*      2003 நவம்பர் : மராட்டிய மாநிலம் பர்பானி முகமதிய மசூதியில் ஆற்றல் வாய்ந்த ஒரு குண்டு வெடித்துப் பலர் படுகாயம்.

*      2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் ஜல்னா குவாதிர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் போது பலருக்குக் காயம்.

*      2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் நந்தேடு என்ற இடத்தில் இரண்டு பஜ்ரங்தளத் தொண்டர்கள் ஒரு குழாய் வெடிகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாய் அந்தக் குண்டு வெடித்ததில் அவ் இருவரும் உயிரிழப்பு, விசாரணையில் அந்தக் குண்டு உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட வீடு ஓர் ஆர்.எஸ்.எஸ். தொண் டருடைய வீடு எனக் கண்டுபிடிப்பு.

*      2006 சனவரி : அதே மராட்டிய மாநிலம் தானே நகரின் கட்கரி அரங்கில் நேர்ந்த குண்டு வெடிப்பு. அதில் ஈடுபட்ட அனைவரும் ஜன்ஜக்ரான் சமிதி என்கிற இந்துத் தீவிரவாத அமைப்பினர் என்கிற உண்மை வெளிப்பாடு.

*      2006 செப்டம்பர் : மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமியர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியான பிக்குசவுக் என்ற இடத்தில் ஆற்றல் வாய்ந்த நான்கு குண்டுகள் தொடர்ந்து வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு. பலர் படுகாயம்.

*      2007 பிப்ரவரி : புதுதில்லிக்கும் லாகூருக்கும் இடையே அரியானா மாநிலம் பானிப்பட்டு அருகே ஓடும் சம்ஜவ்தா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடித்துப் பலர் சாவு.

*      2007 மே : ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு.

*      2007 நவம்பர் : இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் இரம்சான் நோன்பின் போது குண்டு வெடிப்பு.

*      2008 செப்டம்பர் : மராட்டிய மாநிலம் அதே மலேகான் நகரில் மீண்டும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஏராளமானோர் உயிரிழப்பு. பலருக் குப் படுகாயம். பலகோடி ரூபாய் பொருள் இழப்பு.

நாட்டின் பல பகுதிகளில் நடந்த இத்தகைய தொடர் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் இசுலாமியத் தீவிரவாதிகள் தான் காரணம் என்று இந்துத்துவ வெறிக்கு ஆட்பட்ட எல்லோரும் பச்சையாய்ப் புளுகினார்கள். பாகிஸ்தானின் தூண்டுதல்தான் காரணம் என்ற அவர்களின் கூற்றை நாளேடுகளும் ஊடகங்களும் ஊதிப் பெருக்கின. ‘சிமி’ அமைப்பைச் சேர்ந்த பல அப்பாவி இசுலாமிய இளைஞர்கள் விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; வன்கொடு மை செய்யப்பட்டார்கள்.

அஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இசுலாமிய அறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மைய மாநில அரசுகளின் இத்தகைய கண்மூடித்தனமான செயல்களுக்குத் தம் கடுங்கண்டனத்தைத் தெரிவித்தனர். “அரசும் காவல்துறையும் ‘இசுலாமியக் குழுக்கள் மட்டுமே இவற்றைச் செய்திருக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு வருவது முட்டாள்தனமும் மோசடித்தனமான கற்பனையும் ஆகும். இசுலாமியர்கள் மட்டுமே அடர்த்தி யாக வாழக்கூடிய இடத்தில் இரமலான் நோன்பு பிறக்கும் காலமும், தொழுகை நடைபெறும் நேரமும் பார்த்து ஏன் இவர்கள் இந்தக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த வேண்டும்?” என்கிற அவர்களின் பொருள் பொதிந்த வினாவை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை.

ஆனால் உண்மையைப் பல காலம் பூட்டி வைக்க முடியுமா? பொய்யும் புனைசுருட்டும் வெளிப்படாமலா போகும்? 2008 செப்டம்பர் 29 அன்று மலேகான் நகரில் இரண்டாவது முறையாய் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப்பின், அக்டோபர் 23 அன்றே பிரக்கியாசிங் தாகூர் என்கிற பெண் துறவியையும், அவருடைய இரண்டு உதவியாளர்களையும் காவல்துறை கைது செய்கிறது. அதற்குப் பிறகேனும் அரசும் காவல்துறையும் புலனாய்வுத் துறையை முழு வீச்சில் முடுக்கி விட்டு உண்மைகளை விரைவில் வெளிக்கொணர்ந்து இருக்கலாம்.

