capitalism 600ஊழல் ஒழிப்பு என்பது இந்த நாடாளு மன்ற பொதுத் தேர்தலில் ஓர் முக்கிய சிக்கலாக விவாதிக்கப்படுகிறது. இதனை முக்கிய விவாதப் பொருளாக மாற்றியதில் ஆம் ஆத்மி கட்சி முதன்மை பங்காற்றி இருக்கிறது. இதனால் மக்கள் உரிமைப் போராட்டங்களில் பங்குபெற்ற பலரும், ஊழல் ஒழிப்பில் கவனமுள்ள பலரும் இக் கட்சியை நட்போடு அணுகுவது பரவலாக உள்ளது.

ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதாவை முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தி உருவானதும் வெளிப்படையான முறையில் நிதி திரட்டி தில்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் பங்கெடுத்ததும் அக்கட்சியின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.

ஆயினும் இக் கட்சி கையூட்டுப் பெறும் அரசியல் தலைவர்களை , அதிகாரிகளை கண்டித்த அளவுக்கு இதில் முதன்மைப் பயன்பெறும் முதலாளிகளை கண்டித்தது இல்லை என்பதை முன்பே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

ஊழல் கூட்டணியில் முதல் வரிசையில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவன முதலாளி அம்பானி மீது ஆம் ஆத்மி தலைவர் தில்லி மாநில முதலைமைச்சர் என்ற வகையில் வழக்கு தொடுத்தபோது இந்த ஊழல் ஊற்றுக்கண் மீது அவர் கவனம் செலுத்துகிறார் என்றக் கருத்து சில ஊடகங்களினால் முன்வைக்கப்பட்டது.

ஆனால், அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியில் முதலாளிகள் சங்கத்தின் ஆற்றிய உரை அவர் நிழலோடு மோதுகிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தியது.

கடந்த பிப்ரவரி 17 2014 அன்று இந்திய தொழில் வணிகத் துறைக் கூட்டமைப்பின் கூட்டத்தில் கெஜ்ரிவால் முக்கிய உரையாற்றினார். அப்போது “ ஆம் ஆத்மி கட்சி உலகமயத்திற்கோ , திறந்த பொருளியலுக்கோ தாராளமயத்திற்கோ எதிரானதல்ல, நாங்கள் முதலாளியத்தை எதிர்க்கவில்லை, ஒட்டுண்ணி முதலாளியத்தைத் தான் (crony capitalism) எதிர்க்கிறோம். தூய முதலாளியத்தை (clean capitalism) ஆதரிக்கிறோம்.

எங்கள் கட்சியின் முன்னணித் தலைவர்களான யொகேந்தர் யாதவ், பிரசாந்த் பூசன் ஆகியோர் பொதுத்துறையின் மேலாதிக்கத்திற்கு ஆதரவாகவும் , நிகரமைப் பொருளியலை முன்வைத்து பேசுவது அவர்களது சொந்தக் கருத்தே தவிர கட்சியின் கருத்தல்ல” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

கெஜ்ரிவாலின் இந்தக் கருத்தை வழிமொழிந்து பல்வேறு ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. நிலவும் சந்தைப் பொருளியலுக்குள்ளேயே ஒட்டுண்ணி முதலாளியத்தை ஒழித்துவிடலாம் அல்லது மிகப் பெரும் அளவுக்கு கட்டுப்படுத்திவிடலாம் என்றக் கருத்து சரியா என்பது குறித்து  விவாதிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மீது அரசின் கட்டுப்பாடு அதிகம் இருப்பதால் தான் கையூட்டு ஊழல் அதிகரிக்கிறது என்றும் அதன் போக்கில் ஒட்டுண்ணி முதலாளியம் வளர்கிறது என்றும் உள்ளக் கருத்து நீண்ட காலமாக நிலவுவதுதான். நேரு ஆட்சிக் காலத்தில் அரசுத்துறை இந்தியப் பொருளியலில் முக்கியப் பங்காற்றியதையும் தனியார் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அரசின் சட்டதிட்டங்கள் முன்வைக்கப்பட்டதையும் எதிர்த்து கருத்து கூறியவர்களில் இராசாசி முதன்மையானவர்.

“எதற்கெடுத்தாலும் தொழில் முனைவோர் அரசாங்க அதிகாரிகளிடம் போய் நிற்க வேண்டியிருக்கிறது. இது உரிம ஆட்சி (பர்மிட் லைசன்ஸ் ராஜ்) ” என்று நகையாடினார். திறந்தப் பொருளியல் கொள்கையை அவர் முன்வைத்தார்.

