மும்பை கடந்த பத்து நாட்கள் கொண்டாடிய கணபதி உற்சவம், பெருகி வரும் கணபதி சிலைகள், சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி, எங்குப் பார்த்தாலும் மின்விளக்குகள், அதில் 99 விழுக்காடு மின்விளக்குகள் தெரிந்தே எல்லோரும் அறிய பொது மின்கம்பத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் (திருடப்பட்டிருக்கும்) மின்சாரம், இதை ஒட்டி ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள், எங்கு பார்த்தாலும் கூட்டம், கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட இந்தப் பத்து நாட்களும் மக்கள் எவரும் அதைப் பற்றி வெளிப்படையாக குறைப்பட்டுக் கொள்ளவில்லை. கண்பதியைக் குற்றம் குறைகள் சொல்லும் தைரியம் இப்போது இங்கே யாருக்குத் தான் இருக்கிறது? சகித்துக் கொள்ள மக்கள் பழகிவிட்டார்கள். இதனால் மிக அதிகமாகப் பாதிக்கப்படும் காவல்துறையும் இதைப் பற்றி மூச்சுவிடுவதில்லை.

ganesh_festival_mumbai_350மதம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள நம் சமூகம் பழகிவிட்டது. பத்திரிகைகளுக்கு பக்கத்திற்குப் பக்கம் விளம்பரம், தொலைக்காட்சிகளுக்கு இன்றைக்கு இன்னார் இந்த கணபதி மண்டலுக்கு வந்தார், இந்த நடிகர் பூஜை செய்தார், இந்த நடிகை கணபதியைக் கும்பிட்டார், இந்த அரசியல் தலைவர் வந்தார், இந்த அமைச்சர் தன் மனைவியுடன் சாமி கும்பிட்டார், மாநில கவர்னர் மனைவியுடன் வந்திருந்து கணபதி மண்டல மலர் வெளியிட்டார்... இப்படியாக செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் நன்றாகவே வண்ணமயமாக கழிந்து விடுகிறது இந்தப் பத்து நாட்களும்..!

நாளுக்கு நாள் பெருகிவரும் இந்த கணபதி உற்சவம் மும்பையில் மட்டுமல்ல இன்று இந்தியாவின் பெருநகரங்கள் எங்கும் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கணபதி உற்சவத்தை ஏன் கொண்டாடினோம்? எதற்காக 10 நாட்கள்? இதை ஆரம்பித்து வைத்தவர் யார்? இப்படியான அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக நமக்குக் காட்டப்பட்டிருக்கும் சித்திரம் "லோக்மான்ய திலக்"

ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மக்களை ஒன்றுதிரட்டவும் 10 நாட்கள் கண்பதி உற்சவத்தைக் கொண்டாடுவதன் மூலம் தேசிய விடுதலை தாகத்தை சமுதாயத்தில் உருவாக்கிட முடியும் என்றும் எண்ணி ஆரம்பித்தாராம். அதுவும் மத சம்பந்த காரியங்களில் ஆங்கிலேய அரசு தலையிடாது என்பதால் விநாயகர் சதுர்த்தியை தன் அரசியல் போராட்டத்திற்கு ஏதுவாக கையில் எடுத்துக் கொண்டாராம்..! சரி அப்படியானால் விடுதலை அடைந்தவுடன் 10 நாள் கொண்டாட்டத்தை நிறுத்தி இருக்கலாம் தானே? ஏன் செய்யவில்லை? விடுதலை, இந்திய சுதந்திரப் போராட்டம் இதெல்லாம் சரித்திரப் பாடம் இந்துத்துவ இந்தியாவுக்கு பூசியிருக்கும் தங்கமுலாம். அவ்வளவுதான்.

கணபதி உற்சவத்தை திலகர் ஆரம்பித்ததன் ஆரம்பகால நோக்கம் இந்திய விடுதலைப் போராட்டம் அல்ல, கண்பதி உற்சவ கொண்டாட்டங்களை பொதுமக்களின் வீதிக்கு கொண்டுவந்ததன் நோக்கமும் இந்திய சுதந்திர தாகம் என்று நம் பாடப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் உண்மையும் அல்ல.

