periyasamy 450“பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட

கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு

வந்தவன் காட்டினான்

வரைந்த ஓவியத்தை

ஆலமரம் அழகென்றேன்

இல்லப்பா, இது அலெக்ஸ் மரம் என்றான்

சரிசெய்யும் பதற்றத்தில்

மீண்டும் வலியுறுத்தினேன்

ஏற்க மறுத்தவன் கூறினான்

என் மரம்

என் பெயர்தான்”

இந்தக் கவிதையில் வெளிப்படும் என் என்கிற தன்னுணர்வில் தெறிக்கும் குழந்தைமை ஒரு முக்கிய மான அனுபவம். நான் என்னும் தன்னுணர்வோடு ஆட்காட்டி விரலால் தன் நெஞ்சைத் தொட்டு  தன்னால் உருவாக்கப்பட்டதற்கு உரிமை கொண்டாடும் ஒரு குழந்தையின் கூற்று ஒரே தருணத்தில் புன்னகையையும் சிந்தனையையும் தூண்டிவிடுகின்றன. தினசரி வாழ்க் கையில் சாதாரணமாக நம் கவனத்திலிருந்து முற்றிலும் நழுவியோட வாய்ப்புள்ள ஒரு அனுபவம் என்றே இதைச் சொல்லவேண்டும். ஆனால், பெரியசாமியின் கவிதைக் கண்கள் சரியான தருணத்தில் அதைத் தொட்டு மீண்டு வருகின்றன. நான், எனது என்பவை மானுடத்தின் அடிப்படை உணர்வுகள்.

இவ்வுணர்வுகள் வழியாகவே ஓர் உயிர் தன் அகத்தைக் கட்டமைக்க முற்படுகிறது. வாழ்க்கையில் அது ஒரு கட்டம். இறுதியாக ஒரு கட்டமும் உள்ளது. இறுகப் பற்றி வாழும் இவ்வுணர்வுகளை தானாகவே கரைந்துபோகச் செய்யும் கட்டம். கடற்கரையில் கட்டியெழுப்பப்பட்ட மணல் வீட்டை அலைகள் கரைப்பதுபோல கரைந்துபோக அனுமதிக்கும் கட்டம். கவிதையை வாசித்து முடிக்கும் கணத்தில் இந்த முனையிலிருந்து அந்த முனைவரைக்கும் மனம் மானசிகமாக ஒரு பயணத்தை நிகழ்த்தி முடித்து, மீண்டும் தொடங்கிய புள்ளிக்கு வந்து நின்றுவிடுகிறது. நினைவின் வழியாக நிகழும் இந்த அனுபவமே இந்தக் கவிதையின் அனுபவம். இது பெரியசாமி என்னும் கவிஞர் நாம் மூழ்கித் திளைப்பதற்காகவே கட்டி யெழுப்பியிருக்கும் பேருலகம்.

பெரியசாமியின் கவிதைகள் காட்சிகளால் நிறைந்தவை. வனவிலங்குகளைப் படமெடுப்பதற்காக கூரிய புலனுணர்வுடன் காத்திருக்கும் புகைப்படக் கலைஞர்களைப்போல குழந்தைகளின் சொற்கள் அல்லது செயல்கள் வழியாக நிகழும் அற்புதத்துக்காக அவர் விழிகள் ஒவ்வொரு கணமும் காத்திருக்கின்றன.  இந்தப் பொறுமை, அவர் காட்சிப்படுத்தும் கவிதைகளுக்கு ஒருவித தனித்தன்மையை வழங்குகின்றன.

மாலைப் பொழுதொன்றில்

உரையாடலைத் துவங்கினாள் சிறுமி

யானைக்கு யார் துணை

இன்னொரு யானைதான்

காக்காவிற்கு

மற்றொரு காக்கா

குருவிக்கு

மற்றொரு குருவி

இந்த மரத்துக்கு

அதோ, அந்த மரம்

அப்ப வானத்துக்கு?

மௌனித்திருந்தேன்

அன்றுதான் ஒரு தாளில் வரைந்து அனுப்பினாள்

துணை வானம் ஒன்றையும்

ஒரு நிலா ஒரு சூரியன்

நிறைய நட்சத்திரங்களையும்

யாவரும் கண்டுகொண்டிருப்பது

அவள் அனுப்பிய துணைகளைத்தான்

வானத்துக்கும் சூரியனுக்கும் நிலவுக்கும் துணை வேண்டுமேயென கவலைப்படும் குழந்தைமையோடு இரண்டறக் கலந்திருக்கும் கவிதையனுபவத்தை மகத்துவமானதென்றே சொல்லவேண்டும். பெரிய பெரிய படிமங்களாலும் தர்க்கங்களாலும் கட்டியெழுப்ப முடியாத வினோதமான அனுபவத்தை மிக  எளிய சொற் களால் ஒரு காட்சியின் வழியாக முன்வைத்துவிடுகிறார் பெரியசாமி. இதுவே அவருடைய கவித்துவம்.

எண்ணற்ற குழந்தைச் சித்திரங்களை பெரியசாமி தன் கவிதைகளிடையே தீட்டி வைத்திருக்கிறார். அக் குழந்தைகளின் ஏக்கங்களுக்கும் கனவுகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் விளையாட்டுகளுக்கும் புதுப் புது வண்ணங்களைக் குழைத்து பளிச்சிட வைக்கிறார்.

இத்தொகுதியின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று மழையின் பசியாற்றியவர்கள்.

