இந்தியச் சமூகப் பண்பாட்டுச் சூழமைவுகளில் பெண்ணின் பங்கு என்பது, தொடர்ந்து, திருமண அமைப்புக்குள்ளும், அதற்கு வெளியிலுமாக அவரது எதிரிணையான ஆணுக்கு அடிமையுற்றிருப்பதாகவே உள்ளது. இந்து சமய ஆய்வுக் கட்டுரைகளிலும், காப்பியங்களிலும் இந்து சமயத்தின் மரபார்ந்த சட்ட விதிகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளபடி பார்க்கையில், ஆரிய நுழைவின் மூலமாகவும், இந்து சமயத் தோற்றத்தின் மூலமாகவும் வேத காலத்தியப் பெண்களின் நிலைப் பாடானது பெண்களின் பெருமையைக் குலைக்கும் நிலைக்குத் தள்ளுவதாகப் பொருள் கொள்ளப்பட்ட குடும்பத் தலைமையின் மதிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவும்.
கமலாதேவி சட்டோபாத்தியாயா பின்னாளில் எழுதிய இலக்கியங்களுக்கெல்லாம் இன்றியமையாத அடித்தளமிட்டுக் கொடுத்த அவரது இந்தியப் பெண்களின் விடுதலைப் போர்க்களம் (Indian Women's Battle for freedom) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“வேத காலம் தொடங்கி - அதாவது, கி.மு. 2500 முதல் கி.மு.1500 வரையிலான பழங் காலத்தில் பெண்கள் அரசியல், சமுதாயம், பொருளியல், சமயம் போன்ற எல்லாத் துறை களிலும் ஆண்களுக்குச் சமமான உரிமையை அனுபவித்தனர் என்று ஆய்வாளர்களின் புலமை சான்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் மதிப்புடன்,மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஒரு மாணவனை ஆசிரியரிடம் அனுப்பி வைத்தல் அல்லது கல்வியைத் தொடங்கி வைத்தல் என்பதான உபநயனத்தில் குறிப்பிட்டுள்ளபடி பெண் கல்வி என்பது அப்போது அவர்களது வாழ்வில் வழக்க மான ஒன்றாகத்தான் இருந்துள்ளது. வேதக் கல்வியை ஒரு பெண் தொடங்குகையில் தெய்வத்துக்கு தீர்த்தம் (புனித நீர்) படைக்கும் போது அவள் பாட வேண்டிய வரிகள் அதர்வண வேதத்தில் இடம்பெற்றுள்ளன. யக்னோ பவித்திரி என்று பெண் அழைக்கப் படுகிற நடைமுறையிலான தொடக்க நிலையைப்பற்றி விவரிக்கிறது கிருஹ சூத்திரங்களுள் ஒன்று. (சட்டோபாத்தி யாயா-9)
மனுவின் சட்டங்கள் அல்லது வர்ண சாஸ்திரங்கள்தாம் சாதிய அமைப்பையும் குடும்ப அதி கார அமைப்பையும் கொண்டு வந்தன. ஆரியரல்லாத பெண்களை ஆரியக் குடும்பங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது - அவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை அடிமைப் படுத்தி உபநயனத்தையும்,வேதக் கல்வியையும் கற்கச் செய்வதிலிருந்து கட்டாயமாக விலக்கி வைத்தது.
