கல்வி என்பதன் வரைவிலக்கணம்

கல்வி என்பதைக் குறிக்கும் ஆங்கிலப்பதமான “Education” என்ற சொல் “educare” என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். நம் பண்பாட்டில் கல்வியின் உண்மையான நோக்கம் மாணவர்களின் அறிவைப் பெருக்குவதும் அனுபவத்தைப் பெறுவதற்கும் அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்து எதிர்காலத்தைச் சிறப்புடன் அணுகச் செய்வதுமேயாகும். பொதுவாகக் கல்வியானது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சமூக நடத்தைகளின் அறிவைக்கடத்துகின்ற ஒரு செயற்பாங்கு எனலாம் என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்1.

கல்வி என்றால் என்ன? எனும் வினாவுக்கு விடை தேடும் நோக்கில் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். அந்தவகையில்,

Ø ஜோன்டிய+வி:- பிள்ளைக்குரிய ஆளுமையையும் வாழ்வதற்குரிய ஒழுக்கங்களையும் அனுபவங்களையும் பெற்றுக்கொடுத்தலே கல்வி என்றார்.

Ø பிளேட்டோ:- ஆரம்ப வயதுகளில் பிள்ளைகளிடம் ஏற்படும் இயல்பான ஆர்வம், உயரிய நற்செயல் ஆகியவற்றிற்கு உரியமுறையில் அளிக்கப்படும் பயிற்சியே கல்வி என்றார்.

Ø ரூசோ:- இயற்கைக்கேற்ப விருத்தியடையும் செயற்பாடுதான் கல்வி என்றார்.

Ø விவேகானந்தர்;:- மனிதனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிறைவினை மலரச் செய்வது கல்வியாகும்.

Ø பிரான்ஸிஸ்பேகன்:- மகிழ்ச்சிகரமான அதிஷ்டமுள்ள வாழ்க்கையை நடாத்தும் பொறுப்பும் புத்தியை விருத்தி செய்வதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதுமே கல்வி என்றார்.

Ø சோக்கிரட்டீஸ்:- உறுதியான உடலில் உறுதியான மனதைத் தோற்றுவிப்பதே கல்வி என்றார்.

Ø மகாத்மாகாந்தி:- பிள்ளையினுள்ளே அடங்கியுள்ள அனைத்து ஆற்றலையும் வெளிக்கொணருவதே கல்வி என்றார்.

Ø அரிஸ்டோட்டில்:- மனிதனின் திறமையை குறிப்பாக அவனுடைய மனதை வளாக்;கின்ற ஒரு செயற்பாங்கு கல்வி என்றார்.

எனவே கல்வி என்பதற்கு வரைவிலக்கணம் கொடுப்பது மிகவும் சிக்கலான விடயமாகும்;. எனினும் அறிவைக் கொடுத்தல், தனியாள் விருத்தி, நடத்தை விருத்தி, ஆளுமை வளர்ச்சி, அனுபவங்களைப் பெற்றுக் கொடுத்தல், ஒழுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவது கல்வியின் சிறப்பம்சங்களாகும்.2

கல்வியின் முக்கியத்துவம்

கல்வி சமூகத்தில் அதிகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் சமூக நிறுவனமாகும். கல்வியின் முக்கியத்துவத்தை பலமேதைகள் வலியுறுத்தியுள்ளார்கள்.

சமூகவியலின் தந்தை என அழைக்கப்படும் ஆகஸ்ட்கொம்ற், கிரேக்க மாமேதை அரிஸ்டோட்டில், கல்வி விஞ்ஞானம் மற்றும் பண்பாட்டின் ஐக்கிய தேசிய தாபனம் ஆகியன சமூக ஒற்றுமை மற்றும் மனித ஆளுமையின் வளர்ச்சிக்கு கல்வி அவசியம் என கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுன.

கல்வி மனதிற்கும் உடலிற்கும் பயிற்சி அளிப்பதோடு அல்லாமல் சில முக்கிய நோக்கங்களையும் மனித சமூகத்திற்கு எடுத்துரைக்கின்றது. மேலும் கல்வி மனித சமுதாயங்களில் உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு நிறுவனமாகக் காணப்படுகின்றது.

கல்வியானது, சமூகமயமாதலை வெற்றிகரமாகச் சமுதாயத்தில் செய்துமுடிக்க உதவுகின்றது. அதாவது நவீன சமூகத்தில் குடும்பம் சமூகமயமாதலின் அனைத்து அம்சங்களையும் செயற்படுத்தத் தவறவிட்ட சூழ்நிலையில் இதர அமைப்புக்கள் அப்பணியைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. இதனால் நவீன சமூகத்தில் கல்வி இப்பணியைச் செய்து வருகின்றது.

