உலகின் மிகப் பெரிய புரட்டு கும்பணியான மான்சான்டோ, இந்தியாவில் பயிரிடப்பட்ட தனது பயிர்கள் புழுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

பயிர் என்றால் புழுத்தாக்குதல் ஏற்படுவது இயற்கைதானே. இதில் ஒப்புக்கொள்ள என்ன இருக்கிறது என்று கேள்வி வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டும். பி.டி. கத்திரிக்காயை அவசர அவசரமாக அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்த மான்சான்டோ நிறுவனம்தான் இதை ஒப்புக் கொண்டுள்ளது. பி.டி. பருத்தியை அறிமுகப்படுத்தியபோது, அந்தப் பருத்தியின் சிறப்பம்சங்கள் என்று அது கொடுத்த வாக்குறுதி, இந்தப் பருத்தியை எந்த புழு பூச்சியும் தாக்காது, இதைப் பயிரிட்டால் விவசாயிகள் பூச்சி மருந்து வாங்க வேண்டிய தேவையில்லை, அறுவடையையும் இழக்கத் தேவையில்லை என்பதுதான். இப்படிச் சொல்லியே ஒரு முறை மட்டுமே விதைக்கக்கூடிய, அதிக விலையுள்ள பருத்தி விதைகளை மான்சான்டோ விற்றிருந்தது. இப்படி உலகம் முழுவதும் இந்த நிறுவனம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. பி.டி. பயிரின் கழிவுகளை உண்டு ஆடுகள் இறந்ததை சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியபோது, மான்சான்டோவும் அதற்கு ஜால்ரா அடித்த விஞ்ஞானிகள், பட்டதாரி விவசாயிகளும் சிரித்தார்கள். கடந்த ஆண்டு வரை குஜராத்தில்தான் பி.டி. பருத்தி அமோகமாக விளைகிறது. இதனால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்றெல்லாம் மான்சான்டோ கூறி வந்தது நினைவிருக்கலாம்.

இன்றைக்கு என்ன நடந்திருக்கிறது? எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று அதே மான்சான்டோவே ஒப்புக் கொண்டிருக்கிறது. தண்டு, காய்த்துளைப்பானான இளஞ்சிவப்பு போல்கார்ட் புழு பி.டி. பருத்தியை தாக்கியுள்ளதை சயின்ஸ் இதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. குஜராத்திலுள்ள நான்கு மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பருத்தியில் இந்தப் புழு தாக்குதல் தொடுத்துள்ளது என்று மான்சான்டோ பத்திரிகை செய்தியும் ஒப்புக்கொண்டது. "இதைக் கண்டாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் ஹைதராபாதிலுள்ள செல், மூலக்கூறு உயிரியல் மையத்தின் முன்னாள் இயக்குநரும் மரபணு மாற்றுப் பயிர்களின் மிகப் பெரிய விமர்சகருமான புஷ்ப எம். பார்கவா. நல்ல வேளையாக மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இடைக்காலத் தடை விதித்தார்.

பருத்திப் பயிரில் புழு தாக்குதல் தொடுத்ததால் வசமாக மாட்டிக் கொண்ட மான்சான்டோ. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கிறது. தனது போல்கார்ட் 1 பருத்தி விதைக்கு பதிலாக போல்கார்ட் 2 பருத்தி விதையை வாங்கிக் கொண்டால் புழு தாக்குதலில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று மான்சான்டோ கூறுகிறது. ஆனால் இந்த அறிவிப்பு போலியானது என்று நாக்பூரிலுள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய அரசு நிறுவனம் கூறியுள்ளது. அதிக விலை கொண்ட போல்கார்ட் 2 பருத்தி விதையை விற்பதற்கு மான்சான்டோ செய்யும் தந்திரம் இது என்றும் அந்நிறுவனம் விமர்சனம் செய்துள்ளது.

போல்கார்ட் 1 பருத்தி விதை ஒரு பாக்கெட்டுக்கான உரிமத் தொகை ரூ. 150. போல் கார்ட் 2 பருத்தி விதை ஒரு பாக்கெட்டுக்கான உரிமத் தொகை ரூ. 250. 2006ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட போல்கார்ட் 2 பருத்தி விதைக்கு போதிய வரவேற்பு இல்லை. அதை எப்படி விற்பது? தனது முதல் விதை சரியில்லை என்று மான்சான்டோ தானாகவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதற்கு இந்த வணிகத் தந்திரம்தான் காரணம். இந்த ஒப்புதல் வாக்குமூலம் பற்றி விஜய் டி.வி. "நீயா, நானா" நிகழ்ச்சியில் பங்கேற்ற பூச்சிமருந்து - உர வியாபாரிகள்,  இன்றைய வேளாண்மை இதழில் விஷத்தை கக்கி வரும் அதன் ஆசிரியர், மான்சான்டோவுக்கு கூலிக்கு மாரடிக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

போல்கார்ட் 2 பருத்தி விதையில் கிரை 1 ஏசி, கிரை 1 ஏபி என்று இரண்டு புரதங்கள் திணிக்கப்பட்டுள்ளன. ஜோஹன்னஸ் பர்க்கிலுள்ள ஆப்பிரிக்க உயிர் பாதுகாப்பு மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, ஒரு தாவர விதையில் ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி. புரதங்கள் இருப்பது தாவர உலகில் புதிய சீர்கேட்டை உருவாக்கும் என்று கூறியுள்ளது.

ஒவ்வொரு புதிய வகை பி.டி. விதையை அறிமுகப்படுத்தும்போதும், அதை விற்றுக் காசுக்குவதற்கு எத்தனை முடியுமோ, அத்தனை தந்திரங்களைச் செய்ய இந்த பன்னாட்டு கொள்ளைக் கும்பணிகள் முயற்சிக்கின்றன. போல்கார்ட் 1 புழுத்தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று இப்பொழுது ஒப்புக்கொள்ளும் மான்சான்டோ, அதற்கான தீர்வாக போல்கார்ட் 2யை வைக்கிறது. "ஆனால் இந்த போல்கார்ட் 2 தீர்வு அல்ல. கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்த வகையையும் புழு தாக்கலாம். அதற்குப் பிறகு போல்கார்ட் 3 வாங்கினால் பிரச்சினை தீர்ந்துவிடும்" என்று மான்சான்டோ கூறும் என்கிறார் ஹைதராபாத் வளங்குன்றா வேளாண்மை மையத்தின் ஜி.வி. ராமாஞ்சனேயலு

Pin It