பெண்கள் அடிமைப்படுத்தப்படும் நோக்கத்திலேயே வேதக் கல்வி (உபநயனம்)யிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். (இதற்கு நேர்மாறாக,பிருஹத்-ஆரண்யக உபநிடதத்தின் கூற்றுப்படி, யக்ஞவல்கியர், தனது மனைவி மைத்ரேயி கேட்டுக் கொண்ட தற்கு இணங்கி, அவளுக்குப் படிப்படியாக வேதக் கல்வியைப் புகட்டியதாகக் கூறப்படுகிறது)(கர் நாடகத்தைச் சேர்ந்த லிங்காயதர்கள் போன்ற சில இனங்களில் இன்றும்கூடப் பெண்களுக்கான உபநயனம் உள்ளது). சமயம் மெதுவாக சமுதாயச் செயல்பாடுகளுக்குள் நுழைந்து பரவத் தொடங் கியது. அதன் விளைவாக, பெண்கள் அனுபவித்துக் கொண்டிருந்த சுதந்திரம் மெள்ள மெள்ள பின் வருமாறு சுருங்கியது:
“புதிய சமுதாய ஒழுங்கமைவைப் பயன் பாட்டுக்கு வலிந்து கொண்டு வரும் பொருட்டு பழைய பனுவல்களெல்லாம் திரித்து வெளிக் கொணரப்பட்டன. இவ்வாறு,கற்றறிந்த, மதிப்பார்ந்த தலைவர்கள் அல்லது ரிஷிகள் கூறியவை என்ற பெயரில் மூல சாஸ்திரப் பனுவல்களிலும், காப்பியங்களிலும் முற்றிலும் புதிய வாசகங்களைச் செருகுவதன் மூலம் பல நெறிபிறழ்ந்த நடைமுறைகள் சமுதாயத்துக் குள்ளே நுழைக்கப்பட்டன”(சட்டோபாத்தி யாயா - 18)
மனுவின் சட்டங்கள் இந்து வாழ்க்கை முறையைக் கட்டுப்படுத்துகின்ற, நெறிப்படுத்துகின்ற, முக்கிய மான பதிவாவணம் ஆகும். மனுதான் மனித இனத்தின் புராண கால முன்னோடி, அதாவது இந்தியாவின் ஆதாம் என்று கற்பித்துப் பரப்பப் படுவது மிகவும் சுவாரஸ்யமானது. மனுஸ்மிருதி அல்லது மனுசாஸ்திரம் என்று குறிப்பிடப்படும் மனுநீதி வேதகாலத்துக்குப் பிந்தைய காலத்தில் தான் ஒப்புக்கொள்ளப்பட்டது.
பண்டைய இந்தியாவில் கருத்துநிலை வேதங்களினாலும்,அவற்றின் பனுவல் பின் இணைப்பு களாலும் வடிவமைக்கப்பட்டு அதிகாரபூர்வமாக வலியுறுத்தப்பட்டது. பின்னர் வேத பாடங்கள் திருத்தம் செய்யப்பட்டு, மனுவில் உள்ளதைப் போல பனுவல்களில் புதிய சூழல்களுக்கேற்ப மறு உருவாக்கம் செய்யட்டன. சாஸ்திரம்,ஸ்மிருதி இரண்டும் அவ்வப்போது வாய்வழியே கூறி, செவி வழியே கேட்கப்பட்டவையே; ஸ்மிருதி மரபார்ந்த ஒரு புனிதப் பனுவலைக் குறிப்பிடுகிறது; சாஸ்திரத்தை நீதி, கல்வி, அறிவியல், ஆய்வுப் பதிவு, அல்லது ஏடு என்று கூறலாம். வெண்டி டோனி ஜெர் (Wendy Doniger) பின்வருமாறு மிகவும் சரியாகவே குறிப்பிடுகிறார்.
“வேதமும் இந்து மதமும் மனுவில் இணை கின்றன... இந்த சங்கமமானது, தீர்க்கப்பட முடியாத முரண்களையும் அவற்றை எதிர் கொள்வதற்கான தீவிர முயற்சிகளையும் மரபு வழியே கட்டுப்படுத்துகிறது.”
மனு உணவுகளின் வரிசை முறை என்று உயிரினங்களுக்கிடையே உட்தொடர்பினை எடுத்துரைக் கிறார். (ஐரோப்பாவில் உயிரிருப்பின் சங்கிலி : சிம்மர்மான்) அங்கே பெண் ஒரு நுகர்பொருள்.