கல்வியானது ஓரு சமூகத்தின் பண்பாட்டை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையினருக்குப் பரப்புகின்ற சிறந்தவொரு சாதனமாகத் திகழ்கின்றது. இதன் மூலம் ஒரு தனிமனிதன் தன்னுடைய கலாசாரத்தைத் தெரிந்துகொண்டு சமூகத்தில் சிக்கல் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்கின்றான். மேலும் தன்னுடைய முன்னோர்களின் பண்பாட்டையும் தெரிந்து கொள்கின்றான்.

கல்வியானது சமூகத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்களையும் இணைக்கின்றது. உதாரணமாகப் பல்வேறு பிரிவுகள் மற்றும் பண்பாட்டுக் குழுக்கள் இவற்றிடையே சரியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள கல்வி ஒரு பாலமாக அமைகின்றது. மற்றும் பண்பாட்டைப் பரப்புவதற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் கல்வி அவசியமாகின்றது.

கல்வி நவீன சமூகத்தில் மதம் அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் குடும்பம் போன்றவற்றில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் அமைப்பு, திருமணம் போன்றவற்றிலும் நவீன கல்வியினால் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகளிடையே உறவுகளையும் புதிய செயற்பாடுகளையும் கல்வி உருவாக்குகின்றது. நவீன சமூகத்தில் கல்வி பல்வேறு வர்க்கங்களில், செயல்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற ஓரு சிறப்பான அமைப்பாகத் திகழ்கின்றது. கல்வி நாட்டுப்பற்றின் தத்துவத்தை உணர்த்துகிறது.

கல்வி சமூகத்திற்கும் தனிமனிதர்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்துகிறது. மேலும் ஒரு மிகச் சிறந்த சமூகக்கட்டுப்பாட்டுச் செயலியாக இருந்து நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருகின்ற மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது.

கல்வியைப் பொதுவாக இரண்டாக வகைப்;படுத்துகிறார்கள். அவை முறைசார் கல்வி மற்றும் முறைசாராக் கல்வி என்பனவாகும். எளிய மற்றும் கல்வியறிவு இல்லாத சமூகங்களில், கல்வி முறையானதாக இல்லை. அங்கே குடும்பம் மற்றும் சமுதாயம் தான் அவர்களுடைய பண்பாடு மற்றும் நெறிமுறைகளைப் போதித்து வந்தது. அவ்வளவிற்கு கல்வி முறையானது சமுதாயத்தோடு ஒட்டியிருந்தது என்றே கூறலாம்.

நமது நாடு வளர்ந்து வரும் நாடு. இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் வளர்ச்சி ஏற்பட்டால் தான்; நாடு முன்னேறும். ஓரு நாட்டின் பொருளாதார மேம்பாடு அந்நாட்டின் மனித சக்தியைச் சார்ந்துள்ளது. அந்நாட்டின் செல்வம் அம்மக்களிடம் இருக்கின்றது. எனவே அம் மக்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்து நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படவேண்டுமெனில் அது தொழிற்கல்வியால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய தொழிற்கல்வி என்பதும் கல்வி மூலமே கிடைக்கின்றது எனலாம்;(கிருஸ்ணமூர்த்தி.ஜெ,2000).

மாணவர்கள் கல்வி தடைபடுவதற்கான காரணங்கள்

மாணவர்கள் கல்வி கற்பதற்கு பல காரணிகள் தடையாக அமைகின்றன. இது தொடர்பாக கு.யசிதரன் அவர்களால் எழுதப்பட்ட “கிராமக் கல்வி மூலம் சமூக மேம்பாடு சாத்தியமா?” எனும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை எடுத்துக் கொண்டால், அதில் கிராமத்தொழிலாளியின் வாழ்வில் பல தரப்பட்ட நலச்சிக்கல்கள் காணப்படும், இது கற்கமுடியாத நிலையைத் தோற்றுவிக்கும், கிராமங்களில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, சூழல், அச்சமூட்டும் மனவெழுச்சி, நோய்கள் என்பனவற்றால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, கல்வி பெறமுடியாத நிலை உருவாகிறது. மேலும் கிராமப்பாடசாலைகளில் மலசலகூட வசதியின்மை, குடிநீர் வசதியின்மை போன்றவை இலங்கையில் நிலவும் முக்கியமான பிரச்சினையாகும், கிராமங்களில் உள்ள மக்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற சத்துள்ள உணவுகள் எவை எனத் தெரிந்தும், சத்துள்ள உணவுகளான பழங்கள், பால், முட்டை என்பனவற்றைப் பணம் பெறும் நோக்கத்திற்காக விற்று தம்முடைய வசதிக்கேற்றவாறு பாண், பணிஸ், உரொட்டி, போன்ற சாதாரண உணவுகளை வாங்கி உண்கின்றனர் போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு, இவை பிள்ளைகள் கல்விபெறுவதற்கு தடையாக அமைகின்ற காரணிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன3.

