chiya 450இன்று (பிப்ரவரி 9) இராக்கியப் புரட்சியாளர் அப்துல் கரிம் காசிம் அவர்களின் 57ஆம் நினைவு நாள். மற்ற நாடுகளில் ஒரு மக்கள்நல அரசு அமைந்து விட்டால் அதைக் கவிழ்ப்பதற்கு முதல் முயற்சி எடுப்பது ஐக்கிய அமெரிக்க அரசுதான் என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று. 2003இல் இராக்கின் எண்ணெய் வளத்தை நாட்டுடைமை ஆக்கியதற்காக சதாம் உசேனை அமெரிக்கா தூக்கிலிட்டது.

லிபியத் தலைவர் மூமார் கடாஃபி எண்ணெய் வளத்தை நாட்டுடைமை ஆக்கியதற்காகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான நாணயத்தை உருவாக்கமுன்னெடுப்புகள்மேற்கொண்டதற்காகவும் கொல்லப்பட்டார் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால் இதற்கெல்லாம் பல ஆண்டுகள் முன்பாகவே இராக்கில் எண்ணெய் வளத்தை நாட்டுடைமை ஆக்கியதாலும், சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்தியதாலும் இராக்கின் புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம் முஹம்மது சி.ஐ.ஏ.வின் முழு ஒத்துழைப்புடன் கொல்லப்பட்டு இன்றுடன் 57ஆண்டுகள் ஆகி விட்டன.

மத்தியக் கிழக்கில் சோசலிசத்தின் தாக்கம் குறித்துப் பெரிதாகப் பதிவு செய்யப்படவில்லை. இராக்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு உயர்வதைக் கண்டு பீதியுற்ற அமெரிக்கா ஐயாயிரம் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடிக் கொன்று குவித்த செய்தி இன்னும் பரவலாக அறியப்படாமலே உள்ளது.

இஸ்லாமிய நாடுகளின் அரசியல் ஷியா, சன்னி பிரிவினைவாதத்தின் அடிப்படையிலே கட்டமைக்கப்படுவதைப் பார்த்திருப்போம், இதில் எந்தப் பக்கமும் சேராமல் சமயச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த ஒரு புரட்சியாளர்தான் அப்துல் கரிம் காசிம். நாட்டுப்பற்றும் அர்ப்பணிப்பும் கொண்ட பகுத்தறிவாளரான அவர் கம்யூனிஸ்டுகளைப் பெருமளவு ஆதரித்தார். இஸ்லாமியச் சமூகத்தில் பெண்களின் சமூக அரசியல் பங்கேற்பையும், அவர்கள் சமவுரிமை பெறுவதையும் உறுதிபடுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.

1958 ஜூலை முதல் 1963 பிப்ரவரியில் அவர் கொல்லப்படும் வரை இராக்கின் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். எளிய முறையில் வாழ்ந்த அவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் தன் சிறிய அலுவல் அறையிலேயே உறங்கினார்.. 1963ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 9ஆம் நாள் 48 வயதில் கொல்லப்பட்டார். எந்த அரசியல் அமைப்பையும் சேராத அவர் தலைவர் என்றே பரவலாக அழைக்கப்பட்டார்.

அப்துல் கரிம் காசிம் 1914 நவம்பர் 21ஆம் நாள் பிறந்தார். தந்தை காசிம் முஹம்மது பகர் ஃபத்லி வட பாக்தாத்தை சேர்ந்த விவசாயி. இராக்கிய சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அவர், தன் மகன் காசிம் குழந்தையாக இருக்கும் போதே முதல் உலகப்போரில் ஈடுபட்டு உயிர் துறந்தார். அவருடைய தாயார் கைஃபிய ஹசான் யகுப் அல்-சகினி பாக்தாத்தை சேர்ந்த ஷியா முஸ்லிம். காசிமுக்கு ஆறு வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் டைகிரிஸ் அருகிலுள்ள சுவரியா என்ற சிறு நகரத்திற்கு இடம் பெயர்ந்தது. பிறகு 1926இல் பாக்தாத்திற்கு குடிபெயர்ந்தது.

பள்ளிக் காலத்தில் சிறந்த மாணவராகத் திகழ்ந்த அவர் இராணுவக் கல்லூரியில் சேர்ந்து இரண்டாம் படைத் தளபதியாகப் பட்டம் பெற்றார். பிறகு அல்-அக்ரான் பணியாளர் கல்லூரியில் சேர்ந்து 1941இல் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். டெவிசீர்ஸில் மூத்த அலுவலருக்கான படிப்பையும் முடித்தார். எவரையும் அசாத்தியமான இராணுவச் செயல்பாடுகளில் இறங்க இசைய வைக்கும் திறமை பெற்றிருந்ததால் கரிம் காசிமைப் பாம்பாட்டி என்றே வகுப்பு மாணவர்கள் அழைத்தார்கள்.

ஜூலை 14 புரட்சி:

மன்னராட்சியாலும், மேற்கத்திய ஆதிக்கத்தாலும் குறிப்பாக பிரித்தானிய நாட்டின் செல்வாக்கால் இராக்கியர்கள் விரக்தியடைந்திருந்த காலம் அது. 1955 ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராக், ஈரான், பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான பாக்தாத் ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசு ஆதரவு அளித்தன. சூயஸ் நெருக்கடியின் போது 1956ல் எகிப்து மீதான பிரித்தானியப் படையெடுப்பை இராக் மன்னர் பைசல் II ஆதரித்த போது இராக்கியர்கள் ஆத்திரமும் அதிருப்தியும் அடைந்தனர்.

