கடந்த 16-03-2013 அன்று மதியம் 2 மணியளவில் கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த நபீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்ற 9வயது சிறுமி குழந்தைகள் சிலருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அதே கிழக்குத் தெருவைச் சேர்ந்த நபீலாவின் உறவுக்காரரான "தம்பி மெடிக்கல்ஸ்'அபு பக்கர் சித்தீக் என்பவரது பேரன் சைபுல் ஹமீது என்ற சிறுவன் நபீலாவின் செருப்பை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டான்.

செருப்பை கேட்க சைபுல் வீட்டிற்கு சென்றிருக்கிறாள் சிறுமி நபீலா. அவ்வீட்டிலிருந்த கார் டிரைவர் ஜானகி ராமன் என்கிற ராமு,நபீலாவை பலாத்காரம் செய்ய முயற்சித்து வாயிலும் உடம்பிலும் முத்தம் கொடுத்து,சிறுமியின் ஜட்டியைக் கழற்றியும் சில்மிஷம் செய்துள்ளார்.

இந்த நேரத்தில் நபீலாவின் செருப்பை எடுத்துச் சென்ற சைபுல் ஹமீது அங்கு வந்து விடவே,அவனைப் பார்த்த டிரைவர் ராமு மிரண்டு போய் அந்தப் பெண்ணை முதுகில் அடித்து,அச்சிறுமியை மிரட்டி யாரிடமும் இது குறித்து சொல்லக் கூடாது என்று விரட்டியுள்ளார்.

வீட்டிற்கு வந்த சிறுமி நபீலா,அம்மா ஷகீனாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)நடந்த சம்பவத்தைச் சொல்ல அக்குடும்பத்தினர் டிரைவரை கண்டிக்க தமது உறவினரான அபு பக்கர் சித்தீக் வீட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கே டிரைவர் இல்லாததால் அவர்கள் திரும்பி விட்டனர்.

பின்னர்,இரவு 8மணியளவில் அபு பக்கர் சித்தீக் மனைவியான ஜசீமாவிடம் இந்த சம்பவத்தை சொன்னதும் அவர், “உன் மகள் பொய் சொல்கிறாள். டிரைவர் இதோ வருகிறார் அவரிடமே கேட்டுக் கொள்...''எனக் கூறி இருவரையும் “வெளியே போய் பேசிக் கொள்ளுங்கள்'' என்று வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளார்.

டிரைவரிடம் ஷகீனா கேட்க...தான் அப்படியெல்லாம் செய்யவில்லை என ராமு மறுத்துள்ளார்.உடனே அந்தச் சிறுமி “நீ என்கிட்ட தப்பா நடந்துக்கிட்ட...எனக்கு முத்தம் கொடுத்த...என்னென்னமோ செஞ்ச...''என்று கூறவே டிரைவர் ராமு “நான் தப்பு செஞ்சிட்டேன். என்னை செருப்பால் அடி...'' என அரற்றியிருக்கிறார். அந்தச் சிறுமியும் செருப்பைக் கழற்றி அடித்திருக்கிறாள். அந்தச் சிறுமியின் தாயாரும், அங்கிருந்த சிலரும் டிரைவர் ராமுவை அடித்துள்ளனர்.

அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் சிலர் இந்த தகவல் அறிந்து அவர்களும் ஆத்திரப்பட்டு அந்த டிரைவரை அடித்துள்ளனர். இதனால் அவமானப்பட்ட அந்த டிரைவரை அவரின் எஜமானர் அபு பக்கர் சித்திக் கையைப் பிடித்து தன் வீட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிந்ததும் எஸ்.ஐ. கோட்டைச் சாமியும் 2 காவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்து நடந்தவற்றை சிறுமி நபீலாவிடம் விசாரித்தனர். அந்தச் சிறுமி பேசப் பேச...அதை அப்படியே காவல்துறையினர் வீடியோவில் பதிவு செய்து கொண்டிருக்கும்போது அபு பக்கர் சித்தீக்கின் வீட்டிலிருந்து, “ஐயோ... டிரைவர் தூக்கு மாட்டிக்கிட்டான்'' என்ற அலறல் சத்தம் கேட்டது.