தொழில் நடத்துவதோ, மருத்துவமனை நடத்துவதோ அரசாங்கத்தின் வேலையல்ல, நிர்வாகம் நடத்துவது மட்டுமே அரசின் பணி என்றக் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தியவர் இராசாசி. உரிமம் பெருவதற்கு அரசுத் துறைகளை தொழில் முனைவோர் அணுக வேண்டிய நிலை இருப்பதால் தான் கையூட்டு (இலஞ்சம்) பெருகுகிறது என்று அவர் கூறினார்.

 கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஆட்சி நடத்திய சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சீனாவிலும் செங்கொடியின் கீழேயே முதலாளியம் திரும்பி, வலுப்பட்ட போது அதுவரை இராசாசி கருத்தை எதிர்த்து வந்தப் பலர் கூட அக்கருத்தை ஆதரிக்கத் தொடங்கினர்.

ஏனெனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றக் கோட்பாட்டின் பின்னணியில் நிலை நிறுத்தப்பட்ட ஒரு கட்சி சர்வாதிகாரம் இந் நாட்டு ஆட்சியாளர்களுக்கும், ஆளும் பொதுவுடைமைக் கட்சி தலைவர்களுக்கும் கேள்வி முறையற்ற அதிகாரத்தை வழங்கியது. தலைமைக் குழுவிலிருந்து அடிப்படை கிளை அமைப்பு வரை அனைத்து மட்டத்திலும் ஊழல் பரவியது. தங்கள் அதிகாரத்தின் பயனாக இக் கட்சித்தலைவர்கள் பலர் செல்வச் சீமான்களாக மாறினார்கள்.

இதன் வளர்ச்சிப் போக்கில் ஒருக் கட்டத்தில் காரல் மார்க்ஸ் படத்தை வைத்துக் கொண்டே, அரிவாள் சுத்தியல் பொறித்த செங்கொடியை பிடித்துக் கொண்டே முதலாளிய முறைக்கு திரும்புவது என்று அக் கட்சிகளின் தலைமைகள் முடிவுசெய்து அதனை ஆட்சி கொள்கையாக அறிவித்தபோது பெரிய கலகம் எதுவும் அங்கே வெடித்துவிடவில்லை.

இன்று சீன முதலாளிகளில் முக்கால் வாசிப் பேர் அந்நாட்டை ஆளும் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்கள் ஆவர். இவ்வாறு தோல் இருக்க சுளை விழுங்கிய கதையாக பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியிலேயே அங்கு முதலாளியம் திரும்பியது.

இந்த முதலாளிகளில் கிட்டத்தட்ட அனைவருமே ஒட்டுண்ணி முதலாளிகள் ஆவர். ஆட்சி அதிகாரத்தின் துணையோடு போட்டி விதிகளுக்குப் புறம்பாக மூலதனம் குவிப்பதையே ஒட்டுண்ணி முதலாளியம் (crony capitalism) என்பர்.

பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சி நடத்திய, பொதுத்துறைகள் மேலோங்கியிருந்த நாடுகளில் இத்தகையோர் வளர்ந்ததை வைத்து அரசுத்துறையின் தலையீடு உள்ள இடத்திலேயே ஒட்டுண்ணி முதலாளியம் வளரும் என்றக் கருத்து பரவியது.

அரசின் தலையீடு ஏதுமின்றி பொருளியலை திறந்துவிட வேண்டும் என்ற தாராளமய சந்தைப் பொருளியலுக்கு 1990 களில் ஆதரவு பெருகியதும் இச் சூழலில் தான். 1991ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்ததும் இக்க்ருத்திற்கு வலுவூட்டியது.

”கண்ணுக்குத் தெரியாத சந்தை எனும் கை பொருளியலை போட்டி விதிகளின் கீழ் ஒழுங்குப்படுத்தும் ” என்ற ஆதம் ஸ்மித்தின் கருத்து மந்திரச் சொல் போல் மீண்டும் முழங்கியது.

இனி சந்தை விதிகளுக்குக் கட்டுப்பட்ட தூய முதலாளியம் (clean capitalism) வளரும் என்று கனவு கண்டனர். திறன், தரம் ஆகியவற்றில் தேர்ந்தவர்கள் இந்த சந்தைப் போட்டியில் முன்னே வருவார்கள் என்று நம்பினார்கள்.

கையூட்டு கொடுத்து கட்சிக்காரர்களையும் ஆட்சியாளர்களையும் வளைத்துப் போட்டு திறன் அற்றவர்களும், தரம் அற்றப் பொருள்களும் சந்தையில் கோலோச்சும் காலம் இனி இல்லை என்று இச் சிந்தனையாளர்கள் நம்பினார்கள். முதலாளிகளின் கைகளில் இருந்த சனநாயகம் மக்கள் கைக்கு மாறிவருகிறது என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தார்கள். இந்தவகையில் தங்குதடையற்ற சுதந்திர சந்தை மக்கள் உரிமைகளை, தனிமனித சுதந்திரத்தை மீட்பதற்கு துணை செய்யும் என்றும் கூறினார்கள்.

ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது கூறுவதும் இந்தவகை சிந்தனைதான். தாராளமய சந்தைப் பொருளியல் கொள்கை உண்மையில் கடைபிடிக்கப்படால் அரசியலை ஊழல் மயமாக்கும் ஒட்டுண்ணி முதலாளியத்திற்கு இடமிருக்காது என கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆனால், உண்மை நடப்பு நேர்மாறானது. 

1980 களின் இறுதியில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் மற்றும் பிரித்தானிய பிரதமர் மார்க்ரெட் தாச்சர் அம்மையார் ஆகியோர் முன்வைத்த தங்கு தடையற்ற தாராளமயப் பொருளியல் கொள்கை உலக நாடுகள் பலவற்றாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1990 களில் தாராள மயம் , தனியார் மயம் , உலக மயம் என்பதாக வளர்ச்சி பெற்று நிலை கொண்டது.

“அரசுகளே ஒதுங்கிக் கொள்ளுங்கள், பரவி வரும் மூலதனத்திற்கு நாடு மொழி, இனம், நிறம் என்ற எந்த வேறுபாடும் இல்லை எந்தக் கட்டுப்பாடுமில்லை , திறன், தரம் என்பவற்றின் அடிப்படையிலான சந்தை விதிகளால் தன்னைத் தானே ஒழுங்கு செய்துகொள்ளும் தாராளமயப் பொருளியல் இனி தலைமைதாங்கும் “ என்ற முழக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒலித்தது.

இனி வெளிப்படையான ஆட்சி முறை எல்லா நாடுகளிலும் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கை பரப்பப்பட்டது.

ஆனால், திறந்த உலகமயப் பொருளியல் கோலோச்சியப் பிறகுதான் ஒட்டுண்ணி முதலாளியம் எந்த வேறுபாடும் இன்றி அனைத்து நாடுகளிலும் வலுப்பெற்றது. முதலாளிகள், அரசியலாளர்கள் அரசு நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் , ஆய்வு நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் இணைந்த ஒட்டுண்ணிக் கூட்டணியானது நாடுகள் வேறுபாடின்றி வளர்ந்தது.

இரசியா, சீனா, அர்ஜண்டீனா, ஜிம்பாப்வே, இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமின்றி தாராளமய முதலாளியத்தின் பிறப்பிடமான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலும் ஒட்டுண்ணி முதலாளியம் கோலோச்சுகிறது.

கெஜ்ரிவால் நம்பச் சொல்வதுபோல் உலகில் எந்த நாட்டிலும் தூய முதலாளியம் (clean capitalism) நிலைபெறவில்லை.

இந்தியாவில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி அலைக்கற்றை ஊழல், இரண்டு இலட்சம் கோடி ரூபாய் இஸ்ரோ எஸ் அலைப்பட்டை ஊழல், 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரிச் சுரங்க ஊழல், 17 ஆயிரம் கோடி ரூபாய் பெல்லாரி சுரங்க ஊழல், 7 ஆயிரம் கோடி ரூபாய் காமென்வெல்த் விளையாட்டு ஊழல், 3500 கோடி ரூபாய் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், பல்லாயிரம் கோடி ரூபாய் ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல்..........................

என்று கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ஐந்தரை இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது. மாநில அளவிலும் உள்ளூர் அளவிலும் நடைபெற்ற ஊழல்கள் பெரும்பாலும் இந்தக் கணக்கில் வரவில்லை.

தகுதிவாய்ந்த திறமையான அடுத்த பிரதமர் என்று ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் பா.ச.க வின் நரேந்திரமோடி இந்த ஊழல் ஒட்டுண்னி வலைப்பின்னலில் முதல் வரிசையில் இருப்பவர் எனபதை இந்த ஊடகங்கள் திட்டமிட்டே மறைக்கின்றன. மோடியின் குசராத் முன் மாதிரி என்பது ஒட்டுண்ணி முதலாளிய வளர்ச்சிக்கு முன் மாதிரி ஆகும்.

ரிலையன்ஸ் அம்பானி குழுமம் இந்திராகாந்தி மற்றும் அவரது மகன் இராசீவ் காந்தி ஆகியோருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணி பெரு முதலாளி குழுமம் என்றால், கவுதம் அதானிக் குழுமம் மோடியின் ஆதரவோடு வளர்ந்த இன்னொரு ஒட்டுண்ணி குழுமம் ஆகும்.

கவுதம் அதானி குழுமம் 1988ல் ஒரு தொழில் குழுமமாக பதிவு செய்துகொண்ட ஒர் சிறிய குழுமம் ஆகும். ஆனால் மோடி குசராத்தில் ஆட்சிக்கு வந்த 2002 க்குப் பிறகு படுவேகமாக வளர்ச்சியடைந்து இன்று 52 ஆயிரத்து 800 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ள மிகப் பெரும் குழுமமாக வளர்ந்துள்ளது.

