திசம்பர் 21.12.2012 அன்று உலகம் அழியக்கூடும் என்றும் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இனமக்கள் அறிவித்தனர் என்றும் ஊடகங்களிலும், பொதுவெளியிலும் பரபரப்பான விவாதங்கள நடைபெற்றன.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த சிறு கிராமமான புகராச்(Bugarch) என்ற கிராமத்திலுள்ள மலை மீது ஏறினால் மட்டுமே 2012 அழிவிலிருந்து தப்பிக்க முடியும் என்று பரவிய வதந்தியின் காரணமாக, வெறும் 189 பேர் வசிக்கும் அந்த கிராமத்திற்கு கடந்த மார்ச் மாதம் வரை மட்டும் சற்றொப்ப 20,000 பேர் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கிறார், அக்கிராமத்தின் மேயர் ஜீன் பியர் டிரோல்டு.
 
பிரெசில் நாட்டின் டெரசினா(Teresina) என்ற நகரில், உலகம் அழியப்போகிறது என நம்பியவாறு 11.10.2012 அன்று தற்கொலைக்கு முயன்ற 100 பேர் கொண்ட குழுவினரை காவல்துறையினர் தடுத்து, அக்குழுவினரின் தலைவர் சாண்டோஸ் என்பவரைக் கைது செய்தனர்.
 
சீனாவின் ஹெனன் மாகாணத்தில், உலகம் அழியப்போவதாக நம்பிய ஒருவர், 14.12.2012 அன்று குழந்தைகளைத் தாக்கியதில், 23 குழந்தைகள் காயமுற்றனர். அந்நபர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, உலகம் அழியும் என இணையத்தில் தகவல் பரப்பிய 7 மாகாணங்களை 93 பேரை சீன அரசு கைது செய்தது.
 
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் பணிபுரியும் மூத்த அறிவியலாளர் டேவிட் மொரிசன், உலக அழிவுக்கு பயந்து கொண்டு, 2 வயதுக் குழந்தை மற்றும் வயிற்றில் வளரும் மற்றொரு குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளவிருப்பதாக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மின்னஞ்சலில் தனக்குக் கடிதம் எழுதியதாகவும், அதே போல ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் தமக்கு 10 மின்னஞ்சல்களாவது வருகின்றன என்றும் இலண்டனிலிருந்து வெளியாகும டெய்லி மெயல் ஏட்டில் எழுதினார். சில நாடுகளில் உலக அழிவிற்கு அஞ்சித் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.
 
தற்போது பேசப்படும் உலக அழிவுப் பரப்பரையில், முதன்மைப் பாத்திரம் வகிக்கும் மாயன் நாட்காட்டி குறித்து உலகெங்கும் பரப்புரை நடைபெறுவதால், இவ்வாண்டு 52 மில்லியன் புதிய சுற்றுலாப் பயணிகள் மாயர்கள் வாழ்ந்த மெக்சிகோ பகுதிகளுக்கு வருகை தருவார்கள் என அந்நாட்டு அரசு கணக்கிட்டது. அந்தளவிற்கு மாயன் நாட்காட்டி குறித்தும் மாயர்கள் குறித்தும் பரப்புரைகளும், பொய் வதந்திகளும் பரவிக் கிடந்தன.

இவ்வாறு உலகெங்கும், திசம்பர் 21-22 நாட்களில் உலகம் அழிவை சந்திக்கும் என்ற வதந்தி தீயாகப் பரவிக் கிடந்தது. ஆனால், அப்படியொன்றும் அழியவில்லை. உலகம் தன்போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது.

கிறிஸ்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் செறிவுடன் வாழ்ந்து வந்த இனக்குழுவினரே மாயர்கள் ஆவர். வானவியல், கணிதம், கட்டிடக்கலை என பல்துறைகளில் வல்லுநர்களாக பெற்று விளங்கிய மாயன் இனத்தவர்கள் கட்டிய கட்டுமானங்கள் இன்றளவும் பிரம்மிக்கத் தக்கவையாக உள்ளன. அவர்களது கட்டுமானங்களில் புதிய புதியக் கல்வெட்டுகளும், ஓவியங்களும் கிடைத்தாவாறே ஆய்வுகள் தொடர்கின்றன.

