“......இந்த நடவடிக்கையின் மூலமாக திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் மிரட்ட முயற்சிக்கிறது பாஜக. கூட்டணியைப் பரிசீலனை செய்வோம் என்று அதிமுக சொன்னதற்கு ‘உன்னையும் கைது செய்வோம்’ என்று மிரட்டியிருக்கிறது பாஜக’’ - அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து 14-06-2023 அன்று அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அளித்த நேர்காணலில் இப்படிக் கூறியிருக்கிறார்.

இமயமலையில் ஏறி உச்சியைத் தொட்டாலும், மீண்டும் பள்ளத்தை நோக்கி இறங்கத்தான் வேண்டும்.

இயற்கை சொல்லும் இந்தப் பாடத்தை அலட்சியம் செய்து, இரண்டாம் உலகப் போரின்போது அச்சு நாட்டு அணியில் இணைந்த ஜெர்மானிய இட்லர் தற்கொலை செய்து கொண்டார், இத்தாலிய முசோலினி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதைத்தான் ‘வினாச காலே விபரீத புத்தி’ என்று வடமொழியில் கூறுவர்.

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நமக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும், அன்று அவர் இருக்கும் வரை ‘’இந்த லேடியா, அந்த மோடியா’’ என்று பா.ஜ.கவை வாசலில் நிறுத்தி வைத்தார்..

இன்று எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் தலைவியை மறந்து பா.ஜ.கவிடம் சரணாகதி அடைந்து விட்டனர்.

நரியிடம் நீதி கேட்கும் இரண்டு ஆட்டுக் குட்டிகள் போல ஓ.பி.எஸ்/ ஈ.பி.எஸ் பா.ஜ.கவிடம் நின்று கொண்டு இருக்கின்றனர்.

பா.ஜ.க தயவு அ.தி.மு.கவுக்குத் தேவையில்லை.

அ.தி.மு.க துணை இல்லாமல் பா.ஜ.க வால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கூட வாக்குகள் பெற முடியாது.

அ.தி.மு.கவை அலட்சியம் செய்யும் சங்கிக் கூட்டத்தை விட்டு அக்கட்சி வெளியேற வேண்டும்.

சங்கிக் கூட்டத்திற்குத் தமிழ் நாட்டில் கதவைத் திறந்து விடும் வரலாற்றுப் பிழையை அ.தி.மு.க செய்திட வேண்டாம்.

ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ, தி.மு.க / அ.தி.மு.கதான் வர வேண்டும்.

“கூடா நட்பு கேடாய் முடியும்’’

அன்று சொன்னார்கள்.

இப்போது இந்தத் தலையங்கத்தின் தொடக்கத்தைப் படியுங்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It