மேற்கத்தியரை எதிர்த்து லெபனானில் ஏற்பட்ட கலகம் ஜோர்டானுக்குப் பரவாமல் தடுக்க ஜோர்டான் மன்னர் இராக்கின் உதவியை நாடிய போதுதான் முடியாட்சியைக் கவிழ்க்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான உத்வேகம் பொறிதட்டியது. இராக்கின் இரண்டாம் பைசல் மன்னரும் பிரதமர் நூரி அல்-சையத்தும் எல்லைப்புறத்திற்கு அனுப்ப இராணுவத்தை அணிதிரட்ட உத்தரவிட்டனர். ஜோர்டானுக்கு உதவ இராக்கின் முடியரசால் திட்டமிடப்பட்ட படை இயக்கங்களை ஆட்சிக் கவிழ்ப்பிற்கான வாய்ப்பாக காசிமும், அவர் வழி நடத்தும் படையினரும் பயன்படுத்தினர். இந்த அணிதிரட்டலால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வெற்றிடத்தைப் பயன்படுத்தி, தளபதி காசிம், தளபதி அப்துல் சலாம் ஆரிஃப் ஆகியோர் கிழக்கு இராக்கில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தின் 3ஆவது பிரிவை ஜோர்டானுக்கு ஆதரவாக மேற்கு எல்லையை நோக்கி நகர்த்தினர். அதிகாலையில் பாக்தாத் வழியாகச் சென்ற காசிம் திடீரென வானொலி நிலையம், அரச அரண்மனை மற்றும் தலைநகரில் உள்ள பிற முக்கியத் தளங்களை கைப்பற்ற உத்தரவிட்டார். ஜோர்டானுக்குச் செல்லாமல் படைகளை பாக்தாத்துக்கு செலுத்தினார்.

தளபதி காசிமும் அப்துல் சலாம் அரிஃபும் ஜூலை 14 புரட்சிக்குத் தலைமை தாங்கினர். காசிம் ஜூலை 14ஆம் நாள் பாக்தாத்தை இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முடியரசை வீழ்த்தினார். பாக்தாத் நகரத்தின் முக்கிய மையங்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டன. வானொலி மையத்தைக் கட்டுப்படுத்திப் புரட்சியை பிரகடனம் செய்தனர். முடியாட்சிக் கவிழ்ப்பு அலுவலர்களாலும், குடிமக்கள் இயக்கங்களாலும் கலந்துரையாடித் திட்டமிடப்பட்டது.

வரலாற்று அடிப்படையில், 1936 பக்ர் சிட்கி ஆட்சிக் கவிழ்ப்பில் தொடங்கி 1941 ரஷீத் அலி இராணுவ இயக்கம், 1948 வாத்பா எழுச்சி மற்றும் 1952, 1956ல் நடந்த தொடர்ச்சியான எழுச்சிமிக்க கிளர்ச்சி நடவடிக்கைகள், போராட்டங்களின் உச்சகட்டமாக ஜூலை14 புரட்சி கிட்டத்தட்ட எந்த எதிர்ப்பும் இல்லாமல் வெற்றி பெற்றது. அண்டை நாடான ஜோர்டானில் உள்ள ஹாஷிமியர்கள் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிநாட்டுச் சக்திகளின் வேலை என்றே கருதினர்.

இந்தப் புரட்சி 1914இல் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் நிறுவப்பட்ட ஹாஷிமியரின் இராச்சியத்தை முடிவுக்குக் கொண்டுவந்து. காலனியாதிக்கத்திற்கு பிந்தைய சகாப்தத்தைத் தோற்றுவித்தது. 1941 ஆம் ஆண்டு நாஜி சார்பு ரஷீத் அலி அல்-கெய்லானியின் கோல்டன் சதுக்க சதியின் போது நடந்தது போலன்றி, காசிமின் ஆட்சி மாற்றத்திற்கு எதிராக முடியாட்சியை மீட்டெடுக்க ஆங்கிலேயர்கள் படையெடுப்பு எதையும் நடத்தவில்லை.

அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தளபதி அப்துல் கரிம் காசிம் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதே நேரத்தில் கர்னல் ஆரிப் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இராக்கின் உயர்ந்த நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். முஹம்மது நஜிப் அல்-ரூபாய் இறையாண்மைக் கவுன்சிலின் தலைவரானார். புதிய புரட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்கும் முக்கியப் பணியை இராக்கிய கம்யூனிஸ்டுக் கட்சியுடன் அணிசேர்ந்த ஜனநாயக மக்கள் முன்னணி மேற்கொண்டது.

ஆட்சிக்கவிழ்ப்பு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து உருவான புதிய இராக்கியக் குடியரசிற்கு புரட்சிகர கவுன்சில் தலைமையேற்றது. இராக்கின் மூன்று இனக்குழுக்களின் உறுப்பினர் கொண்ட இறையாண்மை கவுன்சிலின் தலைமையில் புதிய அரசு செயல்பட்டது. இறையாண்மைக் கவுன்சிலில் முஹம்மது மஹ்தி குப்பா ஷியா இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்; காலித் அல்-நக்ஷபாண்டி குர்து இன மக்களையும், நஜிப் அல்-ரூபாய் சன்னி இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த முத்தரப்பு அதிபர் தலைமையை ஏற்றுக்கொள்வதாக இருந்தது. இராக்கிய அரசியல் இயக்கங்களின் பரந்த அளவிலான ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டது: அது தேசிய ஜனநாயகக் கட்சியில் இருவரையும், மார்க்சியர் ஒருவரையும், அல்-இஸ்திக்லால் அமைப்பிலிருந்து ஒருவரையும், பாத் கட்சியிலிருந்து ஒருவரையும் உள்ளடக்கியதாக அமைந்தது.