வீட்டில் சிறுவர்களுக்கு எழும் பிரச்சினைகள் தொடர்பில் டீடழஉம என்ற அறிஞர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஆவரின் ஆய்வு முடிவானது அதிகசிக்கல்கள், பழக்கவழக்கங்கள், நடத்தைகள், ஒழுக்கங்கள் ஆகியவற்றில் எழும் பிரச்சினைகள் இளையோரின் பழக்கவழக்கங்களை பாதிக்கின்றன என்ற வகையில் அமைந்திருந்தது. பெற்றோர் பிள்ளைகளைக் கடுமையாக நடாத்துதல், குற்றம் கூறுதல், அவசரப்படுத்தல் என்பன பிள்ளைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதால் அவர்கள் கல்வியிலும் வெறுப்பை அடைகிறனர். அத்துடன் திரைப்படம் பார்த்தல், போட்டிகளில் பங்குபெறல், அரட்டை அடித்தல், ஒலிநாடா கேட்டல், கோயில் நிகழ்ச்சிகளில் பங்குபெறல், விளையாட்டுகளில் பங்குபெறல் என்பவற்றில் அதிக ஆர்வம் காட்டுதலும் பிள்ளைகளின் கல்வி தடைப்படக் காரணங்களாகும்.

பெற்றோரின் தவறான வாக்குறுதிகள், அதாவது ‘குறிப்பிட்ட வயதை அடைந்ததும் நீ பாடசலைக்கு செல்லவேண்டியதில்லை’ போன்றவாறான வாக்குறுதிகள், பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுதல், வீட்டை விட்டு ஒடுதல், சிறு சிறு திருட்டுகளில் கல்வி தடைப்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன4.

ஞா.தில்லைநாதன் அவர்களால் எழுதப்பட “கல்வியும் மேம்பாட்டிற்கான சமூக மயப்படுத்தல்” எனும் தலைப்பிலமைந்த கட்டுரையில் மாணவர்கள் கல்வியில் சமூகமயப்பட முடியாமைக்கு உடல், உள, குடும்ப, சமூக பாதிப்புகளே காரணம் என்றும்; கூறப்பட்டிருந்தது5.

மனமுறிவு, முரண்பாடு, அச்சுறுத்தல், தகைப்பு, பதகளிப்பு என்பன கல்வி தடைப்படுவதற்குப் பிரதானமானவை என்று கூறப்பட்டுள்ளது. மாற்றங்களை அடிக்கடி உள்வாங்கவேண்டிய சமூக கலாசார அசைவியக்கங்களைக் கொண்ட சூழலில் வாழும் பிள்ளைகளால் அம்மாற்றங்களுக்கு சமூகப் பொருளாதார அரசியல் மாற்றத்தாலும் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் போன்றவற்றாலும் பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்து இருத்தல், ஆண்களும் பெண்களும் தமது வேலைப்பளு அதிகரிப்பால் வீடுகளில் முரண்படும் போது பிள்ளைகளுக்கு அடக்குமுறை அதிகமாகி நிம்மதிக் குறைவு ஏற்படல், தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் மற்றும் பாடசாலைசார் பிரச்சினைகள் காரணமாக இடைவிலகல், வகுப்புமட்டச் செயற்பாடுகளில் பொருத்தப்பாடின்மை, மதரீதியான பிற்போக்கான தன்மையும் வாழ்க்கை முறைகளும் காணப்படல், மது பாவனை மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாதல், சிறுவர் துஸ்பிரயோகங்கள், குடும்பங்கள் வறியனவாக இருத்தல், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குடும்பங்களில் பிள்ளைகள் வாழுதல், கல்விக்குத்தேவையான உதவிகள் போதுமானதாக இல்லாமை, எதிர்பாராமல் நிகழும் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரின் இழப்பு, உடல்ரீதியான நோய்கள், ஊடகங்கள் ரீதியான பொருத்தமற்ற 6.

நகர்புற பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது கிராமியப் பாடசாலைகளில் மனித பௌதிக வளங்கள் குறைவாகவும் சரிவர பகிரப்படாமலும் உள்ளமை, குறைந்த வருமானமட்டத்தை உடைய பெற்றோர் தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்புதல், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும்போது புதிய புதிய கலைத்திட்டங்களை முன்வைப்பதால் மாணவர்கள் கற்றல் தொடர்பாக தெளிவற்ற நிலையை அடைதல், இது வரை காலமும் இடம்பெற்று வந்த இனக்கலவரங்கள்; போன்றன கல்வி தடைப்படுவதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.7.