“ஆக, நுகர்வு என்பது நுகரப்படுவோர் மீதான நுகர்வோர் கொள்ளும் இறுதி வெற்றி; தோற்பவரை முறியடிக்கும் வெற்றி யாளரின் இறுதி வெற்றி;எதிரியின் மீது,தாம் கொள்ளும் இறுதி வெற்றி.” (XXVI)
பெண் விதைக்கப்பட வேண்டிய நிலமாக விதையை எதிர்நோக்கி இருக்கிற வேளையில் ஆண் அந்த விதையாகக் குறிப்பிடப்படுகிறான். வேத மரபு முழுவதும் உயிர்ப்பலியும், வன்முறையு மாக நிறைந்திருக்கின்றன. ஆனால் மனு தாவர உணவை உண்பதையும் வன்முறை கூடாமையையும் அறிமுகப்படுத்தி,சமுதாய அந்தஸ்தைப் பெறுவதற் கான ஒரு அளவைமுறையாக ‘தூய்மை’யைப் பரிண மிக்கச் செய்தார். இணைப்புக்கான முழுப் பெரு மையும் ஐயமின்றி மனுவின் கூர்அறிவையே சாரும். ஏனெனில், அவற்றின் இடையுறவுத் தன்மையைப் பற்றிய அவரது விளக்கத்தை அது தெளிவுபடுத்து கிறது. வேத காலத்தில் வழக்கில் இருந்த நீதிமுறை களில் இருந்து மிகவும் வேறுபட்டு இருக்கிற அளவுக்கு மாற்றுகிற பெண்களின் சமுதாய நிலையை விலக்கி ஒதுக்கும் நோக்கத்தில்,பெண் களுக்கான நடத்தை விதிகளை மனுநீதி கட்டுறுத்திக் கூறுகிறது. இந்துவல்லாத வெண்டி டோனிஜர்,மனுவின் (வர்ண சாஸ்திரங்கள்)உரையாளர் என்ற முறையில் சாஸ்திரம் எழுதிய மனுவை நோக்கிச் சில வினாக்களை எழுப்பி, பின்வருமாறு கருத்துரைக்கிறார்:
“கற்றறிந்த ஞானி என்னும் நபரிடம்தான் பொருள் விளக்கமும் வெளிப்பாடும் முழுமை யாக ஒன்றிணைகின்றன. இவ்வாறு, அனுபவ எல்லைக்குப் பொருத்தமில்லாத வெளிப் பாடு (ஸ்மிருதி)க்கும் அறிவாளர்களின் மரபு வழி பாடங்களு(ஸ்மிருதி)க்கும் இடையேயான வேறுபாடு - இந்து மதம் முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு வேறுபாடு- நம்பகத் தன்மையைப் பற்றிய சிக்கலைச் சந்திக்கும்போது முற்றிலும் அர்த்தமற்றதாகிறது.”
உபநிடதங்களின் தோற்றம்கூட புனைவைத் தழுவியதே. உபநிடதங்கள் பிராமணர்களுடனே தோன்றியிருந்தும்கூட அவை பிராமண வட்டங்களுக்குள்ளே வளர்க்கப்படவில்லை; மாறாக,சத்திரியர்களிடையேதான் செழித்து வளர்க்கப் பட்டன. உபநிடதங்களின் சிந்தனைகள் இரண்டு அடிப்படைக் கருத்துகளைச் சுற்றியே மையம் கொள்கின்றன :அவை பிரம்மா, ஆத்மா. பிரம்மா என்பது விளக்கியுரைக்கப்படவேண்டிய அறியப் படாத ஒன்று; ஆத்மா என்பது அதன் விளக்கத்தைக் கண்டறிகிற அறியப்படாத பிறிதொன்றால் அறியப் படுகிறது. பிராமணர்கள் பிற்காலத்தில்,உபநிடதங்கள் எடுத்துரைத்த ஆத்மா கோட்பாட்டின் மூலம் வேள்வி களை / விளக்கியுரைப்பதற்கு அதனைப் பயன்படுத்தினர்.