பதறிப்போன எஸ்.ஐ.கோட்டைச் சாமியும் காவலர்களும் கதவைத் தட்டி வீட்டிற்குள் சென்றனர். அவர்களுடன் பொது மக்கள் சிலரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அப்போது வீட்டின் உள்ளே இருக்கும் கிணற்றின் கப்பி கம்பியில் நைலான் கயிறு கட்டி, கிணற்றின் உள்ளே 3அடி ஆழத்திற்கு டிரைவர் ராமுவின் உடல் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. எஸ்.ஐ. கோட்டைச்சாமி பொது மக்களின் உதவியுடன் அந்த கயிரை அறுத்து உடலை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்.

இரவு சுமார் 9 மணியளவில் இச்சம்பவம் நடக்க, அச்சமயம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டத் தலைவர் முஸம்மில் ஹார், மாநில நிர்வாகிகளான நாச்சியார் கோவில் ஜாபர், ரஸ்தா செல்வம் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் கீழக்கரை வல்லல் சீதாக்காதி சாலை பகுதியில் இயக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தினமணி நிருபர் நிஸ்பர் என்பவர், “கிழக்குத் தெருவில் என்ன நடந்தது?'' என்று யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது எஸ்.பி.எஸ்.ஐ.ஜேம்ஸ் தலைமையிலான போலீஸ் படை ஜீப்பில் ஹார்ன் அடித்தபடியே அப்பகுதியை பரபரப்பாக கடந்து சென்றது.ஐஎன்டிஜே நிர்வாகிகள் என்ன ஏது என்று அறிய பதறியபடி சம்பவ இடத்திற்கு சென்று எஸ்.பி.எஸ்.ஐ. ஜேம்ஸிடம் சம்பவம் குறித்து கேட்க...

“9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் டிரைவர் ராமு. இதை கண்டித்து பொது மக்கள் தட்டிக் கேட்டதால் வீட்டிற்குச் சென்று தூக்கு போட்டுக் கொண்டிருக்கிறார் டிரைவர் ராமு. இன்ஸ்பெக்டர் கணேசன் வந்து உடலைக் கைப்பற்றி ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் கணேசன், எஸ்.ஐ. கோட்டைச்சாமி ஆகியோர் அபு பக்கர் சித்தீக்கின் வீட்டில் விசாரிக்கும்போது...அபு பக்கர் சித்தீக்கும் அவருடைய மனைவி ஜெசிமாவும்,பொது மக்களில் சிலர் அடித்ததாகவும், அவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவமானம் தாங்காத டிரைவர் தூக்கு போட்டுக் கொண்டார்...''என்று நிர்வாகிகளிடம் கூறியுள்ளார் எஸ்.பி. எஸ்.ஐ. ஜேம்ஸ்.

அப்போது மாவட்ட தலைவர் முஸம்மில் ஹார் இன்ஸ்பெக்டர் கணேசனிடம், “சிறுமியின் பெயர் வெளியே வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்ல, “நோ காம்ப்ரமைஸ். சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்...'' என்றார் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆக்ரோஷமாக!

இன்ஸ்பெக்டர் கணேசன் இப்படி சொன்னதற்கான காரணம் அடுத்த நாள்தான் புரிந்தது. யாருடைய தூண்டுதலின் பேரிலோ தற்கொலையை கொலையாக மாற்றியிருந்தது காவல்துறை.

அன்று இரவு 11மணியளவில் சிறுமியின் வீட்டிற்கு மகளிர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, இன்ஸ்பெக்டர் கணேசன், எஸ்.ஐ. கோட்டை சாமி, எஸ்.பி. எஸ்.ஐ. ஜேம்ஸ் தலைமையில் வந்த குழு விசாரணை நடத்தி,அந்தச் சிறுமியிடம் வாக்குமூலத்தையும் அவளுடைய தாயாரிடம் புகார் மனுவையும் வாங்கிச் சென்றுள்ளனர்.

அன்றைய தினம் இரவு 3மணியளவில் அந்தச் சிறுமியின் வீட்டிற்கு மீண்டும் வந்த இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீஸ் டீம்,சிறுமியின் தாய் மாமன் சுலைமானிடம் “எஃப்.ஐ.ஆரில் கையெ ழுத்து போட வேண்டும். வா...'' என்று அவரை கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றது.