18ஆம் நூற்றாண்டில் மராட்டிய மண்ணை ஆண்ட பேஷ்வாக்களின் ஆட்சியில் அவர்களின் அரண்மனையில் கணபதி ரங் மஹாலில் கணபதி உற்சவம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் அலங்காரமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அரசர் கலைஞர்களுக்கு சன்மானம் கொடுத்து மகிழ்வித்தார். ஓர் அரசவை நிகழ்வாக மத வழிபாட்டின் அடையாளமாக இருந்த கணபதி உற்சவம் 1818ல் ஆங்கிலேயர் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் முடிந்து போனது.

thilak_320இக்காலக்கட்டத்தில் மராட்டிய மண்ணில் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார் மகாத்மா புலே மற்றும் அவருக்குப் பின் சாகுமகராஜ். SATYA SODHAK MOVEMENT என்ற புலே ஆரம்பித்த இயக்கத்தின் தாக்கம் சமூகத்தில் இளைஞர்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்து மதம் பார்ப்பனர் அல்லாதோரை இரண்டாம்தர மூன்றாம்தர சூத்திரர்களாகவே வைத்திருப்பதை அவர்கள் கேள்விக்குட்படுத்தினார்கள். வேத நம்பிக்கை, வேத காலத்து இந்தியா இந்துக்களின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தவர் திலக். எனவே கணபதி விழா சர்வஜன கணபதி விழாவாக உருமாற்றியதன் மூலம் பார்ப்பனர் அல்லாதோரை எக்காலத்தும் இந்துத்துவ சாம்ராஜ்யத்தில் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்ளும் அற்புதமான பூட்டும் சாவியுமாக கிடைத்தது கணபதி உற்சவம். இசுலாமியர்களின் மொகரம் விழாவில் அக்காலத்தில் இந்து மதப் பாடகர்களும் கலைஞர்களும் கலந்து கொள்வது இயல்பாக நடந்துவந்தது.

இந்துத்துவ இந்தியாவைக் கனவு கண்ட திலக்கிற்கு மொகரம் பண்டிகைக்கு எதிராக இந்துக்களின் பண்டிகையாக கணபதி உற்சவத்தை மொகரம் போலவே வீதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதும் ஆட்டமும் பாட்டமும் அலங்காரமுமாக கொண்டாடுவதும் தேவைப்பட்டது. இவ்வாறாக சமூகநீதியை முன்வைத்த புலேவின் இயக்கத்திற்கு மாற்றாகவும் இசுலாமியர்களின் மொகரத்திற்கு எதிராகவும் லோக்மான்ய திலகரால் கணபதி உற்சவம் இந்துத்துவ ஆயுதமாக கையாளப்பட்டது எனலாம்.

1910ல் அன்றைய பம்பாய் நகரத்தின் போலீஸ் கமிஷனராக இருந்த எஸ்.எம்.எட்வர்ட் 'திலகர் முஸ்லீம்களுக்கு எதிராக ஆரம்பித்த கணபதி ஊர்வலம் காலப்போக்கில் அன்றைய ஆட்சியாளருக்கு எதிராக மாற்றம் பெற்றது என்கிறார்.

1894ல் கொண்டாடப்பட்ட கணபதி விழாக்களில் ஊர்வலங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துடைய பாடல்கள் பாடப்பட்டதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக புபேந்திர யாதவ் எழுதிய கீழ்கண்ட பாடலை 1894ல் கணபதி ஊர்வலத்தில் பாடினார்கள்.

பாடல் வரிகள்:

ஏன் விலக்கி வைத்தாய்
இந்து மதத்தை?
மறந்தாயோ கண்பதியை, சிவாவை, மாருதியை?
என்ன பலன் உன் வழிபாட்டில்?
என்ன வரம் கொடுத்தார் அந்த அல்லா உனக்கு?
ஏன் மாறினாய் முஸ்லீமாய்?
அந்நியன் மதத்துடன் ஏனிந்த ஸ்நேகிதம்?
உன் மதத்தை மறக்காதே
மனிதா நீ சரிந்துவிழாதே
கோமாதா நம் தெய்வம்
அவளை என்றும் மறக்காதே

திலகருக்கு அரசியல் அதிகாரத்தை ஆங்கிலேயரிமிருந்து எப்பாடு பட்டாகிலும் வாங்கி இந்து தலைமை சமூகமாக அவர் நினைத்த பார்ப்பனர்களின் கையில் கொடுக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அவர் விரும்பியது அரசியல் விடுதலையைத் தானே ஒழிய சமூக நீதியை அல்ல.