ஜூலை 26, 1958 இல் இடைக்கால அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு பொது வாக்கெடுப்பிற்குப் பின் நிரந்தர அரசியலமைப்புச் சட்டத்தை அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது.. அரசியலமைப்பின் படி இராக் ஒரு குடியரசாகவும் இஸ்லாத்தை அரசின் மதமாகக் கொண்டு அரபு தேசத்தின் ஒரு பகுதியாகவும் இருக்குமாறு முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவைக்குச் சட்ட அதிகாரங்கள் இறையாண்மை கவுன்சிலின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டன, நிர்வாக அதிகாரங்களும் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டன. இராக்கிய அரசியலமைப்புச் சட்டமானது இனம், தேசியம், மொழி அல்லது மதம் கடந்து அனைத்து இராக்கிய குடிமக்களுக்கும் சமத்துவத்தையும்,சுதந்திரத்தையும் வழங்கியது. 1943 முதல் 1945 வரை குர்திஷ் எழுச்சிகளில் பங்கேற்ற குர்துகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுவிக்கப்பட்டனர்.

சமூகச் சீர்திருத்தம்:

காசிம் இராக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மீதான தடையை நீக்கினார். 1958 ஆம் ஆண்டு விவசாயச் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார். இராக்கில் முடியாட்சியால் ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார். விவசாய நிலங்களை விவசாயிகளுக்குப் பிரித்தளித்தார். ஏழை, நடுத்தர வர்க்க மக்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்குவதற்கான 35,000 குடியமைப்புகளை ஏற்படுத்தினார். இதற்கு மிக முக்கிய உதாரணம்: பாக்தாத்தின் புதிய புறநகர்ப் பகுதியிலிருந்த புரட்சி நகரம் மதினத் அல் தவ்ரா, பாத் கட்சியின் ஆட்சியின் கீழ் சதாம் நகரம் என அதன் பெயர் மாற்றப்பட்டது, இப்போது பரவலாக சதர் நகரம் என்று குறிப்பிடப்படுகிறது.

காசிம் ஆட்சியில் கல்வி பெரிதும் விரிவுபடுத்தப்பட்டது. கல்வித்துறைக்கான நிதி 1958ஆம் ஆண்டில் 13 மில்லியன் தினார்களிலிருந்து 1960இல் 24 மில்லியன் தினார்களாக உயர்த்தப்பட்டது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்தது. வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் பெருமளவு முதலீடு செய்வதற்கும், அதே நேரத்தில் இராக்கின் விவசாயப் பொருளாதாரத்தை தொழில்மயமாக்கம் செய்வதற்காக மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் பொருளாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்த 1959-1961 ஆண்டுகளில் பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இந்தச் சீர்திருத்தங்கள் காசிம் கொல்லப்பட்டதால் அரைகுறையாக நிறுத்தப்பட்டு விட்டன.

காசிம் இராக்கின் எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்க எல்லா முயற்சிகளும் மேற்கொண்டார். வெளிநாட்டின் பிடியிலிருந்த இராக்கின் பல எண்ணெய் வயல்களைப் புதிதாக உருவாக்கப்பட்ட இராக் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் பெயரில் மாற்ற பொதுச்சட்டம் 80 கொண்டுவரப்பட்டது. செப்டம்பர் 1960 இல் ஆங்கிலோ-அமெரிக்க இராக் பெட்ரோலிய நிறுவனத்தின் 99.5% பங்குகளை இராக்கிய அரசு கைப்பற்றியது. 1961இல் இராக்கிய பெட்ரோலிய நிறுவனத்தின் கிட்டத்தட்ட 400,000 கிமீ எண்ணெய் வயல்களை விரிவாக்கம் செய்வதற்கான அனைத்து உரிமைக்கான கோரிக்கைகளை நிராகரித்தது. ஒரு புதிய இராக்கிய தேசிய எண்ணெய்க் கழகத்தை அமைப்பதற்கான வரைவுச் சட்டம் அக்டோபர் 1962 இல் வெளியிடப்பட்டது, ஆனால் பிப்ரவரி 1963 இல் காசிமை அகற்றிய ஆட்சி மாற்றத்தின் போது நடைமுறைக்கு வரவில்லை1959 மொசூல் கலகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான மரண தண்டனைகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார். அவரைத் தூக்கியெறியப் பல்வேறு சமயங்களில் முயன்றவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். காசிமின் கடுமையான விமர்சகர்களால் கூட அவரை ஊழல்வாதியாக ஒரு போதும் சித்திரிக்க முடியாத அளவிற்கு நேர்மையானவராகவும் இருந்தார்.

நிலச் சீர்திருத்தம்:

புரட்சியானது இராக்கிய விவசாயத் துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. சீர்திருத்தங்களால் கிராமப்புற இராக்கின் பழைய நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பை அகற்றினர். எடுத்துக்காட்டாக, சாகுபடியாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் சட்டம் மற்றும் பழங்குடியினர் வழக்காடு நெறிகள் மறுசீரமைக்கப்பட்டன. இது இராக்கின் விவசாய மக்களுக்குப் பயனளித்தது. சட்டத்தின் சிறந்த செயல்முறையை உறுதி செய்தது. விவசாயச் சீர்திருத்தச் சட்டத்தால் (30 செப்டம்பர் 1958) பெரிய அளவில் நில உரிமை மறுபகிர்வு செய்யப்பட்டது. விவசாயிகளிடையே நிலம் சமமாக விநியோகிக்கப்பட்டது. மேலும் நில வாடகைக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டது. புதிய வாடகைச் சட்டங்களின் காரணமாக, விவசாயிகளால் பயிர் விளைச்சலில் 55% முதல் 70% வரை பெறமுடிந்தது.. நிலச்சீர்திருத்தம் சக்திவாய்ந்த நில உரிமையாளர்களின் அரசியல் செல்வாக்கைக் குறைப்பதில் வெற்றி கண்டது.

