சாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன.சாதிப் பட்டங்கள் (அய்யர், முதலியார், பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாயக்கர், ரெட்டியார், நாடார் முதலியன)சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்.புதிதாக மணம் புரிவோர் அத்தனை பேரும், கலப்பு மணம் செய்யுமாறு தூண்டக்கூடிய சட்டங்கள் இயற்றப்படவேண்டும்.

ஒரே வகுப்பில்,ஒரே சாதிப் பிரிவில் திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும்,கட்டுத் திட்டங்களையும் விதித்து,அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கில்லாமல் செய்ய வேண்டும் சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களையும் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் சாதிகள் அடியோடு ஒழியும்.

இவை மட்டுமல்ல சாதிக்கு அடிப்படையாயிருப்பது எது?இந்து மதம்.அதை ஆதரித்து நிற்பவை எவை? வேதம், இதிகாசம், சாஸ்திரம், புராணம், முதலிய கட்டுக்கதைகள். இவைகளுக்கு அடிப்படையாக உள்ளவை எவை? இந்து மதக் கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள்.

எனவே, இவ்வளவையும் ஆணிவேருடன் பிடுங்கி எறிந்தாலொழிய, சாதியை எப்படி ஒழிக்க முடியும்?இவ்வளவையும் காப்பாற்றுவதற்காகவுள்ள ஒரு சமுதாயமான பார்ப்பனர்களின் –வைதிகர்களின் மனப்பான்மையை மாற்றியாக வேண்டும் அல்லது அவர்களைத் தனியாகப் பிரித்து நீக்கி வைக்க வேண்டும். ஏன்? இந்து மதம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்;இந்துமதம் ஒழிந்தால் தான் பார்ப்பனியமும் அதே நேரத்தில் அழிந்துபோகும். இதைப் பஞ்சமா பாதகம் செய்யும் பார்ப்பான்கூட விரும்ப மாட்டான்!

"இங்கிலீஷ் அரசியலமைப்பு' என்ற நூலை  எழுதிய புரோபசர் டிசே என்பவர், "புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான்;போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான்' என்று கூறியிருக்கிறார். அது போலவே, பார்ப்பனனாகப் பிறந்தவன் சாதிப் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில்,போப்புக்குள்ள அதிகாரம் அதிகம்; அவைகளைக் காட்டிலும் நூறுமடங்கு அதிகமாக இந்நாட்டுப்பார்ப்பனர்களுக்கு இருக்கின்றது.

இவர்கள், இதர சாதிகளைத் தூண்டிவிட்டு, "பார், கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும் சரியாகுமா?'என்று கூறிப்பிரித்து வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டிலிருக்கும் வரையில் (இங்கிலீஷ் காரரைப் பின்பற்றி) இந்தப் பிரித்தாளும் பித்தலாட்ட வேலையைச் செய்து கொண்டுதான் இருப்பான்! சாதிப் பிரிவுகள் பகுத்தறிவுக்கு முரணானவை என்பதையும் பார்ப்பனர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில், பகுத்தறிவுக்கு இந்து சாஸ்திரங்கள் 144 உத்தரவு பிறப்பித்திருக்கின்றன.

"யார் என்ன சொன்னாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது.எத்தனையோ எதிர்ப்புகளையும் கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது நமது இந்து மதம்'என்று சர்.ராதா கிருஷ்ணன் போன்ற மேதாவிகள் கூறலாம்.உயிரோடிருப்பதனால் மட்டும் ஒரு விஷயம் உயர்வானதாகிவிடுமா?

 எவ்வளவோ  எதிர்ப்புகளுக்கிடையே எலி, கொசு, ஈ, தேள், பாம்பு, மூட்டைப்பூச்சிகள் கூடத்தான் உயிரோடிருக்கின்றன.மனித சமுதாயமே எதிர்த்துவரும் குடி,விபச்சாரம் கூடத்தான் உயிரோடிருக்கின்றன.இவைகளெல்லாம் இந்து மதத்தைவிடப் புனிதமானவைகளா? அதிகப் பலன்தரக்கூடியவைகளா என்று கேட்கிறோம்.

இறுதியாக ஒன்று கூறுவோம், சாதியை ஒழிக்க விரும்புவோர், மேடைப் பிரசங்கம் மட்டும் செய்தால் போதாது. கலப்பு திருமணத்தைத் தவிர, வேறு சுய சாதிமணம் செய்யவே கூடாது. புத்தரும் குரு நானக்கும் கூறியதுபோல்,வேதமும் சாஸ்திரங்களும் முழுப் பொய் என்று பச்சையாகவே கூறவேண்டும். இவ்வளவையும் செய்யக்கூடிய ஆற்றலும் துணிவும் தியாக உணர்ச்சியும் படைத்த இளைஞர்களால்தான் சாதியை ஒழிக்க முடியும்.                               –

('விடுதலை' தலையங்கம் 10.1.1947)

கருப்புச் சட்டை ஏன்?

கேள்வி : கடவுள் இல்லை என்று சொல்கின்றீர்களே, அப்படியானால் ஒரு மனிதன் ஏன் பணக்காரனாய் இருக்கிறான்? ஒரு மனிதன் ஏன் ஏழையாக இருக்கிறான்?

பதில் : தனி உடைமைக் கொள்யையை ஒழித்துப் பொதுவுடைமைக் கொள்கையை ஏற்படுத்தாததால் ஒருவன் பணக்காரனாகவும், ஒரு ஏழையாகவும் இருக்க முடிகின்றது.

கேள்வி :  நீங்கள் ஏன் கருஞ்சட்டை அணிந்து கொள்கிறீர்கள்?

பதில் :  நான் என்னமோ சட்டப்படி, சாஸ்திரப்படி சூத்திரனாம். பார்ப்பானின் தாசி மகனாம், அப்படி இருக்க எனக்கு இஷ்டமில்லை அது எனக்கு அவமானமாக, துக்ககரமானதாக இருக்கிறது. அந்த இழிவை உணர்ந்திருக்கிறேன். அதைப் போக்கிக் கொள்ள முயற்சிப்பேன் என்பதன் அறிகுறியாக இதை அணிந்து கொள்கிறேன். உனக்கும் அவமானமாயிருந்தால் அணிந்துகொள் அப்படி உனக்கு மானமில்லையானால் கறுப்புச் சட்டை அணிந்து கொள்ள வேண்டாம்.

– தந்தை பெரியார்

Pin It