குடிஅரசு, திராவிடன், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை, ரிவோல்ட், தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் உள்ளிட்ட ஒன்பது இதழ்களை நடத்தியவர் தந்தை பெரியார். அனைத்தும் தமிழருக்காக…! தமிழரின் சமூக விடுதலைக்காக…! தமிழர் சமூகநீதி பெறுவதற்காக…! தமிழர் முன்னேற்றத்திற்காக….!

மக்களைச் சென்றடைவதற்கான கருவியாக, பத்திரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தவர் பெரியார். இப்போது உள்ளதைப் போல, காட்சி ஊடகங்கள் இல்லாத அந்த நாட்களில் பத்திரிக்கைகளே மக்களுக்குச் செய்திகளை எடுத்துச் செல்வதாக இருந்தன.

“நம் நாட்டில் தமிழர்களில் எத்தனையோ யோக்கியர்கள், விவேகிகள், கெட்டிக்காரர்கள் இருந்தாலும் அவர்கள் பொது ஜனங்களுக்குத் தெரியக் கூடாதவராய் இருக்கிறார்கள். இதன் காரணம் தமிழர்களுக்குச் செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிக்கையில்லை.

மகாத்மா காந்திக்கே தமிழ்நாட்டில் தமிழர் யோக்கியதை தெரிய வேண்டுமானால் ஒரு பிராமணனைக் கொண்டோ ஒரு பிராமணப் பத்திரிக்கையைக் கொண்டோதான் தெரிந்து கொள்ள வேண்டும்.....

ki veeramani 290தமிழர்களின் யோக்கியதை தமிழ்நாட்டினருக்குத் தெரியவேண்டுமானால் பிராமணப் பத்திரிக்கையின் மூலமாகத்தான் அறிய வேண்டியிருக்கிறது. இதைவிடத் தமிழர்களுக்கு வேறு இழிவு வேண்டியதே இல்லை” என்று சுட்டிக்காட்டுகிறார் பெரியார்.

“100-க்கு 90-க்கு மேற்பட்ட ஜனத்தொகையுள்ள கூட்டத்தாருக்குத் தங்கள் நாட்டில், தங்களைப் பற்றி, தங்கள் சமூகத்தாரே அறிந்து கொள்ள ஒரு சாதனம் இல்லை என்றால் இதைப் பற்றி என்ன நினைப்பது?” என்று கேட்கிறார் (குடிஅரசு, 02.08.1925).

இந்த எண்ணமே பெரியாரை ஒன்றுக்கும் மேற்பட்ட இதழ்களைத் தொடங்கத் தூண்டியிருக்கிறது எனலாம்.

 விடுதலை இதழைத் தந்தை பெரியார் தொடங்கிய ஆண்டு 1935. தொடக்கத்தில் வாரம் இருமுறையாக வெளிவந்த இதழ், 1937ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாளிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. அடக்குமுறைகள் பல கண்டபோதிலும், ஆதிக்கத்தினை எதிர்த்து அணுதினமும் போராடும் விடுதலை, நூற்றாண்டை நெருங்கும் நூல் அறுக்கும் தாள்…!

 விடுதலை இதழானது இதுவரை எட்டு ஆசிரியர்களைக் கண்டுள்ளது. டி. ஏ. வி. நாதன், பண்டிதர் எஸ். முத்துசாமி, அ. பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், பேரறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி. வீரமணி. இதில் ஆசிரியர் அவர்களே நீண்ட காலம் விடுதலை இதழின் ஆசிரியராகப் பணியாற்றும் பெருமை கொண்டவர்.

 இந்தியாவில் 60 ஆண்டுகாலம் ஓர் இதழுக்கு ஆசிரியராக இருக்கும் ஒருவர், நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே. ‘இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் கோபாலன் அவர்கள், 26 ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஆவார். ஆனால் விடுதலை இதழுக்கும், இந்து நாளிதழுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுகள் உள்ளன.