பெண் விடுதலை:

இராக்கில் பெண்களுக்கு அதிக சமத்துவத்தை ஏற்படுத்த காசிம் முயன்றார். இராக்கின் சிவில் சமூகத்தில் பெண்களைச் சேர்க்கவும் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும் முக்கியத்துவம் அளித்தார், கல்வி மற்றும் அரசியல் பங்கேற்பு மூலம் அதிகாரம் பெற பெண்களை ஊக்குவித்தார். சமுதாயத்தில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக காசிம் அரசியலமைப்பை மறுசீரமைத்தார்..

டிசம்பர் 1959இல் அவர் தனி நபர் தகுநிலை நெறிகளில் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கும் வகையில் திருத்தம் அறிவித்தார். குறிப்பாகக் குடும்ப உறவுகளை ஒழுங்குபடுத்தினார். பலதார மணம் செய்வதை சட்டவிரோதமாக்கினார். மேலும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. பெண்கள் நியாயமற்ற மணமுறிவிலிருந்து பாதுகாக்கப்பட்டனர். மிகவும் புரட்சிகரச் சீர்திருத்தமாக அரசியலமைப்புச் சட்டத்தின் 74ஆவது பிரிவு பெண்களுக்குப் பரம்பரைச் சொத்துகளில் சம உரிமைகள் பெற வழிவகுத்தது. சன்னி, ஷியா பிரிவினர் பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததால், இந்தச் சட்டங்கள் காசிமிற்குப் பிறகு நீடிக்கவில்லை..

வெளியுறவுக் கொள்கைகள்:

சுதந்திரத்திற்குப் பிறகு காசிம் சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார், சோவியத் யூனியனுடன் விரிவான பொருளாதார ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். பாக்தாத் ஒப்பந்தத்திலிருந்து இராக்கை வெளியேற்றினார். இராக்கின் வெளியுறவுக் கொள்கையை மேற்கு நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து நீக்கினார். இராக் இங்கிலாந்துடன் மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். இராணுவம், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாக 1954, 1955ஆம் ஆண்டுகளில் முடியாட்சி கையெழுத்திட்ட அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திலிருந்து இராக்கை விலக்கிக் கொண்டார். பிரான்சுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான அல்ஜீரிய, பாலஸ்தீனியப் போராட்டங்களை காசிம் ஆதரித்தார்.

பாக்தாத்தில் ஒபெக் (பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு) நிறுவப்படுவதற்கான அடித்தளத்தையும் காசிம் அரசு அமைத்துக் கொடுத்த்து. 1960: ஈரான், இராக், குவைத், சவுதி அரேபியா, வெனிசுலா ஆகிய நாடுகளின் மாநாட்டில் ஒபெக் நிறுவப்பட்டது.

1959ஆம் ஆண்டில் காசிம் ”ஈரானின் குஜெஸ்தான் பகுதி அரபு மொழி பேசும் சிறுபான்மையினரின் தாயகமாக இருந்தது, அது இராக்கிற்கு சொந்தமானது” என உரிமை கோரினார்.,அது போல் குவைத்திலும் இராக்கிற்கு உரிமை கோரினார்.

ஆட்சிக் கவிழ்ப்பு:

1958ஆம் ஆண்டில் இராக்கில் ஏற்பட்ட தேசியப் புரட்சிக்கு ஆரம்பத்தில் பாத் கட்சி உள்ளிட்ட பல்வேறு தேசியக் குழுக்களின் ஐக்கிய முன்னணி ஆதரவு அளித்தது. இந்த ஒன்றுபட்ட முன்னணி காலப்போக்கில் பிளவுற்றது. காசிம் பதவிக் காலத்தில், காமல் அப்தெல் நாசர் தலைமையிலான ஐக்கிய அரபுக் குடியரசில் இராக் சேர வேண்டுமா என்பது குறித்துப் பெரிய விவாதம் ஏற்பட்டது. நாசரின் பேரரபியக் கௌமியக் கொள்கைகளை ஆதரித்து ஐக்கிய அரபுக் குடியரசுடன் இராக்கை இணைக்க விரும்பினார் ஆரிஃப். அதற்கு மாறாக காசிமோ பேரரபியத்தை ஆதரிக்காமல் இராக்கையே முன்னிலைப்படுத்தும் வதானியக் கொள்கையில் உறுதி கொண்டு. சமயச் சார்பின்மையையே உயர்த்திப் பிடித்தார். இராக்கின் கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.

இராணுவ அதிகாரிகளில் பெரும்பகுதியினர் வடமேற்கு நகரங்களிலிருந்து சன்னி மரபில் வந்தவர்கள். பேரரபியம் மீதான அவர்களது ஆர்வத்தை காசிம் பகிர்ந்து கொள்ளவில்லை: அவர் தென்கிழக்கு இராக்கில் சன்னி-ஷியா பெற்றோரின் கலப்பு மரபில் வந்தவர். ஆகவே, அவரால் அதிகாரத்தில் நீடிக்க முடியுமா என்பது கம்யூனிஸ்டுகளுக்கும் பேரரபியர்களுக்கும் இடையே இணக்கம் ஏற்படுத்த முடியுமா என்பதைப் பொறுத்த்தாயிற்று. தனது பதவிக் காலத்தில் காசிம் இராணுவத்தில் வளர்ந்து வந்த பேரரபியப் போக்கை மட்டுப்படுத்த முயன்றார். அவரால் இறுதி வரை இராணுவத்தின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. குர்திய இன மக்களுடன் இணக்கமான உறவைப் பேணவே காசிம் இறுதி வரை போராடினார்.