குசராத்தின் கட்ச் வளைகுடாவில் முந்திரா பகுதியில் 7350 ஹெக்ட்டேர் அரசு நிலத்தை முப்பதாண்டு குத்தகைக்கு மோடி அரசு அதானி குழுமத்திற்கு வழங்கியது.

ஒரு ஹெக்ட்டெர் நிலத்தை (2 1/2 ஏக்கர் ) வெறும் ஆறாயிரம் ரூபாய்க்கு குத்தகைக்கு பெற்ற அதானிக் குழுமம் அங்கு மிகப் பெரும் துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் போன்றவற்றை அமைத்துக் கொண்டதோடு மட்டுமின்றி அரசுத்துறையான இந்தியன் ஆயில் கார்ப்ரேசனுக்கும் வேறு சில தனியார் நிறுவனங்களுக்கும் ஒரு ஹெக்ட்டேர் 66 இலட்சம் ரூபாய் உள் குத்தகை பெற்றுக் கொண்டு வழங்கியது. ஏறத்தாழ 2000 ஹெக்ட்டேர் நிலம் இவ்வாறு உள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு ஆஸ்திரேலியாவிலும் இந்தோனோசியாவிலும் நிலக்கரி சுரங்கங்களை வாங்கியுள்ளதாக கவுதம் அதானி மார்தட்டிக் கொள்கிறார். அதானி குழுமத்திற்கு மட்டுமின்றி டாடா, ரிலையன்ஸ் குழுமங்களுக்கும் குசராத்தின் வளங்களும் நிலங்களும் மோடி அரசால் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

இம் முதலாளிகளும் நரேந்திர மோடியும் பிரித்தறிய முடியாதபடி ஒருவரால் மற்றொருவர் பயன்பெற்றுக் கொள்ளும் ஒட்டுண்ணிக் கூட்டாளிகளாக மாறியுள்ளனர். அதனால் தான் தனி விமானம் , கூட்டங்களுக்கு பல கோடி ரூபாய் செலவு , மோடியின் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்கு தனி தகவல் தொடர்பு நிறுவனங்கள் கருத்து வாக்கெடுப்பு நிறுவனங்கங்கள் என்று பல வகையிலும் மோடிக்கு ஆதரவான நடவடிக்கைகள் வலுவடைந்துள்ளன.

குசராத் முன்மாதிரி என்ற பெயரால் இவர்கள் முன் வைக்கும் ஒட்டுண்ணி முதலாளியம் ஏற்கனெவே இந்தியாவில் நிலைபெற்றுவிட்ட ஒன்றுதான்.

கட்சி வேறுபாடு இன்றி, மாநில வேறுபாடின்றி இந்த ஒட்டுண்ணி வலைப்பின்னல் படர்ந்து கிடக்கிறது. கட்சிகளும் கம்பெனிகளும் பிரித்தறிய முடியாதபடி இணைந்திருக்கின்றன. தொழில் முதலாளிகளும் நிதி மூலதன பேரரசர்களும் , மனை வணிக சூதாடிகளும் சுரங்கத்துறை கொள்ளையர்களும் கட்சிகளின் தலைவர்களாகி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகும் போக்கு கடந்த 20 ஆண்டுகளில் வேகம் பெற்றுள்ளது.

இப்போது பதவி துறக்கும் மொத்தமுள்ள 545 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 128 பேர் இவ்வகை முதலாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்.

உள்ளாட்சி தேர்தல்களில் பல லட்சம் செலவிடப்படுகிறது என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் பல நூறு கோடி ரூபாய் இறக்கிவிடப்படுகிறது என்பது மட்டுமே வேறுபாடு. மற்றபடி ஒட்டுமொத்த தேர்தல் சனநாயகமும் பண நாயகமாக உருப் பெற்று உறுதிப்பட்டுவிட்டது.

பொது வளங்களும் அரசுப் பணமும் தனியாருக்கு கை மாறுவதும் அத் தனியார் குழுமங்களில் கட்சித் தலைவர்களும் உயர்மட்ட அதிகாரிகளும், கூட்டாளிகளாக இருப்பதும் என்ற இந்த ஒட்டுண்ணி வலைப்பின்னல் இந்தியாவில் மட்டுமின்றி மிகப் பெரும்பாலான நாடுகளில் நிலைபெற்றிருக்கிறது.

கெஜ்ரிவால் முன்னெடுத்துக் காட்டாக சொல்லும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை தான்.