மழையின் பசியாற்றினோம்

ஆவல் பீறிடக் கூறினேன்

நட்சத்திரங்களாகக் கூரையில் மின்னும்

துளிகளிடமிருந்து மீண்டு

பரிகாசமாகச் சிரித்தவனின்

கரம்பற்றி அழைத்துச் சென்றேன்

என் துளிர்த்த காலத்திற்கு

உத்தி பிரித்து விளையாடிய காலையில்

சிறுசிறு தூறல்களும் உடனாட

மழைக்குப் பசிக்குமென

கொட்டாங்கச்சியில் தட்டி வைத்தோம்

சுடச்சுட இட்லிகளை

கரைத்து விழுங்கின் தெம்பாய்

ஊரைச் சுத்தம் செய்தோடியது

மழை.

குழந்தையின் சொற்கள் அசலான குழந்தைமை யோடு வெளிப்படும்போது, இயற்கையாகவே அதில் கவித்துவம் நிறைந்துவிடுகிறது. தனக்குப் பசிப்பதைப் போல மழைக்கும் பசிக்குமென ஒரு குழந்தையால் மட்டுமே யோசிக்கமுடியும். எவ்விதமான தயக்கமும் இல்லாமல் மழையின் முன் உணவை நீட்டியளிக்க

ஒரு குழந்தையால் மட்டுமே முடியும். உள்ளார்ந்த அன்போடும் பரிவோடும் மண்கட்டியை இட்லி என்று சொல்லி ஒரு குழந்தையால் மட்டுமே அடுத்தவருக்கு அளிக்க முடியும். மண்ணின் பசியையும் தாகத்தையும் மழை பொழிந்து தணிக்கிறதென்பதுதான் நம்பிக்கை. இக்கவிதையில் மழைக்கே பசிக்கிறது என்று நம்புகிறது ஒரு குழந்தை. அந்தப் பசியைத் தணிக்க தன் கைகளால் உணவை வழங்கி மனம் களிக்கிறது.

சித்திரம் தீட்டுதல் பெரியசாமியின் கவிதைகளில் திரும்பத்திரும்ப வரும் செயல்பாடு. குழந்தைகளின் பிஞ்சு விரல்களின் கோணல்மாணலான கிறுக்கல்களால் நிறைந்த சித்திரங்களே அவை. குழந்தைமையின் தொனி யோடு அக்கோடுகள் இணையும்போது அவை அழகான கவிதைகளாகிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக பிரம்ம அவதாரம் என்னும் கவிதையைச் சொல்லலாம்.  எவ்விதமான விளக்கங்களும் தேவையற்ற நேரிடையான கவிதை.

முட்டைகள் நான்கிட்டு

அடைகாத்தான்

அது நான்கு வானங்களைப்

பிறப்பித்தது

வெக்கை மிகும் பொழுதுகளில்

மழை பொழிவிக்க

ஊற்றும் மழையால்

வெளி நடுங்கும் காலங்களில்

வெயிலடிக்க

அப்பிய இருளோடு உலகிருக்க

நிலவு முளைக்க

சகஜீவராசிகள் பனியில் சுருங்கிக் கிடக்கக்

கதகதப்பூட்டவென

வேலைகளைப் பங்கிட்டுக் கொடுத்து

வேறு முட்டையிட தயாரானான்.

பிஞ்சுக்குழந்தை கட்டளையிடும் இடத்தில் நின்று கொள்ள, அதை மனமார ஏற்றுப் பணிந்து கடமை யாற்றும் இடத்தில் நின்றிருக்கிறது வானம். ஆகிருதிகள் முக்கியமிழந்து கற்பனையும் குழந்தைமையும் முக்கியத் துவம் பெறுகின்றன.

இந்தச் சித்திரம் தீட்டும் விருப்பம் பவனி என்னும் கவிதையில் வேறொரு விதமாக வெளிப்படுகிறது.

தாள் ஒன்று

தன்னில் எதையாவது வரையுமாறு

அழைப்பதாகக் கூறிச் சென்றான்

வர்ணங்களைச் சரிபார்த்து

ஒன்றிரண்டை வாங்கிவரப் பணித்தான்

மகாபாரதம் தொடரில் கண்ணுற்ற

ரதம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான்

ஒளிர்வில் வீடு மினுங்க

நின்றது பேரழகோடு

மற்றொரு நாளில்

புரவிகளை உயிர்ப்பித்துப் பூட்டினான்

அதிசயித்து ஊர்நோக்க

வானில்

பவனி வந்தான்

இது குழந்தையின் ரதம். குழந்தை பூட்டிய குதிரை. குழந்தையின் பவனி. கண்ணும் கற்பனையும் நிறைந்தவர் களுக்கு மட்டுமே இந்தப் பவனியின் தரிசனம். பெரிய சாமியின் கவிதைப்பயணத்தை மறைமுகமாகக் குறிப்பிட இக்கவிதை பெரிதும் உதவக்கூடும். அதுவும் ஒருவகை பவனி.

ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது பெரிய சாமியின் கவிதைகள் குழந்தைகளின் பார்வை வழியாக உலகத்தைப் பார்க்க முனையும் விழைவுள்ளவை. அவை தர்க்கமற்றவை. ஒருங்கிணைவற்றவை. எவ்விதமான உள்நோக்கமும் இல்லாதவை. அபூர்வமான தருணங் களில் கவிதானுபவமாக மாறக்கூடிய ஆற்றலையும் கொண்டிருப்பவை.

குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்

ஆசிரியர் : ந.பெரியசாமி

வெளியீடு : தக்கை

15, திரு.வி.க.சாலை, அம்மாப்பேட்டை, சேலம்-7.

விலை : ` 30.00

Pin It