எகிப்திய-சிரிய ஒன்றியத்தில் சேருவது குறித்து காசிம், ஆரிஃபிற்கிடையே ஒருவகை அதிகாரப் போராட்டம் உருவானது. ஆரிஃப்பின் நாசரிய, பேரரபியச் சார்பை பாத் கட்சி ஆதரித்தது, அதே நேரத்தில் காசிமின் கொள்கைகளுக்கும் ஐக்கிய எதிர்ப்பு நிலைக்கும் இராக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தந்தது. ஐக்கிய முன்னணியிலிருந்து பாத் கட்சி உள்ளிட்ட பேரரபிய ஆதரவாளர்கள் வெளியேறினர்.

பல மூத்த அதிகாரிகள் துணைப் பிரதமரிடமிருந்தே நேரடியாக அதிகாரத்தைப் பெற்றனர். பொதுச் சொற்பொழிவுகளில் பங்கேற்பதன் மூலம் ஆரிஃப் புதியதொரு செல்வாக்கைப் பெற்றார். ஐக்கிய அரேபியக் குடியரசுடன் இணைவதை வற்புறுத்தினார். காசிமைக் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆரிஃபின் சீர்குலைக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டுப்படுத்த காசிம், ஆரிஃபை துணைத் தளபதி பதவியிலிருந்து நீக்கினார். நவம்பர் 5 ஆம் தேதி ஆரிஃப், காசிமை படுகொலை செய்து ஆட்சியை அகற்ற முயற்சித்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆரிஃப் தேசத் துரோகத்திற்காக விசாரணை செய்யப்பட்டு 1959 ஜனவரியில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு டிசம்பர் 1962இல் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. ஆரிஃப்பின் அச்சுறுத்தல் நீங்கிய பின் 1941இல் இராக்கிலிருந்து தப்பி ஓடிய முன்னாள் பிரதம மந்திரி நாஜி ஆதரவாளர் ரஷீத் அலி வடிவத்தில் மற்றொரு அச்சுறுத்தல் வந்தது. அவர் காசிமிற்கு எதிராக மேற்கொண்ட சதி முயற்சிகளும் இறுதியில் முறியடிக்கப்பட்டன.

காசிமின் அமைச்சரவையின் 16 உறுப்பினர்களில் 12 பேர் பேரரபியத்தில் நம்பிக்கை கொண்ட பாத் கட்சி உறுப்பினர்கள். காமல் அப்தெல் நாசரின் ஐக்கிய அரபுக் குடியரசில் சேர காசிம் மறுத்ததால் பாத் கட்சி அவருக்கு எதிராகத் திரும்பியது. அரசு இயந்திரத்தில் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்திக் கொள்ள, காசிம் இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (ஐ.சி.பி.) ஒரு கூட்டணியை உருவாக்கினார், இந்தக் கூட்டணி பேரரபியத்தின் எந்தவொரு கருத்தையும் ஏற்கவில்லை.அந்த ஆண்டின் பிற்பகுதியில், பாத் கட்சியின் தலைமை காசிமை படுகொலை செய்வதற்கான திட்டங்களை வகுத்தது. இந்த நடவடிக்கையில் சதாம் உசேன் ஒரு முன்னணி உறுப்பினராக இருந்தார்.

1959 அக்டோபர் 7ஆம் நாள் அல்-ரஷீத் தெருவில் காசிம் மீது திடீர்த் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர்: ஒரு நபர் காரின் பின்புறத்தில் அமர்ந்திருந்தவர்களைக் கொல்ல வேண்டும், மீதமுள்ளவர்கள் முன்னால் இருப்பவர்களைக் கொல்லத் திட்டமிடப்பட்டது. பதுங்கியிருந்த போது சதாம் முன்கூட்டியே சுடத் தொடங்கியதால் திட்டம் தோல்வியடைந்தது.. காசிமின் ஓட்டுநர் கொல்லப்பட்டார், காசிம் கையிலும் தோளிலும் காய்முற்றார். கொலையாளிகள் அவரைக் கொன்று விட்ட்தாக நம்பி விரைவில் தங்கள் தலைமையகத்திற்கு தப்பிச்சென்றனர், ஆனால் காசிம் உயிர் தப்பினார்.

கம்யூனிஸ்டுகளுடனான காசிமின் நெருக்கத்தின் காரணமாக வடக்கு இராக் நகரமான மொசூலில் இராணுவப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அரபு தேசியவாதிகள் தலைமையில் ஒரு எதிர்க் கிளர்ச்சி ஏற்பட்டது. அதன் சதித் திட்டத்தைத் தணிக்கும் முயற்சியாக, காசிம் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் 1959 மார்ச் 6ஆம் நாள் மொசூலில் ஓர் அமைதிப் பேரணி நடத்த ஊக்குவித்தார்.. சுமார் 250,000 கம்யூனிஸ்டுகளும், அமைதிப் போராளிகளும் அன்றைய தினம் மொசூலின் தெருக்களில் அணிதிரண்டனர், அன்றைய தினம் அமைதியாய்ப் பேரணி நடந்திருந்தாலும் அடுத்த நாள் கம்யூனிஸ்டுகளுக்கும் அரபுத் தேசியவாதிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. வளர்ந்து வரும் கம்யூனிச அலையைத் தடுத்து நிறுத்த ஒரே வழி காசிமைப் படுகொலை செய்வதுதான் என்ற முடிவுக்கு பாத் கட்சியினர் வந்தனர்.