உபநிடதப் பாடத்தைப் பிறருக்குக் கூறுவதும் விளக்குவதும் பிறர் அறியாமல் செய்யப் பட வேண்டியது என்ற கட்டாய நிபந்தனையுடன் தீட்சை பெறுபவருக்கு மட்டும் தெரிவிக்கப்பட வேண்டிய சூத்திரங்களே உபநிடதங்கள் என்று எடுத்துரைக்கப்பட்டன (Rev.A.S.Geden). ஆத்மா கோட்பாடு அடிப்படையில் வேள்விகளில் மட்டுமே நம்பிக்கை கொண்ட வேத மரபுக்கு எதிரானதாக இருந் தாலும்,பிராமணர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். உபநிடதங்கள் சடங்கை வலியுறுத்துகிற மரபைப் பற்றிய உருவகமான விளக்கங்களுள் செழிக்கத் தொடங்கி, வேதாந்தமாகின. இதன் விளைவாக, சாண்டில்யர், யாக்ஞ வல்கியர் போன்ற அதிகாரம் பெற்றோர் உபநிடதங்களின் கருத்துகளைப் படைத்தவர் களாகவும் அவற்றின் பற்றாளர்களாகவும் ஆகினர். ஆத்மா கோட்பாடு வேத மரபுக்கும் முன்னதாக உருவாக்கப்பட்டது.
உபநிடதங்களின் வெவ்வேறு தொகுப்புகள் ரிக் (உக்தம்),சாமம் (சாமா),யஜூர் (வேள்வி) ஆகிய வேதங்களின் பங்களிப்பாக வெளி யாகின. அவற்றைத் தொடர்ந்து அதர்வண வேதத்தில் இந்து சமயப் பற்றாளர்களைப்பற்றிய குறிப்புகள் இடம்பெற்றன. பத்ராயணா (Badarayana) (பிரம்ம சூத்திரங்கள்), சங்கரர் (Sanka), கோல்புரூக் (Cole brooke) ஆகியோரால் உரிய நேரத்தில் வெவ்வேறு கோணங்களில் வேதங்களையும் உபநிடதங்களையும் பற்றி ஆதரித்தும்,எதிர்த்தும் எழுதப்பட்ட உரைகள் அக்காலத்தில் ஆதிக்கம் கொண்டிருந்த குழுக்களின் கருத்துப் பரப்பலுக்குச் சான்று பகர்கின்றன.
வேதங்களிலும் உபநிடதங்களிலும் எடுத்துரைக்கப்பட்ட துவைதமும் அத்வைதமும் ‘ஆணும் பெண்ணும் தனித்தனியே ஆண் தலைமையிலான குடும்ப அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்குப் பணியாற்ற வேண்டும்’என்று அறிவுறுத்தி நடத்தை விதிகளை வலியுறுத்துகின்றன. உதாரணமாக, ஆப்தி (முதல் நிலை), உபயத்வம் (இரட்டை நிலை), மிதி (இறுதி நிலை) என்று மூன்று உணர்வு நிலை களைக் குறிக்கும் ஆ, உ, ம் என்ற மூன்றும் சேர்ந்து ஒலிக்கும் ‘ஓம்’ என்பதையும் அத்வைதம், அன்பு என்ற பொருள் குறித்து நிற்கும் எல்லாம் வல்ல பிரம்மத்தை (SupremeSelf)அடைவதற்கான அதீத உணர்வு என்னும் நான்காம் நிலைக்குக் கொண்டு செல்லும் வகை மாற்றத்தையும் குறிப்பிடலாம் (மாண்டூக்ய உபநிடதம்).
