயகக் கட்சி உருவாக்கவில்லை. அந்தக் கட்சியில் இருக்கும் யாருமே கிடையாது. இந்த சட்டம் இப்படி இருக்க வேண்டும் என்று உருவாக்கியது ஒரு Think Tank. பதினைந்து வருடங்களுக்கு முன் உருவாக்கியது. 15 வருடங்களாக பல்வேறு நிபுணர்களின் முன்வைத்து அவர்களின் கருத்துகளை உள்வாங்கி விவாதித்து அதில் திருத்தங்கள் செய்து இப்போது நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த வேலைகளை செய்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அரசுக்கு வெளியே கருத்தாக்கம், ஆராய்ச்சி அளவில் நடந்தது அதைச் செய்தவர்கள் நிபுணர்கள், அறிஞர்கள். சமூக ஆர்வமுடையவர்கள் இணைந்து செய்தது. இதுதான் அயல் நாட்டுக் கொள்கையிலும் நடக்கும்.

ஏதாவது ஒரு துறையில் நீங்கள் நிபுணராக இருப்பீர்கள், அந்தத் துறையில் இருக்கின்ற தகவல்களை எடுத்து ஒரு திட்ட வரைவாக அரசாங்கத்தின் முன் வைக்க வேண்டும். இதை நீங்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் ஒரு காலகட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்படும். மேலை நாடுகளில் ஒரு முக்கியமான அமைப்பு இருக்கிறது. எந்த ஒரு வரைவும் உடனே சட்டமாக மாறாது. ஒரு வரைவும் சட்டமாக மாறுவதற்குமுக்கிய காரணம் lobby.

ஒரு பொருளாதார நிபுணர் என்னிடம் சொன்னார்- அமெரிக்காவை வழி நடத்துவது இரண்டு தெருக்கள், ஒன்று வால் தெரு இன்னொன்று கே தெரு என்று. அப்போது நான் கே தெரு என்றால் என்ன என்று அவரிடம் கேட்டேன்- அவர் சொன்னார்- பணம் வருவது வால் தெருவில், ஆட்சி நடப்பது கே தெருவில் என்று. இன்று தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒரு lobby குழு இருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமிதத்துக்கும் உரிய செய்தி. இதே குழுமம் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்திருந்தால் இன்று ஈழப் போராட்டம் வேறுவிதமாய் போயிருக்கும். இதை நான் ஆழமாக நம்புகிறேன். இதை ஏன் நான் ஆழமாக நம்புகிறேன் என்றால் அயர்லாந்து போராளிகள் 70, 80 ஆண்டுகளாக போராடினார்கள். தமிழ்ப் போராளிகளுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்- நாம் போராட்டக் குழு அமைத்த பிறகு அரசியல் அமைப்பை உருவாக்கினோம். அவர்கள் முதலில் அரசியல் அமைப்பை ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகுதான் போராட்டத்தில் இறங்கினார்கள். அதனால்தான் அவர்கள் வெற்றி அடைந்தார்கள்.

தமிழர்களின் தோல்விக்குக் காரணம்- நான் ஈழத்தமிழர்களை மட்டும் சொல்லவில்லை- கூடங்குளம், முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சினைகளுக்கும் மூல காரணம்- கருத்தாக்கம், திட்ட வரைவு இதைப் பற்றியெல்லாம்நாம் சிந்திப்பது இல்லை. இப்போது இருக்கும் தமிழர்களுக்கான வரைவுக் குழு பத்து வருடங்களுக்கு முன்பு தோன்றியிருந்தால், அமெரிக்காவில் மட்டுமல்ல உலக அளவில் தமிழர்களின் பிரச்சினைகளை வேறுவிதமாகப் பார்ப்பார்கள். இப்போதாவது இருக்கிறதே என்று நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். இந்த குழுவை தமிழர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

அரசியலை நீங்கள் புறக்கணிக்காதீர்கள். போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை என்றால், கருத்தாக்கம், வரைவுக் குழு இதில் ஏதாவது ஒன்றில் இணைந்து அதைக் கோர்வையாக சேர்த்து ஊடகங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஊடங்களின் தொடர்பு என்பது மிக முக்கியம். ஊடகத் தொடர்பை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். ஒரு பிரச்சினை என்றால் ஒரு ஊடகத்துக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். இதுவும் அரசியல்தான், ஆனால் கட்சி அரசியல் கிடையாது. சமூகத்தை, நாட்டை நிலைநிறுத்தத்தான் அரசியல். பல்வேறு கோணங்கள் மற்றும் வடிவங்களில் நாம் அரசியல் செய்ய முடியும். நாம் அரசியல் செய்வோம்.

Pin It