இன்றைய மெக்சிகோவின் யக்கட்டன் மாகாணத்தில் அமைந்துள்ள மாயர்கள் கட்டிய பிரமிட் வடிவம் ஒன்றின் நான்கு புறப்படிக்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை, இன்றைக்கு நாம் ஓர் ஆண்டின் நாட்களாகக் கருதும் 365 ஆகும். அதேபோல், ஓர் ஆண்டின் பகலும், இரவும் சமமாக உள்ள மாதத்தில் மட்டும் பாம்பு வடிவில் நிழல் விழும் வகையில், அவர்கள் தம் கட்டுமானங்களை எழுப்பியுள்ளதை உலகே அதிசயித்துப் பார்க்கிறது.

இவ்வாறு கட்டிடக்கலையில் தனிச்சிறப்புடன் விளங்கிய மாயர்களுக்கும் தமிழர்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாக பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜீன் டி.மேட்லாக் (Gene D. Matlock) என்ற ஆய்வாளர் இது குறித்து, தமிழகம் வரை வந்து ஆய்வு செய்து நூல்கள் எழுதியிருக்கிறார். (இது குறித்து மேலும் அறிய: http://viewzone2.com/ancientturksx.html,http://www.hiddenhistoryhumanity.com/8B%20Shamballa%20Mayans%20Brazil%206th%20RR%20II.htm)
 
இவ்வாறு கட்டிடக்கலை மற்றும் கணிதவியலில் சிறந்து விளங்கிய மாயன் இனத்தவர்கள், தமது நாட்காட்டியை 7 பருவங்களாகப் பிரித்துள்ளனர். கி.மு 3113ல் தொடங்கும் இந்நாள்காட்டியின், 7ஆம் பருவத்தின் இறுதி நாள் திசம்பர் 21 2012 ஆகும்.

வானவியல், கணிதம், கட்டிடக்கலை என பல்துறைகளில் சிறந்து விளங்கிய மாயர்கள் திசம்பர் 21-2012ஆம் நாளோடு தனது நாட்காட்டியை முடித்து விட்டனர் என்பதால் அன்றோடு உலகம் அழியப் போகிறது என்பது தான் இவ்வதந்தியின் மையக்கருத்து. இக்கருத்தை முதலில் அறிவித்தது, மைக்கேல் டி.கோ என்பவர் ஆவார்.

மாயன் இனத்தவர் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட அவர், கடந்த 1966ஆம் ஆண்டு, மாயர்களின் நாட்காட்டி முடிவடைவது உலகின் முடிவாகவும் இருக்கலாம் என்று முதலில் கருத்து வெளியிட்டார். இவர் ஆய்வாளர் மட்டுமல்ல, கொரியாப் போரில் அமெரிக்காவிற்காக அதன் சி.ஐ.ஏ. முகவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Michael_D._Coe).
 
இவரது கருத்தை முதன்மைப்படுத்தி பின்னர் வந்த சில ஆய்வாளர்களும் இதே கருத்தை முன்மொழிந்தது தான் சிக்கலுக்கு முதன்மைக் காரணம். எனினும், மாயன் நாட்காட்டியின் முடிவு என்பது நாட்காட்டியின அடுத்த சுழற்சியின் தொடக்கம் என்பதை பல முன்னணி ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டினர்.

ஸ்பானிஷ், டச்சு போன்ற அயலார் படையெடுப்பின் காரணமாக மாயன் இனத்தவரும், அவர்தம் நூல்களும் அழிக்கப்பட்டபின், தற்போது சற்றொப்ப 80,000 மாயன் இனத்தவர்கள் மெக்சிகோவில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் குருவாக விளங்குபவர் கூட, நாட்காட்டியின் முடிவென்பது, புது சுழற்சி என்று தான் அறிவித்தார். ஆனால், ஊடகங்களில் இது பெரிதாகப் பேசப்படவேயில்லை.

ஆனால், மாயன் நாட்காட்டி முடிவடையும் தினத்தோடு எல்லாம் முடிந்துவிடப் போகிறது என தொடர்ந்து பல கதைகளையும், அறிவியலுடன் அதை முடிச்சுபோடும் கட்டுக்கதைகளும் எழுப்பப்பட்டு வந்தன. அவை இந்த அளவிற்கு மக்கள் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னணியில், ஓர் சதியே இருக்கிறது.
 