போலிப் பெண் துறவியான பிரக்கியா தாகூர் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. யிலும் (அகில பாரத வித்யார்த்தி பரிஷத்) விசுவ இந்து பரிசத்தின் பெண்கள் பிரிவான துர்கா வாகினிப் படையிலும் தீவிர உறுப்பினராக இருந்தவர். இந்தக் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்த போதெல்லாம் இந்தியா முழுவதிலும் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் இது இந்து மதத்தை அழிக்கச் செய்யும் சதி என்று கூச்சல் போட்டு மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டன.

ஆனால் பெருச்சாளி கட்டுச் சோற்றிலிருந்து வெளிப்பட்ட கதையாக, இந்த மதவெறிக் கூட்டத்தின் சதிகாரக் கூட்டு இப்போது வெளிப்பட்டுவிட்டது.

2007ஆம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் நடந்த மெக்கா மசூதி குண்டு வெடிப்புத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அசிமானந்தர் என்பவர் தானாக முன்வந்து அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டார்.

நவகுமார் சர்க்கார் என்பது இவருடைய இயற்பெயர். இயற்பியலில் முதுகலைப்பட்டம் முடித்தவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கக் கொள்கைப் பரப்புநராக அந்தமான் நிக்கோபர் தீவுகள் போன்ற பல இடங்களுக்கு அனுப்பப்பட்டவர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகமிக நெருக்கமானவர். பல நிகழ்ச்சிகளில் அவருடன் சேர்ந்து ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டவர்.

மெக்கா மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மட்டு மின்றி இராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மலேகான் குண்டு வெடிப்பு, புதுதில்லி - லாகூர் சம்ஜவ்தா தொடர் வண்டிக் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அத்தனைக்கும் தானும் தான் சார்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் காரணம் என்று மனந்திறந்து அவர் சொல்லிவிட்டார்.

இவ்வாறு இவரை மனந்திறக்க வைத்த நிகழ்ச்சி எது தெரியுமா? கீழ்க்காணும் இவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படித்தால் உண்மை புரியும். “மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நான் ஐதராபாத்துச் சிறையில் இருந்தேன். என்னுடன் சிறையில் இருந்தோரில் கலீம் என்னும் 21 வயது இளைஞனும் ஒருவன். அவனும் அதே மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைப் பட்டிருந்தான். நான்காண்டுகளுக்குப் பிறகும் அவனுக்குப் பிணை கிடைக்கவில்லை. அவன் என்மீது மிகவும் அன்புகாட்டினான். எனக்கு உணவு தண்ணீர் எடுத்துவர உதவினான். இஃது என் மனச்சான்றை உறுத்தியது. நான் செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடவே இப்படி ஒப்புதல் வாக்குமூலம் தர முடிவு செய்தேன். இதனால் எனக்குச் சாவுத் தண்டனை கிடைக்கலாம் என்பதையும் நான் அறிவேன்”.

கல்லும் கரையும்படி, இப்படியான ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு மதவெறிக் கொலைஞன் வழங்கும் இதேநேரத்தில், 1999ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலியப் பாதிரியாரும் அவரின் இரண்டு மகன்களும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக, தில்லி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது வெந்த புண்ணில் வேல் கொண்டு பாய்ச்சுவதுபோல் உள்ளது.

1999 சனவரி 22ஆம் தேதி நள்ளிரவு ஒரிசாவில் உள்ள மனோகர்பூர்ச் சிற்றூரில் கிருத்துவப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்சும் அவருடைய இருமகன்கள் பிலிப் (9), திமோதி (6) ஆகிய மூவரும் நடுங்கும் குளிரில் ஒரு வல்லுந்தில் (ஜீப்) உறங்கிக் கொண்டிருந்தனர். அம்மூவரையும் அங்கே திரண்ட ஓர் இந்துப் பாசிச மதவெறிக் கும்பல் உயிரோடு கொளுத்திச் சாம்பலாக்கியது. இப்படுகொலையைத் தாராசிங் என்ற கொடியவன் தன் கூட்டாளிகளுடன் முன்நின்று நடத்தினான்.

