இந்தக் காலத்தில் திராவிடம் என்கிற பெயரைக் கேட்டாலே, டெல்லியில் இருந்து பல உருட்டல், மிரட்டல்கள் எல்லாம் வரும்.

சிலர் அவதூறுகளையும், வன்மங்களையும் பரப்புவார்கள். ஆனால், இதற்கெல்லாம் கலைஞர் அப்போதே பதில் சொல்லி விட்டார் "ஆம் நாங்கள் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டினால் இந்தியர்கள்" என்று. நம்முடைய இனமானப் பேராசிரியர், மொழி உணர்வு மட்டும் இருப்பவன் தமிழன் என்றும், மொழி உணர்ச்சியோடு சேர்த்து மான உணர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும் இருந்தால் அவன்தான் திராவிடன் என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.karunanidhi 341திராவிடம் என்பதைக் கலைஞரோ, அண்ணாவோ முதல் முதலாக பயன்படுத்தவில்லை. 1856 இல் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில்தான் திராவிடம் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆரியர் என்பவர் யார்? திராவிடர் என்பவர் யார்? இரண்டும் வெவ்வேறு இனத்தை குறிக்கும் வார்த்தை என்று கால்டுவெல் விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வளவு தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தாலும் சங்கிகள் திராவிடம் குறித்து அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். முன்பெல்லாம் லோக்கல் சங்கிகள்தான் இந்த அவதூறுகளைப் பரப்பி வந்தார்கள். இன்று ஆளுநரே இதை நேரடியாக செய்யத் தொடங்கியிருக்கிறார்.

மறுபுறம் திராவிடம் பற்றித் தனக்கு ஏதும் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தன்னுடையக் கட்சியிலேயே திராவிடத்தை வைத்துக்கொண்டு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று அவர் கூறியிருக்கிறார். திராவிடத்தை மட்டுமல்ல அவர் எம்ஜிஆரை, அண்ணாவையும் கூட மறந்து விட்டார். அவருடைய மனதில் இருப்பது எம்ஜிஆரோ, அண்ணாவோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ கிடையாது. அவருடைய மனதில் முழுக்க நிறைந்து இருப்பது அமித்ஷா மட்டும்தான்.

அதிமுகவில் அமித்ஷாவுக்கு சேவகம் செய்ய பலர் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். வங்கிகளை எடுத்துக் கொண்டால் அதற்குப்பல கிளைகள் இருக்கும். ஈரோடு, மதுரை, நெல்லை, கோவை என கிளைகள் பல இருக்கும். அதனுடைய தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கும். டெல்லியில் இருந்து இந்த கிளைகள் வழிநடத்தப்படும், கட்டுப்படுத்தப்படும். இன்றைக்கு அது போல தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு டெல்லியில் இருக்கக்கூடிய அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் பல கார்கள் மாறிச் சென்று அமித்ஷாவைச் சந்தித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல இதே பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் மூத்த அமைச்சர், ஹரிதுவார் செல்கிறேன், ஆன்மீக பயணம் செல்கிறேன் என்று போய் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறார். அதன் பின்னர் மற்றொரு கட்சியில் இணைந்து இருக்கிறார். அதிமுகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் வேறு கட்சியில் இணைவதாக இருந்தால் கூட டெல்லிக்குச் சென்று அமித்ஷாவிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் வர வேண்டும். அந்த வகையில் தற்போது அவர் இணைந்திருப்பது மாற்றுக் கட்சியில் அல்ல, மாற்று கிளையில்.

(ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் 1-12-2025 அன்று 'புதிய திராவிட கழகத்தின் 6ஆம் ஆண்டு மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சின் ஒரு பகுதி)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.