கடந்த 2009ஆம் ஆண்டு, மாயன் நாள்காட்டியையும், புவியின் நிலையற்ற தட்பவெப்ப சூழல்களையும் உள்ளடக்கி 2012 திசம்பர் 21 அன்று உலகம் அழியும் என்ற கருத்தோடு, பிரம்மாண்ட கணினி வரைகலைகளோடு ‘2012’ என்றொரு படம் வெளியானது. கணினி வரைகலைக் காட்சிகளின் மூலம் உலகம் அழிவதைப் போன்ற காட்சிகளை கண் முன் நிறுத்திய அத்திரைப்படம், 200 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்டு, உலகெங்கும் சற்றொப்ப 770 மில்லியன் டாலர் தொகையை வசூலித்தது. சோனி பன்னாட்டு நிறுவனத்தால் இப்படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது.
 
இப்படத்தின் திரை முன்னோட்டம் முதலில் வெளியிடப்பட்ட போது, அதன் முடிவில் ‘கூகிள் இணையத்தில் ‘2012’ என்று தேடுங்கள் உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்” என விளம்பரப்படுத்தியது. ஏன் அப்படி சொல்கிறார்கள், என உலகெங்கும் வெளியான இப்படத்தின் திரை முன்னோட்டத்திற்குப் பார்த்த பல இலட்சக்கணக்காணோனர் இணையங்களில் ‘2012’ எனத் தேடினர்.

அவ்வாறு தேடிய போது, 2012 ஆம் ஆண்டு உலகம் அழியப் போகிறதென்றும், மாயன் நாள்காட்டி முடிவடைவதாலும், புதிய கிரகம் ஒன்று புவியுடன் மோதவிருப்பதாலும், வால் நட்சத்திரங்கள் புவியின் மீது விழுவதாலும் இது நிகழும் என அறிவியல் முலாம் பூசப்பட்ட பல காரணங்களோடு, பல்வேறு புதிய இணையதளங்கள் முளைத்திருந்தன.
 
அவை அனைத்தும், 2012 திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சோனி இன்டர்நேசனல் நிறுவனம் உருவாக்கியவை என்பது பின்னர் தான் தெரிய வந்தது. சோனி நிறுவனம் அத்தோடு மட்டும் நிற்கவில்லை, இத்திரைப்படத்தை மனித குலத் தொடர்ச்சிக்கான நிறுவனம் (Institue of Human Continuity) என்ற நிறுவனம் தான் மக்களிடம் கொண்டு செல்லப் போகிறதென்று அறிவித்தது. மனித குலத் தொடர்ச்சிக்கான நிறுவனம் என்ற அந்த நிறுவனத்தின் பெயரே மக்களிடத்தில் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்தது.
 
அந்த அமைப்பின் இணையமாக அறிவிக்கப்பட்ட www.instituteforhumancontinuity.org என்ற இணைய தளத்தில் நுழைந்தவுடன், 2012ஆம் ஆண்டு உலக அழிவை மாயர்கள் முன்னறிவித்தனர் என்றும், அதை அறிவியல் உலகம் உறுதிப்படுத்தியது என்றும், உலக அழிவு நடக்கும் போது, தப்பி செல்ல வேண்டுமானால் அந்த இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பாதுகாக்கப்படுவர் என்றும் கூறியது. அந்த அமைப்பின் நோக்கம், 2012 உலக அழிவிற்குப் பின் மனித குலத்தைத் தொடரச் செய்வதே என பிரகடனப்படுத்தியது. இந்த இணையதளமும் மக்களிடம் ஒருவித அச்சத்தை எழுப்பியது. பலர் முந்திக் கொண்டு பதிவு செய்தனர்.

கீழ்க்கண்ட புகைப்படம்தான், 2009ஆம் ஆண்டில் அத்தளத்தில் வெளியான செய்திக்கு ஆதாரம். ஆனால், இந்த பக்கம் இன்றைக்கு இல்லை. இத்தளத்திற்கு சென்றால், நேரடியாக சோனி நிறுவனத்தின் விளம்பரம் தான் இன்றைக்கு வருகின்றது.

பின்னர் தான், இந்த புதிய அமைப்பு, சோனி நிறுவனத்தினால் விளம்பரத்திற்காக தொடங்கப்பட்ட போலி அமைப்பு என்பதும், அதன் இணையதளம் சோனி நிறுவனத்தின் கணினிகளிலேயே இயங்கியது என்பதை கணினி வல்லுநர்களால் அம்பலப்படுத்தப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது.
 