ஈவிரக்கமற்ற இந்த ஈனச் செயலை இந்துப் பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தளம்தான் நடத்தி இருக்க வேண்டுமென நாடு முழுமையிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

அப்போதைய நடுவண் உள்துறை அமைச்சரான எல்.கே. அத்வானி “பஜ்ரங்தள் அமைப்பினரைப் பற்றி நான் நீண்டகாலமாக நன்றாக அறிந்து வைத்திருப்பவன். அவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேமாட்டார்கள்” என உறுதிபடக் கூறினார். பா.ஜ.க. கூட்டணி அரசின் நடுவண் அமைச்சர்களான முரளி மனோகர் ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், நவீன்பட் நாயக் ஆகிய மூவரும் கொலை நடந்த இடத்தை 27.1.1999 அன்று பார்வையிட்டபின் இதில் இந்து அமைப்புகளின் பங்கு எதுவும் இல்லை என்று கை விரித்தனர். இப்படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி டி.பி. வாத்வா குழுவும் கண்துடைப்பான ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்துவிட்டுத் தன் கடமையை முடித்துக் கொண்டது.

இந்தியா முழுவதும் இருந்த மதச்சார்பற்ற அமைப்புகளும், மனித உரிமைப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தாராசிங் உள்ளிட்ட கொடியவர்கள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். வழக்கை நடத்திய குர்தா குற்றவியல் நீதிமன்றம் தாராசிங்கிற்குத் தூக்குத் தண்டனையும், மற்ற பன்னிருவர்க்கு வாழ்நாள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கு ஒரிசா உயர்நீதிமன்றம் சென்றது. அங்கு தாராசிங்கின் தூக்கு, வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும் வாழ்நாள் தண்டனை பெற்ற 12 பேரில் மகேந்திரா ஹெம் ப்ராம் என்பவனின் தண்டனை மட்டும் உறுதி செய்யப்பட்டு மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

நடுவண் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) இவ் வழக்கை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. இதன்மீது கடந்த 21.1.2011 அன்று தீர்ப்புரைத்த பி. சதாசிவம், டாக்டர் பி.எஸ். சௌகான் ஆகிய இருவர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்தது.

இவ்விரு நீதிபதிகளும் “ஸ்டெயின்சும் அவருடைய இரு பிஞ்சு மகன்களும் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தாலும், மதப் பரப்புரை என்கிற பெயரில் ஏழைப் பழங்குடி மக்களைக் கிருத்துவத்திற்கு மதமாற்றம் செய்து கொண்டிருந்த ஸ்டெயின்சுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் எதிரிகளின் நோக்கமாக இருந்தது” எனப் பச்சையானதோர் இந்துப் பாசிச வெறித் தீர்ப்பை வழங்கினர்.

“அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே சாவுத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அஃதும் அந்நிகழ்வின் போதிருந்த உண்மை நிலை, சூழல் ஆகியன பொறுத்தே அது அமைய வேண்டும்” என்று கூறித் தாராசிங் தண்டனைக் குறைப்பை அவர்கள் ஞாயப்படுத்தினர்.

‘வலுக்கட்டாயமாகவோ, ஆசை காட்டியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்ததென்னும் கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதை ஞாயப்படுத்தவே முடியாது’ என்ற நீதிபதிகளின் கருத்தானது, ‘கிருத்துவ மிஷனரிகள் மருத்துவமனைகள் கட்டியும், கல்விச்சாலைகள் அமைத்தும் கபடமான முறையில் பழங்குடி மக்களை மதமாற்றம் செய்கிறார்கள்’ என்கிற காவிக் கும்பலின் அப்பட்டமான மொழி பெயர்ப்பாகவே உள்ளது.