ஆய்வாளர் ஹண்ட்டர் லெவிஸ் எழுதி 2013ல் வெளியாகி உள்ள ”அமெரிக்காவில் ஒட்டுண்ணி முதலாளியம் 2008 முதல் 2012 வரை “ என்ற நூல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடியரசுக் கட்சி, சனநாயகக் கட்சி என்ற வேறுபாடில்லாமல் ஜார்ஜ்புஷ், பாரக் ஒபாமா என்ற வேறுபாடில்லாமல் எல்லா ஆட்சியிலும் ஒட்டுண்ணி முதலாளியம் வலுவடைந்ததை எடுத்துக் காட்டி, ஒபாமா ஆட்சியில் அது எவ்வாறு புதிய வேகம் பெற்றுள்ளது என விளக்கிக் கூறுகிறது.

“தூய முதலாளியத்தின் தலைமையகமாக கருதப்படும் வால் ஸ்ட்ரீட் உண்மையில் ஒட்டுண்ணி முதலாளியத்தின் தலைமை நிலையமாகும்” எனக் கூறும் ஹண்ட்டர் லெவிஸ் அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை பட்டியலிடுகிறார்.

ஒரு குழுமத்திற்கு ஆதரவான ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவது, ஒரு குழுமத்தின் போட்டியாளர்களுக்கு எதிரான ஒழுங்கு முறை விதிகளை உருவாக்குவது, மிகக் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்குவது, மிக பலவீனமான ஈட்டின் பெயரில் கடன் வழங்குவது, போட்டி ஏலம் இல்லாமல் ஒப்பந்தம் விடுவது, தாங்கள் விரும்பும் குழுமத்திற்கு ஆதரவான மானியங்களை அறிவிப்பது, வரி விடுமுறை வழங்குவது, கடன் தள்ளுபடி வழங்குவது போன்ற பல வழிகளில் ஆட்சியாளர்கள் பெருமுதலாளி குழுமங்களுக்கு சலுகை செய்வதும் அதற்கு மறு உதவியாக தனக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கும் தனது கட்சிக்கும் ஏராளமான நிதிப் பெருவது ஊடகங்களின் மூலமாக தங்களுக்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பச் செய்வது என ஆட்சியாளர்கள் பயன் பெருவதும் என்ற வகையில் இந்த ஒட்டுண்ணிக் கூட்டணி அமெரிக்காவில் நிலவுகிறது என்கிறார் ஹண்டர் லெவெஸ்.

இது அமெரிக்காவுக்கு மட்டுலல்ல இந்தியாவுக்கும் பொருந்தும் , பிரிட்டனுக்கும் பொருந்தும் , வேறுபல நாடுகளுக்கும் பொருந்தும்.

எடுத்துக் காட்டாக டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்காக நரேந்திர மோடி அரசு 0.1 வட்டிக்கு 9,570 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. அந் நிறுவனத்தின் மொத்த முதலீடே 10,000 கோடி ரூபாய்தான். இந்தக் குறைந்தவட்டிக் கடனையும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மாதத்தவணையில் கட்டினால் போதும் என்பது ஒப்பந்தம். இதற்கு பதிலுதவியாக டாடா நிறுவனம் மோடியையும், அவரது பா.ச கட்சியையும் கவனித்துக் கொள்கிறது.

பிரித்தனின் டேவிட் கேமரொன் ஆட்சியும் ஒட்டுண்ணி முதலாளிகளின் வலைப் பின்னலுக்குள்ளேயே நடக்கிறது. இதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தியே எடுத்துக் காட்டாகும்.

சின்ஜெண்ட்டா என்ற மிகப்பெரும் விதை நிறுவனத்திற்கு ஆதரவாக அறிவியல் உண்மைகளையே வளைத்து மரபீனீ மாற்ற மக்காச் சோளத்திற்கு கேமரோன் ஆட்சி இசைவு வழங்கியது. சின் ஜெண்ட்டாவின் மரபீனி மாற்ற மக்காச் சோளத்திற்கு பிரித்தனின் அறிவியலாளர்களிடையேயும் சூழலியல் ஆர்வலர்களிடையேயும் கடும் எதிர்ப்பு இருந்தது. கேமரோன் ஆட்சி இது குறித்து ஆய்வு செய்ய ஒர் வல்லுனர் குழுவை நியமித்தது.

அக் குழுவில் இடம்பெற்ற பெரும்பாலோர் சின்ஜெண்ட்டாவுக்கு ஆதரவான விஞ்ஞானிகளாக இருக்கும் படி கேமரோன் பார்த்துக் கொண்டார். அவர் விரும்பியபடி சின்ஜெண்டா நிறுவனத்திற்கு ஆதரவான அறிக்கையை அந்த வல்லுனர் குழு வழங்கியது. அந்த அறிக்கையைக் காரணம் காட்டி மரபீனீ மாற்ற மக்காச் சோளத்திற்கு கேமரோன் இசைவு வழங்கினார்.