இந்த அப்பட்டமான மோசடியில் ஈடுபட்டதற்கு சோனி நிறுவனம் எந்த வகையிலும் கவலைப் படவில்லை. இந்த மோசடியை வணிக உத்தி என சிறப்புப் படுத்திப் பேசியது.
 
இவ்வாறு, 2012 உலக அழிவு குறித்து சோனி நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட அச்சத்தை உள்வாங்கிய பலரும், அதன் பின் 2012 உலக அழிவு குறித்துப் பேசுகின்ற பல புதிய இணையதளங்களை உருவாக்கத் தொடங்கினர்.
 
மேலுள்ள படம், திசம்பர் 21ஆம் நாள் உலகம் அழியும் போது, எப்படித் தப்பிக்க வேண்டும் என்ற குறிப்புகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை விற்பனை செய்யும் இணையதளமாகும். இவ்வாறான கையெடுகள், குறுந்தகடுகள் தொடங்கி, பதுங்குக்குழிகளில் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கும் பெரு நிறுவனங்கள் வரை பலரும் உலக அழிவை முன்னிட்டு வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதை முன் வைத்து, பல தொலைக்காட்சி விளையாட்டுப் போட்டிகளும் சந்தையில் வந்தன.

இவர்கள் அனைவரும், திசம்பர் 21க்குப் பிறகு உலகம் அழியாதது குறித்து பதில் கூறாமல் கிடைத்தப் பணத்தை சுருட்டிக் கொண்டு மறைந்தனர். பலர் இணையங்களையும் மூடிவிட்டனர். அப்பாவி மக்கள் தான் அச்சத்தால் நொறுங்கிக் கிடந்தனர்.

இந்த இணையதளங்கள் வெளியிட்டத் தகவல்களை முன்வைத்து, ‘திசம்பர் 21 – 2012 அன்று உலகம் அழியுமா?’ என்ற கேள்வியுடன் உருவாக்கப்படும், கட்டுரைகள், நூல்கள், ஆராய்ச்சி ஆவணப்படங்கள் ஆகிய படைப்புகள் நம்மூரின் முன்னணி ஊடகங்களிலும் வெளிவரத் தொடங்கின.
 
அவ்வாறு வெளியிடுப்படும் செய்திகளின் இறுதியில் பெரும்பாலும், ‘உலகம் அழியாது’ என்ற அறிவியலாளர்களது கருத்துகளைத் தான் அவை வெளியிடுகின்றன என்ற போதிலும், அறிவியலாளர்களின் கருத்தையே தலைப்பாக்கி, மக்களிடம் எழுந்துள்ள அச்சத்தைப் போக்குவதற்கு இவர்கள் முயற்சி எடுப்பதில்லை. மாறாக, “அழியுமா?” என கேள்வி எழுப்பி, அக்கேள்விக்கு விடை தேடி வரும் மக்களை ஈர்த்து தம் ஊடகத்தை வணிகம் செய்யும் நோக்கமே இவர்களிடம் முதன்மையாக காணப்படுவதைப் புரிந்து கொள்ள முடியும்.
 
இவ்வாறான, ஊடகப் பரப்புரைகளின் மூலம் பல நூறு முறை உலக அழிவு குறித்த வதந்திகள் பரப்பப்பட்டுள்ள போதிலும், உலகம் அழிந்து விடவில்லை. ஆனால், இவ்வாறான வதந்திகள் ஆளும் வர்க்கத்தினருக்கு பெருமளவில் உதவி புரிந்துள்ளன.

உலக அளவில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, தனியார்மயக் கொள்ளையின் அவலம், ஒட்டுண்ணி அரசியலின் ஊழல் சீர்கெடுகள் போன்ற பல்வேறு சிக்கல்கள் பின்தள்ளப்பட்டு, உலக அழிவைப் பற்றி மட்டுமே மக்கள் பேசிக் கொள்ளுமாறு, மக்களைப் பணித்தது ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வது தானே?

ஆனால், இந்த வதந்திகள் வெறும் விவாதப் பொருளாக மற்றும் நின்றுவிடவில்லை. பலரையும் அச்சத்தில் ஆழ்த்தித் தற்கொலைகளுக்கும் இவை தள்ளியிருக்கின்றன.
 