ஒரிசாவில் ஸ்டென்ஸ் பாதிரியாரும் அவருடைய இரு மகன்களும் கொல்லப்பட்ட அதே காலக்கட்டத்தில்தான் குசராத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கிருத்துவத் தேவாலயங்கள் மீதும் பாதிரிகள் மற்றும் கன்னிமார்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடந்து வந்தன. அப்போதைய பிரதமர் வாஜ்பேயி ‘மதமாற்றம் தொடர்பாக நாடு முழுவதும் தேசிய விவாதம் நடத்த வேண்டும்’ என்று கூறி இந்துமத வெறி அமைப்புகளை உசுப்பேற்றினார். “மதமாற்றம் மூலம் ‘பாரத தேசத்தில்’ இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. முசுலீம்களின், கிருத்து வர்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாகப் பெருத்து விட்டது” என்கிற கோயாபல்சு புளுகைக் காவிக் குண்டர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் உண்மைநிலை என்ன?

ஸ்டென்ஸ் கொலை வழக்கில் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்ட நீதிபதி வாத்வா குழுவும் ‘படுகொலை நடந்த கியோஞ்சர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றும் கிருத்துவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விடவில்லை’ என்பதை மறைக்காமல் ஒப்புக் கொண்டது. அண்மையில் வெளியிடப்பட்ட சச்சார் குழுவின் அறிக்கையும் இந்நாட்டில் வாழும் இசுலாமிய மக்களின் அவலம் மிக்க வாழ்நிலையை ஓரளவுக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஆனால் இந்துத்துவ சிந்தனைக்கு ஆட்பட்டுவிட்ட இந்திய நீதித்துறை எந்த ஒன்றையும் காதில் போட்டுக் கொள்வதில்லை.

குசராத்தில் கோத்ரா தொடர்வண்டிப் பெட்டிகள் எரிக்கப்பட்டதற்கு எதிர்வினையாகப் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முசுலீம்களைப் படுகொலை செய்த நரேந்திரமோடியும், இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உதிர்த்துள்ள இதே முத்துக்களைத்தான் தனது பாணியில் அப்போது உதிர்த்தார்.

அரிதினும் அரிதான வழக்குகளில்தான் சாவுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இந்த நீதிபதிகள் கதையளக்கிறார்கள். தொழுநோய்ப் பீடித்த ஏழைப் பழங்குடி மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய எங்கிருந்தோ வந்த ஒரு பாதிரியாரும், அவருடைய இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் உயிரோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்ட கொடுமை இவர்களின் இந்துத்துவக் கண்களுக்கு அரிதினும் அரிதான வழக்காகத் தெரியவில்லை. ஆனால் உயிரற்ற ஒரு நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு மட்டும் உடனே தூக்குத் தண்டனையை இந்நீதிபதிகள் தூக்கிக் கொடுத்துவிடுவார்கள்.

அறத்தைக் கொன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு நாடு முழுவதும் அதிர்ச்சிப் பேரலைகள் எழுந்தன. நீதிக்கே நீதிமன்றம் சவக் குழி தோண்டலாமா என்று பல பேர் நெஞ்சங் கொதித்தார்கள்.

தன்நெஞ்சே தன்னைச் சுட்டதோ என்னவோ? தீர்ப்பு வழங்கிய நாளுக்கு (21.1.2011) நான்கு நாள் கழித்து அந்த இரு நீதிபதிகளும், தாம் வழங்கியிருந்த தீர்ப்பின் வரிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர்.

‘வலுக்கட்டாயமாகவோ, ஆசை காட்டியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்ததென்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதை ஞாயப்படுத்தவே முடியாது’ என்ற முன்னர்ச் சொன்ன கருத்தை ‘மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையிடுவதையும் ஞாயப்படுத்த முடியாது’ என்று மட்டும் மாற்றி இருக்கிறார்கள்.

இதுவுங்கூட ஒப்புக்குச் சப்பாணியான ஒட்டு வேலைதான். இப்படி மாற்றியதால் ‘தாராசிங்கின் குற்றச் செயலுக்குச் சாவுத் தண்டனை ஏன் வழங்கவில்லை?’ என்ற வினா எழுந்துவிடுமோ என்ற எண்ணத்தில், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்துவிட்ட தால் ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வாழ்நாள் சிறை தீர்ப்பை மாற்றத் தேவையில்லை” என்று கூறி இரண்டு நீதிபதிகளும் மல்லுக்கட்டி இருக்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் இராசிவ்காந்தி கொலை வழக்கில் நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவில் கீழமை நீதிமன்றத்தால் 26 பேருக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இறுதியில் அவர்களில் 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய தோழர்கள் கடந்த 20 ஆண்டுகளாகச் சிறைக் கொட்டடிகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் நளினிக்கு மட்டும் தூக்குத்தண்டனை, பின்னர் வாழ்நாள் சிறையாக மாற்றப்பட்டது.

