"கேழ் வரகில் நெய்வடிகின்றது என்று சொன்னால், கேட்பவன் புத்தி எங்கே போனது?" என்று கிராமங்களில் கேட்பார்கள் பெரியவர்கள். அப்படித்தான் இருக்கிறது பிரதமர் மோடியின் பொங்கல் வாழ்த்து.
உலகின் பழைமையான மொழியாகிய தமிழின் தாயகமாக இந்தியா திகழ்கிறதாம், சொல்கிறார் பிரதமர் மோடி.
தமிழின் தாயகம் 'தமிழ்நாடு'தானே அல்லாமல் இந்தியா அல்ல. இந்தியா என்பது ஒரு நாடே அல்ல. அது பல நாடுகள் சேர்ந்த துணைக்கண்டம் என்று அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.
கீழடி தமிழர் நாகரிகம் காலத்தால் சமஸ்கிருதத்தை முந்தையது என்பதனால் ஒன்றிய அரசு அதனை ஏற்க மறுக்கிறது.
அதுபோல இங்கே உலகின் மிகப்பழைமையான, செம்மொழியான தமிழை இந்தியா என்ற பெயருக்குள் கொண்டுபோவது, தமிழைப் பெருமைப்படுத்த அல்ல.
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி குறித்து கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் வே.ஈஸ்வரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டதற்கு, வெறும் 24 ஆயிரம் பேர்களின் பேர்களின் பேசுமொழியான சமஸ்கிருதத்துக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 2,869 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 8 கோடிமக்களின் தாய்மொழியான தமிழுக்கு ரூபாய் 100 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது என்று பதில் கொடுத்துள்ளது.
இதுதான் பிரதமர் மோடிக்கும் தமிழுக்கும் உள்ள பாசம்.
'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
இது தேர்தல் நேரம். அதனால் பிரதமரின் வாய்மொழியில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல, ஒதுக்கிவிடுவோம்.
நாளைய தேர்தலில் உதயசூரியன் பொன்னாய் மின்னி வருவான்!
- கருஞ்சட்டைத் தமிழர்