இந்நிலையில்,கீழக்கரையில் இருந்த ஐஎன்டிஜே மாநில நிர்வாகிகளுக்கு சுலைமானை காவல்துறையினர் அழைத்துச் சென்ற தகவல் தெரியவர அவர்கள் டி.எஸ்.பி.சோம சேகரைச் சந்தித்து “சுலைமானை எதற்காக கைது செய்தீர்கள். அவர் அப்பாவி. மனநிலை சரியில்லாதவர்'' என்று எடுத்துச் சொல்லியும், டி.எஸ்.பி. சோம சுந்தரம் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் “இது திட்டமிட்ட கொலை. அதற்கு சாட்சியம் இருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும். அமைதியாக இருங்கள். பின்னர் பார்க்கலாம்...'' என்று கூறியுள்ளார். ஐஎன்டிஜே நிர்வாகிகளுடன் எஸ்.டி.பி.ஐ. நகரத் தலைவர் அப்துல் காதிரும் இருந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட டிரைவர் ராமுவின் வகுப்பினரான ஆசாரி நாடார் சமூகத்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் போலிஸ் ஸ்டேஷன் எதிரில் கூடி நின்றனர்.பதட்டமான இந்த நிலையைப் புரிந்து கொண்ட ஐஎன்டிஜே நிர்வாகிகள், தங்களுடைய மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கருக்கும், மாநிலப் பொதுச் செயலாளர் சையது இக்பாலுக்கும் தகவல் தர,மாநிலப் பொதுச் செயலாளர் இக்பால் சென்னையில் இருந்தபடி டி.ஜி.பி. அலுவலகத்தில் பேசிய தோடு, இராமநாதபுரம் எஸ்.பி. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணாவையும் தொடர்பு கொண்டு நிலைமை விபரீதமாக சென்று விடாதபடி கீழக்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து உடனடியாக 2வேன்களில் பாதுகாப்பு போலீஸார் கீழக்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.கைது செய்யப்பட்ட சுலைமான் நோயாளி என்பதால் அவருக்கு சாப்பாடும் மாத்திரையும் கொடுப்பதற்காக கீழக்கரை காவல் நிலையம் சென்ற அவரது குடும்பத்தினரிடம், “அவர் சிக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். ஏர் வாடி போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார் என்று போலீஸார் அலைக்கழித்துள்ளனர். அன்று மாலை 5.30 மணியளவில் கொலைக் குற்றத்திற்காக சுலைமானை காவல்துறை கைது செய்துவிட்ட தகவல் ஊர் முழுக்க பரவியது.

இதற்கிடையில் அன்றைய தினம் 3 மணியளவில் கீழக்கரையில் வைத்து டிரைவர் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று போஸ்ட் மார்ட்டம் செய்துள்ளது காவல்துறை. இதன் மர்மம் என்னவென்று புரியவில்லை.

டிரைவர் ராமு தூக்கு போட்டுதான் தற்கொலை செய்து கொண்டார் என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகும், இது தற்கொலையல்ல கொலை; இந்தக் கொலையை திட்டமிட்டு மறைக்கப் பார்க்கிறார்கள் என்று பாஜக மற்றும் இந்து முன்னணி துணையோடு 300க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தினர்.

அங்கு வந்த எஸ்.பி. மயில்வாகனன், “போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தூக்கு மாட்டித்தான் இறந்து போனார் என்று வந்துள்ளது. இது தற்கொலையா? கொலையா? என்று விசாரித்து சொல்கிறோம்.உடலை எடுத்துச் செல்லுங்கள் என்று போராட்டக்காரர்களிடம் கூறியதும், அந்த உடலை எடுத்துச் சென்றவர்கள் கீழக்கரை ஈ.சி.ஆர்.முக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டு,கீழக்கரை முழுவதும் ஊர்வலமாக சென்றுதான் உடலை அடக்கம் செய்வோம் என முரண்டு பிடித்துள்ளனர்.

“உடலை நீங்கள் அடக்கம் செய்யா விட்டால் நாங்கள் அடக்கம் செய்து விடுவோம்'' என்று போலீஸ் கூற,போராட்டக்காரர்கள் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

மறுநாள் காலை சுலைமானுக்காக பெயில் பெட்டிஷன் போடச் சென்றவர்கள் அங்கே காவல்துறை போட்டிருந்த எஃப்.ஐ.ஆரைப் வாங்கிப் பார்க் கும்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த எஃப்.ஐ.ஆரில் சுலைமான்,அவரின் மருமகள் நயிலா மற்றும் சாகிரா என்பவர் உள்ளிட்ட 18 பேர் சேர்ந்து டிரைவர் ராமுவை அடித்து தூக்கில் மாட்டி கொலை செய்ததாக எக்ஸ்பிரஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

ஐ.பி.சி. 147, 323, 302 ஆகிய நான் பெயிலபிள் செக்சன்களில் 18 பேரை குற்றவாளிகளாக இணைத்துள்ளது காவல்துறை. இதில் இருவர் கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள். ஒருவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி. ஒருவர் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி. மற்றும் பெண்கள் 4 பேர் உட்பட 10 பேர் ஆவர்.

