மாணவர்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் கொந்தளித்து இருப்பது, அரசியல் கட்சிகள் வழவழ கொழகொழ நிலையை விடுத்து, கொஞ்சமாவது உறுதியான நிலையை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களை மூளைச் சலவை செய்து, மயக்க நிலையில் வைத்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளை மட்டுமே வெளியிடுவோம் என்று அடம் பிடிக்கும் பெரிய பெரிய ஊடகங்கள், மாணவர்களின் போராட்டத்தைப் பற்றிய செய்தியை அளிக்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகளையும், பெரிய ஊடகங்களையும் அசைக்கச் செய்த மாணவர்களின் போராட்டம், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமா? தீர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும்; சின்னஞ் சிறிய முன்னேற்றத்தையாவது கொடுக்குமா என்று, பரபரப்பான உணர்வுகளை ஒதுக்கிவிட்டு யோசித்துப் பார்க்கலாமா?

ஈழத் தந்தை செல்வா அவர்கள் பெரியாரைச் சந்தித்து ஈழ மக்களின் விடுதலைக்காக (தமிழ் ஈழம் அமைவதற்காக அல்ல; ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்படாமல் இருப்பதற்காக) உதவி செய்யும்படி கேட்ட பொழுது "நாமே இங்கு இந்திய பார்ப்பன அரசுக்கு அடிமைகளாக இருக்கிறோம். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி அய்யா உதவ முடியும்?" என்று தமிழகத் தமிழர்களின் இயலாமையைக் கூறினார். அதாவது நாம் பார்ப்பனர்களின் அடிமைகளாக இருக்கும் வரை நம்மால் யாருக்கும் உதவ முடியாது என்று தெளிவாகக் கூறினார்.

இன்று ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டு இருக்கிறவர்கள் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடுபட்டு விட்டார்களா? அல்லது பெரியாரின் கருத்தை மறுக்கிறார்களா? பெரியாரின் கருத்தை மறுப்பது என்றால், அது இரு விதங்களில் இருக்க முடியும். (1) நாம் ஒன்றும் பார்ப்பனர்களுக்கு அடிமைகள் இல்லை; சுதந்திரமாகத் தான் இருக்கிறோம் என்றும் (2) ஈழத் தமிழர் நலப் போராட்டத்திற்கும் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதற்கும் சம்பந்தம் இல்லை; இன்றைய சூழ்நிலையிலேயே போராடி வெற்றி பெற முடியும் என்றும் இரு விதங்களில் வாதங்களை வைக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் போராடி வெற்றி பெற முடியும் என்று கூறுபவர்கள், இந்திய மக்களில் 80%க்கும் அதிகமானவர்கள் இலங்கை அரசுக்கு எதிராகவும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலையையும் கொண்டிருந்த / கொண்டிருக்கும் பொழுது, அதீதப் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்திய அரசு எவ்வாறு செயல்பட முடிந்தது / முடிகிறது? அதுவும் இலட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதற்கு உதவியும் வழிகாட்டுதலும் அளிக்க இந்திய அரசினால் எப்படி முடிந்தது? அதிகார மையங்களில் 90%க்கும் அதிகமாகப் பார்ப்பனர்களும், மிகுந்த சொற்பமான இடங்களிலும் ஆசையினாலோ அச்சத்தினாலோ பார்ப்பனர்களுக்கு அடிபணிபவர்களும் மட்டுமே இருப்பதால் தான் இவையெல்லாம் முடிகின்றன என்று தோன்றவே இல்லையா? இப்படி இருக்கையில் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடபடாமல், இன்றைய சூழ்நிலையிலேயே போராடி வெற்றி பெற முடியும் என்பதற்கு ஏதாவது முகாந்திரம் இருககிறதா?