கணபதி உற்சவத்திற்கு ஈடாக அவர் கொண்டாடியது சிவாஜி ஜெயந்தியை. சிவாஜியை இந்து மதத்தை நிறுவ வந்த தலைவராக இந்திய சமூகத்திற்கு அவர் அடையாளம் காட்டுகிறார். அவரால் இந்து மதத்தின் காவலாராக போற்றப்பட்ட மராட்டிய மன்னன் சிவாஜி முஸ்லீமாக மாறிய இந்துவை மீண்டும் இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ள துணிந்தார். ஆனால் நடைமுறை வாழ்வில் திலகரால் சிவாஜி செய்த இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு முறை கஜன்ராவ் வைத்யா அவர்கள் இந்து மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறிய பார்ப்பனர் ஒருவர் மீண்டும் இந்து மதத்திற்கு வந்தபின் அவருடன் சேர்ந்தமர்ந்து (சமபோஜனம்) உணவு உண்ண திலகரை அழைக்கிறார். திலகர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

ganesh_festival_mumbai_640

1918, மார்ச் 19ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் திலகர் பேசியதும் செயல்பட்டதும் அவருடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது. அவர் தன் மேடைப் பேச்சில் "பார்ப்பனர்களுக்கு ஒத்த உரிமை மற்ற மூவர்ணதாருக்கும் உண்டு. கடவுள் தீண்டாமையைக் காட்டினார் என்றால் நான் அவரைக் கடவுளாகவே ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று முழக்கமிட்டார். அவருடைய மேடைப்பேச்சில் மயங்கிய 250 பேர் "இனி வாழ்க்கையில் எப்போதும் எவ்விடத்தும் எச்சூழ்நிலையிலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கப் போவதில்லை" என்று எழுதி உறுதிமொழியாக கை எழுத்திட்டு திலகரையும் கையெழுத்திட கேட்டுக் கொண்டார்கள். திலகர் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார்! அப்படியானால் அவர் ஏன் அப்படி பேசினார் என்றால் அம்மாநாட்டில் கலந்து கொண்டு அதன் பின் அவர் இங்கிலாந்து செல்ல இருப்பதால் தான் இங்கிலாந்தில் அவர் தன்னை "லோக்மான்ய திலகராக" ---- உலக நாயகனாக அடையாளம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தால் மட்டுமே.

1918ல் கலப்பு திருமணத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். பார்ப்பனன் சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய பார்ப்பனத்தன்மையை இழந்தவன் ஆவான் என்று எழுதினார். பார்ப்பனன் மட்டுமே கல்வி கற்கும் தகுதி உள்ளவன் என்றும் பார்ப்பனர் அல்லாதோர் கல்வி கற்க கூடாது என்றும் வெளிப்படையாகவே பேசியும் எழுதியும் செயல்பட்டவர் தான் திலகர்.

ஒருமுறை "மெக்ஸ்முல்லர் போன்ற இந்து அல்லாத விதேசி வேதம் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நீங்கள் பார்ப்பனர் அல்லாத இந்தியனுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவித்தீர்கள்? " என்று கேட்டார் ராவேபகதூர் போலே. அக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த திலகர் "அக்கட்டுரை கேசரி இதழில் நான் இல்லாத போது எழுதப்பட்டது" என்று சொல்லி சமாளித்தார். ஆனால் திலகரின் சுயசரிதத்தை எழுதிய கெல்கர், திலகர் சொன்ன இதை மறுக்கும் விதத்தில் அக்கட்டுரையைத் திலகர் எழுதிய கட்டுரைகளில் ஒன்றாகவே பதிவு செய்திருக்கிறார்.

kareena_kapoor_640

திலகர் புனே மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சர்வஜன கணபதி மண்டல்களை உருவாக்கி கணபதி உற்சவத்தை ஒவ்வொரு பகுதியனரும் கொண்டாட ஏற்பாடுகள் செய்தார். இக்கணபதி மண்டல்கள் சமூக நீதியை முன் எடுத்துச் செல்பவை அல்ல. 1924, செப்டம்பர் 5ல் தாதரில் நடந்த கணபதி மண்டலுக்கு காந்தி வருகை தந்தார். சற்றொப்ப 500 பேர் கூடியிருந்த அக்கூட்டத்தில் காந்தி "நீங்கள் அனைவரும் கதர் இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் இந்து முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு என்ற நோக்கங்களையும் முன்வைத்து தன் கருத்துக்கு ஆதரவு காட்டுவதன் அடையாளமாக கூட்டத்தினர் கை உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தபோது அக்கணபதி மண்டலில் காந்தியின் நோக்கத்திற்கு ஆதரவாக கை உயர்த்தியவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சமூகநீதியைப் புறந்தள்ளிய இக்கணபதி உற்சவத்தை மும்பையில் ஒடுக்கப்பட்ட மக்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிற சம்பவத்தில் இருக்கும் முரண் நம்மை அதிகம் யோசிக்க வைக்கிறது. தென்னிந்திய ஆதிதிராவிடர் மகாஜன சங்கம், தாராவியில் இந்த ஆண்டு 2012ல் கணபதி உற்சவம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.