இது தீர்த்தம் படைத்தல்,அக்னியாகம் செய்தல் மூலம் எல்லாம்வல்ல பிரம்மத்தை அடைவதுதான் வேதங்கள், உபநிடதங்களின் முதன்மை நோக்கம் என்ற வகையில் மூலப் பனுவல்களிலிருந்து வெளிப்படும் முக்கிய பகுதி. மரபார்ந்த இந்து தர்ம வட்டாரங்களில் யாக்ஞ வல்கியரும் மீடாக்சரும் பிரபலமாகப் பேசப்பட்டாலும்,மனுதான் மிக அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டு வருகிறார். இந்து மதத்துக்குள்ளேயே மாற்றுச் சிந்தனைப் பள்ளிகளும் உண்டு: பக்தி இயக்கங்கள், தாந்திரிக வழிபாடுகள், இந்து மதத்துக்குப் புறத்தே உள்ளவை: பௌத்தம், சமணம், இஸ்லாம், சீக்கியம், கிறித்தவம். தேவதாசி அமைப்பின் தோற்றங்கள் பண்டைக் காலத்துச் செழுமை வழிபாட்டைக் குறிப்பதாக இருந்தன. (ஒத்த மரபுக் கூறுகள் ஃபிரேஸர் எழுதிய கோல்டன் பவ் மூலம் மேற்கத்திய சிந்தனையி லிருந்தும்,ஜெஸ்ஸி எல்.வெஸ்டன் எழுதிய From Ritual to Romance மூலம் எகிப்தியப் பண்பாட்டி லிருந்தும் தருவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
உபநிடதங்களுடன் இவையும் டி.எஸ்.எலியட் எழுதிய The Wasteland படைப்புக்கு மூலங்களாக அமைந்தன). இந்தியாவிலுள்ள சிவன் கோயில்களில் அது தாந்திரிகக் கருத்தாக்கத்துடன் கலந்திணைக்கப் பட்டது. அது இந்து மறையாளர்களால் பௌத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு பௌத்த விகாரை களை உள்ளே நுழைத்தது. தாந்திரிகம் அல்லது சாக்தம் மரபால் தாக்கம் பெற்ற பிறகு சமணர்கள் கூட அதனை மற்ற சமயங்களை எதிர்த்துப் போராட அறிமுகப்படுத்தினர். அது இந்தியா முழுவதும் பரவியதால், தனக்குத் தேவையான ஒப்புதலை புராணங்கள்,ஆகமங்கள்,தாந்திரிகம் போன்ற வற்றிலிருந்து தருவித்துக் கொண்டது. சிவலிங்க உருவத்துக்குக் கன்னிப் பெண்களைக் காணிக்கை யாக்கும் நெறி, கன்னிப் பெண்லிங்க உருவின் மூலம் கற்பிக்கப்படும் சிவனின் மணமகளாகும் லிங்க வழிபாட்டுச் சடங்குகளை விளக்கியுரைக்கிறது. கி.பி.நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌடில்யர் கோயில் பணிகளில் ஈடுபட்ட தேவதாசிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் (அர்த்த சாஸ்திரம், II, 23). காளிதாசரிடத்தும் (மேகதூதம்) இதைப் பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது. இந்த நடைமுறை இன்றும் ஒரிஸாவிலுள்ள பூரி ஜெகந்நாதர் கோயிலிலும் (Bride of Jaganatha by Sisir Das), தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில், குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோயில்களிலும் தொடர்ந்து நீடித்து வருகின்றன (The web of deceit by Moovaalur Raamamirthammal and Nithyasumangali by Saskia C. Kersenboom - Story ).
மனுநீதியில் (குறிப்பாக 8,9இயல்கள்)முரண் நிலைகளும் ஒரு சார்பு நிலையும் இடம் பெற்று உள்ளன. பெண்களின் உள்ளியல்பும் உடலிச்சையும் கணவனுக்கு அப்பால் வேறொருவனுடன் உறவு கொள்ளத் தூண்டும். தன் கணவனால் ஆண் வாரிசைப் பெற்றெடுக்க இயலாத வேளையில் (9 :58-70)‘இறுதி முடிவாக’தன் கணவனின் சகோ தரனிடம் உறவுகொள்ள அந்தப் பெண்ணை அனு மதிக்கவும் செய்கிறது!(8:370-71).