இதன் அடுத்த கட்டமாக எஃப்.ஐ.ஆரில்.சேர்க்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர் பாவா என்பவரை கடந்த 21ம் தேதி கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரித்து மேலும் 3 பேரை கூடுதலாக வழக்கில் சேர்த்துள்ளது.

இன்னும் பலரைத் தேடி வரும் போலீஸின் கைது நடவடிக்கை கன்னித் தீவு,சிந்துபாத் கதைபோல் நீண்டு கொண்டே போகிறது.இதனால் கிழக்குத் தெருவில் இரவு 9 மணியானவுடன் அனைவரும் எங்கு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. பயந்து நடுங்கி மரண பயத்துடன் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் (சற்று மனநிலை பாதிக்கப்பட்ட)சுலைமான் வாக்குமூலம் கொடுத்ததாக ஒரு கிரைம் ஸ்டோரி நாவல் தயாரித்துள்ளது கீழக்கரை காவல்துறை.அவர்,தமது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் ராமுவை சும்மா விடக் கூடாது என தனது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டி ராமுவை அடித்து மஞ்சள் கயிறால் கட்டி கிணற்றில் தொங்க விட்டு விட்டு தற்கொலைபோல் நாடகமாடியதாக கிரைம் ஸ்டோரியை தயாரித்துள்ளது காவல்துறை.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி இராமநாதபுரம் தொகுதி எம்.எல். ஏ. ஜவாஹிருல்லாஹ், ஐஎன்டிஜே தலைவர் முஸம்மில் ஹார்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அன்வர், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபு பக்கர், இணைச் செயலாளர் சுவைபு, ஹைராத்துல் ஜலாலியா உயர் நிலையப் பள்ளி தாளாளர் சாதிக் ஆகியோர் இராமநாதபுரம் டி.ஐ.ஜி. இராம சுப்பிரமணியனை சந்தித்து கீழக்கரையில் நடந்த சம்பவம் குறித்து எடுத்துக் கூறி, “இது தற்கொலை. கொலையாக மாற்றப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. சோம சேகர் மேல் எங்களுக்கு நம்பிக்கையில்லை. வேறு அதிகாரியை வைத்து மறு விசாரணை செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைக்க,

டி.ஐ.ஜி. இராம சுப்பிரமணியனோ “இது சாட்சியத்தோடு பலர் முன்னிலையில் திட்டமிட்டு நடந்த கொலை என போலீசார் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்'' என்றதோடு “சுலைமானுக்குப் பிறகு கைது நடவடிக்கை தொடர்ந்ததா? இனி கைது இருக்காது'' என உறுதியளித்துள்ளார். ஆனால் அடுத்த நாள் ஆட்டோ டிரைவர் பாபு என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

டி.ஐ.ஜி.உடனான இந்த சந்திப்பு இராமநாதபுரத்தில் நடந்த அதே சமயம் சென்னையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர், பொதுச் செயலாளர் சையது இக்பால்,மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா ஆகியோர் டி.ஜி.பி.யை சந்தித்து கீழக்கரையில் கைது நடவடிக்கை வேண்டாம் என்றும் மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.டி.ஜி.பி.யும் கைது நடவடிக்கை இருக்காது என்று உறுதியளித்த பின்னரும் கைது நடவடிக்கை தொடர்கிறது.

இதற்கிடையில் கீழக்கரையில் வன்முறையைத் தூண்டும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர், இந்து ஒருவரை முஸ்லிம் சமூக விரோதிகள் அடித்து கொலை செய்து விட்டனர்;கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் மாபெரும் கலவரம் உண்டாகும் என அனைத்து இந்து பொது மக்கள் என்ற பெயரில் போஸ்ட்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்ட்டர் குறித்து முஸ்லிம் தரப்பில் சிலர் காவல்துறையிடம் தகவல் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளது. அதை பத்திரிகை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது.இதேபோல கீழக்கரை அனைத்து ஜமாஅத்தினர்,இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் ஒன்றிணைந்து சி.பி.ஐ.விசாரணை கோரியிருப்பதுடன் மதக் கலவரங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர், உள்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., தென் மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

டிரைவர் ராமு அவமானம் தாங்காமல் அபு பக்கர் சித்தீக்கின் வீட்டிற்குள் தற்கொலை செய்து கொண்டதற்கு வெளியில் நின்ற நூற்றுக்கணக்கான பொது மக்கள் சாட்சியாக இருக்கும் நிலையில், பொய் சாட்சிகளை வைத்துக் கொண்டு தற்கொலையை கொலையாக மாற்ற கீழக்கரை காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர் என்பதையே திரும்பத் திரும்ப கூறு கின்றனர் கீழக்கரைவாசிகள்.