 ‘இந்து’ இதழ் வெகுமக்களுக்கான ஊடகம். ‘விடுதலையோ’ வெகுமக்களின் நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகம். வெகுமக்களின் நம்பிக்கையைக் கேள்வி கேட்கும் ஊடகம். இந்து எவரிடமும் விளம்பரங்களைப் பெற்று வெளியிடும் வணிக ஊடகம். விடுதலை அவ்வாறு விளம்பரங்களைப் பெறாத சமூகப் பண்பாட்டு ஊடகம். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், விடுதலை இதழை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளலாம்.. இந்து இதழைப் போல் விடுதலை இதழ் இயங்காது. விடுதலை இதழைப் போல் எந்த இதழும் இயங்க இயலாது.

 திராவிடர் கழகம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் கொள்கைப் பிரச்சாரமும், இதழும் அவசியம் என்று கருதியவர் பெரியார். அவர் விரும்பியது கழகத் தொண்டிற்காக முழுநேரம் தங்களை ஒப்படைக்கக்கூடிய தோழர்கள். இப்பணிக்காக அவர் வேண்டுகோள் விடுத்தது, இருவரிடம். ஒருவர் ஆனைமலை நரசிம்மன்; மற்றொருவர் நமது ஆசிரியர் அவர்கள்.

இதில் தோழர் நரசிம்மன் அவர்களால், குடும்பச் சூழ்நிலை காரணமாக சில காலத்திற்குப்பின் தொடர்ந்து முழுநேரத் தொண்டு செய்ய இயலாமல் போனது. அந்த நேரத்தில் நமது ஆசிரியர் அவர்கள், பெரியார் உட்பட பல தோழர்களின் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, முழுநேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து ஒப்புக் கொண்டு, குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார்.

இதனை, திராவிடர் கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்று கருதுவதாகக் கூறி ஆசிரியர் அவர்களை ‘வரவேற்கிறேன்’ என்று தலையங்கம் எழுதி வரவேற்கிறார் தந்தை பெரியார் (விடுதலை, 12.08.1962).

குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில், ஆதரவு, அதிக ஊதியம் ஆகியவற்றைப் புறந்தள்ளிவிட்டு, அவைகளைப் பற்றிய கவலை இல்லாமல் முழுநேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால், அது யாரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாதது என்று ஆசிரியர் அவர்களைப் பாராட்டும் பெரியார், ஆசிரியர் மட்டும் இப்பணிக்கு இசையாமல் இருந்திருந்தால், தினசரி ‘விடுதலையை’ நிறுத்தி, வாரப் பத்திரிகையாகக் கொண்டு வர முடிவு செய்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இதனை விடுதலை இதழின் வெள்ளி விழா ஆண்டிலும் நினைவு கூர்ந்து, தோழர் வீரமணியின் சேவை என்று கூறிப் பாராட்டுகிறார் பெரியார். ஆசிரியரின் துணிவையும், தியாகத்தையும், சுயநலமற்ற தன்மையையும் போற்றிப் பாராட்டும் பெரியார், அத்தகைய பண்புநலன்களைக் கொண்ட ஆசிரியர் அவர்களிடம் ‘விடுதலை’ இதழ் ஒப்படைக்கப்படுகிறது என்று பெருமிதத்தோடு கூறுகிறார் (விடுதலை, 06.06.1964).

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ‘விடுதலை’ 88 வது ஆண்டில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

“எத்துணை எழுச்சி; எத்துணை உயர்ச்சி!

எத்துணை விரிந்த எண்ணக் குவியல்!

சடசட சடவெனச் சொற்கள் ஆட்சி!

மடமட மடவெனும் கருத்து மாமழை!”

என்ற புரட்சிக்கவிஞரின் பாடலைப் போல, தமிழர்தம் இல்லந்தோறும், உள்ளந்தோறும் சுயமரியாதைச் சுடர் ஏற்றி, பகுத்தறிவுக் கனல் மூட்டும் விடுதலை வாழ்க! ஆசிரியர்தம் அறப் பணி நீடூழி வாழ்க!

வெற்றிச்செல்வன்

Pin It