கம்யூனிசத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கு நாடு முழுவதும் உணரப்பட்டது. மொசூல் கிளர்ச்சியை அடுத்து கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு ஆயுதப்படைகளில் களையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பல கம்யூனிச ஆதரவாளர்கள் அமைச்சரவையில் பதவிகளைப் பெற்றதால் இராக் அமைச்சரவை இடது சார்பு பெற்றது. கம்யூனிஸ்டுகளால் கிர்குக்கில் பகுதியில் ஜூலை 14 ஆம் நாள் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.. அதில் குர்துகளுக்கும் (அந்த நேரத்தில் ஐ.சி.பி உடன் தொடர்புடையவர்கள்), இராக்-துர்க்மென் ஆகியோருக்கும் இடையில் பரவலான இரத்தக்களரி ஏற்பட்டது, இதனால் 31 முதல் 79 பேர் வரை இறந்தனர். இது பெரும்பாலும் முன்பே நிலவிய இனப் பதட்டங்களின் விளைவாக இருந்தபோதிலும், கிர்குக் "படுகொலை" இராக்கிய கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப், பயன்படுத்தப்பட்டதால் காசிமிற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே இணக்கமின்மை ஏற்பட்டது. இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியுடனான காசிம் ஆட்சியின் உறவு எப்போதும் எளிதானதாக இருக்கவில்லை.

காசிமின் ஆட்சி மாற்றத்தின் இராணுவத் தன்மை, அரபு தேசியவாதிகளை அவரது அமைச்சரவையில் சேர்ப்பது, தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமின்மை ஆகியவற்றை கம்யூனிஸ்டுக் கட்சி முழுமையாக ஆதரிக்கவில்லை. ஜூலை புரட்சிக்குப் பின்னர் காசிம் தலைமையிலான புரட்சிகர ஆட்சியைக் காக்க கம்யூனிட் கட்சி கட்டமைத்த மக்கள் இயக்கம் முக்கியப் பங்காற்றியது. இருப்பினும், பல குறிக்கோள்களைப் பகிர்ந்து கொண்டாலும், காசிம் ஐ.சி.பியின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முயன்றார். மேலும் அதைக் கலைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். தடையை மீறி, கட்சி பாக்தாத்தில் பெரும் செல்வாக்கைப் பெற்றது. அதனால் காசிம் கம்யூனிஸ்டு கட்சியை "கணக்கிற் கொள்ள வேண்டிய சக்தி" என்று மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டது.

இராக்கிய அரபுத் தேசியவாதிகளை திருப்திப்படுத்த காசிம் மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கு எதிராகத் திரும்பி, இறுதியில் அவரை அழிப்பதற்கே பங்களிப்புச் செய்தன. உதாரணமாக, காசிம், தடுப்புக் காவலில் இருந்த சாலிஹ் மஹ்தி அம்மாஷை விடுவித்து அவரை இராக் இராணுவத்தில் மீண்டும் பணியில் அம ர்த்தினார். இதனால் பாத் கட்சியின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு இராணுவத் தொடர்பாளராக அம்மாஷ் செயல்பட வழியமைந்தது.

மேலும், குர்துகள் மீதான வெளிப்புற நட்பு நிலைப்பாடு இருந்த போதிலும், காசிமால் இராக்கிற்குள் குர்திஸ்தானின் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க முடியவில்லை. இது 1961 முதல் இராக்-குர்திஷ் போர் வெடித்ததற்கும் குர்திஷ் ஜனநாயகக் கட்சிக்கும் (கேடிபி) மற்றும் காசிமின் பாத்திஸ்டுக்கும் இடையிலான இரகசியத் தொடர்புகளுக்கு வழிவகுத்தது. 1962 மற்றும் 1963 ஆம் ஆண்டுகளில் . பாத் கட்சியினர் ஆட்சிக் கவிழ்ப்பு செய்தால் காசிமுக்கு உதவ மாட்டோம் என்று பேரரபிய சித்தாந்தத்தின் மீதான நீண்டகால விரோதப் போக்கை புறக்கணித்து குர்திஸ் ஜனநாயகக் கட்சி உறுதியளித்தது,. காசிம், இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, குர்திஸ் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட வெற்றிடத்தை 1963 பாத் கட்சியின் ஒரு "சிறிய" குழு பயன்படுத்திக் கொண்டது.

இராக்கில் புரட்சியின் வெற்றியை மேற்கத்திய நாடுகள் மிகுந்த பீதியுடன் பார்த்தன. பனிப்போரின் மத்திய கிழக்கு சோவியத் எதிர்ப்பு இராணுவக் கூட்டமைப்பின் மையமான பாக்தாத் ஒப்பந்தம் இராக் இல்லாமல் அர்த்தமற்றதாக இருந்தது. ஐக்கிய அமெரிக்க் அரசு மற்றும் பிரிட்டிஷ் அரசைப் பொறுத்தவரை, முடியாட்சிக் கவிழ்ப்பு ஒரு பெருந்துன்பமாக இருந்தது, ஆங்கிலேயர்கள் திகைத்துப்போனாலும், தங்கள் இழப்பைக் குறைத்து, காசிமுடன் ஒரு புதிய உறவை உருவாக்குவதில் உறுதியாக இருந்தனர். இராக் பெட்ரோலிய நிறுவனத்துடனான அவர்களின் பொருளாதார நலன்கள் பராமரிக்கப்படும் வரை, அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தனர்.