இவ்வாறு ஒட்டுண்ணி முதலாளியம் உலகு தழுவி நிலை பெற்றிருப்பது தற்செயலானது அல்ல. கெஜ்ரிவாலும் அவர்கருத்துக்கு ஆட்பட்டவர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரலாற்றின் ஓட்டத்தில் மக்கள் போராட்டங்களின் விளைவாகத்தான் தேர்தல் சனநாயகம் பிறந்தது. மன்னர் ஆட்சியை ஒப்பிட , சர்வாதிகார ஆட்சியை ஒப்பிட தேர்தல் சனநாயகம் முற்போக்கானதுதான். ஆயினும் இத் தேர்தல் சன நாயகம் தொடங்கிய காலத்திலிருந்தே - கட்சிகள் என்ற அமைப்புகள் உருவான காலத்திலிருந்தே இத் தேர்தல் கட்சிகளுக்கும் முதலாளிய நிறுவனங்களுக்கும் இடையேயான உறவு தோன்றிவிட்டது.

 வாக்குரிமை சன நாயகம் மக்களுக்கு வழங்கப்பட்டாலும் சாரத்தில் முதலாளிகளின் நலன்களையே தேர்தல் அரசியலும், ஆட்சி முறையும் பிரதிபலித்தது. அதனால் தான் இதனை முதலாளிய சன நாயகம் என்று மார்க்சிய ஆசான்கள் வரையறுத்தனர்.

கையூட்டு கொடுத்து கட்சிக்காரர்களை வளைத்து கம்பெனிகள் காரியம் சாதித்துக் கொண்டது நீண்ட காலமாக நீடித்த ஒன்றுதான். ஆனால் 1990 க்குப் பிறகு தாராளமயம் – உலகமயம் என்றப் பொருளியல் போக்கு தீவிரம் பெற்ற பிறகு ஒட்டுண்ணி முதலாளியம் என்ற முதலாளியத்தியத்தின் ஓர் அழுகல் நிலை நிலைக்கொண்டது.

 தொடக்க கால முதலாளியம் போட்டி முதலாளியமாக இருந்தது. தொழில் நுட்ப வளர்ச்சி, மேலாண்மைத் திறன் ஆகியவற்றின் வழி முதலாளிகள் தங்கள் இலாபத்தை பெருக்கிக் கொள்வது என்பது போட்டி விதியாக செயல்பட்டது. உழைப்புச் சுரண்டல் அனைத்து முதலாளிகளுக்குமான பொது விதியாக இருந்த போதே மேற்கண்ட போட்டி விதி செயல்பட்டது.

இதன் வளச்சிப் போக்கில் முற்றுரிமை முதலாளியம் (monopoly capitalism) உருவானது. தொழிலுற்பத்தி மூலதனத்தை விட நிதி மூலதனம் மேல் நிலை பெற்றதை இந்த முற்றுரிமை முதலாளியக் கட்டம் குறித்தது.

இந்த நிதி மூலதனமும் ஓர் முற்றுரிமை கட்டத்தை அடைந்ததை உலகமயம் குறிக்கிறது. வங்கி மூலதனத்தின் மேலாதிக்கம் இதன் தனித்தன்மையாகும்.

உற்பத்தித் துறையின் மீது வங்கி மூலதனம் மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்த மேலாதிக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் குறைந்த காலத்தில் அதிக இலாபம் ஈட்ட முடியாத தொழில் துறை நிறுவனங்களும் சிறிய நடுத்தரவங்கிகளும் சந்தையை விட்டு வெளியேற்றப்படுகின்றன.

இச்சூழலில் புதிய மூலதனம் என்பது புதிய தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவதை விட இருக்கின்ற நிறுவனங்களை கைப்பற்றுவதிலேயே, அல்லது இருக்கின்ற நிறுவனங்களின் சந்தைகளிலேயே கூடுதலாக ஈடுபடுத்தப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை இணைத்துக் கொள்வதும் (mergers), எடுத்துக் கொள்வதும் (acquisitions) வேகம் பெருகின்றன. இந்தியாவில் கடந்த 2011,2012, 2013 ஆகிய மூன்றாண்டுகளில் மட்டும் இவ்வாறு கையகப்படுத்தலில் ஆறு இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் கைமாறி இருக்கிறது.

 அதாவது ஓரளவு சந்தை விரிவாக்கம் நடந்தாலும் இந்த சந்தை விரிவாக்கத்தின் வேகம் குறைந்துபோவதும், இருக்கிற சந்தையை கைப்பற்றிக் கொள்ளும் மூலதனத்தின் வேகம் அதிகரித்திருப்பதும் உலக மயக் கட்டத்தின் குணம் ஆகும்.