இந்நூல்களில் உள்ள கருத்துக்களை தொகுத்து நோக்கினால், இவை மாணவர்களுடைய கல்வி கற்கும் வேகம் குறைவடைவதற்கான காரணங்களையும் மாணவர்கள் கல்விபெறுகின்ற சந்தர்ப்பம் தடைப்படுவதற்கான காரணங்களையும் கற்கின்ற மாணவர்களின் அடைவுமட்டம் குறைவாக இருப்பதற்கான விளக்கங்களையும் பூரணமாகத் தருவதாக உள்ளன.

மாணவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள்

பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தொடர்ந்து கற்கமுடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் அல்லது மானவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நூல்களில் சில தீர்வு நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மாணவர்களின் கல்வி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஆசிரியர் தமது பாடவேளையில் குறைந்தது பத்து நிமிடமாவது ஒதுக்கி மாணவர்களின் தன்னம்பிக்கை, முயற்சி, இலட்சியம் என்பனவற்றை வளர்க்க உதவிசெய்ய வேண்டும்(மானுடம்,2002).

மேலும் மாணவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாக வளப்பாய்ச்சல் சமனற்ற தன்மையில் காணப்படும் பாடசாலைகளை இனங்கண்டு அவற்றைக் கல்வித் திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பாடசாலைக்கு வருகின்ற மிகவறுமையான மாணவர்களை இனங்கண்டு அவர்களுடைய பெற்றோருடன் கலந்துரையடி கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலகத்துக்கு தெரியப்படுத்தி அல்லது பாரளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சுயதொழில் வாய்ப்பை உருவாக்கி குடும்பத்தவர்கள் உழைக்கும் வழிகளை இனங்காட்டுவதன் ஊடகப் பொருளாதார சிக்கலை தவிர்த்தல், ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்குள்ள பாடத்திட்டதிற்கும் பொருத்தமான ஆசிரியர்களை நியமித்தல், கல்வித்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாவண்ணம் சட்டங்ளைக் கொண்டுவர வேண்டும்(சிவநடேஸ்,2004).

எனவே தொகுத்துக்கூறின், கல்வி என்பதற்கு முடிவான ஒரு வரைவிலக்கணத்தைக் கூற முடியாது. கல்வியானது மனிதனின் உயிரோட்டமுள்ள வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் அல்லது பிள்ளைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை தீர்ப்பதற்குப் பல நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் உலகளாவிய ரீதியில் இது பாரியவொரு சவாலாகவே உள்ளது. எனவே கல்வியின் முக்கியத்துவத்தினை ஒவ்வொரு கற்றறிந்த சமுகமும் மற்றவருக்குப் போதிக்க முன்வரவேண்டும். அப்போதுதான் மேல்நோக்கிய சமூக மாற்றத்தை ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஏற்படுத்தலாம். இத்தகைய செயற்பாடு ஒவ்வொரு நாடும் அபிவிருத்திப் பாதையில் விரைவாகப் பயனிக்க வழிவகுக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

--------------------------------------------------------------------------------

1கிருஸ்ணமூர்த்தி.ஜெ,(2000),“சமூகவியல்கொள்கைகள்”, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (பக்கம்136-137).

2செல்வராஜா.மா,(2005),“கல்வியியல் அடிப்படை எண்ணக்கருக்கள்”,எவகிறீன் அச்சகம்(பக்கம் 72-80).

3விக்னராணி.பா,(2002) “மானுடம் சமூகவியல் ஏடு – 01” , சமூகவியல் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

4 முத்துலிங்கம்.ச,(2000), “கல்வியும் உளவியலும்” ,கல்விப்பீடம்:கொழும்புப் பல்கலைக்கழகம் (பக்கம் 94-95)

5 வெல்லவூர் கோபால், (2009), “கல்விச் செல்வம்- மணிவிழா மலர்”, கிழக்குப்பல்கலைக்கழகம்.

6 மகேசன்.ஏ,(2010), “விசேட கல்வியும் ஆலோசனை வழங்கலும்” ,மல்லிகா மகேசன்(பக்கம்31-86).

7 சிவநடேஸ்,(2004), “வெளி சஞ்சிகை” , கிழக்குப் பல்கலைக்கழகம்.

- நிஷாந்தி உதயகுமாரன், சமூகவியல் சிறப்புக் கற்கை, கிழக்குப்பல்கலைக் கழகம், இலங்கை.

Pin It