இராணுவப் பிரமுகர் அஹ்மத் ஹசன் அல்-பக்ர், காசிமின் "இராக்கை முதன்மைப்படுத்தும்" பாணியிலான ஆட்சியைக் கண்டு சோர்வடைந்து அதிருப்தி அடைந்த சன்னி பழங்குடியின ஷேக்குகள், நடுத்தர வர்க்க இராக்கியர்கள் மற்றும் பேரரபியர்களுடன் கூட்டணி அமைத்தார். பிப்ரவரி 1963 இன் "ரமலான் புரட்சி" என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சதியால் காசிமின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.காசிமிற்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு இருந்த போதிலும்,உள்நாட்டுப்போரைத் தவிர்ப்பதற்காகக் கம்யூனிஸ்டுகளை ஆயுதம் ஏற்கவேண்டாம் என்று அவர் முடிவு செய்ததால், இரு தரப்புகளிக்கிடையே நிலவிய சமமற்ற ஆயுத வலிமையால் காசிம் வானொலி நிலையத்தில் தடுக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார், ஜூலை 14 புரட்சி உண்மையில் கர்னல் அப்துல் சலாம் ஆரிப்பின் திட்டம் தான் என்று ஒப்புக்கொள்ள காசிமுக்கு உத்தரவிடப்பட்டது. காசிம் அதற்கு மறுத்துவிட்டார், பாத் கட்சியினர் அவரை நாடுகடத்துவதற்கும் மறுத்தனர்.தலைவர் காசிமைத் தூக்கிலிட்டு, அடையாளம் இல்லாக் கல்லறையில் அடக்கம் செய்தனர். இந்த சதி கணிசமான சிஐஏ ஆதரவுடனே மேற்கொள்ளப்பட்டது. பாத் கட்சி உறுப்பினராக இருந்த சதாம் ஹுசைன் சதித்திட்டத்தில் நெருக்கமாக ஈடுபட்டார்

இதற்கு முன்னரே காசிமைக் கொலை செய்ய சிஐஏ தீவிரமான சதி சதி வேலைகளில் ஈடுபட்டது., ஒரு முறை காசிமைக் கொல்ல,விசங்கொண்ட கைக்குட்டையை அனுப்பியது, ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது.

இராக் கம்யூனிஸ்ட் கட்சியை இராக் அரசியலிலிருந்து அகற்றுவதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்த அமெரிக்கா முன்பே தயாராய் இருந்தது.அதன் படி காசிம் ஆட்சியின் ஆதரவாளர்கள், கம்யூனிஸ்டுகள் என 5,000 பேர் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களில் மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்குவர். அவர்களில் கர்ப்பிணிப் பெண்களும் வயதான ஆண்களும் இருந்தனர், அவர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் சித்திரவதை செய்யப்பட்டனர். பாக்தாத் மற்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள் இப்படுகொலைகளை அறிந்திருந்தனர் புரட்சியின் முதல் இரண்டு நாட்களில் இராக்கிய வானொலி அறிக்கைகளை கண்காணித்து வந்தனர்.புதிய ஆட்சியின் அறிவிப்புகள், ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரையும் அழித்தொழித்துத் துடைத்தெரிய மக்களை அழைத்தன. ‘குற்றவாளிகளை அழிக்கவும்’, ‘அவர்கள் அனைவரையும் கொல்லவும், குற்றவாளிகள் அனைவரையும் கொல்லவும்’ என மக்களிடம் வலியுறுத்தினர். இவை யாவும் பல முறை மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது.

இராக்கின் எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்க காசிம் மேற்கொண்ட முயற்சிகளே அவரை அழிப்பதற்கான முக்கியக் காரணமாக அமைந்தது.

1961 ஆம் ஆண்டில் காசிம் இராக்கிலிருந்த பிரிட்டிஷ் அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து இராக் அரசிற்கு 50 சதவீதத்திற்கான பங்கைக் கோரினார்.அதற்கு அவர்கள் உடன்படவில்லை. நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக விலையை நிர்ணயிப்பதாகவும் புகார் தெரிவித்தார். அந்த நிறுவனத்தின் 99.5 சதவீதப் பங்குகளை நாட்டுடைமையாக்கவும் ஒரு புதிய இராக்கிய தேசிய எண்ணெய் கழகத்தை அமைப்பதற்கான வரைவுச் சட்டம் அக்டோபர் 1962 இல் வெளியிட்டார்., ஆனால் பிப்ரவரி 1963 இல் காசிம் கொலை செய்யப்பட்டதால் அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

காசிமை கொலை செய்த பாத் கட்சியின் ஆட்சி அந்த நவம்பர் வரை நீடித்தது,அதை சதியால் வீழ்த்தி நாசரிய சார்பு இராணுவ அதிகாரிகளின் குழு ஆட்சிக்கு வந்தது. இன்னொரு ஆட்சிக்கலைப்பு சதியால் பாத் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது.2003ல் அமெரிக்காவின் சதியால் சதாம் ஹுசைன் கொல்லப்படும் வரை பாத் கட்சியே ஆட்சியில் நீடித்தது.அன்று ஆரம்பமான அமெரிக்க ஆக்கிரமிப்பு இன்னும் நீடிக்கிறது. இன்றைய இராக்கின் சூழலிலும் அமெரிக்கத் தலையீடு, அமெரிக்காவை எதிர்த்து ஈரானின் தலையீடு, நிலையற்ற சமூகப் பொருளாதார நிலை, போரபாயம் என ஈரான் தேசியத்தின் இறையாண்மை தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறது. இராக்கை முன்னிலைப்படுத்தும் புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிமின் வழியில்மீண்டும் ஒரு தேசிய விடுதலைக்கானப் போராட்டத்தை ஏற்படுத்த வேண்டியத் தேவை உள்ளது.காசிமின் ஆட்சி நான்கு ஆண்டுகள், ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்த போதிலும் அவரது ஆட்சி சமூக சீர்திருத்த நடைமுறைகளால், சமூக நீதிக்கான ஒரு முன்னுதாரணமான ஆட்சியாக இருந்துள்ளது போற்றுதலுக்குரியது..