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; நாம் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக இல்லை, அதிகார மையங்களில் பொதுப் போட்டியில் தேர்வு பெறும் திறமைசாலிகள் தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். மற்ற சமூக மக்களில் திறமைசாலிகள் இல்லாவிட்டால், அதற்குப் பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்?" என்று நினைக்கிறீர்களா? இது பார்பப்னர்கள் நம் மீது சுமத்தி இருக்கும் கருத்தியல் வன்முறை. மனிதர்களை எந்த ஒரு அடிப்படையில் குழுக்களாகப் பிரித்தாலும், அனைத்து குழுக்களிலும் மிக அதிகமான திறமை உடையவர்கள் முதல் மிகக் குறைவான திறமை உடையவர்கள் வரை இருக்கவே செய்வார்கள் என்பது மறுக்க முடியாத இயற்கை நியதி. ஆகவே பார்ப்பனர்களிலும் மற்ற வகுப்பு மக்களிலும் திறமையானவர்களும் திறமைக் குறைவானவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இது பகவத் கீதை, மனு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி முதலிய இந்து மத சாஸ்திரங்கள் அனைத்திலும் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது. நாமும் நமது அனுபவத்தில் இவ்வுண்மையை உணராமல் இருக்க முடியாது.

அப்படி என்றால், பொதுப் போட்டி (open competition) முறையில் அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ள திறமைசாலிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் / தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் அல்லவா? அப்படி இல்லாமல் பார்ப்பனர்களே தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள் என்றால், அம்முறையில் அயோக்கியத்தனம் பின்னிப் பிணைந்து உள்ளது என்று உறுதிப்படவில்லையா? பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் இருக்கும் பொழுது, பார்ப்பனர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப் பட்டால், திறமைக் குறைவானவர்களும் தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள் என்பது உறுதி ஆகிறது அல்லவா?

இவ்வாறு, திறமை இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தேர்ந்து எடுக்கப் படாமல் இருப்பதும், திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் தேர்ந்து எடுக்கப் படுவதுமான நிலை நடப்பில் இருக்கும் பொழுது மற்ற வகுப்பு மக்கள் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகத் தான் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது அல்லவா? ஆகவே உங்கள் வாதம் தவறு என்று புரிகிறதா?

இந்த அடிமைத் தளையை எப்படி உடைப்பது? அதிகார மையங்களில் பார்ப்பனர்கள் மட்டும் அன்றி, அனைத்து வகுப்பு மக்களும், மக்கள் தொகையில் அவரவர் எண்ணிக்கையின் விகிதத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டாமா? அவ்வாறு அதிகார மையங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பன அயோக்கியத்தனங்களைத் தவிடு பொடி ஆக்கும் அளவு எண்ணிக்கையில் இருந்திருந்தால் / இருந்தால், இந்திய அரசு இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்குத் துணை போயிருக்க / போக முடியுமா? இவ்வளவு சிந்தனைகளயும் ஒன்று திரட்டி, இரத்தினச் சுருக்கமாகப் பெரியார் கூறியதைச் சிறிதும் மனதில் கொள்ளாத மாணவர்களின் போராட்டம் எதுவரை செல்ல முடியும்? உணர்ச்சி வேகத்தில் போராடுவதோடு, அறிவு பூர்வமாகவும் சிந்திப்பது தேவை அல்லவா?

அதிகார மையங்களில் பார்ப்பன ஆதிக்கச் சிந்தனைகளை உருத்தெரியாமல் அழிப்பதற்குத் தேவையான அளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், கருத்தியலில் உறுதி பெறுவதற்குமான போராட்டத்தைத் தொடங்குவது அவசியம் அல்லவா? இப்படிச் சொல்வது வேறு எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து விடச் சொல்வதாகப் பொருள் அல்ல. ஏல்லாவற்றையும் விட, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பிற்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தான் பொருள். இப்போராட்டத்தைத் தொடங்கினாலே நம்மிடையே உள்ள, நமக்கு எதிரான சக்திகள் வெளியே தெரிய ஆரம்பித்து விடும். அவர்களைக் களை எடுத்து விட்டால், புதிய வேகத்துடன் போராட்டங்களை எடுத்துச் செல்ல முடியும்.

- இராமியா

Pin It