வேட்டையாடிய விலங்குகளின் தோலை, குகைகளில் விரிப்பாகவும் உடலைப் போர்த்தும் ஆடையாகவும் மட்டுமே வேட்டைச் சமூகத்தில் மனிதன் பயன்படுத்தி வந்தான். மேய்ச்சல் சமூகத்திற்குள்ளும், வேளாண் சமூகத்திற்குள்ளும் நுழைந்த பின்னர் தோலின் பயன்பாடு விரிவடைந்தது. போரில் பயன்பட்ட குதிரைகளுக்கும், கிடுகு என்ற பெயரிலான தோற் கேடயங்களுக்கும், வாளைச் சொருகி வைக்கும் உறைகளுக்கும் தோல் பயன்படலாயிற்று.

நீரிறைக்கும் வேளாண்மைக் கருவிகள் சிலவற்றுக்கும் தோல் தேவைப்பட்டது.தோலால் செய்யப்படும் பொருட்களில் பரவலாக அறிமுகமான பொருள் செருப்பாகும். முல்லை நிலத்து இடையன் ஒருவன் இடைவிடாது  செருப்பணிந்திருந்தால் ஏற்பட்ட வடுவினையுடைய  அடியுடன் காட்சியளிப்பதை “ தொடுதோல் மரீஇய வடுவாள் நோன் அடி ” என்று பெரும்பாணாற்றுப்படை (149) குறிப்பிடுகிறது. அடி முழுவதையும் மூடும் செருப்பை ‘அடிபுதையரணம்’ என அழைத்தனர். (மேலது 61) கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று ‘அடிநிலை’ என்ற பெயரால் செருப்பைக் குறிப்பிடுகிறது.

இவ்வாறு நாகரீக வளர்ச்சியிலும், தொழிற் கருவிகளிலும், போர் கருவிகளிலும் பயன்பட்ட தோலைப் பதப்படுத்துவது தொழில்நுட்பம் சார்ந்ததாகும். தோலைப் பதப்படுத்துவதிலும், பயன்படுத்துவதிலும் சில இடர்ப்பாடுகள் உண்டு. முதல் இடர்பாடு முரட்டுத்தன்மை வாய்ந்த தோலை மிருதுவாக்குவது. மிருதுவாக்கினால்தான், விருப்பம் போல் தோலை மடித்து, வெட்டிப் பயன்படுத்த முடியும்.

இரண்டாவது இடர்ப்பாடு தோல்பொருட்கள் நீரில் நனைந்து போனால் அதிலிருந்து எழும் மணம் நாய்களை ஈர்க்கும். அவற்றைக் கடித்துக் கிழித்துவிடும் அல்லது கவ்விச் சென்றுவிடும். இதைத் தவிர்ப்பதற்காக தோல் தொழிலாளர்கள் ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தனர். அதன்படி ஆவாரம் பட்டைகளை உரித்து அவற்றைச் சிறுசிறு துண்டுகளாக ஒடித்து நீரில் போடுவர். இவ்வாறு தயாரித்த நீரில், பதப்படுத்த வேண்டிய தோலை பல மணிநேரம் ஊற வைப்பர். இதனால் தோல் மிருதுவாவதுடன் அதன் துவர்ப்புச் சுவை தோலில் ஊடுருவி விடும். இச்சுவை நாய்களுக்குப் பிடிக்காது என்பதால், தோலால் செய்யப்பட்ட பொருட்களை அவை கடிப்பதில்லை.

கொல்லப்பட்ட அல்லது தானாக இறந்து போன விலங்கின் தோலை உரித்தெடுத்த பின்னர் தோலின் உட்புறத்தில் சிறிது நிணம் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்நிணத்துடன் தோலை வைத்திருந்தால் தோல் அழுகிக் கெட்டுவிடும். இதைத் தடுக்கும் வழிமுறையாக இப்பகுதிகளில் உப்பைத் தூவி நன்றாக தேய்த்துச் சுருட்டி வைத்து விடுவர். இதனால் தோல் கெட்டுப் போவது தடுக்கப்படும்.

* * * * *

உலகின் பலநாடுகளில் எழுது பொருளாகவும், பணமாகவும் தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தளவில் எழுது பொருளாக, தோல் பயன்படுத்தப்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை. ஆனால் காகிதப்பணம் போன்று தோலினால் பணம் தயாரிக்கப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன.