அக்காலத்தில் தமிழர்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்து சமூக தளத்தில் செயல்பட்டார்கள். ஒரு சாரார் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பாதையில் பயணிக்க, இன்னொரு சாரார் தேசிய நீராடையில், காந்தியின் விடுதலை இயக்கத்தில், இந்துத்துவ மார்க்கத்தில் பயணித்தனர். கடவுள் இல்லை என்ற பெரியாரின் கருத்தை எந்த வகையிலும் உள்வாங்கிக் கொள்ள பயந்தவர்கள், மறுத்தவர்களுக்கு தாராவியைச் சுற்றி தாதர் பகுதி வரை திலகர் ஆரம்பித்த கணபதி மண்டல்கள் ஓர் உத்வேகத்தைக் கொடுத்தன. இந்துமதத்தில் பஞ்சமர்களாய் ஒதுக்கப்பட்ட தலித்துகளுக்கு கணபதி விழா எடுக்க கொடுக்கப்பட்ட உரிமை அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். இசுலாமிய தமிழர்களும் இதற்கு உதவியாக இருந்தார்கள் என்கிற செய்தியை அறிய வருகிற போது திலகரின் நோக்கங்கள் எதையும் இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக பம்பாய் வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த விழாவை அவர்கள் கிராமத்தின் சிறுதெய்வ வழிபாட்டு கொடைத்திருவிழா போலவே கொண்டாடினார்கள். ஊரிலிருந்து கரகாட்டம், கும்பாட்டாம் , கொட்டு, மேளம், நாதஸ்வரம் என்று தாங்கள் இழந்து போன கிராமத்து வழிபாட்டை கணபதி விழாவாக்கி நிறைவு கண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கணபதி ஊர்வலத்தில் அலங்காரத் தேரில் கணபதிக்கு அருகில் உட்கார்ந்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பூசாரியாக இவர்களில் ஒருவரே இருந்தது இன்று மாறிப்போய்விட்டது. இவர்கள் கை கட்டி பூணூல் அணிந்த அர்ச்சகரின் பூஜைத் தட்டில் காந்திப் படம் போட்ட பெரிய நோட்டுகளை தட்சணையாக கொடுக்க கொடுக்க, பார்ப்பனர் மந்திரம் சொல்லி நன்றாகவே அவர்களைக் 'கவனித்துக்' கொள்கிறார். விழா மேடையில், பந்தலில், பதாகையில் இவர்களுடன் சேர்ந்து இவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் பாபாசாகிப் அம்பேத்கரும் இருக்கிறார்.

அம்பேத்கரின் கருத்துகளை இவர்கள் எம்மாதிரி உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற வருத்தம் ஒருபக்கம், பதாகையில் அம்பேத்கர் இருப்பது எவ்வகையிலும் அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது என்பதையாவது இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.

ganesh_festival_mumbai_3802012, இந்த ஆண்டு கடைசி நாளான ஆனந்த சதுர்த்தியின் போது மட்டும் மும்பை கிர்காவ், சிவாஜி பார்க், வெர்சோவா, ஜூகு உள்ளிட்ட முக்கியமான கடற்கரை பகுதிகளில் 37 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், கலவர தடுப்புப் படை, மாநில ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்புப் படை என்று பக்தர்களுக்கும் கணபதிக்கும் பாதுகாப்பு கொடுக்க கணக்கிலடங்கா துப்பாக்கி ஏந்திய வீரர்கள் ....