 சந்தை விரிவாக்கத்தின் வேகம் தேவையான அளவுக்கு இல்லாதபோது நிதி மூலதனம் தொழில் துறையைவிட வேறு துறைகளுக்குப் பாய்கிறது. பங்குச் சந்தை சூதாட்டம், வங்கி மூலதனம், மனை வணிகம், ஊக வணிகம் , காப்பீட்டுத் தொழில் போன்றத் துறைகளில் இந்த நிதி மூலதனம் பாய்கிறது. தொழில் துறை மூலதனம் என்று எடுத்துக் கொண்டால் இயற்கை கனிவளங்களை சூறையாடுவதில் இந்த மூலதனம் திருப்பிவிடப்படுகிறது.

இது தவிர இன்னொரு முக்கியமான துறையாக படைகருவிகள் உற்பத்தித் துறையும் இதற்கு துணையான படைக் கட்டுமானத்துறையும் வளர்ந்து வருகிறது.

மேற்கண்ட துறைகள் அனைத்திலும் முதலாளியத்தின் போட்டிவிதிகளுக்கு பெருமளவு வேலையில்லை. ஆட்சியாளர்களின் துணை கொண்டுதான் பங்குச் சந்தை சூதாட்டமானாலும் மனை வணிகமானாலும் படைத்துறை தொழில் என்றாலும் கட்டுமானத்துறை தொழில் என்றாலும் வளர முடியும்.

இவ்வாறான சூழலில்தான் பெருமுதலாளிகளும் அரசியலாளர்களூம் அரசு நிர்வாகத்தினரும் நீதித் துறையினரும், ஊடகத்துறையினரும் ஒரே அணியில் கை கோக்கும் ஒட்டுண்ணி முதலாளியம் (crony capitalism) நிலைபெருகிறது. முதலாளிய சூதாடிகள் கட்சிப் பொறுப்புகளிலும் கட்சிப் பிரமுகர்கள் முதலாளிகளாகவும் இருக்கின்றனர். கட்சி அரசியல் முதலாளிய நிறுவனங்களால் வழங்கப்படும் (sponsored) ஒன்றாக மாறுகிறது.

”பொருளாதார அடியாட்கள்” அரசியல் கட்சிகளிலும் , ஆட்சி நிர்வாகத்திலும் நீக்கமற நிரம்புகிறார்கள்.

 உலக வங்கியும் , பன்னாட்டு நிதியமும் எவ்வாறு முதலாளிகளின் சூறையாடலுக்கு ஆதரவாக பொருளாதார அடியாட்களை உருவாக்கி பல்வேறு நாடுகளின் கொள்கை முடிவெடுக்கும் இடங்களில் வைக்கிறார்கள் என்பதை “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் “ என்ற தனது புகழ்பெற்ற நூலில் ஜான் பெர்க்கின்ஸ் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.

“ நடப்பது சன நாயகம் (democracy) அல்ல. குழும நாயகம் (corporatocracy) “ என்பதை பல நாடுகளின் நிலைமைகளை ஆதாரம் காட்டி பெர்க்கின்ஸ் நிறுவுகிறார். உயராய்வு நிறுவனங்களிலும், திட்ட மையங்களிலும் , ஆய்வுத்துறை ஊடகங்களிலும் பெருமுதலாளிய நிறுவனங்களின் பொருளாதார அடியாட்கள் நுழைக்கப்பட்டு கருத்து நிலை மேலாண்மை நிறுவப்படுவதை ஜான்பெர்க்கின்ஸ் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் எடுத்துக் காட்டுகிறார்.

உயராய்வு மையங்களிலும் அரசின் உயர் மட்டத்திலும் உள்ள அதிகாரிகள் அயல் பணி என்ற வகையிலும் கூட்டுச் செயல்பாடு என்ற முறையிலும் தனியார் பெரு நிறுவனங்களோடு உறவு கொள்வது திட்டமிட்ட முறையில் நடந்தேருகிறது.

எடுத்துக் காட்டாக அரசின் தொலைத் தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து உயர்மட்ட அதிகாரிகள் ஏர்டெல் , வோடோபோன் , ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு செல்வதும், இத் தனியார் நிறுவனங்களில் உள்ளோர் உயர்மட்ட ஆலோசனைக் குழுக்களில் தொலை தொடர்பு துறையில் இடம் பெருவதும் இந்த அரசுத்துறை அதிகாரிகள் பணி ஒய்வு காலத்தில் இத் தனியார் நிறுவனங்களில் பதவி பெருவதும் என்ற முறை அனைவரும் அறிந்த ஒன்று.

சுழல் கதவு முறை ( revolving door) என்று இதனை அழைக்கின்றனர்.

மன்சாண்டோ, சின்ஜெண்ட்டா, பாயர் போன்ற நிறுவனங்களின் நிதி உதவியோடே பல்வேறு வேளாண் உயராய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருவதை நாடறியும்.