12 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் சாவுத் தண்டனை தேவையில்லை என்று தாராசிங் வழக்கில் சட்டம் பேசும் நீதிபதிகள் தமிழ்நாட்டுக் கைதிகளுக்கு அதனைப் பொருத்தக்கூடாதா?

ஆக, கொல்லப்பட்டவன் ஒரு கிருத்துவனாகவோ, இசுலாமியனாகவோ இருந்தால் அவன் உயிர் கிள்ளுக்கீரை! அவனே, இந்துவாகவோ, பார்ப்பானாகவோ இருந்துவிட்டால் அந்த உயிர் மட்டும் அச்சு வெல்லமா?

இந்திராகாந்தியின் கொலைக்கு எதிர்வினையாகத் தலைநகர் தில்லியில் பல்லாயிரம் சீக்கியர் படுகொலை செய்யப்பட்டனர். பாபர் மசூதி இடிப்பையொட்டி எழுந்த கலவரங்களின் போதும், ‘கோத்ரா‘ இரயில் எரிப்பைத் தொடர்ந்தும் இந்நாட்டின் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக் கணக்கில் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டனர். என்ன செய்து கிழித்துவிட்டது நீதித்துறை?

1992 திசம்பர் 6இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ‘அதற்குமுன் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் கோயில் இருந்தது; கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் இந்த இடத்தில் மசூதி கட்டினார்’ என்கிற ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாட்டையே சுடுகாடாக்கினர் காவிக் கள்வர்கள். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லுமாறு உச்சநீதிமன்றத்தை நடுவண் அரசு அணுகியபோது ‘இஃது எமது ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டது’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்தது உச்சநீதிமன்றம்.

ஆனால் அந்த வழக்கில் கடந்த 2010 செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் மூவரும் 60 ஆண்டைய வழக்கில், “மசூதி கட்டப்பட்டிருந்த மொத்த இடமும் இந்துக்களுக்கு உரியதுதான். இங்குதான் இராமன் பிறந்தான். அந்த நம்பிக்கையோடுதான் நீண்ட காலமாக இந்நாட்டு இந்துக்கள் அங்கே வழிபாடு நடத்தி வருகிறார்கள். கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது” என்று சொல்லித் தற்போது இராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப் பகுதியை இந்துக்களுக்கே தாரைவார்த்துவிட்டார்கள். இந்திய அரசின் மதச்சார்பின்மைத் தத்துவத்தையும், நீதித்துறையின் நேர்மையையும் தமது தீர்ப்பின் மூலம் நார்நாராகக் கிழித்துப் போட்டார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு என்பவர் 2010 நவம்பர் 26 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பின் போது, “அலகாபாத் உயர்நீதிமன்றமே அழுகி நாறத் தொடங்கியுள்ளது. இங்குப் பணியாற்றும் நீதிபதிகள் சிலர் மீதே புகார்கள் வருகின்றன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். அந்நீதிபதிகளின் உறவினர்கள் தவறான வழிகளில் பொருளீட்டித் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பெருக்கிக் கொண்டு, சொகுசு வாழ்க்கையில் திளைக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். அலகாபாத் மற்றும் இலக்னோ நீதிமன்ற அழுக்குக் கறைகளை எந்த வழலைப் (சோப்பு) போட்டேனும் கழுவித் துடைத்தாக வேண்டும். இதற்கு அங்குள்ள தலைமை நீதிபதி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும்” என்று பரிந்துரைத்தார் (தி இந்து 9.12.2010).

நாறுவது இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்கள் மட்டுந்தானா? உச்சநீதிமன்ற நீதிபதிகள் மட்டுமென்ன ஒழுக்கமானவர்களா? அவர்களைக் நோக்கி வினவவே ஆளில்லையா?

பசித்தவன் வயிறு விசைத்தெழுந்தால்

பொசுங்கிப் போகும் இரும்பும் - இப்

புவியில் மிஞ்சாது துரும்பும்!

Pin It