21500 போலீசார், 1500 போலீஸ் அதிகாரிகள், 2500 போக்குவரத்து போலீசார் என்று ஒரு பட்டியல் நீள்கிறது. ஒரு நாள் இரண்டு நாட்கள் மட்டுமல்ல, சற்றொப்ப 10 நாட்கள், முதல் நாள் கணபதி சிலைகள் கொண்டுவரப்படும் விநாயகர் சதுர்த்தி, அதற்கு அடுத்த நாளிலிருந்து கணபதியை கரைக்க எடுத்துச் செல்லும் ஊர்வலங்கள், 3வதுநாள், 5 வது நாள், 7வது நாள், 10வது, 11 வது நாட்கள் என்று அமர்களப்படுத்தப்படுகிறது. 37 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. 10 சாலைகளில் சரக்கு வண்டிகள் செல்லத் தடை. 22 இடங்களில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 72 இடங்களில் கடற்கரை பகுதிகளில் கணபதி சிலைகளைக் கரைக்க கிரேன்களின் உதவியுடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. சிலைகளை கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது அந்த வண்டிகள் கடற்கரை மணலில் புதைந்துவிடாமலிருக்க முக்கியமான கடற்கரை பகுதிகளில் இரும்புத் தகடுகள் பதிக்கப்பட்டிருந்தன.

ஒன்றரை நாளில் கரைக்கப்பட்ட சிலைகள் 64,895. 3வது நாளில் 77,516. 7வது நாளில் 15000.  கடைசி நாளில் ராட்சத கிரேன்களின் உதவியுடன் கரைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பிரமாண்டமான கணபதி சிலைகள்... விளைவு ....? கடைசி நாளான ஆனந்த சதுர்த்தியின் போது மட்டும் கடற்கரையில் குவிந்த கழிவுகளின் அளவு 500 மெட்ரிக்டன். இது கடந்த ஆண்டு அகற்றப்பட்ட 430 மெட்ரிக்டன் கழிவுகளை விட அதிகம் என்கிறார் மும்பை மாநகராட்சி குப்பை, கழிவுகள் அகற்றும் மேலாண்மை பிரிவின் தலைமை பொறியாளர் பி.பாட்டீல்.

இக்கணபதி விழாக்களில் கரைக்கப்படும் ஆயிரக்கணக்கான கணபதி -சிலைகளால் நீர்நிலைகள் மாசுபடுவதை சுற்றுப்புற ஆர்வலர்கள் தொடர்ந்து இடைவிடாது செய்து வரும் பிரச்சாரங்கள் காரணமாக அண்மைக்காலங்களில் ஒரு சிலர் கணபதி சிலைகளை நீரில் கரைக்காமல் அடுத்த ஆண்டு வழிபாட்டுக்கென்று எடுத்துச் செல்கிறார்கள். நீரில் கரைக்க வேண்டும் என்ற ஐதீகத்திற்காக கணபதி வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட மலர்களையும் கனிகளையும் கரைத்துவிட்டு செல்கிறார்கள். அவர்கள் கணபதி அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்!

இந்து மதத்தின் இக்குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும்போது தற்போது சிலர் "இக்கருத்தை எல்லாம் இசுலாமியர்களிடமோ கிறித்தவர்களிடமோ சொல்லிப்பார், நீ உயிருடன் வெளியில் நடமாட முடியாது" என்று வெளிப்படையாகவே பின்னூட்டம் எழுதி என்னைக் கொஞ்சம் பயமுறுத்தி விட்டதாக நினைக்கிறார்கள். எந்த மதமாக இருந்தாலும் அவர்களின் வழிபாட்டு- முறைகள் தொடர்ந்து அடுத்தவர்களுக்கு இடையூறாகவோ, இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாகவோ இருக்க கூடாது என்று சொல்ல இந்தியாவில் எல்லோருக்கும் அதிகாரமும் உரிமையும் இருக்கிறது. இக்கருத்தை- வெளியில் சொல்ல பக்திமான்களான உங்களுக்கு அச்சம் இருப்பதாலும் இதை ஒத்துக்கொள்ள காவல்துறைக்கும் அரசுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் திராணி இல்லாததாலும் இக்கருத்தை வெளியிட அச்சு ஊடகங்கள் முதுகெலும்பின்றி இருப்பதாலும் இதைப் பற்றி எழுதவோ பேசவோ தலையில் ஒளிவட்டம் சுற்றும் அறிவுஜீவிகளும் எழுத்தாளப் பெருந்தகைகளும் முன் வராததாலும் மேற்சொன்ன எவ்விதமான பின்புலங்களில்லாத நான், என் தமிழ்ச்சமூகத்தின் வாசலில் ஒரு புள்ளி வைத்திருக்கிறேன். இந்தப் புள்ளி கோலமாகுமோ? காலம் மிதிபட்டு காணாமல் போகுமோ?

- புதிய மாதவி, மும்பை

Pin It