இவ்வாறு பல வழிகளிலும் தனியார் நிறுவனங்களும் அரசு நிர்வாகக் கட்டமைப்பும் பின்னிப் பினைந்துள்ளன. உலக மயக் கட்டத்தில் இந்த ஒட்டுண்ணிப் பிணைப்பு இன்னும் வலுப்பெற்றுள்ளது.

இந்த ஒட்டுண்ணி வலைப் பின்னலுக்கு அப்பால் தூய முதலாளியத்தையோ தூய சனநாயகத்தையோ கெஜ்ரிவால் கற்பனையில் மட்டுமே கண்டுகளிக்க முடியும்.

 மக்கள் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக தகவல் அறியும் உரிமைச்சட்டம், லோக்பால் சட்டம், சூழல் பாதுகாப்புச்சட்டம் , வன உரிமைச்சட்டம் போன்றவை இந்த அரசாங்கங்களால் பிறப்பிக்கப்படுகின்றன என்பதும் வரம்புக்குட்பட்டு அவை மக்களுக்கு பயன் தருகின்றன என்பதும் உண்மையே. ஆனால் இவை ஒட்டுண்ணி முதலாளிய வலைப்பின்னலை தகர்த்துவிடும் அளவுக்கு வலுவுள்ளவை அல்ல.

முதலாளிய சட்டத்தில் சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதாலேயே எல்லாருடைய சொத்துரிமையும் பாதுகாக்கப்படும் என்று பொருளல்ல. பெரு முதலாளிகளின் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கு முன்னால் சிறு உழவர்களின் நில உரிமை கிழித்தெறியப்படுகிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவை என்றால் பழங்குடி மக்களின் நிலச் சொத்துரிமை, சமூகத்தின் பொதுச் சொத்துரிமை ஆகிய அனைத்தும் கடலில் வீசப்படுகின்றன.

அதே போல் தாராள மயம் என்று சொல்வதாலேயே தங்கு தடையற்ற தாராளப் போட்டி அனுமதிக்கப்படும் என்று பொருளல்ல. ஆட்சியாளர்களோடும் அதிகார வர்க்கத்தோடும் கூட்டணி காண்கின்ற ஒட்டுண்ணி முதலாளிகளே கோலோச்ச முடியும்.

முதலாளியம் முகிழ்த்தபோது தேசியம் என்பதும் தேச இறையாண்மை என்பதும் மதிக்கப்படும் கோட்பாடுகளாக வளர்ந்தன. அதே முதலாளியம் முற்றுரிமைக் கட்டத்தை அடைந்து ஏகாதிபத்தியமாக வளர்ந்தபோது சந்தைப் போட்டிகள், படையெடுப்பில் முடிந்தன.

இன்று உலகமயக் கட்டத்தில் ஒட்டுண்ணி முதலாளிகளின் தேவைக்காக எந்தக் கேள்வி முறையும் இன்றி நாடுகளின் இன்றையாண்மை காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. பழையபடி கேள்வி முறையற்ற பேரரசுக் காலம் (empire epoch) தலையெடுத்துள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்துவதே ஊடகங்களின் பணியாக உருவெடுத்துள்ளது. கெஜ்ரிவால் கருதுவது போல் தாராளமயக் கட்டத்தில் குறைந்த அரசு (less government) என்பதோ மீ அரசு (super state) என்பதோ உருவாகிவிடுவதில்லை . நாட்டு அரசுகள் இருக்கும். அவை முன்னை விட வலுவாக இருக்கும்.

ஆனால் ஒரே வேறுபாடு; ஏற்கெனவே இருந்ததுபோல் மக்கள் நலத்திட்டங்களை பொறுப்பேற்றுச் செயல்படுத்தும் அரசாக இருக்காது. கல்வி, மருத்துவம், குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தனியாரிடம் இருக்கும் அதிகம் போனால் சில இலவசங்களை வழங்கி வெளிப்படையான அடக்குமுறைக் கருவியாக அரசு செயல்படும்.

ஒட்டுண்ணி முதலாளியத்தின் ஒட்டுமொத்த விளைவு இது. அதிகாரம் மையபடுதல், அரசியல் குற்றமயமாதல், கட்சிகள் ஊழல்மயமாதல் தேர்தல் சனநாயகம் பண நாயகமாதல் ஆகிய இவை இன்றைய உலகமய முதலாளியத்தோடு இணைந்தவை.

இவை அனைத்திலிருந்தும் ஒட்டுமொத்தமாக வெளியேறுவதற்கான முயற்சிதான் மக்களுக்குத் தேவை.

பூனை வேண்டும், ஆனால் அது சைவப்பூனையாக இருக்க வேண்டும் என்று கோருவதும், முதலாளியம் வேண்டும் ஆனால் அது ஒட்டுண்ணி முதலாளியமாக இல்லாமல் தூய முதலாளியமாக இருக்க வேண்டும் என்று கேட்பதும் ஒன்றுதான்.

Pin It