திருமணம் என்று கட்டுக்குள் வைத்து,மனைவியைக் கண்காணிப்பது இன்றியமையாதது என்று குறிப்பிடப்பட்டு,அடிக் கடி அது வலியுறுத்தப்படுகிறது. அது,கைம்பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள (வழக்கமாக கணவனின் சகோதரன்) ஆண்களை அனுமதிக்கிறது (9 :58-70). இனப்பெருக்கம் செய்யும் வேலையை நிறைவாகச் செய்வது மட்டுமே பெண்களின் பணி என்று மனுநீதி வலியுறுத்துகிறது. (பெண்கள் வீட்டில் குழந்தைகளை ஈனும்,அலங்காரப்பொருள்கள்)அனைத்து மதங்களும் மரபு வழியே பரப்புகிற இன்றியமையாத அடிப்படை நிலை என்பது கான்ட்டின் கூற்றுப்படி :கடவுளின் இருப்பு, ஆன்மாவின் அழியாத் தன்மை,விருப்பச் சுதந்திரம் (ஒழுக்க நெறிக்கான சாதனம்). சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினர்,சமுதாயத்தின் அடித் தட்டு மக்கள் சமய ஒப்புதலுடன் சமுதாயத்தின் பெயரால் அவர்களின் இழிந்த நிலைமையை அவர் களாகவே இசைந்து ஒப்புக்கொள்ளச் செய்கிறபடி அவர்களை இழிநிலையில் ஒழுங்கமைத்து வைக்க இந்து மதத்தைப் போன்ற சமயங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. மகாபாரதம், மனுவைப் பெரு மளவுக்குத் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
ஒரு சில குழுவினர்களின் சுய விருப்பில் அமைந்த சொல்லாடல்களைக் கூர்ந்தாயும் நோக்கில்,மனுவிட மிருந்து எடுக்கப்பட்ட சமஸ்கிருதச் சொல்லாடல் களைப் பிரித்து வகைப்படுத்தி மறைஞானத்தைப் (மறைஞானம் என்று அழைக்கப்படுவது)பற்றிய இரேனியஸ என்பவரின் பொருள்விளக்கத்தை விளக்கியுரைப்பதற்கு மறைஞானமும் கூடப் பயன்படுத்தப்படலாம். காயத்ரி ஸ்பீவக் போன்ற கோட்பாட்டாளர்களின் கூற்றுப்படி பார்த்தால்,குடும்ப ஆணாதிக்கத்தால் பாதிக்கப் பட்ட பரிதாபத்துக்குரியவர் என்ற நிலையில் ஒரு கைம்பெண் இந்து சமய விதிமுறைகள்,பேரரசின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிடியில்,பெண் சட்டபூர்வமாக ஒடுக்கப்பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ள சிக்கலான கட்டமைப்பானது -ஒடுக்கப் பட்ட பெண்ணின் சமூக,அரசியல் முகமையை முற்றிலும் புறக்கணிக்கிறது.
இந்தச் சூழலில்தான் ஸ்பீவக் பால் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட பெண் பேசுவதற்கு இடமில்லை என்று வாதிடுகிறார். ஸ்பீவக் ஒடுக்கப்பட்டோர் பேச முடியுமா? (Can the Subaltern Speak?) எழுதும்போது, ஒடுக்கப்பட்ட பெண் தனக்காகக் குரல் எழுப்ப இயலாமையின் மீது தன் கவனத்தைக் குவிக்கவில்லை;மாறாக,பேசுவதற்கு மறுக்கிற அவளுடைய தீராத கோபத்தைப் பதிவு செய்கிறார். சமுதாய, அரசியல், பொருளியல் துறை தொடர்பான பண்டைய பனுவல்களையும் கருத்துகளையும் பற்றி நாம் சிந்திக்கிற நெறியை, பகுத்தறிவார்ந்த ஆராய்ச்சிக்குரிய மரபுவழி ஒழுங்கு முறைகள் கட்டுப்படுத்துகிற இவ்வேளையில் இந்தக் கட்டுரை பின்வரும் வினாக்களுக்கு விடைகளை எதிர்நோக்குகிறது:
* பண்டைய சமயங்கள், சமய இலக்கியங்களைப் பற்றிய ஆய்வில் உள்ள அறை கூவல்கள் யாவை?
* இந்து சமய மரபின் இணக்கம், முரணிலை ஆகிய இரண்டையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம்?
* இந்து மதம் மரபுக் கோட்பாட்டை எவ்வாறு நிலைநாட்டுகிறது?
* இந்து மதம் வென்றுள்ள இறுதியான மரபுக் கோட்பாடு எது? அதன் விளைவுகள் யாவை?