“கம்ப்ளையின்ட் பார்ட்டிகள் சொல்வதைத்தான் செய்கிறோம்'' - இன்ஸ்பெக்டர் கணேசன் பேட்டி!
ஃபைஸல்

டிரைவர் ஜானகி ராமனின் மரணம் குறித்து, எஸ்.பி. எஸ்.ஐ. ஜேம்ஸிடம் பேசினோம்...

கேஸ் விசாரணையில் இருக்கும்போது நான் எதுவும் அது பற்றி கமெண்ட் பண்ணக் கூடாது.ரிப்போர்ட் எதுவோ அதை அப்படியே நாங்கள் மேலிடத்திற்கு கொடுத்து விடுவோம்.இது சம்மந்தமாக நீங்கள் கேட்க வேண்டும் என்றால் லோக்கல் இன்ஸ் பெக்டரைத்தான் கேட்கனும்...'' என்றார் ஜேம்ஸ் நம்மிடம்.

நாம் கீழக்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கணேசனைத் தொடர்பு கொண்டு, தற்கொலையை கொலையாக மாற்ற காவல்துறை முயற்சிக்கிறது என்கிற கீழக்கரைவாசிகளின் குற்றச்சாட்டை முன் வைத்து விளக்கம் கேட்டோம்.

“அந்த தெருவாசிகள் (கிழக்குத் தெரு) அப்படி சொல்லத்தான் செய்வார்கள். அக்யூஸ்ட் பார்ட்டிகள் இப்படித்தான் சொல்வார்கள்.கம்ப்ளைண்ட் பார்ட்டி என்ன சொல்கிறார்களோ அந்த ஆங்கிள்லதான் விசாரணை போகும்.

காவல்துறை விசாரணையும் கம்ப்ளைன்ட் பார்ட்டி சொல்ற அடிப்படையிலதான் போகுமே தவிர, அக்கியூஸ்ட் பார்ட்டி சொல்றதை யாரும் கேட்கிறது கிடையாதே. அக்யூஸ்ட் தரப்புல சொல்றதைக் கேட்டு நாங்க டிசைடு பண்ண முடியாது...'' என்று சொன்ன கணேசனிடம்,

“சம்பவத்தன்று வேடிக்கை பார்த்த மக்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாமே காவல்துறை?'' என்றோம்.

“எல்லாம் முடிஞ்ச பிறகுதான் போலீசுக்கே தகவல் தருகிறார்கள். கொலை பண்ணி தூக்குல தொங்க விட்டாங்க என்றுதான் வழக்கே போகுது.நாங்க அங்கே போனதும் அங்குள்ளவர்கள்தான், “சார்... உயிர் இருக்குங்கிறாங்க. அப்ப உடலை இறக்குகிறோம். ஆஸ்ப்பிட்டலுக்கு கொண்டு போற நேரத்துல உயிர் போனதை டிசைட் பண்றோம்.

இது ஒரு கம்யூனிட்டி ஆஃப் பீப்பிள்ஸ் இருக்குற இடம்.அந்த வீட்டுக்காரம்மாவும் முஸ்லிம்தான். அவங்களோட ஸ்டேட்மென்ட் கிளியரா இருக்கு. அதை வைத்துத்தான் நாங்க விசாரணை செய்கிறோம்.அதோட சம்பவ இடங்களையும் நாங்கள் பார்வையிடுகிறோம். அந்த ஆங்கிள்ல தான் விசாரணை போகுது...'' என்றவரிடம்,

எஸ்.பி.மயில்வாகனன் தூக்கு போட்டுக்கிட்டதாகத்தான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறாரே?'' என அடுத்த கேள்வியை முன் வைத்தோம்.