இந்த ஆண்டு கூட, 17.05.2012 அன்று திசம்பரில் உலகம் அழியக்கூடும் என நம்பி, பிரிட்டனைச் சேர்ந்த இஸ்பெல் டைலர் என்ற 16 வயது இளம்பெண் இலண்டனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரைப் போல பலரும் பல மேற்குலக நாடுகளில் இதுபோன்ற வதந்திகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்க, இணையதள வணிகர்களோ இலாபத்தில் கொழுத்தனர்.
 
மக்களின் எதிர்காலம் முதலாளியத்தின் சூறையாடலால் கேள்விக் குறியாக்கப்படும் போது, மரணம் அல்லது அழிவு போன்ற ஏதாவதொரு வழியில் இவ்வுலகிலிருந்து விடுதலை பெறத் துடிக்கும் மனநிலையை மக்கள் எளிதில் பெற்றுவிடுகின்றனர். அதன் விளைவாகவே எதிர்த்துப் போராடும் ஆற்றல் குறைந்து, “எல்லோரும் அழிந்துவிட்டால் நல்லதே” என்ற மனநிலையும் பிறக்கிறது. ஆகவே தான், உழைக்கும் மக்கள் இது போன்ற வதந்திகளுக்கு எளிதில் பலியாவதும் நடக்கிறது.
 
தள்ளாடி வரும் முதலாளிய சமூகக் கட்டமைப்பிற்கு எதிராக, உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டியக் கடமையை மேற்கொண்டுள்ள நாம் ஒன்றை சுட்டிக் காட்ட வேண்டும். இந்த உலக அழிவு என்பது, என்றைக்கோ நடைபெறப்போகும் அபூர்வ நிகழ்வல்ல, முதலாளியத்தின் மிகைச் சுரண்டலின் எதிர் விளைவாக, அது இன்றைக்கும் நடந்து கொண்டுள்ள நிகழ்வே.

இயற்கைக் கொடையாக வழங்கிய வளங்களை என்றைக்கு முதலாளியம் வரம்புக்கு மீறி சுரண்டிக் கொழுத்ததோ, அன்றிலிருந்து இவ்வுலகத்தின் அழிவு முதலாளியத்தால், தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இயற்கை அளித்த கொடையான நீர், நிலம், காற்று உள்ளிட்ட அனைத்து வளங்களையும் நமது தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை எனினும், அதை மாசுபடுத்தி அழித்தொழிக்கும் உரிமை நம் யாருக்கும் கிடையாது என்ற உணர்வு நமக்கு என்றைக்காவது ஏற்பட்டிருக்கிறதா?

அதிகளவில் இயற்கை வளங்களை முதலாளிய நாடுகளும், நிறுவனங்களும் உறிஞ்சியதன் விளைவாக இன்றைக்கு காடுகள் அழிக்கப்பட்டு, மழையின்றி வறட்சியாலும், மிதமிஞ்சிய வெயில் மற்றும் குளிர் போன்ற தட்பவெப்ப சூழல்களாலும் மக்கள் அழிந்து கொண்டிருப்பதை, உலக அழிவாக நம்மால் ஏன் உணர முடியவில்லையா?
 
நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சப்பட்டதாலும், அதன் விளைவாக நிலத்தட்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் ஆங்காங்கு அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கங்கள் மக்கள் உயிரை பலிவாங்கிக் கொண்டுள்ளன. கடலுக்கடியில் ஏற்படும் கடும் நிலநடுக்கங்களின் விளைவாக சுனாமி போன்ற அழிப்பேரலைத் தாக்குதல்கள் நிகழ்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகின்றனர்.
 
இவ்வாறு, இயற்கையை வரம்பின்றி உறிஞ்சி, மக்களை அழித்தொழித்து வரும் முதலாளியத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சி எடுக்காமல், நம் புவியை நாம் எப்படிக் காக்க முடியுமா? ஆக, உலகம் அழிவதைத் தடுக்க வேண்டுமானால், முதலாளியத்தை அழித்தொழிப்பதன் மூலமே அதை செய்ய முடியும். அதற்கு அணிதிரள்வதற்கான நாளாக திசம்பர் 21-ஐ நாம் மாற்றிக் காட்டுவோம்! வெற்று வதந்திகளுக்கு பலியாகாமல், புவியைப் பாதுகாக்கும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் இறங்குவோம்!

Pin It