செஞ்சி மன்னர்களின் ஆட்சியில் தோலினால் ஆகிய பணம் புழக்கத்தில் இருந்துள்ளது. தற்போது தொல்பொருள் சின்னமாக விளங்கும் செஞ்சிக் கோட்டை அருகில் உருண்டையான பாறைக்கற்கள் குவிந்து கிடக்கும் சிறிய மலை ஒன்றுள்ளது, இம்மலையில் தோல் நாணயங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், இப்பணியில் ஈடுபட்ட அருந்ததியர் சமுகத்தினர் அம்மலையில் வாழ்ந்ததாகவும், அப்பகுதி மக்களிடையே கருத்து நிலவுகிறது. இதனடிப்படையில் அம்மலை ‘சக்கிலியன் மலை’ என்றழைக்கப்படுகிறது.

பிரெஞ்ச் ஆட்சியில் புதுச்சேரி இருந்த போது, தோல் நாணயங்கள் அங்கு புழக்கத்தில் சிறிதுகாலம் இருந்துள்ளன. இதை ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு குறிப்பிடுகிறது.

தோல் இசைக்கருவிகளின் உருவாக்கத்தில் தோலின் பங்களிப்பு மிகுதி. இவற்றின் தயாரிப்பிலும் கூட சில நுட்பங்கள் உண்டு. தமிழர்களின் பெருமைக்குரிய இசைக்கருவியான ‘பறை’ என்ற இசைக்கருவியை உருவாக்க, எருமைக்கன்றின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது பறை இசைக்கருவியை உருவாக்குவோர் சிலரின் கருத்தாகும்.

வில்லிசைக் கருவியில் இன்று நைலான் கயிறு நாணாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முன்னர் மாட்டுத்தோல் வடத்தையே நாணாகப் பயன்படுத்தியுள்ளனர். தோல் நாண் தயாரிக்கும் வழிமுறை குறித்து அ.கா.பெருமாள் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :

“ மாட்டுத்தோல் நாணை ஆமணக்கு எண்ணையில் நன்றாகத் தோய்த்து அதன் மேல் துணியைச் சுற்றுவர். இதைச் சாணி நிறைந்த உரக்குழியில் புதைத்து வைப்பர். மூன்று மாதம் கழித்து எடுத்து சுத்தப்படுத்திவிட்டு மறுபடியும் ஆமணக்கெண்ணெய் தடவிக் கயிற்றில் கட்டித் தொங்க விடுவர். இதன்பிறகு ஒரு மாதம் கழித்து இந்த நாணைப் பயன்படுத்தலாம். வில் நாணை மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து உலர்த்த வேண்டும் ”

* * * *

வைதீக சமயத்தில் தோல் என்பது தீட்டுக்குரிய பொருளாகக் கருதப்பட்டது. இதனால்தான் ‘பாதக்குறடு’ என்ற பெயரில் மரக்கட்டையினால் ஆன செருப்பை மடாதிபதிகள் பயன்படுத்துகின்றனர். தோல் மட்டுமின்றி தோல் தொழில் செய்பவர்களும் தீட்டுக்குரியவர்களானார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் ‘செம்மான்கள்’ என்போர் தமிழ்நாட்டின் பாரம்பரியமான தோல் தொழிலாளர்கள்.

ஆங்கில ஆட்சிக்கு முன்னால் தமிழ்நாட்டில் நிலவிய சுயதேவைப் பூர்த்தியடைந்த கிராமங்களில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். ‘சுதந்திரியம்’ சொதந்திரம்’ ‘மோரை’ என்ற பெயர்களில் இவர்களுக்கு விளைச்சலின் போது தானிய வடிவில் ஊதிய கொடுத்து வந்தனர். ‘களம் விடுதல்’ என்ற பெயரிலும் தானியங்களை போரடிக்கும் களத்தில் இவர்களுக்குச் சிறிதளவு தானியத்தைக் கொடுத்து வந்தனர். ஊரில் இறந்து போகும் கால்நடைகளை அப்புறப்படுத்தி அவற்றின் தோலை எடுத்துக் கொள்வது இவர்களின் உரிமையாக இருந்தது.

இவற்றிற்கு கைமாறாக கமலைக் கருவியில் இணைக்கப்படும் பரி அல்லது வால் என்ற தோல் பகுதி, காளை மாடுகளின் கழுத்தில் கட்டும் தோலாலாகிய பட்டை, செருப்பு ஆகியவற்றைச் செய்து தருவது இவர்களின் கடமையாக இருந்தது.

காலனிய ஆட்சியின் விளைவால் இம்முறை அழிந்து தோல் பதனிடும் தொழிற்கூடங்களும் ஆயத்த நிலையினான தோல் பொருட்களைத் தயாரித்து விற்கும் பெரிய நிறுவனங்களும் உருவாயின. இதனால் வேலை வாய்ப்பை இழந்தனர். 

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It