* இஸ்லாமியர்களின் படையெடுப்புகள், தேவதாசி முறையைப் போன்று புதிய வகை ஒடுக்குமுறைகளை அறிமுகப்படுத்திய பக்தி இயக்கங்கள் (சைவம்,வைணவம் போன்றவை)மூலம் காலம் காலமாகப் பரவி வரும் மனுநீதியை நாம் எவ்வாறு பகுத்தாய்ந்து பார்க்க வேண்டும்?
* குடியேற்றச் சூழலிலும், குடியேற்றத்துக்குப் பிந்திய சூழலிலும் இந்து சமய மரபு எவ் வாறு புதிது புதிதாகக் கிளைத்தெழுந்தது?
* மறைஞானத்தைப் (Gnosticism) பயன் படுத்தி, கிறித்தவத்தைப் போன்ற பிற சமயங்களில் உள்ள ஒத்த கருத்துருவாக்கங்களை அடையாளம் காண்பது சாத்தியமா?
* பண்டித ரமாபாய், தாராபாய், ஷிண்டே, கிருபாபாய் சத்தியநாதன், ஜோதிர்பாய் பூலே, ரக்மாபாய், காஷிபாய் கனித்கர், காஞ்சைலய்யா, கமலா தேவி சட்டோ பாத்தியாயா, உமா சக்கரவர்த்தி தொடங்கி மதச்சார்பற்ற (இந்திய)இலக்கியங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தகு நிலையை நாம் எவ்வாறு கண்டறிவது?
பண்டைய இந்து மதப் பனுவல்களைக் கூர்மையாக ஆய்வு செய்து,அவற்றின் அடக்குமுறைக் கற்பிதங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பதும், இந்து சமயப் பனுவல்களில், சடங்குகளில்,திட்டமிட்ட பிற வழிமுறைகளில் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டு, கட்டமைக்கப்பட்டு, இசைவான இடத்தில் இருத்தப்பட்டு அல்லது விளக்கமாக வருணனை செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான ஒழுங்கமைந்த சட்டங்களை முற்றிலுமாக மாற்றுவதற்காக சமூகத்தைத் தயார்ப்படுத்துவதுமே இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை யான நோக்கமாகும்.
மேலும்,பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண்களுக்கான கடமைகளை விளக்கிப் பொருளுரைக்கும்,கட்டமைக்கும் நோக்கத்தில்,இந்துமத சித்தாந்தத்தை வரையறுப்பதற்காக பழைமைவாதக் குழுக்களால் பயன்படுத்தப்பட்ட தந்திரங்களைக் கண்டறிவதும் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன், நிலை நிறுத்தி, மேலும் வளர்க்கப்பட்ட கருத்தியல்களை மறு கட்டமைப்பு செய்யும் பொருட்டு,இந்துமத சித்தாந்தங்களின் அர்த்தங்களைத் தலைகீழாகப் புரட்டுவதற்கான தீவிர முயற்சியே இந்த ஆய்வுக் கட்டுரை. மரபுவழியான இந்துமத ஏடுகள் ஒற்றுமையைவிட வேற்றுமையால்தான் வெகுவாகப் பண்பூட்டப்பட்டவையாகக் காணப்படுகின்றன. ‘இந்தச் சொல்லுக்கு இதுதான் பொருள்’ என்று ஒரு பொருள் ஒரு சொல் என்று அர்த்தம் காணப்பட முடியாத-அர்த்தம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத -தேய்ந்துபோன-நைந்துபோன ஒரு பகுப்பாய்வை நோக்கியே முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
"Interpolations in Traditional Texts, Indian Religious Literature with reference to the Marginalization and Oppresion of Women" என்னும் தலைப்பிலான ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.
மொழிபெயர்ப்பு - சா.ஜெயராஜ்
Please can you provide full details about the english version of the article- name , place, and date of the publication - "Interpolations in Traditional Texts, Indian Religious Literature with reference to the Marginalization and Oppresion of Women"
RSS feed for comments to this post