“உயிர் போனது தூக்குலதான். ஆனா தூக்குல போட்டாங்களா இல்ல அவனா தொங்குனானாங்கிறதுதான் பிரச்சினை. இதை இன்னும் முடிவு செய்யவில்லை. விசாரணை போய்க் கொண்டிருக்கிறது...'' என்று பதிலளித்த இன்ஸ்பெக்டர் கணேசனிடம்,

“சம்பவ தினத்தன்று டிரைவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தபோது உங்கள் எஸ்.ஐ. கோட்டைச்சாமி அந்த வீட்டுக்கு வெளியே நின்றிருந்த பொது மக்களை தனது செல்போன் மூலம் படமெடுத்ததாகவும்,அதில் பதிவானவர்களை குறி வைத்து தேடி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்களே?'' என்றோம்.

“அங்கிருந்தவங்கள்ல யாரா வது முன்வந்து நான் அங்கே இருந்தேன். இப்படி நடந்தது என்று சொன்னா நடவடிக்கை எடுக்கலாம். அப்படி சொல்ற அளவுக்கு யாருமே இல்லையே!

அந்த வீட்டுக்காரம்மா சொல்றதை வச்சு நாங்க விசாரணை நடத்திட்டிருக்கோம். ஐம்பது, நூறு பேர் அங்க நிக்கிறாங்க. அதுல சிலர் அவனை அடிக்கும்போது அவங்க முன்னாடிதான் அவன் எஸ்கேப் ஆகுறான். வீட்டு வாசல்வரை மக்கள் நிக்கிறாங்க.

அதுல சில பேரு அவனை தேடிக்கிட்டு வீட்டுக்குள்ளே போறாங்க. இதுக்கிடையில அவன் தூக்கு போட்டுக்கிட்டான்னு சொன்னால் எப்படி டிசைட் பண்றது?அதனால பல கோணங்கள்ல இந்த கேஸ் போகுது சார்.

யார் மீதும் வழக்கை திணிக்கனும்னு நாங்க முயற்சி பண்ணல. பாதிக்கப்பட்டவங்க என்ன சொல்றாங்க;அந்த வீட்டுக்காரங்க என்ன சொல்றாங்க அத வச்சுத்தான் கேஸ் போகுது. எதிர் தரப்பு சொல்றதை வச்சு உறுதியாக கேஸ் போகாது.

வழக்கு போடப்பட்டிருக்கிற வங்க பேரு யாருக்குமே தெரியாது. கம்ப்ளைன்ட் பார்ட்டியான அந்த வீட்டுக்காரம்மா சொல்றதை வச்சும்,அக்யூஸ்ட் தரப்புல சொல்றதை வச்சும்தான் நாங்க கேஸ் போடறோம்.இதுல பர்பஸா யாருடைய பேரையும் சேர்க்க வழியில்ல. இவன்தான் வீட்டின் மாடிக்கு வந்தான்.இவன் தான் செஞ்சான்னு அந்த வீட்டுக் காரங்கதான் அடையாளம் சொல்றாங்க.அந்த கிழக்குத் தெருவுல அந்த கம்ப்ளைன்ட் பார்ட்டிக்கும், அவனை கூட்டிட்டுப் போன ஒன் ஆஃப் த அக்யூஸ்டுக்கும் தவிர வேறு யாருக்கும் இதுல சம்மந்தப் பட்டவங்களோட பேரு தெரியாது.ஜெஸிமா குடும்பத்தினர் சொல்றதை வச்சுத்தான் ராமுவின் அம்மா கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்க...'' என்றவர்,

“சார் ரெண்டு தரப்பும் எங்களைத்தான் குற்றம் சுமத்துறாங்க. அதைப் பற்றி எனக்கு பிரச்சினையில்லை.டி.ஜி.பி.கிட்ட கொடுக்கப் பட்ட பெட்டிஷன் எல்லாம்கூட எங்களுக்கு வந்திருக்கு. நாங்க முடிவு செய்ய முடியாது. விசாரணையும், சாட்சியும்தானே சார் முடிவு செய்ய முடியும்?''என்று தன் தரப்பு விளக்கத்தை சொன்ன இன்ஸ்பெக்டர் கணேசன், “காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் பண்ணப் போறதா தகவல் வருது. ரெண்டு தரப்பும் ஆர்ப்பாட்டம் பண்ணிக்க சொல்லிட்டேன்.ஆர்ப்பாட்டம் பண்ணா இந்த விஷயம் கவனத்தை ஈர்க்கும். அப்ப கேஸ் இன்னும் வேகம் எடுக்கும்...'' என்றார் கடைசியாக!

Pin It