இராக்கை நாசரிய ஆதிக்கத்திலிருந்தும்அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து விடுவித்த காசிம் இராக்கில் நாட்டுப்பற்றின் தேச அடையாளமாக போற்றப்படுகிறார். மதச்சார்பற்ற இடதுசாரி இராக்கியர்களிடையே காசிமின் நீடித்த புகழ், என்றென்றும் தொடர்கிறது.

இராக்கின் கடந்த கால வரலாறு சதாம் மற்றும் இராக் பாத்திஸ்டுகளின் நீண்டகால ஆட்சியால் மூழ்கியிருந்தாலும், இராக் கம்யூனிஸ்ட் கட்சி நவீன இராக்கில் காசிமின் வரலாற்றை நினைவூட்டும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் .ஃபிர்டஸ் சதுக்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு தோறும் பேரணிகளை நடத்துகிறது, அங்கு ஜூலை 14 புரட்சியின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக ஆதரவாளர்கள் காசிம் ஆட்சியின் கொடியையும் ஆட்சியாளரின் பெரிய உருவப்படங்களையும் கையிலேந்தி செல்கின்றனர். காசிம் யார், அவரது புரட்சி இராக்கை எவ்வாறு மாற்றியது? இன்றைய சூழலில் ஜூலை 14 புரட்சியில் இருந்து என்ன படிப்பினைகளை எடுக்க முடியும்? என்பதை இன்றையத் தலைமையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நிகழ்வுகளை ஒருங்கமைக்கிறது.

காசிமின் கல்லறை 2005ல் கண்டுபிடிக்கப்பட்டபோது, நீண்டகாலமாக மறக்கப்பட்ட நினைவுகள் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டன.

இராக்கிய சிற்பி கலீத் ரஹால் வடிவமைத்த காசிமின் சிலை, இப்போது பாக்தாத்தில் அல்-ரஷீத் தெருவில். நினைவுச்சின்னமாக வீற்றிருக்கிறது. அந்த நினைவுச் சின்னத்தை அர்ப்பணித்த நாளில் ஃபதேல் முகமது அல்-பயாட்டி அதை “ புகழ்பெற்றஜூலை14 புரட்சியின் நினைவுச்சின்னம்” எனப் போற்றினார்..

“இது அழியாத ஜூலை 14
பெருமிதம் மிக்க சிப்பாயின்
உயர்ந்த, திகைப்பூட்டும் பாய்ச்சல்,
மீட்பரின் வலிமையாக உருவெடுத்தது
மக்களுக்காகக் கிளர்ந்தெழுந்த புரட்சித் தலைவர்
முறுக்கேறிய தசைகளுடன் அவரது, கைமுட்டி
எல்லா திசைகளிலுமுள்ள சிறைச்சாலைக்
கம்பிகளையும் உடைத்தெறிகிறது...

ஒரு வெடிப்பாக மக்களிடமிருந்து
வெடித்து வந்தது அவரது உடல்
துப்பாக்கியைப் பிடிக்கும் கை
மக்களின் கைகளால் வலுப்பெற்றது.
புரட்சியின் விடியல் ஆண்டாண்டு
துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து
இராக் மக்களின் சக்தியை
ஆக்கஆற்றலாக பெயர்த்தது
இருளுக்குப் பிறகு ஒளியாக மேலே ஒரு வட்டாக சூரியன்,.
இது இராக்கின் பழஞ் சின்னங்களில் ஒன்று.
அங்கே [பண்டைய மெசொப்பொத்தேமியாவில்]
உலகை ஒளிரச் செய்ய சூரியன் முதலில் உதித்தது
இங்கே புரட்சியின் சூரியன் முதலில் உதித்தது,
அதன் அச்சமற்ற சிப்பாயின் [அப்துல் கரீம் காசிம்]
தலைமையில்.
சிப்பாய் அவரது காலால் தீமையைக் குறிக்கும்
கவசத்தை மிதித்தார். அந்தக் கேடயத்தின் பின் தான்
கொடுங்கோன்மை, ஊழலின் அனைத்து ஆட்சிகளும்
அடைக்கலம் பெற்றிருந்தது...”

சில புரட்சியாளர்கள் குறைந்த காலமே வாழ்ந்தாலும் வரலாற்றின் மிகப்பெரும் உந்துசக்தியாக நீக்கமற நிறைந்து பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

பல முற்போக்கான புரட்சியாளர்களை நீண்ட காலம் வாழ எதிரிகள் விட்டுவைப்பதில்லை.அவர்களின் வாழ்க்கை முழு மலர்ச்சி அடைவதற்குள் உயிர் பறிக்கப்படுகிறது, அவர்களின் பேரிழப்பால் ஏற்படும் கோபக் கணல், எதிரிகள் எதற்கு அஞ்சி அவர்களை அழிக்க நினைத்தார்களோ அதை இன்னும் மும்முரத்துடன் நிறைவேற்றுவதற்கான ஆயுதமாகிறது அவர்களின் புரட்சிகர சாதனைகள் எழுச்சி தரும் வரலாற்றுச் சின்னங்களாக முழு மலர்ச்சி பெற்று நம் நினைவிலும் செயல்பாட்டிலும் நீங்காது நிறைந்துள்ளது. வரலாற்றிலும் மக்கள் மனதிலும் அவர்களே என்றென்றும் வாழ்கிறார்கள்.

இராக்கிய மக்களின் நினைவில் வாழும் புரட்சியாளர் அப்துல் கரிம் காசிமிற்கு புகழஞ்சலி செலுத்தி நம் வீரவணக்கத்தை உரித்தாக்குவோம்.

Pin It